நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 9
செவ்வாய்க்கிழமை
தேவாரப் பாடல் பெற்ற வட நாட்டுத் தலம்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் - என, மூவராலும் பதிகம் பெற்றிருக்கின்ற்து..
பாரதத்தின் புனிதத் தலம்..
சிவ வழிபாட்டில் உள்ள மக்களின் புனிதத் தலமாக மட்டுமல்ல.. ஆதி திபெத்தியர்க்கும் சமணர்களுக்கும் பௌத்தர்களுக்கும் புனிதத் தலமாகத் திகழ்கின்றது..
திருக்கயிலை மாமலையைத் தரிசித்தவர்கள் - காரைக்கால் அம்மையார், அப்பர் பெருமான், சுந்தர மூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார்
பெருமிழலைக் குறும்பர் நாயனார். ஒளவையார்..
சிந்து, சட்லெஜ், பிரம்மபுத்திரா - இன்னும் சில நதிகள் இந்த மலையில் தான் உற்பத்தியாகின்றன..
ஐம்பத்திரண்டு கிமீ., சுற்றளவு கொண்டது கயிலாய மலை..
இங்கிருக்கும் நீர்நிலை மானசரோருவம் - மானசரோவர் ஏரி.. பிரம்மதேவரின் மனதில் இருந்து உருவானது..
பிரம்ம முகூர்த்த நேரத்தில் சிவபெருமானோடு சேர்ந்து வந்து தேவர்களும், முனிவர்களும் இந்த ஏரியில் நீராடுவதாக நம்பிக்கை..
மானசரோவர் ஏரியில் வாழும் அன்னப் பறவைகள் பாலையும் நீரையும் பகுத்து அருந்தும் தன்மை உடையன என்று சொல்லப்படுகின்றது..
உலகின் மிக உயரத்தில் இருக்கும் நன்னீர் ஏரி இது ஒன்றே!.. - என்ற புகழை உடையது..
இதுவரை கயிலாய மலையில் யாரும்
ஏறியது இல்லை..
1926 ல் ஹக் ரட்லஜ் என்பவன் கைலாயத்தின் வடக்கு முகமாக ஏறுவதற்கு முனைந்த போது முயற்சியைக் கைவிட நேர்ந்தது.. 1936 ல் ஹெர்பர்ட் டைச்சி என்பவனும் இதில் தோற்றுப் போனான்..
இலங்கை வேந்தன் ராவணனே கயிலாயத்தில் தனது வீர தீர பராக்கிரமத்தைக் காட்டுதற்கு முனைந்து மலையின் கீழ் சிக்கிச் சீரழிந்தான் என்று இருக்கையில் மானிடப் பதர்கள் எம்மாத்திரம்!?..
" கைலாஷ் பரிக்ரமா " எனும் கிரி வலத்தின் போது, கயிலாய மலையின் மையத்தில் இருந்து பிரார்த்தனைகளும் கோஷங்களும் ஒலிப்பதை பலரும் கேட்டிருக்கின்றனர்..
சில வேளைகளில் பிரபஞ்சப் பேரொலிகளும் இயங்குகின்றன..
திருக்கயிலாய மலையின் உயரம் சுமார் 6638 மீட்டர்
(21778 அடி).. இதில் 1800 மீட்டர் (6000 அடி) செங்குத்து என்று கணக்கிடப்பட்டுள்ளது..
உண்மையைக் கண்டறிகின்றேன் - என்று பலர் புறப்பட்டு உயிரை விட்டதாகவும் சொல்லப்படுகின்றது..
" பாவங்களற்ற மனிதனால் மட்டும் தான் அதை பற்றி நினைக்க முடியும் " - என்றொரு சொல் வழக்கு திபெத் மக்களிடம்..
பாவங்கள் அற்ற மனிதனுக்கு இப்படியான எண்ணங்கள் வராது என்பதே உண்மை..
புற்றரவு பற்றியகை நெற்றியது
மற்றொருக ணொற்றைவிடையன்
செற்றதெயி லுற்றதுமை யற்றவர்க
ணற்றுணைவ னுற்றநகர்தான்
சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு
குற்றமில தெற்றெனவினாய்க்
கற்றவர்கள் சொற்றொகையின் முற்றுமொளி
பெற்றகயி லாயமலையே.. 3/68/2
-: திருஞானசம்பந்தர் :-
பண்ணின் இசையாக
நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி..6/55/7
-: திருநாவுக்கரசர் :-
மந்திரம் ஒன்றறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்களால் துரிசே செயுந் தொண்டன் எனை
அந்தர மால்விசும்பில் அழகானை அருள் புரிந்த
துந்தரமோ நெஞ்சமே நொடித்
தான்மலை உத்தமனே.. 7/100/3
- : சுந்தரர் :-
ஏனக் குருளைக் கருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி!..
-: மாணிக்கவாசகர் :-
**
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***





















