நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், நவம்பர் 18, 2014

அறிவியல் கண்காட்சி

தஞ்சாவூர் ஜங்ஷனில் அறிவியல் கண்காட்சி.

இந்தியாவை வலம் வரும் அறிவியல் கண்காட்சி சிறப்பு ரயில் தஞ்சை ஜங்ஷனில் நிறுத்தப்பட்டுள்ளது.


இன்றும் நாளையும் (18/11 மற்றும் 19/11)  நிறுத்தப்பட்டிருக்கும் இந்த சிறப்பு ரயிலில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் கண்காட்சியைக் கண்டு மகிழ மாணவ மாணவிகளும் பொதுமக்களும் இன்று காலை பத்து மணி முதல் அனுமதிக்கப்பட்டனர்.

தஞ்சை ஜங்ஷனில் அறிவியல் கண்காட்சி என அறிந்து - நானும் சென்றேன்..


இந்த அறிவியல் கண்காட்சி ரயில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையால் இயக்கப்படுகின்றது. 

இந்த அறிவியல் கண்காட்சி ரயிலின் உட்புறம் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் நீர் நில வாழ்விகளைப் பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் விரிவான விளக்கப் படங்கள் நிறைந்திருக்கின்றன.

அவை மட்டுமல்லாமல் - ஒளி ஒலி காட்சிகளும் தொடுதிரைகளும் கூட அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அரங்கிலும் வழிகாட்டுதலாக - ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் தெளிவான விளக்கங்களையும் வழங்குகின்றனர்.




இந்தியாவில் நீரிலும் நிலத்திலும் வாழும் புழு பூச்சிகளின் வகைகளும் அவற்றின் வாழ்வியலும் தனித்தனி அரங்குகளில் வண்ணமயமாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றது. 

ஊர்வன பறப்பன மற்றும் பலவகையான விலங்குகளின் அழகான படங்களும் அவற்றின் வடிவமைப்புகளும்  இடம் பெற்றிருக்கின்றன.

இமய மலை சார்ந்த பகுதிகள், கங்கைச் சமவெளி, தக்காண பீடபூமி பற்றியும்,

அற்புதங்கள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலை பற்றியும் மற்றும் சதுப்பு நிலங்கள் இவைகளைப் பற்றியும்  

ராஜஸ்தான் பாலைவனத்திலும்  அஸ்ஸாம் நாகாலாந்து காடுகளிலும், 

அந்தமான் நிக்கோபார் - தீவுகளைச் சூழ்ந்துள்ள கடல்பகுதிகளிலும் - 

காணக் கூடிய உயிரினங்களைப் பற்றியும் கூட அறிந்து கொள்ள முடிகின்றது. 

அரிய வகை உயிரினங்கள் இந்தியாவில் காணப்படும் இடங்களும் அங்கே வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளும் விவரிக்கப்படுகின்றன.




பிளாஸ்டிக் பொருட்களினால் நிலத்தடி நீர் மாசு படுவது கூறப்படுகின்றது.

நிலத்தடி நீர் சேகரிப்பது பற்றியும் அழகான வடிவமைப்புகளின் மூலமாக விளக்கப்படுகின்றது.  

சுற்றுச்சூழல் மாசுபடுவது பற்றியும் சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவது பற்றியும் விளக்கங்கள் கிடைக்கின்றன.

பல்லுயிர் பெருக்கம் மற்றும் பருவநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் நோக்கம்.

பல்லுயிர் வாழ்க்கை முறையும் அதன் அவசியமும் அதனைப் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியமும் மாணவர்களுக்கு விளக்கப்படுகின்றது.

மாணாக்கர்களுக்கான அறிவியல் செயல் முறைக் கல்வியாக - ஆய்வகமும் அறிவியல் பயிற்சிக் கூடமும் அமைந்துள்ளன.

தஞ்சை மாநகரின் பொதுமக்களும்  மாணவ மாணவிகளும் - ரயிலில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் கண்காட்சியினைக் கண்டு மகிழ்கின்றனர்.  

கடந்த 2007ல்  தனது பயணத்தைத் தொடங்கிய இந்த அறிவியல் கண்காட்சி சிறப்பு ரயில் இது வரை 1,15,000 கி.மீ தூரத்தையும் 364 நிலையங்களையும் கடந்திருக்கின்றது.


இதுவரையிலும் - நாடு முழுதுமான பயணத்தில் - பொதுமக்கள், மாணவ மாணவிகள் என ஒருகோடியே இருபது லட்சம் பார்வையாளர்கள் வருகையளித்துள்ளனர்.

இந்த சிறப்பு ரயிலில் பதினாறு பெட்டிகள். முழுமையாக குளிரூட்டப்பட்ட இணைப்புப் பெட்டிகள் காட்சி அரங்கங்களாக விளங்குகின்றன.

பலவித உயிரினங்களின் அழகிய படங்கள் ஒட்டப்பட்டு வெள்ளை நிறத்தில் பொலிகின்றன ரயில் பெட்டிகள்..








காட்சி அரங்கங்களில்  படம் எடுப்பதும் செல்போன் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் கண்காட்சியினைக் காண்பதற்கு கட்டணம் ஏதும் இல்லை.

இன்றும் நாளையும் (18/11 மற்றும் 19/11) தஞ்சை ஜங்ஷனில் நிறுத்தப்பட்டுள்ள அறிவியல் கண்காட்சியினை காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.



அறிவியல் கண்காட்சி மிகவும் சிறப்பான தகவல்களுடன்  மாணவ மாணவிகளுக்கும் மற்றோர்க்கும் பயனுள்ளதாக இருக்கின்றது.

நேற்று (17/11) சேலத்தில் இருந்து இன்று தஞ்சை ஜங்ஷனில் இருக்கும் அறிவியல் கண்காட்சி சிறப்பு ரயில் அடுத்து 20/11 மற்றும் 21/11 தேதிகளில் ஈரோடு செல்ல இருக்கின்றது.

மேலதிக விவரங்களை -

http://www.sciencexpress.in/

- எனும் தளத்தில் கண்டு மகிழ்க..

உற்சாகம் பொங்க -  மாணவ மாணவிகளுடன் நானும் ஒரு மாணவனாக கண்காட்சியைக் காண நேர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத்தூறும் அறிவு.

வாழ்க நலம்!..
***