நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 19, 2025

இது தான்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
செவ்வாய்க்கிழமை


' ஊ ஊ... ஊவ்.. "

எஞ்சினின் நீண்ட சத்தத்தினால் ரயிலடி வாசல் பரபரப்பானது.. 

திருச்சிராப்பள்ளி வண்டி வந்து விட்டது.. அந்தப் பக்கம் நாகூர் வண்டியும் ஸ்டேஷனுக்கு உள்ளே வந்து விட்டது.. ரெண்டு பாசஞ்சரும் பதினைஞ்சு நிமிசம் லேட்.. 


வண்டி மாடுகள் இன்னும் உறக்கம் கலையாது இருக்க வண்டிக்காரர்களிடம் இருந்து ' ஹை.. ஹை.. ' - என்ற சத்தம்..

ஜட்கா வண்டிகளில் பூட்டப்படிருந்த குதிரைகள் வடக்கு ராஜ வீதி பக்கமாகப் பாய்வதற்குத் துடியாய் இருந்தன..

திபு திபு  - என ஜனங்கள்..  அக்கம் பக்கம் பார்த்தபடி அவரவர் பிரச்னைகளை  பேசிக் கொண்டு ஸ்டேசனில் இருந்து வந்தார்கள்.. 

ஆனாலும் அவர்களிடம் ஏதோ ஒரு பரபரப்பு.. என்ன என்று புரியவில்லை..

இதற்கிடையே -

" வெண்ணாற்றங்கரை மாமணிக் கோயிலுக்குப் போகணும்.. எவ்வளவு கேட்கிறீர்?.. "

"  மூனு மைல்  தூரம் வாயில்லா ஜீவன் ஓடணும்.. ரெண்டு ரூபாய் கொடுங்க சாமீ!.. "

"ரெண்டு ரூபாயா.. ஜாஸ்தியா.. ன்னா இருக்கு?.. "

" சீரங்கத்துல இருந்து எங்க ஊருக்கு வர்றீங்க..ன்னு தெரியுது.. பெருமாள் புண்ணியம் எல்லோருக்கும் ஆகட்டுமே!.. நாலணா குறைச்சுக்கங்க சாமி...  வண்டிலே ஏறி உட்காரும்மா குழந்தே!.. " - என்றபடி, வண்டிக்குள் கிடந்த வைக்கோல் மெத்தையைக் கைகளால் தட்டி சமப்படுத்தி விட்டு - அந்த இளைஞனின் கையில் வைத்திருந்த டிரங்கு பெட்டியை வாங்கி வண்டியின்  முன் பக்கம் வைத்தார் வண்டிக்காரர்..

நெற்றிச்சுட்டி, காதோர குஞ்சஙகள், கண் அடைப்பு, கடிவாளம் இன்னபிற அலங்காரங்களுடன் நின்றிருந்த குதிரை  தலையை சிலுப்பிக் கொண்டது..

" ஏறிக்கோ.. பார்கவி!.. "

நெற்றியில் சூரணம் மினுமினுக்க நின்றிருந்த அந்தப் பெண் வண்டியின் பின்புற பாதப் படியில் கால் வைத்து வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொண்டாள்.. 
தொடர்ந்து அந்த இளைஞன் ஏறிக் கொண்டதும் வண்டியின் முன்புறம் சுருட்டி வைக்கப்பட்டிருந்த திரைச்சீலையை இறக்கி விட்ட வண்டிக்காரர் மிக்ஸர் கடை மாரியப்பனைப் பார்த்து கை காட்டினார்..

" திரைச் சீலை வேணாம் பெரியவரே!.. இப்போ தான் ஜென்மாவில் முதல் தரமா தஞ்சாவூர் திவ்ய தேசத்துக்கு வந்திருக்கோம்.. க்ஷேத்ர லாவண்யத்தை எல்லாம் நன்னா பார்த்துண்டு வர்றோமே!.. "

" ஓ.. நல்லா பாருங்க சாமீ!.. " - என்றபடி திரைச்சீலையை மீண்டும் சுருட்டிக் கட்டிய வண்டிக்காரர் லகானை உதறியபடி குதிரையை உசுப்பி விட - அது    கனைத்தபடி நகர்ந்தது.. 

" பெரியவங்க நீங்க.. என்னை ஏன் சாமி.. சாமி.. ன்றேள்... மனசு கஷ்டப்படறது..  "

" அப்படியே பழகிப் போச்சு.. அது ஒரு பிரியத்துல தான்..  பெத்த பிள்ளைகளை ஐயா..ன்னும் அப்பா.. ன்னும் கூப்பிடறோமே.. அது மாதிரி!.. " - என்றார் வண்டிக்காரர்..

" எம்பேரு வரதன் ஆராவமுதன்.. எப்படி இஷ்டமோ அப்படிக் கூப்பிடுங்கோ.. "

" என்னவோ உங்களப் போல ஒரு சில பேர் தான் இந்த மாதிரி பெருந்தன்மையா இருக்காங்க.. "

" இந்த லோகம் - வஸூதைவ குடும்பகம்.. ன்னு வேதோபநிஷத் ல சொல்லியிருக்கா.. "

" அப்படீன்னா?.. "

" இந்தப் பூவுலகமே என்னோட குடும்பம்.. ன்றது அர்த்தம்.. இதுவே தான் நம்ம தமிழ் லயும் சொல்லப்பட்டிருக்கு.. யாதும் ஊரே.. யாவரும் கேளிர்.. ன்னு.. "

வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த பெரியவர் திரும்பிப் பார்த்து புன்னகைத்தார்..

" ஆனாலும் அந்த மாதிரி இருக்கறதுக்கு எல்லா நேரத்திலயும் முடியறதில்லையே!.. துஷ்டனைக் கண்டா தூர விலகு.. ன்னும் சொல்லி இருக்காங்களே!.. "

பெரியவரின் ஆதங்கம் வார்த்தைகளில் வெளிப்பட்டது..

" உயர்ந்த சிந்தனைக்கு நம்ம மனஸ் இடமாயிடுத்துன்னா துஷ்டங்கள் தன்னால விலகிப் போய்டும் ன்றதும் தாத்பர்யம்.. "

" நல்லா விவரமாத் தான் பேசறீங்க.. கோயில் யாத்திரையா வந்திருக்கீங்களா?.. "

" விவாஹம் ஆகி ரெண்டு மாசம் தான் ஆகறது.. மாமனாரோட தம்பி அகத்துக்கு வந்திருக்றோம் பெரியவரே!.. "

மெல்லிய புன்னகையுடன் நாணம் சேர்ந்து கொள்ள அந்தப் பெண் பார்கவியின் கண்களும் கை விரல்களும் பேசாமல் பேசின  - ' வண்டிக்காரர் கேட்டபடியே  ரூபாயைக் கொடுத்துடுங்கோ!.. '  

' ஓ.. கொடுத்துடலாமே!.. ' - இங்கிருந்தும் கண்கள் பேசின..

" அப்போ எங்க ஊருக்கு விருந்தாளியா வந்திருக்கீங்க...  " வண்டிக்காரர் சிரித்தார்..

' டொக்.. டொக்..டொக்.. டொக்.. '
குளம்புகளின் சீரான சத்தம்...
வண்டி ஓட்டத்துக்கு வெள்ளைக்காரன் போட்டு வைத்திருந்த அகலமான  சிமெண்ட் சாலை இதமாக இருந்தது.. 

நடைபாதையில் குடை விதித்திருந்த வாத நாராயண மரங்களில் குருவிகளின் கூச்சல அதிகமாக இருக்க - 

" இதோ.. இதுதான் முனிசிபல் ஆபீஸ்.. " - வண்டிக்காரர் கை காட்டினார்..

வண்டிக்குள்ளிருந்த
இருவரும்  ஆர்வத்துடன் வெளியே நோக்கினர்... 

குதிரையின் ஓட்டம் சற்றே வேகமாகியிருந்தது.. 

" இதோ போறதே... இந்த ரோட்ல தான் கலெக்டர் ஆபீஸ்.. எதிர்த்தாற்போல கோர்ட் கச்சேரி.. "
:
" ம்ம்.. " 

" இது என்ன காவேரி ஆறா?.. "

" காவேரி ஓடறது திருவையாத்திலே... இதுக்குப் பேரு புது ஆறு.. கல்லணையில இருந்து பிரிஞ்சு வர்றது.. " 

" ஓஹோ!.. "


" தோ பாருங்க.. மணிக் கூண்டு..  ராஜா காலத்ல கட்னது.. எவ்ளோ ஒசரம்!.. அதோ அதுதான் சுதர்சன சபா!.. இதுல வந்து நாடகம் 
போடாதவங்களே கிடையாது.. கச்சேரி பாடாதவங்களே கிடையாது!.. " 

" பெரிய கோயில்.. பெரிய கோயில்.. ன்னு சொல்றாளே.. அது எங்கே இருக்கு?.."

" இதுக்குப் பக்கத்து ரோட்ல  இருக்கு பெரிய கோயில்!.. " மேற்கு திசையில் கை காட்டினார் வண்டிக்காரர்..

"  பெரிய கோயிலுக்கு ஒரு நாள் போகலாமா.. ன்னா!. "

அந்தப் பெண் பார்கவியின் ஆவலான கேள்வி..

" சிவன் கோயில் போறதுக்கு மாமா ஒத்துப்பாரா தெரியலையே.. " 

" ஏன்.. இப்டி சொல்றேள்?.. அந்த பேதம் எல்லாம் இங்கேயும் இருக்றதா!..  "

" அப்படி இருக்றதா தெரியலை.. இருந்தாலும்.. அவங்க சம்ப்ரதாயத்லே.. "

" ஈஸ்வரனும் பெருமாளும் வேற வேற சாமிகளா?.. " -
குறுக்கிட்ட வண்டிக்காரருக்கு வியப்பு..

" தெய்வம்.. ங்கறது  ஒன்னுதான்.. எது.. ங்கறது தான் பிரச்னை.. "

மதுரை செல்லும் பேருந்து -
' பாம்.. பாம்.. ' என்ற சத்தத்துடன்   பஸ்டாண்டில் இருந்து வெளியே வந்து விரைந்தது..  

வழியெங்கும் காஃபி மணம்..  ராஜவீதி, அரண்மனை - என்று கடந்த குதிரை -  பரபரப்பு குறைந்திருந்த சாலையில்
வேகமெடுத்து ஓடியது..

" அப்போ... ஆளுக்கு ஒரு சாமின்னு இருக்குதுங்களா.. " 

" அப்படியெல்லாம் இல்லை.. ஏதேதோ சம்ப்ரதாயங்கள்.. சடங்குகள்.. எல்லாமே அவங்க அவங்க க்ஷேமத்துக்காகத் தான்.. "

" அப்போ இந்த லோகத்துக்குன்னு 
உபதேசம் உபசாரம் ஒன்னும் கிடையாதா?.. "

" ஏன் இல்லாம.. எத்தனையோ பெரியவங்க - மனுஷாள் யோக்யாம்சமா வாழறதுக்கு எவ்வளவோ உபதேசம் செஞ்சு வெச்சுருக்கா..  "

" மனுச செம்மம் தான் நல்லதைக் கேக்கறது இல்லையே!.. " 

" அவா அவாளும் பெரியவா சொல்லியிருக்றதக் கேட்டு நடந்தா பிரச்னை இல்லாம இருக்கலாம்.. பிரச்னை இல்லாம க்ஷேமமா இருந்தா ஊருக்கு நல்லது.. ஊர் ஒன்னொன்னும் க்ஷேமமா இருந்தா லோகத்துக்கு நல்லது தானே!.. "

" கேட்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு.. ஆனா ஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்க சம்பிரதாயம் தான பெருசா இருக்கு!.. "
- வண்டிக்காரர் சிரித்தார்..

" ஞானிகளுக்குப் பேதம்.. ன்றது கிடையாது.. தர்க்க ரீதியா வர்றவாளுக்குத் தான் அவங்க அவங்க சம்ப்ரதாயம் - நியாயம் பெரிசாப்படறது.. " 

கேட்டுக் கொண்டிந்த பார்கவி 
கண்களை மலர்த்தி - வலக் கையின் சுட்டு விரலைப் பெரு விரலுடன் சேர்த்து  -  ' நன்று ' என - அபிநயித்தாள்..

"  ரூபாய் நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்கு தானே!.. "

புன்னகையுடன் இளைஞனின் கேள்வி..

" ஒரு ரூபாய்க்கு என்ன.. எல்லா காசுக்கும் தான் ரெண்டு பக்கம் இருக்கு..
ரெண்டு பக்கம் இல்லாம உலகத்துல எந்த விசயமும் கிடையாதே!.. " - வண்டிக்காரரின் ஆச்சர்யம்..

" மனுஷாளுக்கு - சொல்றது
 அதாவது  பேசறது சக்தி.. ன்னா ஒரு நாணயத்துக்கு செல்றது அதாவது செல்லுபடியாகறது சக்தி.. இல்லையா!.. "

இளைஞனின் கேள்வி..

" கையில இருக்குற காசு செல்லுபடியாகலை.. ன்னா யாருக்கு என்ன பிரயோசனம்?.. "

" இது தான் தத்வம்.. கையில இருக்குற காச செல்லுபடியாக்கறது தான் சக்தி..  இது தான் தத்வம்!.. "

" எனக்கொன்னும் புரியலையே.. " - வண்டிக்காரர் குழம்பினார்..

"  ஒவ்வொரு காசுக்கும் பூ.. ன்னும்  தலை.. ன்னும் ரெண்டு பக்கம் இருக்றது.. பூ இல்லாம தலை இல்லை.. தலை இல்லாம பூ இல்லை.. சரியா?.. "

" சரி.. "

" அதுல ஒரு பக்கம் ஹரி அதாவது பெருமாள்.. மறு பக்கம் ஹரன் அதாவது சிவன்.. னு வச்சுக்கிட்டா அதோட பெறுமானம் தான் சக்தி.. மஹாலக்ஷ்மி..   "

" அடடே!.. "

" பூ , தலை.. ரெண்டு பக்கம் இல்லாத காசுன்னு எதுவும் கிடையாது.. ரெண்டு பக்கமும் ஒன்னா இருக்கறப்போ செல்லுபடிங்கற சக்தியும் தன்னால வந்துடுது..
புரிறதா தத்வம்!.. இப்போ ஹரி..ன்றது எது?.. ஹரன்..றது எது?.. "

இளைஞனின் முகத்தில் மந்தகாசம்..

" சரி தான்.. ஒரு காசு ன்னா ரெண்டு பக்கம்.. அதுக்கு செல்லுபடியாகற சக்தி...
இப்படி இருக்கறப்ப பக்கத்துக்குப் பக்கம் வித்தியாசம் ஏது?..
எது எதுக்குப் பெருசு?.. "

வண்டிக்காரர் முகத்தில் புன்னகை அரும்பியபோது குதிரை வண்டி திவ்ய தேசத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது..
***


ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

3 கருத்துகள்:

  1. நல்லதொரு உரையாடலிலேயே கதை நகர்கிறது.  சுவாரஸ்யம்தான்,  இந்தக் காலத்தில் ஏது குதிரை வண்டி மாட்டு வண்டி எல்லாம்! 

    அந்த தம்பதிகள் மங்களாம்பிகாவில் ஒரு காஃபி குடித்து விட்டு சென்றிருக்கலாம்!

    பதிலளிநீக்கு
  2. இரண்டு ரூபாய் கட்டணத்தில் அவ்வளவு தூரம்.  படம் 1960 என்கிறது!  திவ்ய தேசம் எங்கிருக்கிறது?  பள்ளி அக்ரஹாரமா? 

    பதிலளிநீக்கு
  3. மனித மனங்களில்தான் பேதம்.  கடவுளில்(ன்) (கருணையில்) அல்ல!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..