நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 02, 2023

சுந்தரத் தமிழ் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 19
வியாழக்கிழமை

நன்றி:-
திருப்பதிகம்: 
பன்னிரு திருமுறை
படங்கள்: இணையம்..
**

திரு ஊறல் தலத்தில் இருந்து புறப்பட்ட சுந்தரர் - கச்சி என்று புகழப்பட்டிருந்த காஞ்சி மாநகரத்தை அடைந்தார்..

காஞ்சியின் பெருமைகள் சொல்லவும் அரிதானவை..

எம்பெருமான் அளந்த இரு நாழி நெல்லைக் கொண்டு அன்னை முப்பத்திரண்டு அறங்களையும் நடத்தி அருளிய தலம்..

செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேல் தளிய னாரே.. (4/43)

கரையிலாத கல்வியை காஞ்சி மாநகர் தன்னில் ஈசன் வைத்தருளினார்!.. - என்று அப்பர் ஸ்வாமிகள் புகழ்ந்த திருத்தலம்..


ஒரு சமயம் உமையாம்பிகை கம்பை நதிக்கரையில் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட்டனள்.

அப்போது இறைவன் கம்பை ஆற்றில் பெருவெள்ளம் வருமாறு செய்தார்.. 

அவ்வேளையில் உமாதேவி சிவலிங்கத்தைத் தழுவிக் கொண்டு அதைக் காத்திட - ஈசன் வெளிப்பட்டு அருள் புரிந்தனன் என்பது தலவரலாறு. 

அம்பிகை மணல் லிங்கத்தைத் தழுவிக் கொண்ட போது அதன் மேல் அம்பிகையின் கை வளைத் தழும்பும் திரு முலைத் தழும்பும் பதிந்தன..  

இதனால் தழுவக் குழைந்த பிரான் என்றும் பெருமானுக்குப் பெயர்.


இப்படியான புகழுடைய தனது திரு வாசலுக்கு
மிகுந்த சிரமத்துடன்  வந்து நின்ற சுந்தரரைக் கண்டு காமாட்சி அன்னையின் மனம் பதைபதைத்தது..

" ஏதோ உலக நடப்பில் நாட்டம் வைத்த குழந்தை சத்தியத்தை மீறி விட்டான்.. தவறு தான்.. அதுக்காக இப்படியா குழந்தையை போட்டுப் படுத்துறது?.. "
- என்று, மனம் இளகியது..

சிவமே!.. என்றிருந்தது ஏகாம்பரேச சிவம்..

வேகவதியில் வெள்ளம் வந்தாற்போல - சுந்தரரிடம் இருந்து செந்தமிழ்ப் பதிகம் பொங்கியது..


அதற்கு மேலும் மனம் பொறுக்காத காமாட்சி தன் பங்கிற்கு இடக் கண்ணில் பார்வையைத் தந்தருளினாள்..
 
ஏகாம்பரநாதன் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்..

இந்த அளவில் -
இடக்கண் பெற்ற சுந்தரர், அம்மையப்பனை வலம் செய்து வணங்கி விட்டு காஞ்சியில் இருந்து திரு ஆரூருக்குப் புறப்பட்டார்..
***
திருப்பதிகம்
திருக்கச்சி ஏகம்பம்

ஏழாம் திருமுறை
திருப்பதிக எண் 61


இறைவன்
ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ ஏலவார்குழலி

தலவிருட்சம்
மா
தீர்த்தம்
கம்பா தீர்த்தம்

ஆலந் தான் உகந்து அமுது செய்தானை
ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலந் தான் பெரிதும் உடை யானைச்
சிந்திப்பார் அவர் சிந்தையு ளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 1

உற்றவர்க்கு உதவும் பெரு மானை
ஊர்வதொன்று உடை யான்உம்பர் கோனைப்
பற்றி னார்க் கென்றும் பற்றவன் தன்னைப்
பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை
அற்றமில் புகழாள் உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 2

திரியும் முப்புரந் தீப்பிழம் பாகச்
செங்கண் மால்விடை மேல்திகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
காமனைக் கனலா விழித் தானை
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 3

குண்ட லந்திகழ் காதுடை யானைக்
கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்டலம் பும்மலர்க் கொன்றையி னானை
வாள ராமதி சேர்சடை யானைக்
கெண்டையந் தடங்கண் உமை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ட நஞ்சுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 4

வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
வேலைநஞ் சுண்ட வித்தகன் தன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
அருமறை அவை அங்கம்வல் லானை
எல்லையில் புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 5

திங்கள் தங்கிய சடையுடை யானைத்
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடை யானைச்
சாம வேதம் பெரிதுகப் பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 6

விண்ணவர் தொழுது ஏத்த நின் றானை
வேதந்தான் விரித்து ஓதவல் லானை
நண்ணினார்க் கென்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புக ழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 7

சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
சிந்தை யில்திக ழுஞ்சிவன் தன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
பாலொடு ஆனஞ்சும் ஆட்டுகந் தானை
அந்தமில் புகழாள்உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 8

வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
வாலி யபுர மூன்றெரித் தானை
நிரம்பி யதக்கன் தன்பெரு வேள்வி
நிரந்த ரஞ்செய்த நிர்க்கண் டகனைப்
பரந்த தொல்புகழாள் உமை நங்கை
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 9


எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவிஓடித் தழுவ வெளிப் பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 10

பெற்றம் ஏறுகந்து  ஏறவல் லானைப்
பெரிய எம்பெரு மான்என்று எப்போதும்
கற்றவர் பரவப் படுவானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானைக்
குளிர்பொழில் திருநாவல் ஆரூரன்
நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார்
நன்னெறி உலகு எய்துவர் தாமே.. 11

திருச்சிற்றம்பலம்


சுந்தரர் திருவடிகள் போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. இன்று தழுவ குழைந்த பிரான் இடம்பெற்று இருக்கிரார் இன்று.என் தளத்தில் ஆரத்தழுவிய சக்தி இடம்பெற்று இருக்கிறார். அப்போது எழுதும் போது காஞ்சிபுரத்தை நினைத்தேன். நினைத்த அன்னையை தரிசனம் செய்ய முடிந்தது உங்கள் தளத்தில் அன்னையின் அருள்.
    ஏழாம் திருமுறை பாடல் கண் சம்பந்தமான நோய் தீர பாட சொல்வார்கள்.
    பாடலை பாடி தரிசனம் செய்து கொண்டேன். பகிர்ந்த படங்கள் எல்லாம் மிக அருமை.
    சுந்தரர் திருவடி போற்றி போற்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றுக்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. ஏகாம்பரேஸ்வரர் , ஏலவார் குழலி பாதம் போற்றி போற்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாம்பரேசர் ,
      ஏலவார் குழலி போற்றி போற்றி!..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. தரிசனம் நன்று
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வளமுடன்..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி..
      நலம் வாழ்க..

      நீக்கு
  4. பதில்கள்
    1. ஓம் சிவாய நம..

      மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..
      நலம் வாழ்க..

      நீக்கு
  5. ஏகாம்பரேஸ்வரர் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. https://aanmiga-payanam.blogspot.com/2006/08/23.html//திருஞானசம்பந்தருக்கு முத்துப்பந்தல் அளித்த பட்டீஸ்வரம்/திருச்சத்திமுற்றத்திலும் அன்னை கட்டித்தழுவிய நிலையிலேயே ஒரு தனிச் சந்நிதி இருக்கிறது. கொழுந்தீஸ்வரர், தழுவக் கொழுந்தீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் மூலவர் அருள் பாலிக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. படித்திருக்கின்றேன்... தரிசனம் செய்ததில்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..