நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஸ்ரீ மஹா சிவராத்திரி
நான்கு கால பூஜைகளில்
அபிஷேக ஆராதனை - என,
நாயகனின் தரிசனம்..
இவ்வேளையில்
நாடெங்கும்
நலமும் வளமும் தழைப்பதற்கு
வேண்டிக் கொள்வோம்..
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண் பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!..
-: திருநாவுக்கரசர் :-
எம்பிரான் எனக்கமுதம் ஆவானும் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானும் தழலேந்து கையானும்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக் கண்டன்
வம்புலாம் பொழிற் பிரம புரத் துறையும் வானவனே!..
-: திருஞானசம்பந்தர் :-
பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுஇருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே!..
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கும்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருளுவது இனியே!..
-: மாணிக்கவாசகர் :-
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்து உருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின்னஞ் செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே!..
-: பட்டினத்தடிகள் :-
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்!..
-: சேக்கிழார் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ






