நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 25, 2018

ஓங்கி உலகளந்த...

வேண்டும்..

நிறைய வேண்டும்... 

செல்வம் நிறைய வேண்டும்...

அதுவும் நீங்காத செல்வமாய் நிறைய வேண்டும்...

அதற்கு பசுக்களும் காளைகளும் வேண்டும்!...

பெருந்திறலுடைய காளைகள் .. இவற்றோடு,
பெருந்திருவுடைய பசுக்கள்...

பெருந்திருவுடைய பசுக்கள் என்றால் - வடிவத்திலா!...

வடிவத்தில் அல்ல... வள்ளல் தன்மையில்!..

தன்னைப் புரப்பவன் 
தனது பருத்த மடியின் காம்பினைப் பற்றிய அந்த நொடியில் -  

கன்றுக்கென ஒரு துளியும் தான் வைத்துக் கொள்ளாமல்
அவன் பற்றியிருக்கும் குடத்தினை நிறைத்துத் தரும் 
வள்ளல் தன்மையில் வழுவாத பெரும் பசுக்கள்!...

ஆகா.. அவ்வளவு தானா!...

இன்னும் இருக்கின்றதே...

பூங்குவளையின் இதழ்களினூடாகப் புகுந்த வண்டு 
அதனுள் துளிர்த்திருக்கும் தேனை மாந்தித் திளைத்து
எழுந்து பறந்திட மனமின்றி தூங்கிக் கிடக்கின்றதே - 
அத்தன்மையான வன வளம்!...

ஆகா!...

இன்னும் கேள்... 

ஓங்குபெருஞ் செந்நெற் கழனி!... 
அக்கழனிக்குள் காலளவுக்குத் தெள்ளிய நீர்... 
அதற்குள் இரை தேடி உழக்கித் திரியும் கயற் கூட்டம்!...
இத்தன்மையான வயல் வளம்!...

ஓ!...
இத்தனைக்கும் மாரி வளம் வேண்டுமல்லவா!..

ஆமாம்...
ஒரு மாரி அல்ல..
இரு மாரி அல்ல!..
திங்கள் தோறும் தீங்கில்லாத மும்மாரி!...

அத்தகைய மழைக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?...

மரங்களை வெட்ட மாட்டோம்..
காடு கரைகளை அழிக்க மாட்டோம்.. - என,
விரதம் மேற்கொள்ள வேண்டும்!...

அது பாவை நோன்பு எனப்படும் காத்யாயனி விரதம்...

காத்யாயனி ஆனவள் ஸ்ரீதுர்காபரமேஸ்வரி...
அவளை ஆன்றோர் நந்தினி என்றும் போற்றுவர்..

ஏனெனில் அவள் நந்தகோபனின் இல்லத்தில் உதித்ததனால்!..

இந்த நந்தினியை - துர்காபரமேஸ்வரி - எனும் காத்யாயனியை நந்தகோபன் தன் குமாரனின் பேர் பாடிப் பரவ வேண்டும்!...

அவன் உத்தமன்...

உலகளந்த உத்தமன்.. அதுவும் ஓங்கி உலகளந்த உத்தமன்!...

ஓங்கி உலகளந்த உத்தமனாகிய, அவன் தான் - 
வாமனனாக வந்து மாவலியின் யாகசாலையில்
மூன்றடி மண் கேட்டு இரந்து நின்றவன்!...

ஓங்கி உலகளந்த உத்தமன் வாமனனாகத் தோன்றிய நாள் இன்று!...

ஆவணி மாதத்தின் திரு ஓணம்!...


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் மாதம் மும்மாரி பெய்து
ஓங்குபெருஞ் செந்நெல் ஊடுகயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!...

ஆண்டாளும் ஆழ்வார்களும் பாடியருளிய 
திருப்பாசுரங்களில் மட்டுமல்லாது

தேவாரத்திலும் திருவாசகத்திலும் திருப்புகழிலும் கூட,
மாவலியிடம் மண் கேட்டு - ஓங்கி உலகளந்த புகழ் பரவிக் கிடக்கின்றது....

ஸ்ரீஹரிபரந்தாமன் மாவலியிடம் வந்து மண் கேட்கும் அளவுக்கு அவன் செய்த புண்ணியம் தான் என்ன!...

இதோ - அதனை அப்பர் பெருமான் குறித்தருள்கின்றார்...


நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகம் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே.. (4/49)

சிவாலயத்தின் தீபத்தைத் தூண்டி விட்ட புண்ணியம்!...

அந்த புண்ணியத்தைச் செய்தது ஒரு எலி!...

அதுவும் பக்தியால் அல்ல... பசியால்!...

பசிக்கு இரை தேடி வந்த எலி -
நெய்யினைத் தீண்டுவதாக அங்கிருந்த தீபத்தைத் தூண்டி விட்டது...

அதனால் தீபம் கனிந்து சுடர் விளங்கியது..

அதன் பொருட்டு மகிழ்வெய்திய எம்பெருமான்
மாவலி எனும் மன்னனாகப் பிறக்க வரமளித்தான்...

இந்த மாவலியிடம் மூன்றடி கேட்டு 
வாமனனாக வந்த ஸ்ரீஹரிபரந்தாமன்
மாவலியின் புண்ணியத்தால் 
அவனது தலையில் திருவடியை வைத்து
பாதாள லோகத்துக்கு அதிபதியாக ஆக்கி வைத்தான்..

வைகுந்தத்தின் திருக்காவலர்களாகிய 
ஜய, விஜயர் - சனகாதி முனிவர்கள் இட்ட சாபம் தீர்வதற்கு
ஹிரண்யன், ஹிரண்யாட்சன் - என, பிறப்பெடுத்ததுவும்
ஹிரண்யனின் மகனாக ஸ்ரீ ப்ரகலாதன் தோன்றியதுவும்
இந்த மாவலியின் குலத்தில் தான்!...

இப்படி - மாவலியை ஆட்கொண்டருளிய
வாமனப் பெருமான் திரு அவதாரமுற்ற நாள்
ஆவணித் திருவோணம்..
***

இன்றைய பதிவில்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
திருமங்கையாழ்வார் 
அருளிச் செய்த திருப்பாசுரங்கள்...


ஒருகுறளாய் இருநிலம் மூவடிமண் வேண்டி
உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாளணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள்நான்கும் வேள்வி ஐந்தும்
அங்கங்கள் அவையாறும் இசைகளேழும்
தெருவில்மலி விழாவளமும் சிறக்கும்
காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே.. (1178)

கண்டவர்தம் மனம்மகிழ மாவைதன் வேள்விக்
களவில்மிகு சிறுகுறளாய் மூவடியென்று இரந்திட்டு
அண்டமும் இவ்வலைகடலும் அவனிகளும் எல்லாம்
அளந்தபிரான் அமருமிடம் வளங்கொள் பொழிலயலே
அண்டமுறும் முழவொலியும் வண்டினங்கள் ஒலியும்
அருமறையின் ஒலியும்மட வார்சிலம்பின் ஒலியும்
அண்டமுறு மலைகடலின் ஒலிதிகழு நாங்கூர் அரிமேய
விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே.. (1242)


வசையறு குறளாய் மாவலி வேள்வி மண்ணள விட்டவன் தன்னை
அசைவறும் அமரர் அடியினை வணங்க அலைகடல் துயின்ற அம்மானை
திசைமுகன் அனையோர் நாங்கைநன் நடுவுள் செம்பொன் செய்கோயிலினுள்ளே
உயர்மணி மகுடம் சூடிநின்றானைக் கண்டு உய்ந்தொழிந்தேனே.. (1271)

பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழப்பொல்லாத
குறளுருவாய்ப் பொருந்தா வாணன்
மங்கலம்சேர் மறைவேள்வி அதனுள் புக்கு மண்ணகலம்
குறையிரந்த மைந்தன் கண்டீர்
கொங்கலர்ந்த மலர்க்குழலார் கொங்கை தோய்ந்த
குங்குமத்தின் குழம்பளைந்த கோலந் தன்னால்
செங்கலங்கல் வெண்மணல்மேல் தவழும் நாங்கூர்த்
திருத்தெற்றி அம்பலத்தென் செங்கண்மாலே.. (1184)


மண்ணிடந்து ஏனமாகி மாவலி வலிதொ லைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையிரந்தாய்
துண்ணெண மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந்தண் பாடியாய் களைகணீயே.. (1299)

ஒள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில்வாய் இருந்துவாழ் குயில்கள் அரியரி என்றவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் திருவெள்ளியங்குடி அதுவே.. (1344)


தொழுநீர் வடிவில் குறளுருவாய் வந்துதோன்றி மாவலிபால்
முழுநீர் வையம் முன்கொண்ட மூவாவுருவினன் அம்மானை
உழுநீர் வயலுள் பொன்கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே.. (1722)

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடுங் கொண்டு
பின்னும் ஏழுலகும் ஈரடியாகப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்
அன்னமென் கமலத்து அணிமலர்ப் பீடத்து அலைபுனல் இலைக்குடை நீழல்
செந்நெலொண் கவரியசைய வீற்றிருக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே.. (1752)
-: திருமங்கையாழ்வார் :-
***

குருநாதராகிய 
திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்
திருத்தோற்றமுள்ள நன்னாள் - இன்று...

25 ஆகஸ்ட் 1906
குருநாதர் மலரடிகள் போற்றி.. போற்றி..
***

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய:
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. படிப்படியான விளக்கம் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன் ..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் வெங்கட் ..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நம் தமிழில் இனிமையான பாடல்கள், அதுவும் ஓங்கி உலகளந்த என்று தொடங்கி இடுகை மிகச் சரளமாகச் செல்கிறது. நான் எதிர்பார்க்கவே இல்லை, ஓணத்துக்கு, 'ஓங்கி உலகளந்த' என்ற பாசுரத்தோடு ஆரம்பிப்பீர்கள் என்று. வாழ்த்துகள். மிகுந்த திறமை, பக்தி. பெருகட்டும், எங்களுக்கும், புல்லுக்கும் ஆங்கே பொசியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த ..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. கடவுள் மறுப்புக் கொள்கை என்ற வேலையற்ற வேலையால், தமிழ்ப் புலவர்களை, அவை பக்தி என்ற பொருளைக் கொண்டிருப்பதால் 50 ஆண்டுகளாக அரசு புறக்கணித்தது வெட்கப்படவேண்டியது.

    கவி பாடும் திறமையை, தமிழறிந்த புலவர்கள், உலகின் முதல்வனான இறையைப் பற்றிப் பாடி தங்களைக் கடைத்தேறிக்கொண்டது மட்டுமல்லாமல் எளியார் பல கோடி மக்களையும் கடைத்தேற்றினர். சைவம் வைணவம் என்று தமிழை ஏத்திய பாடல்களைப் படிக்கும்போது, மனது மகிழ்ச்சியடைகிறது.

    நீங்கள் தொடர்ந்து இந்த மாதிரி பாசுரங்களை மாலையாக்கி இடுகைகள் போடவேண்டும். அதற்கு ஏற்ற மாதிரி நன் நாட்களும், அருமையான படங்களும் இருக்கையில் என்ன கவலை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த ..

      இறைவன் அருளும் பெரியோர்களின் நல்லாசிகளும்
      திருப்பாசுரங்களை மாலையாக்கித் தரும் பணிக்கு
      உறுதுணையாக விளங்கும் என நம்புகின்றேன்..

      தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான பாசுரங்கள், பதிகங்களுடன் கூடிய தெளிவான விளக்கங்கள். அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள். ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாமும் உய்வோம். மற்றவர்களையும் உய்விப்போம். திருவதிகை வீரட்டானமும் இடம் பெற்றிருப்பது மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. அனைத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      எல்லாம் எம்பெருமானின் தண்ணருள்...
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. திருக்கோயிலூர் மற்றும் காஞ்சீபுரத்திலுள்ள உலகளந்த பெருமாள் கோயில்களுக்குச் சென்றுள்ளேன். காஞ்சீபுரத்திலுள்ள கோயிலில் உள்ள மூலவர் மிக உயரமாகவும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர் ..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி எல்லோரும் நலம் பெறுவோம்.

    திருவோணத்திற்கு பள்ளியில் படிக்கும் போது மாவலியை அழைக்கும் மலையாள பாடலை பாடி ஆடியது நினைவுக்கு வருது பூக்கோலம், போட்டு தீபம் கையில் வைத்து கேரள உடை அணிந்து ஆடியது ஒவ்வொரு ஓணபண்டிகையின் போதும் நினைவுக்கு வரும்.

    காஞ்சீபுரத்தில் உலகளந்த பெருமாளின் ஆடை கலை நயத்துடன் வேலைப்படு அழகாய் இருக்கும்.
    சீர்காழியில் தாடாளன் வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே பாத தரிசனம் கிடைக்கும் .
    தினம் பாடும் பாடல் பகிர்வுக்கு நன்றி.

    வாரியார் சுவாமிக்கு வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் மேலதிக செய்திகளும் மகிழ்ச்சி..
      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..