நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஸ்ரீ ராமானுஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீ ராமானுஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 18, 2024

உடையவர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 5  
சனிக்கிழமை

ஸ்ரீ உடையவரின் ஆயிரமாவது ஜெயந்தியை முன்னிட்டு அப்போது எழுதிய பதிவு - சிறு மாற்றங்களுடன்..


ஓம் நமோ நாராயணாய!..

அஷ்டாங்க விமான தளத்திலிருந்து கேட்கின்றது அந்தப் பெருங்குரல்!..

ஆங்காங்கும் பற்பல வேலைகளைச் செய்து கொண்டிருந்த
உழைப்பாளிகளும் பாமர மக்களும் திடுக்கிட்டனர்..

தேஜோ மயமான துறவி ஒருவரை அஷ்டாங்க விமானத்தின் அருகில் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..

திருக்கோஷ்டியூர் விமானம

ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாளின் திருக்கோயிலின் 
முன்பாகக் கூடி -  விமான தளத்தினை வியப்புடன் 
நோக்கினர்..

இதோ மீண்டும்...

ஓம் நமோ நாராயணாய!..

யார் இவர்!.. எப்படி மேலேறிச் சென்றார்?..

இதோ மீண்டும் மூன்றாவது முறையாக - 

ஓம் நமோ நாராயணாய!..

கதிரவனால் கவரப்பட்ட கமல மலராக - கீழே திரண்டிருந்த அனைவரது முகங்களிலும் ஆனந்தப் பரவசம்!..

அவர்களை அறியாமல் ஆனந்தப் பெருக்குடன் முழங்கினர்..

ஓம் நமோ நாராயணாய!..
ஓம் நமோ நாராயணாய!..
ஓம் நமோ நாராயணாய!..

மேலே நின்று முழங்கிய துறவியின் கண்களிலிருந்து நீர்த் துளிகள் திரண்டு  அஷ்டாங்க விமான தளத்தில் விழுந்து கொண்டிருந்தன..


புண்ணிய பூமியாகிய திருக்கோஷ்டியூர்...

பரமானந்த அலைகளினூடே தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில் -
திருக்கோயிலின் அருகில் இருந்த இல்லத்தின் கதவுகள் வேகமாகத் திறந்து கொண்டன..

அவ்வீட்டினுள்ளிருந்து சிவந்த கண்களுடன் வெளிப்பட்டார் - திருக்கோஷ்டியூர் நம்பி..

சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோயிலின் முன்பாக -

ஆயிரக் கணக்கில் ஏழை எளியோர்.. ஏதும் அறியாப் பாமரர்.. கூப்பிய கரங்களுடன் கசிந்துரும் நெஞ்சங்கள்.. 

அண்ணாந்து நோக்கிய வண்ணம் கலங்கித் ததும்பும் கண்கள்!..

இதோ எம்மையும் கரையேற்ற ஒருவர் வந்து விட்டார்!... - என, சொல்லாமற் சொல்லின...

எல்லாவற்றையும் கவனித்த திருக்கோஷ்டியூர் நம்பி சினம் கொண்டார்..

இதன் பொருட்டோ நீ பதினெட்டு முறை எமது வாசலுக்கு வந்தனை?..

இதன் பொருட்டோ யாம் உனக்கு மகாமந்த்ரத்தை உபதேசித்தோம்?..
இந்த மகாமந்த்ரம் முக்தி தரவல்லது.. புனிதமானது.. ரஹஸ்யமானது.. 
சாமான்யர் எவர்க்கும் உபதேசித்தல் ஆகாது!.. - என, கூறியிருந்தோம்..

நீயும் எமக்கு ரஹஸ்யம் காப்பதாக பிரமாணம் செய்திருந்தாய்..
ஆயினும், எமக்கு அளித்த வாக்குறுதியினை மறந்து 
நீ பிழை புரிந்ததனால் 
கொடுநரகில் கிடந்து உழல்வாயாக!.. "

அங்கே அஷ்டாங்க விமானத்தின் அருகே -
நின்று கொண்டிருந்த இளந்துறவியை நோக்கிக் கூவினார்..

அதற்கு பதில் அளிக்கின்ற விதமாக -

" ஸ்வாமி!.. அடியேனைத் தாங்கள் பொறுத்து அருளல் வேண்டும்!... 

நாராயண மந்த்ரத்தின் துணை கொண்டு நானொருவன் மட்டும் 
வைகுந்தம் புகுதல் சரியோ?.. அது நீதியோ?...

கரையேற்றுவார் இன்றிக் கிடந்துழலும் இந்த மக்கள் அனைவரும் வைகுந்தம் செல்லும் பேறு எய்துதல் வேண்டாமோ!..

மகாமந்த்ரத்தினை உச்சரித்த இவ்வளவு பேரும் 
வைகுந்தத்திற்கு ஏகுவார்கள் எனும்போது எளியேன் நரகிற் புகுந்தாலும் பாதகமில்லை!...

எளியேனைத் தாங்கள் மீண்டும் பொறுத்தருளல் வேண்டும்!... "

அஷ்டாங்க தளத்திலிருந்து இனிய குரல் காற்றலைகளில் தவழ்ந்தது..

அந்த மாத்திரத்தில் கீழே நின்று கொண்டிருந்த 
மக்கள் அனைவரும் தம்மை மறந்து ஆரவாரித்தனர்...

திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களின் கண்கள் பனித்தன..

என்ன தவம் செய்தனை மனமே!.. இத்திருமகனை மாணாக்கனாகப் பெறுதற்கு!.. - என, அவருள்ளம் பேருவகை கொண்டது..

அதற்குள்ளாக -  அஷ்டாங்க விமானத்திலிருந்து அந்த இளந்துறவி கீழே இறங்கி ஏழை எளிய மக்களுடன் கலந்திருந்தார்..

தமது ஆச்சார்யராகிய திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களை நெருங்கிப் பணிந்து நின்றார்..

" ராமானுஜனே!..  என்னிலும் பெரியவன் நீ!.. "

தனது மாணாக்கனை ஆனந்தப் பெருக்குடன் ஆரத் தழுவிக் கொண்டார் - திருக்கோஷ்டியூர் நம்பிகள்...

தற்போது ஸ்ரீபெரும்புதூர் என்றழைக்கப்படும் 
ஸ்ரீபெரும்பூதூர் தான் உடையவரின் அவதாரத் திருத்தலம்..

அக்காலத்தில் ஸ்ரீபெரும்பூதூரின் திருப்பெயர் - ஸ்ரீ பூதபுரி என்பதாகும்..

120 ஆண்டுகள் இப்பூலகில் வாழ்ந்தவர் ஸ்ரீ ராமானுஜர்..

வாழ்ந்த காலத்திலேயே ஜாதி பேதங்களைக் கடந்த நிலையைக் காட்டியவர்..

சமயத்திலும் சமூகத்திலும் பற்பல சீர்திருத்தங்களை மேற்கொண்டவர்..

சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களிடம் அன்பு காட்டி - அவர்களைத் திருக்குலத்தார் என்று அழைத்துப் பெரும் புரட்சி செய்தவர்...

தாழ்த்தப்பட்ட மக்களின் மீது கருணை கொண்டு அவர்களைத் தம்முடன் அரவணைத்துக் கொண்ட உத்தமர்...

ஸ்ரீ ராமானுஜரின் மனைவி தஞ்சமாம்பாள் - ஒடுக்கப்பட்ட மக்களைத் தாழ்வாகக் கருதும் மனோநிலையில் இருந்து மீளாதிருந்ததுவே ஸ்ரீ ராமானுஜர் துறவு கொள்வதற்குக் காரணமாயிற்று..


எண்ணற்ற அருஞ்செயல்களைப் புரிந்தவர் ஸ்ரீ ராமானுஜர்...

நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார அடிசில்சொன்னேன்
ஏறுதிரு உடையான் இன்றுவந்து இவைகொள்ளுங் கொலோ..(89)
-: நாச்சியார் திருமொழி:-

அன்றைக்கு நேர்ந்து கொண்டாள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்..

ஆனால், அவள் வேண்டிக் கொண்டபடி அவளுக்குக் கைகூடவில்லை..

திருமாலிருஞ்சோலைக்கு உடையவர் தரிசனம் காண வந்தபோது ஆண்டாளின் நேர்ச்சை நினைவுக்கு வந்தது..

அழகர்கோயிலில் கள்ளழகருக்கு முன்பாக சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாளின் நேர்த்திக் கடனை நிறைவேற்றியருளினார்...

அதன்பின் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உடையவர் எழுந்தருளியபோது,
திருமூலத்தானத்தின் உள்ளிருந்து -

" வாரும் எம் அண்ணாவே!.. "

- என்றழைத்தவாறு எதிர் நின்று வரவேற்று மகிழ்ந்தாள் - கோதை நாச்சியார்...

நிலமகளாகிய 
கோதை நாச்சியாருக்கு 
ஆதிசேஷனாகிய உடையவர் - அன்பினால் அண்ணன் ஆகினார்!.. 
- என்றால் மேனி சிலிர்க்கின்றது..

உடையவரை ஆராதித்து வணங்குவோர்க்கு அவர் தம் நல்லாசிகளினால் சகல பாவங்களும் குற்றங்களும் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு..

பரிபூரணமான பக்தி சரணாகதி இவையிரண்டும் தான் இறைவனை அடைவதற்கான எளிய வழிகள் 

- என, உபதேசித்தருளியவர் ஸ்ரீ ராமானுஜர்..

திருஅரங்கத்தில் இருந்தபோது திருக்கோயிலில் நடத்தப்பெறும் வழிபாட்டு முறைகளில் சீர்திருத்தம் செய்தார்.. 

அந்த நடைமுறைகளே இன்றளவும் பின்பற்றப்படுகின்றன..

திருவரங்கத்தில் 
தானான திருமேனியாக 
ஸ்ரீ பெரும்பூதூரில் 
தானுகந்த திருமேனியாக  
திருநாராயணபுரத்தில் 
தமருகந்த திருமேனியாக
உடையவர் ஸ்ரீ ராமானுஜர் அருளாட்சி செய்கின்றார்.. 

சக மனிதரை மதித்து ஆதரித்து அரவணைப்பவர் அனைவரும்
உடையவரின் அன்புக்குரியவர்களே!..


மனுக்குலம் மேம்படுவதற்கான நல்வழியைக் காட்டியவர்
உடையவராகிய ஸ்ரீ ராமானுஜர்..

அவர் காட்டிய வழியில் பயணித்து பரமனின் நல்லருளைப் பெறுவோமாக..
 
ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே போற்றி..

ஓம் நமோ நாராயணாய..
ஃஃஃ

ஞாயிறு, மே 12, 2024

ஒளிச்சுடர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 
ஞாயிற்றுக்கிழமை

இணையத்தில்
இப்படியொரு பதிவினை எழுதுதற்கு எனைத் தூண்டிய ஈசனுக்கும் அன்பின் நெல்லை அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

விவரங்கள் இணையத்தில் திரட்டப்பட்டவை
 நன்றி விக்கி


ஸ்ரீ ராமானுஜர் - 
ஆதிசேஷனின் அவதாரம் என்பர்..  

சித்திரை மாதம் திருவாதிரை
வளர்பிறை, பஞ்சமி  நாளில் வியாழக்கிழமை (04.04.1017) அன்று ஸ்ரீபெரும்புதூரில் கேசவ சோமையாஜி, காந்திமதி தம்பதியருக்கு மகனாக அவதரித்தார் ஸ்ரீ ராமானுஜர்.. 

திருக்கச்சி நம்பிகளின் சுயநலமற்ற தொண்டில்  மகிவுற்ற அத்திகிரி அருளாளப் பெருமான் திருக்கச்சி நம்பியிடம் உரையாடும் வழக்கம் இருந்தது...

இதன் அடிப்படையில் திருக்கச்சி நம்பிகளைக் குருவாகக் கொண்டு அவரிடம் பயின்று வந்த நேரத்தில் ராமானுஜரின் மனைவியால் வைஸ்யரான  திருக்கச்சி நம்பிகளுக்கு மதிப்புக் குறைவு ஏற்பட்டது..

வாசல் வழிநடையில் வைத்து அவருக்கு அன்னம் பாலிக்கப்பட்டதை அறிந்த ராமானுஜர் தாங்கொணா வேதனை அடைந்தார்...

பின்னொரு சமயம் பசித்து வந்த ஏழை அந்தணர்க்கு பழைய சோறும் இடவில்லை - ராமானுஜரின் மனைவி..

ராமானுஜரின் மனைவியான தஞ்சம்மாள் அக் காலத்தில் நிலவிய ஆச்சார விதிகளைப் பின்பற்றியவர்.. 

இவரால் மற்றொரு சமயம்
வைணவரான பெரிய நம்பிகளின் மனைவிக்கும்  மனக்குறை ஏற்பட்டது..

பெரிய நம்பிகளிடம் -  உபதேசம் பெற்று வந்த நிலையில் ஒருநாள் ராமானுஜர் ஸ்ரீ பெரும்புதூர் சென்றிருந்தார்..

அப்போது பெரிய நம்பிகளின் மனைவியிடத்தில் ராமானுஜரின் மனைவி பேதமுற நடந்து கொண்டதைத்  தொடர்ந்து
பெரிய நம்பிகளும் அவர் மனைவியும் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.. 

ராமானுஜருக்கும் அவருடைய மனைவிக்கும் மாறுபட்ட கருத்துகள்.. இப்படியான இல்லறம் தனது வாழ்க்கை நோக்கத்தில் குறுக்கிடுவதை உணர்ந்த ராமானுஜர் தனது மனையாளை அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டு இல்லறத்தைத் துறந்து சன்னியாசியானார்..

திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களைக் குருவாகக் கொண்டு அவரிடம் மந்திர உபதேசம் பெறுவதற்கு பலமுறை முயன்றார்..

ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்ததன் பலன் பதினெட்டாவது சந்திப்பில் கிடைத்தது. 

கடும் அலைக்கழிப்புக்குப் பின், இந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜருக்கு
உபதேசித்தார் திருக்கோஷ்டியூர் நம்பி..

உபதேசம் பெற்ற மந்திரத்தினால்  - தான் மட்டும்  வைகுந்தம் செல்வது முறையல்ல..  - என்று எண்ணிய ராமானுஜர், குருவுக்குக் கொடுத்த வாக்கினை மீறி, 

தான் நரகம் சென்றாலும் -  மக்கள் அனைவரும் வைகுந்தம் செல்ல வேண்டும்.. அனைவரும் அந்தப் பேற்றினைப் பெற வேண்டும்  - என்று ஆசை கொண்டார்..

திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தின் மீதேறி நின்றார்.. 

மக்கள் அனைவரும் கேட்கும்படிக்கு,
ஓம் நமோ நாராயணாய!..
என்று  உரத்த குரலில் கூவியருளிய பெருந்தகை ஸ்ரீ ராமானுஜர்...

வைணவத்தில் ஜாதி பேதம் எதுவும் இல்லை எனச் சொல்லி, தாழ்ந்த குலத்தினர் என்று அக்காலத்தில் சொல்லப்பட்டவர்களின் தோள் மீது கை போட்டுக் கொண்டு, வீதியில் நடந்து வந்திருக்கின்றார் ..
 
இரண்டாம் ராஜராஜனுக்குப் பிறகு சோழநாட்டின் அரியணை ஏறிய குலோத்துங்க சோழன் (1070 - 1122) ஸ்ரீராமானுஜருக்கு பல தொல்லைகள் கொடுத்தான்..இவனே  கிருமி கண்ட சோழன் என்கின்றனர்..

இதனால், ஸ்ரீ ராமானுஜர், தமிழ்நாட்டை விட்டு கர்நாடக தேசத்தின் மேல்கோட்டை கிராமத்திற்குச் சென்றார்..

இங்கே, பன்னிரண்டு வருடம்  இருந்துள்ளார்..

அவரது முயற்சியால் மண்ணில் புதையுண்டிருந்த   செலுவ நாராயணர் (செல்வ நாராயணர்) கோயில் அடையாளங் காணப்பட்டு ஹொய்சாள அரசன் விஷ்ணு வர்த்தன்  உதவியுடன் புனர் நிர்மாணம் செய்து “திருநாராயணபுரம் ” - என அழைக்கும்படி அருளினார்..

அச்சமயம் தொலைந்து விட்டதாக சொல்லப்பட்ட இக்கோயிலின் உற்சவ மூர்த்தி,

டெல்லியை ஆண்டு வந்த முகலாய மன்னனின் அரண்மனையில் இருப்பது தெரிந்து அங்கு சென்று பார்க்க, 

பெருமாள் விக்ரகத்துடன்  இளவரசி  விளையாடிக் கொண்டிருப்பது தெரிய வருகின்றது..

ஸ்ரீ ராமானுஜர் அந்தப் பெண்னிடம் பெருமாளைத் தரும்படி கேட்க அவள் மறுத்து விடுகின்றாள்..


ஸ்ரீ ராமானுஜர் பெருமாளைப் பார்த்து, “ செல்லப்பிள்ளை வா.. " - என்றழைக்க பெருமாளும், கொலுசு ஒலிக்க நடந்து ராமானுஜரிடம் வந்ததாக சொல்லப்படுகிறது.

பெருமாளைப் பிரிந்து இருக்க முடியாத இளவரசியும்  சில மாதங்களில் மேலக் கோட்டைக்கு வந்து விட்டதகவும்  அதன் பின்னர் அவள் ' துலுக்க நாச்சியார் '  என்று அழைக்கப்பட்டு இங்கேயே ஐக்கியமாகி விட்டாள்.. 

ஸ்ரீ செல்வ நாராயணர்
மேலக்கோட்டை 
திருநாராயண புர ஆலயத்தில் மூலவர்  திருநாராயணன், சங்க சக்ர, கதை,  தாங்கியபடி   நின்ற திருக்கோலம், 
மேற்கே திருமுக மண்டலம்.. ஸ்ரீ பாத பீடத்தில் பீபீ நாச்சியார் (வெள்ளி கவசத்துடன்)..

உற்சவ மூர்த்தியான செல்லப் பிள்ளையை தில்லி முகலாய மன்னனிடமிருந்து  ஸ்ரீ ராமானுஜர் மீட்டுக் கொண்டு வரும்போது -  வழியில் எதிர்ப்பட்ட கொள்ளையர் கூட்டத்திடம் , இப்பகுதியில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி உற்சவ மூர்த்தியையும் ஸ்ரீ ராமானுஜரையும் காத்து நின்றனர்.. 

இதற்கு நன்றி நவிலும் வண்ணம் ஸ்ரீ ராமானுஜரின் ஆணைக்கிணங்க, இன்றும் தேர்த்திருவிழாவிற்கு அடுத்த  மூன்று நாட்கள்  “ திருக்குலத்தார் உற்சவம் ” - என, வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது..
 
திருநாராயணபுரத்தில், ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் வந்த புண்ணியர் ஸ்ரீ ராமானுஜர்.. 


தாழ்த்தப்பட்ட  மக்களிடம் இரக்கம் கொண்டு அவர்களைத் ' திருக்குலத்தார் ' என்றழைத்த பண்பாளர்..

மக்களிடம் பேரன்பு கொண்டு நிகழ்த்தப்பட்ட மெய்யான புரட்சி இதுவே..

ஸ்ரீ ராமானுஜர் திருவேங்கடவனின் தரிசனத்திற்கு வந்தபோது
திருப்பதியில் ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் (1130)  கட்டப்பட்டது..

ஸ்ரீ ராமானுஜர் திருமலையின் புனிதம் கருதி பாதம் பதித்து நடக்காமல் தவழ்ந்தே மலையேறினார். 

வழியில்  செங்குத்தான
ஓரிடத்தில் அவருடைய முழங்கால் முறிந்தது. அந்த இடமே முழங்கால் முறிச்சான்..

இந்த இடத்தில் ஸ்ரீ
 ராமானுஜருக்கு சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது..

ஸ்ரீ ராமானுஜர் திருமலைக் கோயிலின் பூஜைகளில் சடங்கு சம்பிரதாயங்களைச்  செய்துள்ளார்.  

ஸ்ரீ ராமானுஜர் ஏற்படுத்திய நடைமுறைகள் இன்றளவும் திருமலைக் கோயிலில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன..

ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்கத் திருத்தலத்தில்  இருந்தபோது ஸ்ரீ ரங்கநாதர் கோயிலின்  பூஜைமுறைகளில்  செய்த சீர்திருத்தங்களே  இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகின்றன..

திருமாலிருஞ்சோலையில் நூறு தடா அக்கார அடிசிலும் நூறு தடா வெண்ணெயும் அமுது செய்வித்ததனால்  சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாளின் திருவாயால் அண்ணா!.. - என அழைக்கப்பட்டவர்.. 


தமது நூற்று இருபதாம் வயதில் திருநாடு எய்தினார்..

நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும் நிறை வேங்கடப்பொற்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன்றனக்கு எத்தனை இன்பந்தரும் உன் இணை மலர்த் தாள்
என்றனக்கும் அது  இராமாநுச இவை ஈந்தருளே.. 76
 -: ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி :-
 (நன்றி திவ்யப்ரபந்தம்)

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஓம் நமோ நாராயணாய
***