நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 02, 2022

திரு ஐயாற்றில்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

தை அமாவாசையன்று காலையிலேயே திரு ஐயாற்றுக்குப் புறப்பட்டு விட்டோம்.. 

காவிரியின் பூசப் படித்துறையில் தர்ப்பணங்கள் செய்வதற்கு அனுமதி உண்டா இல்லையா என்பது சரியாகத் தெரியாத நிலை.. 

திரு ஐயாற்றில் கூட்டம் குறைவாகத் தான் இருந்தது.. இருந்தாலும் காவலர்கள் மக்களை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர்..

பூசப் படித்துறையில் மக்கள் குளிப்பதற்கும்
சம்பிரதாயங்கள் செய்வதற்கும் அனுமதி
வழங்க்கப்பட்டிருந்தது..

எனவே -
மண்டபத்தைச் சுற்றிலும்
தம் முன்னோர்களுக்கு
சிரத்தையுடன் தர்ப்பணம் செய்து கொண்டிருந்தனர்..

காவிரியில் தண்ணீர் ததும்பி ஓடிக் கொண்டிருந்தது..
தொட்டு வணங்கி நீராடி விட்டு கோயிலுக்குச் சென்றோம்..

தெற்கு கோபுர வாசலில்
த்வார பாலகர் 
ஸ்ரீ ஆட்கொண்டார் ஸ்வாமி..
சிவ ஸ்வரூபம் பெற்று யமனை விரட்டி அடித்து பக்தனைக் காத்து அருளியதாக ஐதீகம்..

எனவே அவருக்கு முன்பாக நந்தி பீடம்.. அருகில்
சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளுக்காக ஓலம் இட்ட விநாயகர்..

மனதார வணங்கி விட்டு கோயிலுக்குள் சென்றோம்..


 ஸ்ரீ ஐயாறப்பர் 
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி சந்நிதிகளில் நிறைந்த தரிசனம் ..

கோயிலில் எடுக்கப்பட்ட சில படங்கள்..













அம்பாள் சந்நிதி
கொடிமரமும்
பத்ம தளமும்
திருச்சுற்றும்..




ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி சந்நிதி
புது மண்டபத் தூண்களில்
விளங்கும்
திருவள்ளுவர்
மற்றும்
பாரதமாதா
தோற்றங்கள்..



பகல் பதினொரு மணியளவில் வழக்கம் போல காவிரிக் கரையில் விளைந்த காய்களுடன் வீடு திரும்பினோம்...

கூட்டம் காரணமாக ஆட்கொண்டார் சந்நிதியின் முன் படம் ஏதும் எடுக்கவில்லை..

வேறொரு சமயத்தில் மேலும் பல படங்களைத் தருகின்றேன்...
***
இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயன் ஐயாற னாரே.. 4/38
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

19 கருத்துகள்:

  1. சிறுவனாய் இருந்த காலத்தில் ஒருமுறை சென்றிருக்கிறேன். தரிசித்து வருடங்களாகின்றன. பகிர்வுக்கு நன்றி. நேற்று தினமலரில் திருவையாறு படித்துறை படம் போட்டிருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      திருவையாற்றில் காவிரி பூசப்
      படித்துறையில் போட்டோ , வீடியோ எடுப்பது தடை செய்யப் பட்டுள்ளதாக அங்கே அறிவிப்பு உள்ளது.. அங்கு எடுத்த சில படங்களோடு வந்து விட்டேன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஒ... தாத்தாவும் இருக்கிறாரே...!

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      இன்னும் முழுமையாகப் படங்கள் எடுக்க வேண்டும்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவு அருமை. திருவையாறு கோவில் படங்கள் ஒவ்வொன்றும் நன்றாக உள்ளன. கோவில் கோபுர தரிசனமும், அம்மையப்பன் தரிசனமும் கிடைக்கப் பெற்று ஆனந்தமடைந்தேன். இதுவரை இங்கு செல்லும் பாக்கியம் கிடைக்கவில்லை. "அவன்" அழைத்தால் செல்லலாம். இங்கு தங்கள் பதிவின் மூலமாக கோவிலை தரிசிக்கும் பேறு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      திரு ஐயாறு கோயிலில் சந்நிதிகளைத் தவிர்த்து வெளி இடங்களில் தாராளமாகப் படங்கள் எடுக்கலாம்.. அவசியம் திரு ஐயாறு தரிசனம் செய்யுங்கள்..

      நானும் அவ்வப்போது இயன்ற பொழுதுகளில் திருத் தலங்களைப் பற்றிய பதிவுகளைத் தருகின்றேன்..

      எல்லாம் இறைவன் அருள்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. படங்கள் ரொம்ப அழகாக இருக்கின்றன துரை அண்ணா. படங்களை ரசித்தேன். அட! புது மண்டபத்தில் திருவள்ளுவரும், பாரதமாதாவும்!!

    உங்களுக்கும் சிறப்பான தரிசனம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தஞ்சை பெரிய கோயிலில் எடுக்கப் பட்ட படங்களும் இருக்கின்றன.. அடுத்தடுத்த பதிவுகளில் தருகின்றேன்..

      மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  5. நிகழ்வு சிறப்பானதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  6. மன்னர் சரபோஜி காலத்து ஓவியங்கள் என்று நினைக்கிறேன். அத்தனையும் பொக்கிஷம். பாதுகாக்க வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாயக்கர் காலத்து ஓவியங்கள் அழிக்கப்பட்டு விட்டன.  அது போல் நடக்க கூடாது. 

    திருவள்ளுவர் சிலையா? நான் அகத்தியர் சிலை என்று நினைத்தேன். அதே போல் பாரதா மாதா என்பதை துர்கா சிலை என்று நினைத்தேன். படங்கள் அழகாக இருக்கின்றன. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      2013 திருப்பணிகளின் போது ஏதோ பிரச்னை மூண்டதால் பழங்கால ஓவியங்கள் திரும்பவும் புதுப்பிக்கப் படாமல் இருக்கின்றன என்று சொல்கிறார்கள்..

      மண்டபத் தூன்களில் உள்ள சிற்பங்கள் அழகானவை.. பதிவில் காட்டியுள்ள சிற்பங்கள் திருவள்ளுவரும் பாரத மாதாவும் தான்.. அகத்தியரை கமண்டலத்துடன் காட்டுவதே மரபு..

      சுவடியைக் கையில் வைத்திருப்பதால் ஐயன் திருவள்ளுவர் தான்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அழகான படங்கள். அற்புதமான தரிசனம். பகிர்வுக்கு மிக்க நன்றி. முதல் முறை போனப்போத் திருவையாறு கிராமமாகவே இருந்தது. குழந்தைகளும் வந்திருந்தபடியால் கோயில், தியாகராஜர் கோயில், படித்துறை எல்லாமும் பார்த்தோம். மறுமுறை போனது சுமார் ஏழெட்டு ஆண்டுகள் முன்னர். அப்போத் தான் விரித்த செஞ்சடை பற்றியும் அதைத் தாண்டிச் செல்லக் கூடாது என்பதும் கிட்டத்தட்ட சோமசூக்தப் பிரதக்ஷிண முறையில் சுற்றி வர வேண்டும் எனவும் அறிந்து கொண்டேன். இங்கே பக்கத்திலேயே இருந்தாலும் திருவையாறு வழியாகவே பலமுறை சென்றும் இந்தப் பத்து வருடங்களில் ஒரு முறை கூடப் போக முடியலை. மண்டபத் தூணில் உள்ள சிற்பங்களும் அருமை. எனக்கும் அகத்தியர் என்றே தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      திரு ஐயாறு கோயிலைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.. அப்பர் ஸ்வாமிகளின் புனித வரலாற்றுடன் தொடர்புடையது..
      நால்வராலும் சொல்லப்பட்ட திருத்தலங்களுள் இதுவும் ஒன்று.. காசிக்கு சமமான தலம்.. பல பதிவுகள் திரு ஐயாற்றைப் பற்றி எழுதியுள்ளேன்..

      அம்பாள புது மண்டபத்து சிற்பங்களைப் பற்றி பல பதிவுகள் எழுதலாம்..

      தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அருமையான பதிவு.
    படங்கள் எல்லாம் அருமை. பல வருடங்கள் ஆச்சு இந்த கோயில் பார்த்து.
    இப்போது உங்கள் தளத்தின் வழியே தரிசனம் செய்து விட்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கோயிலின் சிறப்புகளைப் பற்றி புதிதாக எதுவும் எழுதவில்லை..

      கைதொலைபேசியில் அதிகம் தட்டச்சு செய்வது சிரமமாக உள்ளது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அழகான படங்களும் தகவல்களும்... உங்கள் மூலம் நாங்களும் இறைவனையும் இறைவியையும் தரிசித்தோம். மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  10. உங்களின் திருவையாறு பயணம் சிறப்பு. அழகான புகைப்படங்கள். ஐயாறப்பரைக் கண்டதில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி.
    வாய்ப்பு கிடைக்குபோது உங்களைச் சந்திக்கக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி ..
      நானும் தங்களைச் சந்திப்பதற்கு ஆவலுடன் இருக்கின்றேன்.. நேரம் விரைவில் கூடி வரும்.

      தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..