நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

பத்ரகாளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்ரகாளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 28, 2017

திருக்குடமுழுக்கு

ஸ்ரீ வீரபத்ரகாளி..

தஞ்சையிலுள்ள எட்டு காளி சந்நிதிகளுள் - 
இவளுடைய சந்நிதியும் ஒன்று..

கோபம் கொண்டு கொதித்திருந்த ஸ்ரீவீரபத்ரகாளியை
சித்தர்களும் சாதுக்களும் பூஜித்து சாந்தப்படுத்தியதாக ஐதீகம்...


தஞ்சை மாநகரிலுள்ள சிவாலயங்களுள்
ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீகேசவதீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று..

இத்திருக்கோயில் - வடக்கு வாசல் அகழியைக் கடந்து வடக்கு அலங்கம் பகுதியில் ராஜாகோரி மயானத்திற்குச் செல்லும் சாலைக்குக் கிழக்காக பழைய திருவையாறு சாலையில் உள்ளது..

இந்த சாலையை சிரேயஸ் சத்திரம் சாலை என்றும் சொல்வர்..

சிறப்புறும் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் பின்புறமாக செல்லும் இந்தச் சாலை வெண்ணாற்றங்கரையில் நெடுஞ்சாலையுடன் இணைந்து விடுகின்றது..

ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீகேசவதீஸ்வரர் திருக்கோயிலில் வீற்றிருந்து
அன்பர்க்கு நலம் புரிபவள் ஸ்ரீ வீரபத்ரகாளி..

கறுப்பு நிறத்தில் விளங்குவதால் கரியகாளி என்றும் சொல்வார்கள்..

திருவடியில் அசுரன் கிடப்பதால் மகிஷாசுரமர்த்தனி என்பதும் வழக்கம்...

சென்ற ஆண்டு இக்கோயிலுக்குச் சென்று வந்த பிறகு
இத்திருக்கோயிலின் சிறப்புகளைச் சொல்லியிருந்தேன்..

அவற்றைக் கீழ்க்காணும் இணைப்புகளின் வழியாகக் காணலாம்

ஸ்ரீ வீரபத்ரகாளி 1

ஸ்ரீ வீரபத்ரகாளி 2

இத்திருக்கோயிலின் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று
நேற்று வெள்ளிக்கிழமை (27/10) காலையில்
அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது..






தொடர்ந்து 
மூலவர் அம்பிகை சந்நிதிகளிலும் ஸ்ரீ வீரபத்ரகாளி சந்நிதியிலும்
மகா அர்ச்சனையும் பெருந்தீப வழிபாடும் நடந்தன..



ஸ்ரீ கேசவதீஸ்வர ஸ்வாமி
ஸ்ரீ ஞானாம்பிகை
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி


ஸ்ரீ வீரபத்ரகாளியின் சந்நிதி
கும்பாபிஷேக வைபவத்திலும் மகா ஆராதனை நிகழ்வுகளிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இன்புற்றனர்..

நேற்றிரவு -
ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீகேசவதீஸ்வர ஸ்வாமியும்
ஸ்ரீ வீரபத்ரகாளி அம்பிகையும் சிறப்பு அலங்காரங்களுடன்
திருவீதி எழுந்தருளி அருள்பாலித்தனர்..



அந்த நிகழ்வுகளை இன்றைய பதிவினில் 
மகிழ்வுடன் வழங்குகின்றேன்..

FB வழியாக
படங்களை வழங்கியவர்
திரு. ஞானசேகரன் - தஞ்சை..
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...
***

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே.. (077)

யாதுமாகி நின்றாய் காளீ!..
ஓம் சக்தி ஓம்..
***

வெள்ளி, டிசம்பர் 09, 2016

ஸ்ரீ வீரபத்ரகாளி 2

தஞ்சை ஸ்ரீ வீரபத்ரகாளியம்மனைப் பற்றிய பதிவு தொடர்கின்றது..

இதன் முதல் பகுதியை - இங்கே வாசிக்கலாம்..

ஸ்ரீ வீரபத்ரகாளி குடியிருக்கும்
ஸ்ரீ கேசவதீஸ்வர ஸ்வாமி திருக்கோயிலின் மேற்கு வாசல்..

சிறிய ராஜகோபுரத்துடன் கூடிய மேற்கு வாசல் 
திருப்பணி வேலைகளுக்காக அடைத்துக் கிடக்கின்றது..

மேற்கு வாசலின் வடக்குப் பக்கம் -  மிகப்பெரிய அளவில்..

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியின் தொன்மையான திருவடிவம் 
சித்திரமாகத் தீட்டப்பட்டுள்ளது..


சித்திரத்தின் அருகில் சுடர் வீசுகின்ற பெரிய குத்து விளக்கு..

அங்கு வழிபாடுகள் இயற்றப்படுவதாகத் தெரிகின்றது..

எதிரில் வில்வ மரம் தல விருட்சமாகத் தழைத்திருக்கின்றது .. 
அருகில் புழக்கத்திலுள்ள கிணறு..

கிணற்றின் அருகே சண்டேஸ்வரர் சந்நிதி.. கோட்டத்தில் ஸ்ரீ துர்கை..

கோயிலின் வடக்குச் சுற்றிலும் 
புதிதாக மண்டபத் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன..

திருப்பணி வேலைகளின் பொருட்டு மண்டபத்தின் சில பகுதிகள் மூடப்பட்டு இருக்கின்றன..

அம்பிகையின் மூலத்தானம்
திருச்சுற்றில் மெல்ல நடந்து - தெற்காகத் திரும்புவதற்கு முன் -
ஈசான்ய மூலையில் பிரமிப்பின் உச்சம்..

திருச்சுற்று மண்டபத்தில் தெற்கு நோக்கிய சந்நிதியில் -

அழகு என்றால் அழகு.. அதற்குமேல் சொல்லுதற்கு ஏதுமில்லை!..

அழகெல்லாம் ஒருங்கே அமைந்த திருவடிவம் - ஐந்தடி உயரத்தில்!..

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி!..

முருகா.. உனக்குக் குறையும் உளதோ?..
சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் 
ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ!..

ஏனிப்படிக் கோவணத்துடன் தண்டு கொண்டு
இங்குற்றோர் ஆண்டியானாய்?..

முருகா.. நீ ஏனிப்படிக் கோவணத்துடன் தண்டு 
கொண்டு இங்குற்றோர் ஆண்டி ஆனாய்?..

ஆயிரம் பேர் கூடி நின்று கேள்வி மேல் கேள்வியாய்க் கேட்டாலும் 
பதில் ஏதும் கூறாதபடிக்கு மெல்லிய புன்னகையுடன்
நின்ற நிலையாய் மௌனத் திருக்கோலம்...

திருமுருகன் தெற்கு முகமாகத் திகழும் சந்நிதிகள் அபூர்வமானவை..

அதிலும் மிகுந்த சிறப்புடையவை..

திருச்செந்தூர், சுவாமிமலை. சிக்கல் - ஆகிய திருத்தலங்கள்..

இங்கெல்லாம் திருமூலத்தானம் கிழக்கு நோக்கியிருந்தாலும்
உபசந்நிதியில் ஸ்ரீ வள்ளி தெய்வயானையுடன்
கல்யாணத் திருக்கோலத்தில் திகழ்கின்றான்..

ஆனால் - 

தஞ்சை ஸ்ரீ கேசவதீஸ்வரர் திருக்கோயிலில் தன்னந்தனியனாக -
தண்டாயுதம் ஏந்தியவனாக திருக்கோலம் கொண்டுள்ளான்..

எம்பெருமான் ஏன் இப்படி தண்டு கொண்டு இங்குற்றான்!?..

இதற்கு முந்தைய பதிவில் -

கோபம் கொண்டு கொதித்திருந்த ஸ்ரீவீரபத்ரகாளியை
சித்தர்களும் சாதுக்களும் வழிபட்டு சாந்தப்படுத்தியதாக ஐதீகம்...

- என்று குறிக்கப்பட்டிருக்கும்...

அசுரர்களை அழித்து ஒழித்த பின்னும்
அடங்காத கோபம் கொண்டு கொதித்திருந்தாளாம் -  ஸ்ரீவீரபத்ரகாளி..

ஆதியில் வம்புலாம் சோலை என்று புகழப்பட்ட - இந்தப் பகுதி,

பராசரர், வசிஷ்டர், ரோம மகரிஷி முதலான முனிவர்களும் 
கொங்கணவர், கோரக்கர், கருவூரார் முதலான சித்தர்களும் 
ஸ்ரீ ராகவேந்திரர், சமர்த்த ராமதாஸர் முதலான மகான்களும் 
காசி பாபா, பஞ்சநத பாவா முதலான சாதுக்களும் 
சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர் முதலான உத்தமர்களும் இருந்து இயங்கியதும்
ஆழ்வார்களும் நாயன்மார்களும் தரிசித்ததுமான புண்ணிய தலமாகும்..

அதற்கான ஆதாரங்கள் இன்றளவும் இங்கே திகழ்கின்றன...

பழனி மலையின் உச்சியில் விளங்கும் பால தண்டாயுதபாணியின் திருமேனியை - நவபாஷாணம் கொண்டு வடித்தவர் போகர்..

அந்தத் திருமேனியுடன் இன்னும் எட்டு திருமேனிகளை போகர் வடித்ததாக ஆன்றோர் கூறுகின்றனர்...

அவற்றுள் ஒன்று தான் - இங்கே விளங்கும் திருமேனி..

முருகன் திருமேனியை போகரிடம் வேண்டி விரும்பிப் பெற்ற சித்தர்கள் -
அதனை தஞ்சைக்குக் கொணர்ந்து இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.. 

இந்தச் செய்திகளின் நுட்பம் -
சித்தர்களை வழிபாடு செய்வோருக்குப் புலனாகின்றன..

அவ்வப்போது அவை வெளிப்படுகின்றன..

இவை செவிவழிச் செய்திகள் மட்டுமே!.. - என்று கூறுவோரும் உள்ளனர்.... 

இருப்பினும் நம்பிக்கை.. அதுவே மகாசக்தி..


அந்த வகையில் -
தஞ்சை ஸ்ரீ கேசவதீஸ்வரர் திருக்கோயிலில் விளங்கும்
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சித்தர்களால் நிறுவப் பெற்றவன்!.. 
- என, கொண்டாடப்படுகின்றான்..

கொதித்திருந்த அம்பிகையைக் குளிர்வித்து 
சித்தர்கள் நிகழ்த்திய வழிபாடுகளில் - 
உற்ற துணையாக முருகப்பெருமான் தானும் நின்றிருக்கின்றான்..

உலக மக்களின் பொருட்டு -

ஞானமும் நல்லருளும் வேண்டி நின்ற சித்தர் பெருமக்களுக்கு 
உபதேச குருவாக திகழ்ந்திருக்கின்றான்..

சித்தர்களின் வேண்டுதலுக்காக -

பால தண்டாயுதபாணி தெற்கு முகமாக எழுந்தருளியதால்
ஞானமூர்த்தி!.. - என, ஆன்றோர்களால் புகழப்படுகின்றான்..

உபாசனா மூர்த்தி உள்நின்று உணர்த்திய பொருள் இதுவே!..


வில்வ மரம்
பழனி முருகனைப் போலத் தோன்றினாலும் -

திருமுகம் சற்றே இடப்பக்கம் சாய்ந்திருக்க
உச்சியில் சிறு கொண்டை விளங்குகின்றது..

காதுகளில் கர்ணப் பூ திகழ்கின்றது..

வலது திருக்கரத்தில் ஸ்ரீ தண்டம் எனும் பிரம்பு..
இடது திருக்கரம் அணைத்துக் காக்கும் பாவனையில்..

திருப்பாதங்களில் வீரத் தண்டைகள்..

அருள் வடிவாகத் திகழ்கின்ற ஐயனைக் காணக் காண
அல்லல்கள் அகன்றோடுவதாக உணர்வு..

உடனிருக்கும் மயில் எங்கு சென்றதோ.. கவனிக்கவில்லை..

தற்போது தஞ்சை பூக்குளம் பகுதியில் மயில்கள் ஏராளமாக சுற்றித் திரிகின்றன.. அவற்றுள் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்...

இத்துடன் திருக்கோயிலின் முன்வாசலுக்கு வந்தாயிற்று..

மாலை மயங்கி இருள் கவிந்து கொண்டிருந்தது..

ஸ்ரீ வயிரவர் திருமேனி மற்றும் நவக்கிரக மண்டலம் காணக் கிடைக்கவில்லை..




தொடரும் திருப்பணிகள் முற்றாக நிறைவுற இன்னும் சில மாதங்களாகலாம்..

மராட்டிய மன்னர் வம்சத்தவரின் நிர்வாகத்தில் உள்ளது - திருக்கோயில்..

இங்கே காணிக்கை உண்டியல் இல்லாதது குறிப்பிடத்தக்கது...

அமைதியான அழகான - திருக்கோயில்..

இன்னும் சிறு பொழுது கோயிலில் இருந்திருக்கலாம்..
அந்தச் சமயத்தில் அதற்கு இயலவில்லை..

இறையன்பர்கள் அவசியம் இங்கே தரிசனம் செய்தல் வேண்டும்...

ஆயினும், பேருந்து வசதிகள் ஏதுமில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன்..

தஞ்சை நகரின் வடக்குப் பகுதியில் - சற்றே வெளிப்புறமாக இருக்கின்றது..

இருந்தாலும்,
பழைய திருவையாறு சாலையில் திருக்கோயிலை விசாரித்துக் கொண்டு
ஆட்டோக்களிலோ சொந்த வாகனங்களிலோ வந்து சேரலாம்..

சாலை ஓரளவுக்கு நன்றாக இருக்கின்றது...

ஸ்ரீ வீரபத்ர காளி
மேலே உள்ள படம் விழாக்குழுவினரால் வெளியிடப்பட்டதாகும்..
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி..

வீரபத்ர காளி!.. - என்றுதான் எனக்கு அடையாளம் காட்டப்பட்டனள்..

ஆனால், ஸ்ரீ வடபத்ர காளி என்றும் திருக்கோயிலில் எழுதியிருக்கின்றனர்..

குங்குமப் பிரசாதம் வழங்கப்பட்ட உறையில்
மகிஷாசுர மர்த்தனி என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது..

எப்படி அழைத்தால் என்ன!..
எல்லாப் புகழும் அவளுக்கே உரியது..

அம்பிகையின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்...

ஆதியான ஸ்ரீ கோடியம்மனைத் தரிசிக்கும்போது
அம்பிகையின் திருமுடியில் ஸ்ரீ சிவபெருமானின் திருமுகத்தைத் தரிசிக்கலாம்..

இங்கே - வீரபத்ரகாளியின் கருவறையின் இருபுறமும் விளங்கும்
துவார சக்திகளின் திருமுடிகளிலும் திருமுகம் தெரிகின்றது...

அது ஐயனின் திருமுகமா... அம்பிகையின் திருமுகமா...

தெரியவில்லை...

விவரிக்க இயலாததொரு பரவசத்தில் 
நான் இருந்ததால் அங்கிருந்தவர்களைக் 
கேட்கும் மனநிலையில் இல்லை...

அதற்கான விடையையும் காலம் கனியும் போது
அம்பிகை அவளே அருள்வாள்..

கண்ணியது உன்புகழ் கற்பது உன்நாமம் கசிந்து பத்தி
பண்னியது உன்னிரு பாதாம் புயத்தில் பகலிரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான்முன் செய்த
புண்ணியம் எதுஎன் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.. (012)  
-: அபிராமி பட்டர் :-

யாதுமாகி நின்றாய் காளீ!..
ஓம் சக்தி ஓம்
* * * 

ஞாயிறு, டிசம்பர் 04, 2016

ஸ்ரீ வீரபத்ரகாளி 1

ஸ்ரீ வீரபத்ரகாளி..
தஞ்சையிலுள்ள எட்டு காளி சந்நிதிகளுள் - 
இவளுடைய சந்நிதியும் ஒன்று..

கோபம் கொண்டு கொதித்திருந்த ஸ்ரீவீரபத்ரகாளியை
சித்தர்களும் சாதுக்களும் பூஜித்து சாந்தப்படுத்தியதாக ஐதீகம்...

தஞ்சையில் இருந்தும் அந்த அம்பிகையை தரிசனம் செய்ததில்லை...

அதற்கு நேரம் வரவேண்டும் என்பார்கள்..

நவராத்திரி சமயத்தில் ஸ்ரீவீரபத்ரகாளியம்மனையும் 
ஒருபொழுது எண்ணியிருந்தேன்...

எளியன் என்மீதும் அன்பு கொண்டனள் போலும்..-

அவளுடைய திருக்கோயிலில் 
விஜய தசமியன்று ஸ்ரீ வீரபத்ரகாளி திருவீதி எழுந்து -
வாழையில் நிறுத்தப்பெற்ற அசுரனை சங்காரம் செய்தருளிய 
கோலாகல வைபவத்தின்
காணொளி கிடைத்திருக்கின்றது..

இந்த அம்பிகையைப் பற்றி விரிவாக எழுதுதற்கான
நல்வாய்ப்பினை அவளே அருளுதல் வேண்டும்..
* * * 

இவ்வாறு - கடந்த அக்டோபர் 13 அன்று வெளியான
சக்தி தரிசனம் - எனும் பதிவில் எழுதியிருந்தேன்...

இதோ -

நான் விரும்பிய வண்ணம் எழுதுவதற்கான
நல்வாய்ப்பினை அவளே நல்கியிருக்கின்றாள்..

எளியன் என்மீதும் அன்பு கொண்டு - அம்பிகை வந்து உதித்தனள்..

அந்த மகிழ்வினைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்..
***

ஸ்ரீ வீரபத்ரகாளி
சென்ற பதிவில் ஸ்ரீ வடபத்ரகாளியம்மனை தரிசனம் செய்தோம்..

இன்றும் அவ்வண்ணமே - ஸ்ரீ வீரபத்ரகாளியின் தரிசனம்..

தஞ்சை மாநகரிலுள்ள சிவாலயங்களுள்
ஸ்ரீகேசவதீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று..

இத்திருக்கோயில் - வடக்கு வாசல் அகழியைக் கடந்து வடக்கு அலங்கம் பகுதியில் ராஜாகோரி மயானத்திற்குச் செல்லும் சாலைக்குக் கிழக்காக பழைய திருவையாறு சாலையில் உள்ளது..

இந்த சாலையை சிரேயஸ் சத்திரம் சாலை என்றும் சொல்வர்..

சிறப்புறும் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் பின்புறமாக செல்லும் இந்தச் சாலை வெண்ணாற்றங்கரையில் நெடுஞ்சாலையுடன் இணைந்து விடுகின்றது..

ஸ்ரீகேசவதீஸ்வரர் திருக்கோயிலில் வீற்றிருந்து
அன்பர்க்கு நலம் புரிபவள் ஸ்ரீ வீரபத்ரகாளி..

கறுப்பு நிறத்தில் விளங்குவதால் கரியகாளி என்றும் சொல்வார்கள் - என்ற தகவலுடன் பெரியவர் ஒருவர் இத் திருக்கோயிலைப் பற்றி எனக்குச் சொன்னார்..

அப்போது கரந்தையில் தமிழ்ச்சங்க வளாகத்திற்கு அருகில் தான் குடியிருப்பு..

ஆயினும், அம்பிகையைத் தரிசனம் செய்வதற்கு நேரம் கூடிவரவில்லை..

பொருளைத் தேடி குவைத் நாட்டிற்கு வந்தபின்
ஏழு ஆண்டுகள் வேகமாக கடந்து போயின..

கடந்த நவராத்திரி நாட்களின் போது
ஸ்ரீ வீரபத்ரகாளியம்மனையும் ஒருபொழுது சிந்தித்திருந்தேன்..

எளியன் என் மீதும் அன்பு கொண்டு - அம்பிகை வந்து உதித்தாள்..

விஜய தசமியன்று ஸ்ரீ வீரபத்ரகாளி திருவீதி எழுந்து -
வாழையில் நிறுத்தப்பெற்ற அசுரனை சங்காரம் செய்தருளிய
காணொளி Fb வழியாகக் கிடைத்தது..

கோலாகல வைபவத்தினைக் காணொளியில் கண்டு மேனி சிலிர்த்தது...

அடுத்த முறை தஞ்சைக்குச் செல்லும்போது
அம்பிகையைத் தேட வேண்டும்..
அவளது அருளைத் தேட வேண்டும்..
ஸ்ரீ வீரபத்ரகாளியை தரிசனம் செய்தல் வேண்டும்!..

இவ்வாறு எண்ணிக் கொண்டேன்...

விரைவில் மிக விரைவில் எனது எண்ணம் பலித்தது..

சிறு விடுப்பில் தஞ்சைக்கு வந்த நான் -
சென்ற நவம்பர் 16 அன்று மாலைப் பொழுதில்
அம்பிகையின் ஆலயத்தை நோக்கி நடந்தேன்..


சிறிய ஆலயம் தான்..

ஆனாலும், ஐந்து நிலைகளுடன் ராஜகோபுரம் கம்பீரமாக விளங்குகின்றது..

தற்போது திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன..



ராஜகோபுரத்தைக் கடந்ததும்
கொடிமரம், அதிகாரநந்தி, பலிபீடம் - என எதுவும் இல்லை..

முன்மண்டபத்தின் அலங்கார நுழைவாயில் மட்டுமே..

நுழைவாயிலின் விதானத்தில் சிவசக்தி திருக்கோலம்..

இருபுறமும் ஊர்த்துவ தாண்டவக் காட்சிகளும் பார்வதி கல்யாணக் காட்சியும் அழகிய வடிவங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றன..

நுழைவாயிலின் இருபுறமும் விநாயகர், வேலவன் சந்நிதிகள்..

அர்த்த மண்டபத்தில் நந்தியம்பெருமானும் பலிபீடமும்..

கிழக்கு நோக்கிய திருச்சந்நிதியில் ஸ்ரீ கேசவதீஸ்வரர்..

சிறிய இலிங்கத் திருமேனி... ஆனாலும் வனப்பு மிக்கதாக இலங்குகின்றது..

ஐயனுடன் இணைந்து விளங்கும் சந்நிதியில்
தெற்கு நோக்கியவளாக ஸ்ரீ ஞானாம்பிகை...

அம்பிகைக்கு எதிரிலும் நந்தியம்பெருமான்.. அருகில் பலிபீடம்..

கண்ணாரக் கண்டு கைகூப்பி வணங்கி நிற்க மனம் பரவசமாகின்றது..

தெற்கு நடை வழியாக இறங்கினால் - திருச்சுற்று..

நீளவாக்கில் கிழக்கு மேற்காக -
புதியதோர் மண்டபம் கட்டிக் கொண்டிருக்கின்றனர்..

மாலை மயங்குகின்ற வேளையில் போதிய வெளிச்சம் இல்லை..

தெற்கு நடையில் இறங்கி மேற்காகத் திரும்பும் போது
எதிரில் - வடக்கு நோக்கிய சந்நிதி..

அன்னை ஸ்ரீ வீரபத்ரகாளியின் சந்நிதி...

பரபரப்பும் ஆவலும் மேலிட சந்நிதியை நெருங்கினேன்...

ஆகா!.. என்ன அழகு.. என்ன அழகு!.. அற்புதம்.. அற்புதம்!..

நீலப்பட்டு உடுத்தியிருந்தாள் அம்பிகை..

நீலி.. திரிசூலி.. நீங்காத பொட்டுடையாள்.. 
நெஞ்சம் எனும் தாமரையில் வீற்றிருக்கும் சுந்தரியாள்!..  

திருவடிக்கீழ் வீழ்ந்து கிடக்கும் அசுரனின் மேல் 
ஊன்றப்பட்ட நிலையில் திரிசூலம்...

எட்டுத் திருக்கரங்களுடன் வீராசனத்தில் அன்னை.. 

வா!.. மகனே.. வா!.. - என்ற பாவனையில் மாறாத புன்னகை..

கண்டேன்.. கண்டேன்..
ஸ்ரீ கரியகாளியம்மனைக் கண்டேன்..
ஸ்ரீ வீரபத்ரகாளியம்மனைக் கண்ணாரக் கண்டேன்...

சந்நிதியின் முன்மண்டபத்தில் பிரகாசமான விளக்குகள்..

ஆனால், கருவறைக்குள் தீபங்கள் மட்டுமே பிரகாசித்துக் கொண்டிருந்தன..

சாயுங்கால பூஜைகள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தன..

கண.. கண.. என, மணிகள் முழங்க அம்பிகைக்கு நிவேதனமும் ஆரத்தியும் சமர்ப்பிக்கப்பட்டது..

முதல் முறையாக இப்போதுதான் இந்தக் கோயிலுக்கு வருகின்றீர்கள்!..

அர்ச்சகரின் வார்த்தைகளில் அதிர்ந்தேன்...

ஆமாம்!.. அதெப்படி சரியாகச் சொல்கின்றீர்கள்?.. -  வினவினேன்..

மெல்லிய புன்னகை அவரிடம்..

வியப்பின் எல்லையில் நின்றிருந்த நான் கருவறைக்குள் நோக்கினேன்..

அங்கே அம்பிகையும் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்..

குங்குமத்துடன் எலுமிச்சங்கனியும் பூக்களும் வழங்கப்பட்டன..

அத்துடன் விட்டாளா.. அன்னை!..

குளிரக் குளிர தயிர் சோறும் வழங்கி மகிழ்ந்தாள்...

மூலஸ்தானத்திற்குப் பின்னால்
வடபுறத்திலிருந்து மூலஸ்தானம்
எத்தனை எத்தனை காலங்கள்.. எத்தனை எத்தனை பிறவிகள்.. 
அன்னை இவள் மடியில் சிறுகுழந்தையாய் விளையாடிக் கிடந்தோமோ!..
முன்னைத் தொடர்பு இன்றேல் அவளைக் காண்பதும் கூடி வருமோ?..

மனம் நெகிழ்ந்தது.. கண்கள் கசிந்தன..

அவள் சந்நிதியில் - ஸ்லோகங்களுடன் அபிராமி அந்தாதியின்
சில பாடல்களையும் பாடினேன்..

அம்பிகையை மனதார வழிபட்டு நின்றேன்...

அம்பிகையின் சந்நிதிக்குக் கிழக்குப் பக்கமாக
மூலஸ்தானத்திற்குப் பின்னால் -
விநாயகர், வள்ளி தேவசேனா சமேத வடிவேலவன் மஹாலக்ஷ்மி சந்நிதிகள்..

சிறிய ராஜகோபுரத்துடன் கூடிய மேற்கு வாசல்..
திருப்பணி வேலைகளுக்காக அடைத்துக் கிடக்கின்றது..

மேற்கு வாசலின் வடக்குப் பக்கம் -  மிகப்பெரிய அளவில்..

மிகப் பெரிய அளவில்!?..

அடுத்த பதிவில் மேலும் தகவல்களுடன் சந்திப்போம்!..

***

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே.. (077)

யாதுமாகி நின்றாய் காளீ!..
ஓம் சக்தி ஓம்..
***

வெள்ளி, டிசம்பர் 02, 2016

ஸ்ரீ வடபத்ரகாளி

இனி எப்போதும் எத்தகையவரும் செய்து முடிக்க இயலாதபடிக்கு -
மாபெரும் செயல்களைச் செய்து முடித்த பெருமை சோழர்களுடையது...

தமிழனின் புகழ்க் கொடி எனும் புலிக் கொடி - 
கடல் கடந்தும் பறந்திடக் காரணம் - சோழ மண்டலத்தின் மாமன்னர்களே!..

சோழப் பேரரசை நிர்மாணிக்கப் புறப்பட்ட மாவீரர்கள் -
அம்பிகையைத் தொழுது வணங்கிய பின்னரே - 
முதலடியை எடுத்து வைத்திருக்கின்றனர்..

மாமன்னன் ராஜராஜ சோழனும் -
அவனது பாட்டனும் பாட்டனுக்குப் பாட்டனும் 
ராஜராஜ சோழனின் வீரமகன் இராஜேந்திர சோழனும்
அவர்களைத் தொடர்ந்த சோழ வம்சத்தின் மன்னர்களும்
நின்று வணங்கிய அம்பிகையின் சந்நிதி ஒன்று உண்டு!..

அந்தச் சந்நிதி - அருள் பொழியும் -
ஸ்ரீ நிசும்பசூதனியின் திருச்சந்நிதி!.. 


அந்தச் சந்நிதி இருக்குமிடம் தஞ்சை மாநகர்..

ஸ்ரீ நிசும்பசூதனியின் சந்நிதி -
தஞ்சை மாநகரின் கீழ்த்திசையில் ஈசான்ய திக்கில் விளங்கும்
ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி திருக்கோயிலின் நிருதி மூலையில் திகழ்கின்றது... 

சோழப் பெருங்குலத்தினைக் காத்து -
அவர்களுக்குப் பேரும் பெருக்கும் அருளியவள் இவளே!..

இவளே - வடபத்ரகாளி எனவும் ராகுகால காளி எனவும் வழங்கப்படுகின்றாள்.. 

அசுரர்களாகிய சண்டனையும் முண்டனையும் சும்பனையும் நிசும்பனையும் தொலைத்துக் கட்டியவள்!..

அதனாலேயே - இவளுக்கு நிசும்பசூதனி எனும் திருப்பெயர்!..

இவளே சோழப் பேரரசை நிர்மாணித்த விஜயாலய சோழனின் இஷ்ட தெய்வம்..

தொண்ணூற்றாறு விழுப்புண்களைத் தன் திருமேனியில் தாங்கியிருந்தவன் - விஜயாலய சோழன்..

கி.பி., 850ல் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றினான்..

அதுவரையிலும் பழையாறையில் இருந்த சோழ மரபினர் - புதிய நகராகிய தஞ்சையில் குடியேறினர்..

தஞ்சை - சோழர்களின் புதிய தலைநகராயிற்று..

அடுத்த சில ஆண்டுகளில் - பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே - திருப்புறம்பியத்தில் நடைபெற்ற பெரும்போர் சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு வித்திட்டது.

இது ஆதாரங்களுடன் கூடிய சோழ வம்சத்தின் வரலாறு..

அந்த வெற்றிக்கெல்லாம் மூல காரணம் - ஸ்ரீநிசும்பசூதனியே!..

தஞ்சையைக் கைப்பற்றியதும் விஜயாலய சோழன் - மாநகரைச் சுற்றி எட்டு திக்குகளிலும் ஸ்ரீ பத்ரகாளியைத் தொழுது வணங்கி நின்றான்..

எங்கும் எப்போதும் - தனக்கு வெற்றிகளையே அருளவேண்டும்!.. -  என்று..

விஜயாலய சோழனின் அன்புக்கு மனம் இரங்கிய அம்பிகை - 
அவன் முன் தோன்றி - அவ்வாறே வரமளித்தாள்..

அம்பிகையின் தரிசனத்தால் மனமகிழ்ந்த மன்னன் - 
அம்பிகையை அங்கேயே திருக்கோயில் கொள்ள வேண்டினான்..

மன்னனின் அன்புக்கு இணங்கி 
அம்பிகை கோயில் கொண்ட கோலம் தான் - நிசும்பசூதனி!.. 

அம்பிகை திருக்காட்சி தந்து அமர்ந்த கோயிலுடன் -
விஜயாலயன் - ஏழு கோயில்களை எழுப்பினான்.. 

ஆக, தஞ்சையைச் சுற்றி எட்டு காளி கோயில்கள் - விஜயாலயன் காலத்தில்!..

குடமுழுக்கு 23 ஜூன் 2016
அவற்றுள் - நிசும்பசூதனியின் திருக்கோயில் -
வடபத்ரகாளி கோயில் எனும் பெயருடன்
தஞ்சையின் கீழ்த் திசையில் விளங்குகின்றது - 


தஞ்சையில் கீழவாசல் ஸ்ரீவெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்கு சற்று எதிரில் - வடக்கு தெற்காக - பழைய ராமேஸ்வரம் சாலை.

இந்த சாலையைத் தான் - கீழவாசல் மார்க்கெட் சாலை என்கின்றார்கள்..

இந்த சாலையைக் கடந்து பூமாலை ராவுத்தர் கோயிலுக்குச் செல்லும் சாலையில் சென்றால் ஐந்து நிமிடத்தில் வடபத்ர காளி எனும் நிசும்ப சூதனியின் ஆலயத்தை அடையலாம்.

பூமாலை ராவுத்தர் கோயில் எனப்படுவது -
ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ வைத்யநாதர் திருக்கோயில்..

ஸ்ரீ வைத்யநாத ஸ்வாமி திருக்கோயில்
ஸ்ரீ வைத்யநாதர் மூலத்தானம்
இந்தத் திருக்கோயில் சிறியது தான்.. என்றாலும் கீர்த்தி மிக்கது..

நிசும்பசூதனியின் உக்ரம் குறைய வேண்டி -
பின்னாளில் எழுந்ததே - ஸ்ரீ வைத்யநாதர் திருக்கோயில்!..


கொடிமரம், திருச்சுற்று, உப சந்நிதிகள் என்றெல்லாம் இல்லை..

முன்மண்டபம், அர்த்த மண்டபம்.. கம்பீரமான நந்தி.. பலிபீடம்..
கருவறையின் வலம் இடமாக விநாயகரும் வேலவனும்...

ஸ்ரீ வைத்யநாதர் சந்நிதி மற்றும் தெற்கு நோக்கிய ஸ்ரீ பாலாம்பிகையின் சந்நிதி...

அம்பிகையின் சந்நிதிக்கு வலது புறம் தலையில் உருமால் கட்டியவாறு கரத்தில் பிரம்பொன்று ஏந்தியதாக திருக்கோலம்..

இந்தத் திருமேனியே பூமாலை ராவுத்தர் என்று வழங்கப்படுவது..

மாணிக்கவாசகருக்காக குதிரைச் சேவகனாக சென்ற திருக்கோலம் இதுவே!.. - என்கின்றனர் ஆன்மீக பெருமக்கள்..

இடது புறம் வனப்பான பிட்சாண்டவர்..
இது புத்தரின் திருக்கோலம் என்ற சொல்வழக்கும் உள்ளது..

அருகில் மேற்கு நோக்கியவாறு அழகான வயிரவ மூர்த்தி.. சூரியன், சந்திரன்..

முன்மண்டபத்தில் நவக்கிரக மண்டலம்..

ஐப்பசி அன்னாபிஷேகம் நடந்த மறுநாள் காலையில் இந்தத் திருக்கோயிலுக்குச் சென்றிருந்தேன்..

அன்னாபிஷேகத்துக்கு காணிக்கையாக வந்திருந்த அரிசி பருப்பு மற்றும் காய்களைக் கொண்டு அறுசுவை விருந்து வடை பாயசத்துடன் தயாராகிக் கொண்டிருந்தது.. 

கோயிலினுள் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்..
எனவே, உள்ளே படம் எடுக்க இயலவில்லை..

ஸ்ரீ வைத்யநாதரின் மூலஸ்தானத்திற்குப் பின்புறம் நிருதி (தென்மேற்கு) மூலையில் வடபத்ர காளியின் திருச்சந்நிதி...

திருக்குடமுழுக்கிற்கு முந்தைய தோற்றம்
தற்போது அழகின் வடிவாக..
வடபத்ர காளியின் கோயிலுக்கு மட்டும்
சென்ற ஆண்டுக்கு முன் திருப்பணி தொடங்கப்பெற்றது..

கோயிலுக்கு முன்பாக நீளவாக்கில் இருந்த தகரங்கள் வேயப்பெற்றிருந்த
மண்டபம் முற்றாக அகற்றப்பட்டு அழகான சிற்பங்களுடன் கூடிய மண்டபம் அமைக்கப்பெற்றுள்ளது..

திருப்பணிகள் நிறைவுற்று கடந்த ஜூன் 23 அன்று திருமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது..

துவார பாலகியர் தவிர்த்து -
சந்நிதியின் இருபுறமும் மற்றும் ஏனைய ஆறு தூண்களிலும்
அம்பிகையின் எட்டு விதமான உக்ர வடிவங்கள்..

மனதை கொள்ளை கொள்ளும்படிக்கு அமைக்கப்பட்டுள்ளன....
வண்ணமிகு சிற்பங்களைக் காணக் காண பரவசம் மிகவாகின்றது...

கவலைகளும் கஷ்டங்களும் பறந்தோடுகின்றன...

காளி பரமேஸ்வரி கண்முன்னே களிநடம் புரிவதாக உணர்வு!..

அழகிய சுதை சிற்பங்களுடன் திருக்கோயிலை அழகுற அமைத்தவர் -
கும்பகோணம் ஸ்தபதி திரு Dr. R. செல்வராஜ்...

அவருக்கு எல்லா நலன்களையும் அம்பிகை அருள்புரிவாளாக!.. 


அம்பிகையின் தோற்றம் - கோர சௌந்தர்யம்..
எனினும், சந்நிதியில் கருணைக் கடல் - என, கொலுவிருக்கின்றாள்..

இதோ அவளது சந்நிதி!..


மாபெரும் மன்னர்களும் மகத்தான வீரர்களும் நின்று வணங்கிய சந்நிதி!..

விஜயாலய சோழன் - தன் கண் கொண்டு அம்பிகையைக் கண்டு கைகூப்பி வணங்கிய சந்நிதி..

மாமன்னன் ராஜராஜ சோழப் பெருந்தகையும் அவனது தந்தை சுந்தர சோழனும் முந்தைப் பாட்டனும் பாட்டனுக்குப் பாட்டனும் என, முன்னோர்கள் நின்று வணங்கிய சந்நிதி.

பின்னும், ராஜேந்திர சோழனும் அவனது மகன் ராஜாதி ராஜனும் அவன் சந்ததியரும் தொழுது வணங்கிய சந்நிதி!..


வடக்கு நோக்கிய சந்நிதி...

விஜயாலயன் எழுப்பிய கோயில் கால வெள்ளத்தில் கரைந்து போனது..
ஆயினும் - இப்போதுள்ள சந்நிதி பழைமையானது..

அன்னையின் திருமுகத்தைக் கண்டாலே -
நம்முள் வீரமும் வைராக்கியமும் குடி கொள்வதை உணரலாம்..

சில வருடங்களுக்கு முன்னால் - 
ஒரு வெள்ளிக் கிழமையின் உபயதாரராக இருந்து அம்பிகையை சேவிக்கும் பெரும்பேறு கிடைத்தது..

அப்போது நானும் எனது குடும்பத்தினரும் அம்பிகையின் முன்னிருந்து பதினாறு வகையான மங்கல நீராட்டினைத் தரிசித்தோம்..

அதற்கு முன் கேள்விப்பட்டிருந்த திருமேனி அழகினை -
அப்போது தான் கண்ணாரக் கண்டு இன்புற்றேன்..


நிசும்பசூதனி!..

சும்ப நிசும்பர்களை வதம் செய்ததாலேயே - நிசும்பசூதனி!..

சப்த கன்னியருள் ஏழாமவள் - சாமுண்டி.. ஸ்ரீ காளி!..
இவளுடைய முக லாவண்யம் - தெற்றுப் பற்கள்..

இவளே - தெற்றுப் பல் தெரியும்படி புன்னகைத்தவள்..
இவளே - சண்டமுண்ட சும்ப நிசும்பர்களை வதம் செய்தவள்..

நிசும்பசூதனி - ஏழடி உயரங்கொண்டு விளங்குகின்றனள்.

அம்பிகைக்கு அபிஷேக அலங்காரங்கள் எல்லாம் - 
அருகிலுள்ள மேடையின் மீது நின்று தான்..

நிகரற்ற வல்லமையுடன் எட்டுத் திருக்கரங்களுடன்
உக்ர கோலங்கொண்டு இலங்குகின்றனள்..

அம்பிகையின் திருமுடிக் கற்றைகள் விரிந்து பரந்து கிடக்கின்றன..
தீட்சண்யமான பார்வை.. தெற்றுப் பற்கள் பளீரிடுகின்றன..

பரந்து விரிந்திருக்கும் கேசங்களை மறைத்து -
அக்னி கிரீடம் அணிவிக்கப்பட்டிருக்கின்றது..

தெற்றுப் பற்களின் மீது புல்லாக்கு ஒளிர்கின்றது..
சற்றே இடப்புறம் திருமுகத்தைச் சாய்த்திருக்கின்றாள்..

மிகவும் மெலிந்த திருமேனி..
வார்கொண்ட வனமுலைகள் - வனப்பின்றி விளங்குகின்றன..

அம்பிகையின் விலா எலும்புகளும் புடைத்துத் தெரிகின்றன..
அசுரனின் தலை மீதிருக்கும் திருவடியும் மெலிந்து விளங்குகின்றது..

வல்லமையுடன் விளங்கிய அசுர சைன்யத்தை அழிப்பதற்கென - விரதம் பூண்டு சிவபெருமானின் நல்லருளை வேண்டித் தவமிருந்ததாக ஐதீகம்..

அம்பிகை முண்டமாலை தரித்திருக்கின்றாள்..
திருமேனியில் பாம்பு ஒன்றும் இழைகின்றது..

ஏழு திருக்கரங்களிலும் - வாள், தனுசு, பாசம், மணி, திரிசூலம், மணி, கேடயம், கபாலம் ஆகியனவற்றுடன் திகழ்கின்றாள் - அம்பிகை.. ..

வலது மேல் திருக்கரத்தில் உள்ள திரிசூலம் அசுரனின் மேல் பாய்ந்த வண்ணமாக உள்ளது..

இடக் கரத்தினால் கீழே கிடக்கும் அசுரனைச் சுட்டிக் காட்டுகின்றாள்..

வலது திருவடி - அசுரனின் தலை மீது பதிந்திருக்கின்றது..
இடது காலை மடித்து - அசுரர்களின் மீது அமர்ந்த திருக்கோலம்.

தேவியின் திருவடியில் கிடப்பது சும்பனின் உடல் என்றும் முண்டமாகிக் கிடக்கும் தலை நிசும்பனுடையது என்றும் ஆன்றோர்கள் கூறுவர்.



கருவறைக்குள் விளங்கும் திருமேனியை சிற்பிகள் வடித்தனர் என்பது பொதுவான வார்த்தை... ஆனாலும் -

எவருடைய கற்பனைக்கும் எட்டாத வடிவம் இது..

தேவி புராணங்களில் நிசும்பசூதனியின் இலக்கணம் கூறப்பட்டிருக்கின்றது.. அவற்றையெல்லாம் ஒருங்கே காட்டும் அருள் வடிவம் இது!..

அம்பிகையே - தன்னுடைய திருவடிவத்தினைக் காட்டினாலன்றி - 
அவளே மனமுவந்து இங்கு அமர்ந்தாலன்றி - அறிய இயலாத திருக்கோலம்.

இப்படிப்பட்ட திருக்கோலம் - இப்புவியில் எங்கேயும் இல்லை!..

மற்றொன்று காட்டப்பட்டாலும் அது வேறு விதமாகத்தான் இருக்கும்.. 

ஸ்ரீ பரமேஸ்வரியாகிய அம்பிகை நிசும்பசூதனி - எனக் கோலங்கொண்டு 

தானே தன்னுருவங்காட்டி எழுந்தருளியிருக்கின்றாள் என்பதே திண்ணம்!.. 

ஸ்தபதி அவர்களின் முகவரி
எங்கிருந்த போதும் - எங்கள் சிந்தையில் இருப்பவள் ஸ்ரீவடபத்ரகாளி..

தஞ்சை மக்களின் மனங்களிலெல்லாம் கோயில் கொண்டு உறைபவள் இவள்!..

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகள் எல்லாம் சிறப்பு தான்.. எனினும்

சித்ரா பௌர்ணமி நாளன்று சந்தனக்காப்பு அலங்காரம் கொள்கின்றாள்..
தை மாத வெள்ளிக் கிழமைகளில் பால்குட வைபவ கோலாகலம்..

ஆனாலும் -  விஜயாலயன் எழுப்பிய கோயில் இது அல்ல!.. - என்ற கருத்தும் உண்டு..

அப்படி குறிக்கப்படும் கோயில் -
இன்னும் கொஞ்ச தூரத்தில் இருக்கும் உக்ர காளியம்மன் கோயில்..

அது சிலகாலங்கள் முன்பு வரைக்கும் குயவர் தெருவை அடுத்திருந்த கருவேலங்காட்டிற்குள் இருந்ததால் - கருவக்காட்டு காளி என்றனர்..

மிகப்பெரிய கருவேலங்காடு - இன்றைக்கு அழிந்து போயிற்று..
கருவேலங்காட்டு கோயில்தான் நிசும்பசூதனி கோயில் என்றும் சிலர் கூறுகின்றனர்..

அங்கேயும் பழைமையான காளியின் சிலை உள்ளது..

ஆய்வாளர்களுக்கிடையே கருத்து வேற்றுமைகள் உள்ளன.. ஆனால்,
கைகூப்பித் தொழுவோரிடத்தில் எவ்வித வேற்றுமையும் இல்லை..


சமயங்களைக் கடந்த மெய்ப்பொருளாக விளங்குபவள் நிசும்பசூதனி.. 
செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் - வேற்று சமயத்தவரையும் காணலாம்..

அன்றைக்கு இத்திருக்கோயில் எத்தனை பெரிதாக இருந்ததோ - நாமறியோம்..
இன்றைக்கு திருக்கோயிலின் நாற்புறமும் இல்லங்கள் சூழ்ந்திருக்கின்றன..

மக்கள் நடமாட்டத்திற்கு மத்தியில் மங்கலங்களை அள்ளித் தருபவளாக வீற்றிருக்கின்றாள் - வடபத்ரகாளி எனும் நிசும்பசூதனி!..

குண்டலிபுர வாஸினி சண்டமுண்ட விநாஸினி
பண்டிதஸ்ய மனோன்மணி ஸ்ரீவராஹி நமோஸ்துதே..

- என்று ஸ்ரீ வராஹி அம்மனின் துதியிலும் குறிப்பிடப்படுபவள் - நிசும்பசூதனி!..

மாமன்னர்கள் நின்று வணங்கிய 
நிசும்பசூதனியின் சந்நிதியை 
பதிவு செய்ததில் மகிழ்வெய்துகின்றேன்..

வடபத்ர காளீ போற்றி!..
சும்பநிசும்ப சூதனீ போற்றி.. போற்றி!.. 
* * *