நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 16, 2020

மார்கழி முத்துக்கள் 01

 ஓம்

தமிழமுதம்


அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.. (01)

பாலும்தெளி தேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா..
-: ஔவையார் :-
***
திரு அரங்கன்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா நின்
சேவடி செவ்வித் திருக்காப்பு..

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!..
-: பெரியாழ்வார் :-

மாதங்களில் நான் மார்கழி!..

- என்றுரைக்கின்றான் - ஸ்ரீகிருஷ்ணன்..

அந்த அளவுக்கு மங்கலகரமானவை மார்கழியின் நாட்கள்..

மார்கழியின் முதல் விடியலிலிருந்து தேவர்களுக்கு வைகறைப் பொழுது..
ஆலயங்கள் தோறும் திருப்பள்ளி எழுச்சி!.. தனுர் மாத வழிபாடுகள்!..  

தெருக்கள் தோறும் இல்லங்களின் தலைவாசலில் எழில் மிகும் கோலங்கள்!.. 

வண்ண வண்ணப் பூக்கள்!. . சுடர் விடும் அகல் விளக்குகள்!..

ஏன்!.. இதற்கு முன் வாசலில் கோலங்கள் இட்டதில்லையா?..
அவற்றில் பூக்களையும் அகல் விளக்குகளையும் வைத்ததில்லையா?.. 

அதற்கு முன் வாசலில் கோலமிட்டு பூக்களையும் விளக்குகளையும் வைத்தார்கள் தான்!..

பிறகு!?..

இந்த மார்கழி முழுதும் பொருள் பொதிந்த கோலங்கள்..

அப்படி என்றால்?..

கோலத்தின் நடுவே -
பசுஞ்சாண உருண்டையில் பூசணிப் பூ ஒன்றை வைப்பார்கள்!.. 

அதன் பொருள் -
இந்த வீட்டில் பூ ஒன்று பூவை என்று பூத்திருக்கின்றது!.. 
கன்னி ஒருத்தி இருக்கின்றாள் என்பதை இலை மறைவு காயாக உணர்த்துவதாகும்!..

அந்தக் காலத்தில் கன்னிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராத சூழ்நிலை..

இன்று அப்படி இல்லை.. என்றாலும் -
மார்கழிக் கோலங்களுக்கு மகத்துவம் அதிகம்..  


மங்கலம் சிறக்க வேண்டும்!.. மனையறம் செழிக்க வேண்டும்!..
மதிநலம் விளைய வேண்டும்!... மண் பயனுற வேண்டும்!.. 

இவை யாவும் எங்கிருந்து தோன்றும் ?.. 

ஒளி படைத்த நல்ல மனங்களின் உள்ளிருந்து!.. 

அப்படி ஒரு ஒளி - அதுவும் பேரொளி - 
ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் - 
ஸ்ரீவில்லிபுத்தூரில் திருத்துழாய் வனத்தில் உதித்த 
கோதை நாச்சியார் தம் திருஉள்ளத்தில் தோன்றியது!..  

அதன் பெயர் தான் -  திருப்பாவை!..

திருப்பாவை என்பது ஒரு நூல் அல்ல!.. 

நம்மை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் வாழ்வியல் நெறி...

மங்கலகரமான மார்கழி முழுதும் நம்மை வழிப்படுத்துகின்றாள்  - சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்!..

நம்மை அவள் அழைக்கின்றாள் - மார்கழி நீராடலுக்கு!.. 
வாருங்கள் - அவள் துணையுடனே செல்வோம்!..
***
அருளமுதம் 

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிய
திருப்பாவை
திருப்பாடல் - 01
***
நன்றி - திரு. கேசவ் ஜி

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் 
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் 
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் 
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் 
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் 
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்குப் பறை தருவான் 
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்!..
 ***

சிவ தரிசனம்
தில்லை திருச்சிற்றம்பலம்


இறைவன் - ஆனந்தக்கூத்தன்
அம்பிகை - சிவகாமசுந்தரி
தீர்த்தம் - சிவகங்கை
தலவிருட்சம் - தில்லை

அங்கே அரங்கம்!..

வைணவத்தில் கோயில் எனில் - 
திருஅரங்கம்..
அரிதுயில் கோலத்தில் அரங்க நாதன்.. 

இங்கே அம்பலம்!..

சைவத்தில் கோயில் எனில் - 
தில்லைத் திருச்சிற்றம்பலம்..
ஆனந்தக் கூத்தனாக அம்பலவாணன்..

ஐயன் அம்பிகையுடன் 
ஆனந்தத் திருநடனம் நிகழ்த்தும் திருத்தலம்...
பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயத் திருத்தலம்..

- பாடிப் பரவியோர் - 
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர், மாணிக்கவாசகர்..
மற்றும் பல உத்தம அடியார்கள்..

தீர்த்தனைச் சிவனை சிவலோகனை
மூர்த்தியை முதலாய ஒருவனைப் 
பார்த்தனுக்கு அருள் செய்த சிற்றம்பலக்
கூத்தனைக்கொடியேன் மறந்துய்வனோ..(5/2) 
-: அப்பர் பெருமான் :- 
***

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய 
தேவாரம்

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!.. (6/95)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் - 01


போற்றிஎன் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் என்னை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!.. 
***

மீண்டும் மார்கழியில்
தேவாரம்
திருப்பாவை திருவெம்பாவை
ஆகிய தெய்வப் பனுவல்களின்
திருப்பாடல் பதிவுகளை
வழங்குதற்குப் பேறு பெற்றேன்..

இன்று முதல் நமது தளத்தில்
ஒன்பதாவது ஆண்டாக 
மார்கழிப் பதிவுகள் தொடர்கின்றன..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
***

20 கருத்துகள்:

  1. வாசலிலே பூசணிப்பூ வைத்தால் வீட்டில் கன்னி ஒருத்தி திருமணத்துக்கு இருக்கிறாள் என்கிற மறைபொருள் புரிந்து கொண்டேன்.  ஆனால் அபப்டி எல்லாம் இல்லாமல் நிறைய பேர்கள் எப்படியும் காலத்துக்கு நடுவில் பூசணிப்பூ வைத்து நேசத்தில் மனசைத் தைத்து விடுகிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      பூசணிப் பூ கோலங்களுக்கு இடையே நடந்த நாட்கள் எல்லாம் இனிமேல் எப்போது கிடைக்கும்?..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. படங்களும் இடுகையும் அருமை, பொருள் பொதிந்தவை.

    திருஅரங்கன் எனக் குறிப்பிடுவதில்லை. நம்பெருமாள் என்றே குறிப்பிடுவர். அறிதுயிலில் இருப்பவர் திருவரங்கன்.

    பூசனிப் பூவிற்குப் பதில் செம்பருத்திப் பூ என்றால் எப்படிப் புரிந்துகொள்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      பூசனிப் பூவிற்குப் பதில் செம்பருத்திப் பூ என்றால் -

      பூ வைத்த பூ என்று புரிந்து கொள்ள வேண்டியது தானே!..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அழகான படங்கள். அருமையான பதிவு. மார்கழி திங்கள் முதல் நாளன்று தெய்வ தரிசனங்கள் பெற்று மகிழ்வடைந்தேன். பூசணிப்பூவின் மகத்துவத்தை உணர்ந்தேன். அடியவர்களின் பக்திப் பாடல்களையும் பாடி மகிழ்ந்தேன். அனைத்தையுமே விளக்கமாக தொகுத்து தந்திருக்கிறீர்கள். இம்மாதம் முழுவதும் தொடர்ந்து தரவிருப்பதற்கும் மிக்க மகிழ்ச்சி. நானும் இறையருளால் தொடர்கிறேன். இன்றைய பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      இவ்வருடம் மேலும் சிறப்பாகச் செய்திட நினைத்திருந்தேன்... ஆனால் சூழ்நிலை மாறி விட்டது...

      அன்பும் அருளும் துணை நிற்கும்..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பூசணிப்பூவின் தகவல்கள் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மிக அழகிய பதிவு!
    விடியற்காலையில் போட்டி போட்டுக்கொன்டூ கோலங்கள் வரைந்ததும் அடுத்த வீடு, எதிர் வீடு என கோலங்களைப்பார்த்து பார்த்து ரசித்ததும், அத‌ற்காக முதல் நாளே இரவில் கோலங்கள் பல வரைந்து சரி பார்த்ததும் இட்ட கோலத்தில் அழகான பரங்கிப்பூவை சாணக்கொண்டையில் வைத்து அழகு பார்த்ததுமான இளைமை நினைவுகளை உங்கள் பதிவு திரும்பக் கொன்டு வந்து விட்டது!
    அந்தக்காலங்களின் இனிமை இனி என்றுமே வராது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      அப்படியான நாட்கள் மீண்டும் கிடைத்தால் எப்படியிருக்கும்!...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அழகான அருமையான பதிவு. மார்கழிக் கோலங்களும், பூஷணிப்பூவும், விளக்கும் அந்த நாட்களை நினைவூட்டி விட்டன. இங்கேயும் முடிந்தவரை சின்னச் சின்னக் கோலங்கள் போடுகின்றனர்.விளக்குகளும் வைக்கின்றோம். பூஷணிப் பூத் தான் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னேற்பாடாக அருகிலுள்ள கிராமத்தில் சொல்லி வைத்துக் கொண்டால் பூசணிப் பூக்களைக் கொண்டு வந்து தருவார்கள்...

      இந்த ஏற்பாடெல்லாம் அப்போது இருந்தது.. இப்போது எப்படி என்று தெரிய வில்லை...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  7. கோமதி அரசு இருந்திருந்தால் அழகாகக் கோயில்கள் சென்று கோலங்களோடு கூடிய மார்கழிப் பதிவுகளைப் பகிர்வார்கள். எப்படி இருக்கிறார்களோ! அன்று பேசிய பின்னர் மறுபடி பேச நேரம் வாய்க்கவில்லை. :( இங்கே தினம் ஒரு நிகழ்வு, பிரச்னை எனப் பொழுது போய் விடுகிறது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இதையே நினைத்தேன்... பதிவில் கதை பாட்டு என்று எதை எழுதினாலும் ஆழ்ந்து வாசித்து விமர்சனம் செய்வார்கள்..

      திருமதி கோமதிஅரசு அவர்கள்துயர் நீங்கி ஆறுதல் கொள்ள வேண்டும் என்பதே அனைவரது வேண்டுதல்...

      நீக்கு
  8. திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பகிர்வுக்கு நன்றி. இந்த வருஷம் மார்கழி ஒன்றாம் தேதி இன்று புதன்கிழமையாக இருந்தாலும் மாதம் நேற்றே பிறந்து விட்டதால் சகல ஆலயங்களிலும் தனுர் மாதப் பூஜை நேற்றே ஆரம்பித்து விட்டது. இங்கே ஶ்ரீரங்கம், திருவானைக்கா, உ.பி. கோயில் ஆகிய எல்லாக் கோயில்களிலும்.

    பதிலளிநீக்கு
  9. மகத்துவம் தத்துவமாக மாறி... சில காலமாக மாற்றி... ம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. வாசிக்க வாசிக்க இன்பம் தரும் பதிவு ...அருமை

    பதிலளிநீக்கு
  11. சிறப்பான தகவல்களுடன் மார்கழி மாதத்தின் தொடக்கம். தொடரட்டும் உங்கள் சிறப்புப் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..