நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 25, 2013

ஸ்ரீ வைரவர்

''கால பைரவாஷ்டமி''


ஆதிக்கண் நான்முகத்தில் ஒன்று சென்று
அல்லாத சொல்லுரைக்கத் தன் கைவாளால்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
சிவலோக நெறிவகுத்துக் காட்டுவானை
மாதிமைய மாதொரு கூறாயினானை
மாமலர்மேல் அயனோடு மாலுங்காணா
நாதியை நம்பியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே!..(6/20/1)
                                                                                           - திருநாவுக்கரசர்                                  

முன்னொரு காலத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் இடையில் -  '' யார் பெரியவர்'' என்று பெருங்கலகம் விளைந்தது. அப்போது சிவபரம்பொருள் நெற்றியிலிருந்து, வைரவரைத் தன் அம்சமாகத் தோற்றுவித்து அவர்களிடையே அனுப்பினார். 

அக்னி ஜூவாலைகளுடன் படர்ந்த கேசம். மூன்று திருவிழிகள். ஒளிரும் கோரைப் பற்கள். தண்டத்துடன் சூலம், உடுக்கை, பாசம் தாங்கியவராக ,   ஒலிக்கும் மணிகள் புரளும் ஆரத்துடன் வெண் சிர மாலையும் பூண்டு . இடையில்  நாகக் கச்சை புரள, திருவடிகளில் வீரத்தண்டைகள் முழங்க  - அவ்விடத்தில் தோன்றிய வைரவரைக் கண்ட பிரமன் - (அச்சமயத்தில் பிரம்மனுக்கு ஐந்து முகங்கள்) - அல்லாத சொல்லாக - '' வா என் மகனே'' - என்று அழைக்கவும் ,

மூண்டெழுந்த சினம் விழிகளில் தெறிக்க - முந்தி நின்று அகங்காரத்துடன் அல்லாதன மொழிந்த அந்த முகத்தைத் தன் கை நகத்தினால் கிள்ளியெடுத்தார் வைரவர்.

ஸ்ரீ பைரவர், பட்டீஸ்வரம்.
இப்போது திசைக்கு ஒன்றாக பிரம்மனுக்கு நான்கு முகங்கள். ஆறாத சினத்துடன் அடுத்த தலையையும் பறிக்குமுன் -  அகங்காரத்துடன் பொய் உரைத்த பிரம்மனை மன்னித்து அருளுமாறு, திருமால் வேண்டிக் கொள்ள - 

சினம்  தணிந்த  சிவபெருமான், நான்முகனை மன்னித்ததுடன்

'' வேதம்  ஓதுபவர்களுக்கு  நீயே குருவாக விளங்குவாய்!..'' - என்று மீண்டும் படைப்புத் தொழிலை - செருக்கு நீங்கிய பிரம்மனிடமே அருளினார்.

இச்செயல் அட்ட வீரட்டங்களுள் ஒன்றாக தேவாரம் முழுவதுமே புகழ்ந்து போற்றப்படுகின்றது.  

அட்ட வீரட்டங்களுள் முதலாவதான இச்செயல் நிகழ்ந்த திருத்தலம் - கண்டியூர். 

வைரவ மூர்த்தியின் முதற் திருத்தோற்றம் நிகழ்ந்த கண்டியூர் - தஞ்சையில் இருந்து திருவையாறு செல்லும் வழித்தடத்தில் உள்ளது.

ஈசன்  ''ஸ்ரீபிரம்ம சிரக்கண்டீஸ்வரர்''. அம்பிகை - ''மங்களநாயகி''.  
திருச்சேறை
 விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால வைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச் 
சிரித்து அருள் செய்தார் சேறை செந்நெறிச் செல்வனாரே!..(4/73/6 )
                                                                             
தேவாரத்தில் ஸ்ரீவைரவரின் திருப்பெயர் பயின்று வரும் ஒரே திருப்பாடல் இது.

திருச்சேறை என்னும் திருத்தலத்தில்  இறைவனைத் தரிசித்த போது - அப்பர் பெருமான் -  வைரவரின் திருமேனியழகை - பாடிப் புகழ்ந்து - மகிழ்ந்தனர்.

''..பிரபஞ்சம்  எங்கும் விரிந்து பரவும் பற்பல ஒளிக் கதிர்களுடன் திகழும்  திரிசூலம். வெடியென முழங்கும் உடுக்கை. இவற்றைத் தம் திருக்கரங்களில் ஏந்திய வண்ணம் கால வைரவன் எனத் தோன்றி -

தாருகாவனத்து முனிவர்கள் அபிசார வேள்வி செய்து - ஏவி விட்ட யானையைப் பிடித்து அதன் தோலை உரித்து, அந்தத் தோலையும் தம் மீதே போர்த்திக் கொண்ட போது -

இத்தகைய அருஞ்செயலைக் கண்டு,   உமையவள் அச்சம் கொண்டனள். அப்போது, அம்பிகையை நோக்கி - பிரகாசமாகிய   பெருஞ்சிரிப்புடன் அருள் செய்த செந்நெறிச் செல்வனே!.. சிவபெருமானே!..'' - என்பது திருப்பாடலின் பொருள்.

திருச்சேறை குடந்தைக்கு அருகில் உள்ளது.
ஈசன் திருப்பெயர் '' ஸ்ரீசாரபரமேஸ்வரர். அம்பிகை - ''ஞானவல்லி''.


சிவபெருமான் யானையை உரித்த திருத்தலம் வழுவூர். 

இத்தலத்தில் ஈசன் ''ஸ்ரகஜ சம்ஹார மூர்த்தி'' எனவும் அம்பிகை ''பாலகுஜாம்பிகை'' எனவும்  திருவருள் புரிகின்றனர்.   

யானை உரித்த திருக்கோலம் பஞ்சலோகத் திருமேனியாக விளங்குகின்றது.

வழுவூர்,  திருஆரூர் - மயிலாடுதுறை வழித்தடத்தில் மங்கநல்லூருக்கு உட்புறமாக 2 கல் தொலைவில் உள்ளது. 

யானையை உரித்த - திருக்கோலத்தினை பல்வேறு கோயில் கோபுரங்களில் சுதை வடிவாகத் தரிசிக்கலாம். எனினும், 

யானையை உரித்த திருக்கோலம் திருத்துறைப்பூண்டி- அருள்மிகு பிறவி மருந்தீசர் திருக்கோயிலிலும் தனியாக கருவறையில் பெருந் திருமேனியாகத் திகழ்கின்றது.

வைரவர் ஞானமூர்த்தி. அளப்பரிய வலிமையுடையவர். தம்மை அண்டினோர்க்கு சத்ரு பயத்தை நீக்கி, அடைக்கலம் அருள்பவர்.  

காம, குரோத, லோப, மோக, மதமாச்சர்யத்திலிருந்து உலகைக் காத்தருளும் பொறுப்பினை - தம்முள்ளிருந்து தாமாக வெளிப்பட்ட வைரவரிடமே - சிவபெருமான் வழங்கினார். 


ஸ்ரீ வைரவர் - காவல் நாயகம் என்பதால் நாய் இவருடன் திகழ்கின்றது. 

ஆணவம், அகங்காரம், செருக்கு, இறுமாப்பு, கர்வம் - இப்படியெல்லாம் நம்முள் மண்டிக் கிடக்கும் களைகளைக் களைந்து

அஞ்ஞான இருளை அகற்றி - ஞான விளக்கினை ஏற்றினால் - 

அதுவே மங்களம்  - சுப மங்களம்!..  என்பது இந்த புராணத்தின் தத்துவம்.

இந்த நிலையை நாம் எளிதில் எய்திட உறுதுணையாய் விளங்குவது, வைரவ  வழிபாடு.

தேய்பிறை அஷ்டமி மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்கள் வைரவ வழிபாட்டுக்கு உகந்தவை. அதிலும் கார்த்திகை தேய்பிறை அஷ்டமி - வைரவர்  தோன்றிய திருநாள். இந்நாளை ''கால பைரவாஷ்டமி'' என்று வழங்குகின்றனர்.

சிவபெருமான் உறையும் திருக்கோயில்கள் அனைத்திலும் ஈசான்ய  (வடகிழக்கு)  மூலையின் ஒரு பகுதியில் வைரவரின் திருமேனி விளங்கும். வைரவரின் அருகில் சனி பகவான் நிச்சயம் வீற்றிருப்பார். ஏனெனில்,   

சனி  பகவானுக்கு வைரவரே முழுமுதற் குரு என்பதாக ஐதீகம். இதனால் வைரவரை மனப்பூர்வமாக வழிபடும் அன்பர்களுக்கு சனி பகவானின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதனை சொல்லவும் வேண்டுமோ!..


ஸ்ரீ கால வைரவ மூர்த்தியை தியானித்து,  தினமும் காலை  மாலையில் பக்தியுடன் பாராயணம் செய்து போற்றுவோர்க்கு பிணி, வறுமை, பகை முதலான துன்பங்கள் விலகும் என்பது ஆன்றோர் வாக்கு. 

வைரவ வழிபாடு பல்வகையான துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி வாழ்வினைச் செம்மைப்படுத்தி நல்வழி காட்டும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. 

அஷ்டமி அன்று மாலையில் திருக்கோயில் சென்று ஈசனை வணங்கி வலம் வந்து, ஸ்ரீ வைரவரின் திருவடிகளின் அருகில் விளக்கேற்றி வைத்து -   

நம்மைப் பற்றி, நாமே - முறையிடுவோம்!.. 

நம்முடைய முன்னேற்றத்துக்குத் தடையாக நம்முள்ளேயே வேரூன்றி விரிந்து பரந்திருக்கும் அகங்காரம் எனும் விஷ விருட்சத்தைக் கிள்ளி எறியும்படி - தலை வணங்கி வேண்டிக் கொள்வோம். 

ஸ்வானத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ; பைரவ ப்ரசோதயாத்:

 ''சிவாய திருச்சிற்றம்பலம்'' 

22 கருத்துகள்:

  1. அருமையான பகிர்வு .நான் என்னும் அகங்காரமே அனைத்து இன்னல்களுக்கும்
    மூல காரணம் .அகங்காரத்தை அழித்து வாழ்வில் வெற்றி கொள்ள இறைவனது
    தரிசனம் மிக மிக அவசியம் என்றுணர்த்திய சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி
    ஐயா .வைரவரை வணங்கி வாழ்வில் இன்பம் பெறுவோம் .தொடரட்டும் மென்மேலும்
    பயனுள்ள இத் தொடர்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் தாங்கள் வழங்கும் உற்சாகத்திற்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. அகங்காரமே வாழ்வின் பல இன்னல்களுக்குக் காரணம்.
    வைரவரை வணங்குவோம் இன்னல் களைவோம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. அஞ்ஞான இருளை அகற்றி - ஞான விளக்கினை ஏற்றும் ஞானம் மிக்க பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  4. சிறப்பான பகிர்வு ஐயா.... விளக்கங்கள் மிகவும் அருமை... நன்றி... இங்கு தாடிக்கொம்பு கோவிலிலும் மிகவும் விசேசம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்!..
      தாங்கள் சொல்லிய தாடிக் கொம்பு கோயில் பற்றி கேள்விப்பட்டுள்ளேன்.
      ஆயினும் அங்கே வந்ததில்லை. இனி நல்ல சந்தர்ப்பம் வாய்க்க வேண்டும்.
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  5. அருமையாக இருகிறது பதிவு.
    பகிர்விற்கு நன்றி.

    பி.கு. என் பதிவில் உங்களுக்கு நன்றி கூறியிருக்கிறேன்.படித்து விட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  6. பைரவர் என்றாலே மனதில் ஒரு பயம் இருக்கும் எனக்கு எப்பொழுதும். கூடவே பக்தியும் அதிகம்.

    உங்கள் பதிவிலிருந்து இன்னும் அரியபல விடயங்களை அறிந்துகொண்டேன் ஐயா!
    அற்புதம்... மிகமிக அவசியமான நல்ல கருத்துக்கள் அனைத்தும் அடங்கியிருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.

    பகிர்விற்கு மனமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி!..
      பைரவ மூர்த்தி பயத்தினைப் போக்குபவர். கலக்கம் தேவையில்லை.
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி!..

      நீக்கு
  7. இன்றைய நாளுக்கு ஏற்ற நல்ல பதிவு. படங்கள் + விளக்கம்ங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  8. காசியில் பைரவர் பிரசித்தி. நகரத்தார் கோவில்களுள் வைரவருக்கும் கோவில் உண்டு. இறை இலக்கியங்களில் அறியாத கதைகளே அதிகம். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே!.. காசியின் பிரதான மூர்த்தி பைரவரே!.. செட்டிநாடு வைரவன் கோயில்களும் அற்புதமானவை. ஆயினும் நான் தரிசனம் செய்ததில்லை.
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  9. ஏற்கனவே நீங்கள் இந்த கால வைரவர் பற்றி எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது இன்னும் கூடுதலான தகவல்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. தங்களின் கருத்து உண்மையே!..
      வைரவரைப் பற்றி எழுத இன்னும் நிறைய உள்ளன. ஆயினும் இங்கே - இணைய இணைப்பு பிரச்னையால் - சீராக வேலை செய்ய முடியவில்லை.

      எனவே எனது பழைய பதிவினை சற்று - கூடுதல் தகவல்களுடன் வழங்கியுள்ளேன்.

      வருகைக்கும் தங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  10. இதுவரை தெரியாத பல தகவல்கள் கிடைத்தன. நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  11. அருமையான பகிர்வு ஐயா...
    அறியாத விபரங்களை எல்லாம் அறியத் தந்தீர்கள்... நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்...
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..