நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 03, 2015

அன்பின் விடை


வழக்கம் போலவே சற்று தாமதம்..

ஆனால்,

அமீரகத்தின் தலைநகராகிய அபுதாபி விமான நிலையத்தில் -
சொல்லிய வண்ணம் அன்பின் கில்லர் ஜி அவர்கள் காத்திருந்தார்..


அவருடன் - அவரது அன்பு மகன் -
திரு. தமிழ்வாணன் அவர்களும் மனசு - திரு. குமார் அவர்களும்..

அவர்களுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தேன்..

மனம் இல்லை.. ஆயினும்,

Chick In - செல்வதற்கான நேரம் அது..

எனது மருமகன், மகள், பேத்தியிடமும்

திரு. கில்லர் ஜி அவர்களிடமும் அவரது மகனிடமும் திரு. குமார் அவர்களிடமும் விடை பெற்றுக் கொண்டேன்..

கையில் இருந்த பெட்டியை விட மனம் கனத்தது..

முகப்பிலேயே - நம் நாட்டின் பயணிகளுக்காக மூன்று மொழிகளில் அறிவிப்பு இருந்தது..


அந்த மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இலங்கியது..

அதைக் கண்டு மகிழ்ந்தாலும் - தமிழ் முதலிடத்தில் குறிக்கப்படாதது கண்டு சற்றே வருந்தியது - மனம்..


முதற்கட்டமாக - பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பின், பெட்டிகள் எடையிடப்பட்டு - உள்ளே நகர்ந்தன..

வழக்கம் போலவே - வெளியே கண்டு மகிழும் வண்ணம் ஜன்னல் ஒரத்தில் இருக்கை கிடைத்தது..

அடுத்ததாகக் குடியேற்றம் கண்காணிக்கப்பட்டது..
சில விநாடிகளில், புன்னகையுடன் சென்று வருக!.. - என்றது அமீரகம்..

விசாலமான விமான நிலையம்..

மிகவும் சுத்தமாக விளங்கியதுடன் -  மெல்லிய நறுமணம் எங்கும் கமந்து கொண்டிருந்தது..

சீருடைப் பணியாளர்கள் - சிரித்த முகத்துடன் வழி காட்டுகின்றனர்..

செல்லும் வழி அறிந்திருந்தாலும் - அங்குமிங்குமாக சுற்றித் திரிந்தேன்..



சிறுபொழுதில் - சென்னை செல்லும் பயணிகள் அழைக்கப்பட்டனர்..

மீண்டும் ஒரு பாதுகாப்பு சோதனை..

கீழ்தளத்தில் நின்றிருந்த பேருந்து பயணிகளை ஏற்றிச் சென்று விமானத்தின் அருகில் நிறுத்தியது..




இருக்கை கண்டு அமர்ந்தாயிற்று.. ஜன்னல் வழி நோக்கிக் கொண்டிருந்தேன்..

ஓடுதளத்தில் விரைந்தோடிப் புறப்படுவதும் இறங்குவதுமாக - விமானங்கள்..

விமானத்தினுள் - அரபு மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்புகள்..

சற்றைக்கெல்லாம் - மெல்ல நகர்த்தப்பட்ட விமானம்,
ஓடுதளத்தில் இயங்கி, இரைச்சலுடன் விரைந்தோடி - மேலெழும்பியது..

அப்போது நேரம் - 2.20.. மதியப் பொழுது..

சற்று நேரத்தில் - உணவு வழங்கப்பட்டது..

நான் சைவ உணவை எடுத்துக் கொண்டேன்..

ஓமன் நாட்டின் பாலை நில - மணல் மலைககள்
பாரசீக வளைகுடா
மாலை மயங்கிய வேளை
மதியம் மயங்கி மாலையாகிய வேளையில் வானில் நிகழ்ந்த வர்ணக் கோலங்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை..

முன்னிரவுப் பொழுதில் -
அரபிக் கடலைக் கடந்த விமானம் - தென் கிழக்காக பாரதத்தின் மீது பறந்தது..

சென்னையை நெருங்கும் முன்பாக மெல்லிய மழைத் தூறல்..

மீண்டும் - அறிவிப்பு..

சடசட - என விமானம் கீழிறங்கியது..

அதுவரையிலும் ஒளிப் புள்ளிகளாக மின்னிய தெருக்கள் - தெளிவாகின..

இதோ.. இதோ..


தாழ்வாகப் பறந்த விமானம், சென்னை விமான நிலையத்தின் தென்புறமாக - இறங்கியது..

அந்த அலுமினியப் பறவை -
தாயகத்தின் தரையைத் தொட்டு ஓடிய போது - மனம் சிலிர்த்தது..


அப்போது, நேரம் இரவு  - 7.20..

சற்றைக்கெல்லாம் - வருகைப் பதிவு முடிந்தது..

சுங்கச் சோதனை ஏதும் இல்லை..

வெளியில் வந்தபோது -
அதோ.. மனைவி மற்றும் மகனின் அன்பு முகங்கள்..

இரவு உணவை முடித்த பின் -
உழவன் விரைவு ரயிலில் - முன்னதாகவே பதிவு செய்த இருக்கைகளில் -
தஞ்சை நோக்கிப் பயணித்தது - மனம்..



அன்பின் உறவுகளையும் நட்புகளையும் நாம் தொடர,

அவ்வண்ணமே -

அன்பின் உறவுகளும் நட்புகளும் நம்மைத் தொடர -

அதற்குமேல் - வேறென்ன வேண்டும்!..

வாழ்க நலம்!..
* * *