நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 23, 2018

திருக்காளத்தி தரிசனம்

திருமலைப் பயணத்தின் மூன்றாம் நாளும்
திருமலையில் இரண்டாம் நாளுமாகிய
வெள்ளிக் கிழமையின் மாலைப் பொழுது...

சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டபின் -
ஆனந்த நிலையத்தை மீண்டும் வணங்கி விடைபெற்றுக் கொண்டோம்...

திருமலை பேருந்து நிலையத்திலிருந்து -
திருப்பதியை வந்தடைந்து விட்டோம்...

அன்று பிரதோஷம்...
எங்கள் இலக்கு - திருக்காளத்தி...

திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து
திருக்காளத்திக்குப் புறப்படும்போதே மாலை மயங்கி விட்டது...

திருக்கோயிலுக்கு முன்பாகவே
கடைவீதியில் இறக்கி விட்டார்கள்...

சாலையெங்கும் பரவலாக ஜல்லிக் கற்கள்...

23 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்காளத்தி தரிசனம்...

கோயிலுக்கு வழியைக் கேட்டுக் கொண்டு வந்தடைந்தோம்...

வழியெங்கும் கடைக்காரர்களின் கூக்குரல்...

திருக்காளத்தியிலும் கோயில் வளாகத்தில் படங்களெடுக்கத் தடை...

பொருள்களை வைத்துச் செல்வதற்கு கட்டணம்...
கட்டணம் அதிகம் என்று தோன்றியது...

பொருள்களை அங்கே வைத்து விட்டு திருக்கோயிலுக்குள் நடந்தோம்...

திருக்கோயிலின் வரப்ரசாதி - ஸ்ரீ பாதாள விநாயகர்...

ஆனால், சந்நிதி அடைக்கப்பட்டிருந்தது...
மறுநாள் காலையில் தான் திறக்கப்படும் என்றார்கள்...

திருக்கோயிலுக்குள் செல்வதற்கு இடுக்கு முடுக்காக கம்பித் தடுப்புகள்..

அவற்றுள் புகுந்து -
ஸ்ரீ அதிகார நந்தியம்பெருமானை வணங்கியபடி தொடர்ந்து நடந்தோம்...

தங்கக் கொடிமரத்தைக் கடந்து -

இதோ - எம்பெருமானின் திருமூலத்தானம்...

திருத்தலம் - திருக்காளத்தி


இறைவன் - திருக்காளத்தி நாதன்
அம்பிகை - வண்டாருங்குழலாள்

தலவிருட்சம் - மகிழமரம்
தீர்த்தம் - பொன்முகலி (ஸ்வர்ணமுகி) ஆறு..

சந்தமார் அகிலொடு சாதித் தேக்கம் மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும் 
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி என்மனத் துள்ளவே..(3/36) 
-: திருஞானசம்பந்தர் :-

சிலந்தியும் நாகமும் யானையும் வழிபட்ட திருத்தலம் - திருக்காளத்தி..

ஐம்பூதங்களுள் - வாயு தலமாகப் புகழப்படுவது...
திருக்கோயில் மேற்கு நோக்கி விளங்குகின்றது

வேடுவராகிய திண்ணப்பர் 
நாளாறில் கண்ணப்ப நாயனாராகி 
சிவதரிசனம் பெற்றதும்

எண்ணற்ற அருளாளர்களால்
போற்றி வணங்கப்பெற்றதும் ஆகிய திருத்தலம்...

மூலத்தானம் முழுதும் திருவிளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது...

திகட்டாத தேனமுதாக -
கண் நிறைந்த தரிசனம்....

இத்திருத்தலத்தில் திருநீறு வழங்கப்படுவதில்லை என்கிறார்கள்..
திருச்சுற்றில் சங்கு தீர்த்தம் வழங்கப்பட்டது...

ஈசனின் சந்நிதிக்கு வலப்புறமாக திருச்சுற்று மண்டபத்தில்
பதினாறு வயது மதிக்கக்கதாக ஐந்தரை அடியளவில்
வில்லைத் தாங்கிய வண்ணமாக காலில் செருப்புடன்
திரு கண்ணப்ப நாயனார்...

கண்ணப்ப நாயனார் காட்டிய அன்புக்கும் பக்திக்கும் ஈடு ஒன்றில்லை!...
அதனால் தான் -


கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாஎன்ற வான்கருணைச் 
சுண்ணப் பொன்நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ!..

- என்று கசிந்துருகுகின்றார் மாணிக்கவாசகர்...

கண்ணப்ப நாயனாரின் திருவடிகளில் மலர்களைச் சமர்ப்பித்து
தலை வைத்து வணங்கினோம்...

திருமலையில் மீனின் மீதமர்ந்த
ஐயப்பன் கோலம் பற்றிச் சொல்லியிருந்தேன்...

அதே போல இங்கும் ஒரு சிற்பம்...

திருச்சுற்று மண்டபத்தில் கண்ணப்ப நாயனாரின் திருவுருவச் சிலைக்கு
முன்பாக இருக்கும் தூணில் காணப்படுகின்றது....


நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதன் காண்
ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான்காண்
புரிசடைமேற் புனலேற்ற புனிதன் தான்காண்
சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான்காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாங்
காரணன்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன் காண் அவனென் கண்ணுளானே..(6/8) 
-: திருநாவுக்கரசர் :-

திருச்சுற்றில் நடக்கும்போது
தமிழகத்துத் திருக்கோயிலில் இருப்பது போன்ற உணர்வு...

கலைநயமிக்க தூண்களுடன் கூடிய விசாலமான மண்டபங்கள்...
அழகழகான சிற்பங்கள்...

இத்தலத்தில் நவக்ரஹங்கள் இல்லை..
ஆனாலும், சனைச்சரனின் திருவடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது...

காளத்தியின் கடைத்தெருவில் வாங்கிய
உதிரிப் பூக்களை திருச்சுற்றில் விளங்கும்
தெய்வத் திருமேனிகளின் திருவடிகளில் சாத்தி வழிபட்டோம்...

திருச்சுற்றில் வலம் வந்து அம்பாள் சந்நிதியை அடைந்தோம்...


ஸ்ரீ ஞானப் பூங்கோதையாள்
அவ்வேளையில் திருச்சுற்றில் எழுந்தருளியிருந்தாள்..

அளவில் பெரியதான நிலைக் கண்ணாடியின் முன்பாக
தேவியின் திருவடிவத்தினை எழுந்தருளச் செய்து
சோடஷ உபசாரங்களுடன் மகா தீபஆராதனை நிகழ்ந்தது...

அம்பிகையின் சந்நிதியிலும்
அற்புத தரிசனம் அருளப் பெற்றது....

திருச்சுற்று வலம் செய்து வெளியே வந்தோம்..

இங்கே அர்த்த ஜாம பூஜை நிகழ்வதில்லை
என்பது குறிப்பிடத்தக்கது...

திருக்கோயிலிலிருந்து வெளியே வந்தோம்...

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஆட்டோக்கள்..
ஒன்பது மணிக்கெல்லாம் ஊரடங்கி இருந்தது...

சிற்றுண்டியை முடித்துக் கொண்டு
கோயில் வாசலில் தலை சாய்த்துப் படுத்தோம்...

எங்களைப் போல இன்னும் பலர்...
உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தனர்.. 

காரணம் கொசுக்கடி...

திருமலையுடன் ஒப்பிடுகையில்
காளத்தியின் சுற்றுப்புற சுத்தம் - சொல்வதற்கு ஒன்றுமில்லை...

பொழுது விடிந்தது...
அன்றைய தினம் தமிழ் வருடப் பிறப்பு...

அருகிருந்த குளியலறையில் குளித்து முடித்து விட்டு
சிவ தரிசனத்திற்கு ஆயத்தமானோம்...

நாகம் வழிபட்ட தலம் என்பதுடன்
ராகு கேது வணங்கிய தலம் எனவும் ஐதீகம்...

எனவே,
விடியற்காலையிலேயே -
ராகு கேது பரிகார பூஜைகள் தொடங்கி விட்டன...

அந்த அதிகாலைப் பொழுதில்
ஸ்ரீ பாதாள விநாயகர் தரிசனம்...

நாற்பதடி பள்ளத்தினுள் அமர்ந்திருக்கின்றார் ஸ்ரீ விநாயகர்...

ஸ்ரீ விநாயகப் பெருமானின் பீடமும்
ஸ்வர்ணமுகி ஆற்றின் படுமையும் ஒரே மட்டம்...

அதாவது ஆற்றின் மட்டத்திலிருந்து கோயிலின் உயரம் நாற்பதடி...

ஸ்ரீ பாதாள விநாயகர் கோயிலின் வாசல் மிகக் குறுகியது..
உள்ளிறங்கும் படிக்கட்டுகளும் மிகக் குறுகலானவை....

கீழே இறங்கியோர் மேலேறி வந்தபின்னர் தான்  
மேலும் சிலர் இறங்கி தரிசனம் செய்ய இயலும்.... 

ஆனாலும், வழக்கம் போல - மக்கள் பொறுமையின்றி
முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்...

குறுகிய வாசல் வழியாக உட்புகுந்து -
அதனினும் குறுகிய படிகளின் வழியாக உள்ளிறங்கி
விநாயகப் பெருமானை தரிசித்தோம்...

அங்கிருந்து மேலே ஏறுவதற்குள்ளாக
விடாப்பிடியாக வேறு சிலர் கீழிறங்கினார்கள்...

புரிதலற்ற ஜனங்களை மேலே விரட்டிய பின்னரே
எங்களால் மேலேற முடிந்தது..

விநாயக தரிசனம் செய்தபின்
திருக்காளத்தி நாதனையும் ஞானப்பூங்கோதையாளையும்
மீண்டும் கண்ணாரக் கண்டு தரிசனம் செய்தோம்...

தமிழ்ப் புத்தாண்டு நாள்.. ஆயினும்,
பரிகாரம் தேடி வந்தவர்களைத் தவிர்த்து
பெரிதாகக் கூட்டமில்லை...

திருக்கோயிலிலிருந்து வெளியேறும்போது
கொடிமரத்தின் அருகில் - அருள்தரும் ரோமரிஷி சந்நிதி!....

பல்வேறு தலங்களிலும் எதிர்பாராத விதமாக
எதிர் கொண்டு திருக்காட்சி தருபவர் ரோமரிஷி..

மனதார அவரை வணங்கி மகிழ்ந்தோம்...

நுண்ணலை பேசிகள் முற்றாக செயலிழந்திருந்தன...
எனவே, எந்த ஒரு படமும் எடுக்க முடியவில்லை...

திருக்கோயிலிலிருந்து வெளியே வந்ததும்
தேவஸ்தானத்தின் பேருந்து வந்து நின்றது...

திருக்கோயிலுக்கும் காளத்தி ரயில் நிலையத்திற்கும் இடையே
எவ்வித கட்டணமும் இன்றி பக்தர்களுக்காக இயக்கப்படுகின்றது...

அதிலே பயணித்து
திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் இறங்கிக் கொண்டோம்...

சில நிமிடங்களில் திருப்பதி செல்லும் பேருந்து...
ஒரு மணி நேரத்திற்குள் திருப்பதிக்கு வந்து விட்டோம்...

சாலையோரத்தில் உணவகங்கள்..
சூடான இட்லி, தோசை, தக்காளி, கார சட்னி வகையறாக்கள்..

வா.. வா.. என்றன... அப்புறம் என்ன!...

பசியாறல் தான்!...


செண்டாடும் விடையாய் சிவனேயென் செழுங்சுடரே
வண்டாருங் குழலாள் உமைபாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கணநாதனென் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே..(7/26) 
-: சுந்தரர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
ஃஃஃ

41 கருத்துகள்:

  1. குட்மார்னிங். இந்தக் கோவில் நான் சென்றதே இல்லை.

    பதிலளிநீக்கு
  2. அங்கேயே உறங்கி சிவதரிசனத்துக்குக் காத்திருந்தது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல்நாள் இரவு தரிசனம்..
      மறுநாள் புது வருடம்...
      விடியற்காலை தரிசனம்...

      நீக்கு
  3. பாதாள விநாயகரைத் தரிசிக்கச் செல்லும் அந்தக் குறுகிய வழியில் மக்களை ஒழுங்குபடுத்த கோவில் ஊழியர் யாரும் நியமிக்கப்படவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிகாலையில் திறந்து வைத்து விட்டுப் போய் விட்டார்...

      நாங்கள் நாலரை மணியளவில் தரிசித்தோம்..

      அங்கே பணி செய்பவர் ஆறு மணிக்கு மேல் தான் வருவாராம்...

      நீக்கு
  4. திருப்பதியிலிருந்தே இங்கு செல்ல இலவசப் பேருந்து வசதிகள் உள்ளனவா? அட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா.. நல்ல ஆசை தான்!...

      திருப்பதி - திருக்காளத்தி கட்டணப் பேருந்து தான்...

      திருக்காளத்தியில்
      கோயில் வாசலில் இருந்து
      ரயில் நிலையம் வரை கட்டணம் இல்லாத சேவை...

      நீக்கு
    2. // ஆகா.. நல்ல ஆசை தான்!...//

      ஹா... ஹா... ஹா...!

      // திருக்காளத்தியில்
      கோயில் வாசலில் இருந்து
      ரயில் நிலையம் வரை கட்டணம் இல்லாத சேவை... //

      சரி... சரி... சட்டெனத் தவறாகப் புரிந்து கொண்டேன் போல!

      நீக்கு
  5. திருப்பதியில் இருந்து ஆட்டோவிலேயும் போகலாம் காளத்தி நாதரைக் காண! நாங்க ஒரு முறை ஆட்டோவிலும், ஒரு முறை காரிலும் மற்றொரு முறை திருமலா திருப்பதி தேவஸ்தானச் சுற்றுலா அமைப்பின் மூலமும் போனோம். கடைசியாக் காளத்தி சென்றது 2007 ஆம் ஆண்டில்! அப்போத் தான் மேலே ஏறும்போது நம்ம ரங்க்ஸ் கீழே விழுந்துட்டார்! :( அதுக்கப்புறமாக் காளத்திநாதன் அழைக்கவில்லை! :( போகணும். ஆனால் காளத்தி போனால் நேரே வீட்டுக்குத் தான் வரணும் என்பார்கள்! வேறே எங்கும் போகக் கூடாது என்கின்றனர். சுற்றுலாவிலும் காளத்தியைக் கடைசியில் தான் வைச்சிருந்தாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      காளத்தி சென்று விட்டு வேறெங்கும் செல்லக்கூடாது என்பதையெல்லாம் நம்புவதில்லை..

      மேலதிக விவரங்களுக்கு நன்றி..

      நீக்கு
    2. எனக்கு சமீபத்தில் ஒருவர், ஒரு கோவிலுக்கு 5 வாரம் (ஏதாவது நாளை செலெக்ட் செய்து, அந்த நாளில் ஒவ்வொரு வாரமும் போகணும்) போகச்சொன்னார். அதுல அவர் சொன்னது, கோவிலுக்குப் போய்விட்டு எங்கேயும் சாப்பிடக்கூடாது, காசை வேறு எதற்கும் செலவு செய்யக்கூடாது (அதை வாங்குவது, இந்தக் கடைக்குப் போவது என்று), நேரே வீட்டுக்குத் திரும்பினபின்புதான் வேறு எங்கேயும் போகணும் என்றார். கோவில் செல்ல 1 1/2 மணி நேரமாகும். அங்கு 1 மணி நேரம்.

      இதான் சாக்கு என்று என் மனைவி, கோவில் பிரசாதக் கடையில் 5 வாரமும் ஒன்றையும் வாங்க விடலை.

      பிறகு அவரிடம் (யார் சொன்னார்களோ அவரிடம்) கேட்டதில், அங்கிருந்து வேறு கோவிலுக்கும் செல்லலாம், ஒரு வேளை தேவைப்பட்டா வரும்போது உங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்று சாப்பிடலாம், ஆனால் வெளியில் சாப்பிடக்கூடாது, கடைகளுக்குச் செல்லக்கூடாது என்றார்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. திருமண வேண்டுதலுக்காகக் காளத்தி சென்றிருந்தோம்.
    மிக அருமையான தரிசனம். . 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை அது. உங்கள் எழுத்தில் இறைவனிடம் மாறா பக்தியும் ஈடுபாடும் மகிழ்ச்சி தருகின்றன. மஹாப் பொறுமையாளியும் கூட.
    என்றும் வளமுடன் வாழ கண்ணப்பனை ஆண்டு கொண்ட எம்பெருமான்
    எல்லோரையும் வளமுடன் வைப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      1994 ல் என் தங்கையை அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன்.. அதுவும் கல்யாண வேண்டுதல் தான்..

      காளத்திநாதன் அருளால் நல்லபடியாக கல்யாணம் நடந்தது..

      தங்களது வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  8. பாதாளவிநாயகர் நானும் சென்றதில்லை. தகவல்கள் பலருக்கும் பயன்பெறும் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. காளத்தி சென்றுள்ளோம். இன்று உங்கள் தயவால் மறுபடியும் சென்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. உங்கள் படங்கள் இல்லா பதிவு என்றாலும் தகவல்கள் அனைத்தும் மிக மிக சிறப்பு ஐயா...

    நல் தரிசனம் எங்களுக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. காளத்தி சென்றுள்ளோம். பாதாளவிநாயகர் சேவையும் செய்தோம்.
    காளத்தி தரிசம் மீண்டும் உங்கள் பதிவில் கண்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. காளஹத்தி சென்றிருக்கிறோம் பாதாள விநாயகர் தரிசனமும் செய்திருக்கிறோம் விநாயகர் சந்நதியில் தீபம் ஆடாமல் இருக்கும் என்பார்கள் அங்குதானே கோபுரம் இடிந்து விழுந்தது இப்போது எப்படி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      அப்போது இடிந்த கோபுரத்தை மீண்டும் எழுப்பி விட்டார்கள் என்றூ நினைக்கிறேன்... காளத்தி சென்றபோது அந்த சம்பவம் நினைவுக்கு வரவில்லை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. பாதாள விநாயகர் சந்நதி அத்தனை கீழேஷே இருந்தாலும் மெல்லிய காற்றால் தீபமசைந்தாடும் முந்தைய கருத்தில் தீபம் ஆடாமல் இருக்குமென்பது தவறாக வந்து விட்டது காற்றுத்தலமல்லவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களது மீள்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  14. ஏற்கனவே இட்ட கருத்துரையைக் காணோம்.

    காளஹஸ்தியில்தானே சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கோபுரம் இடிந்துவிழுந்தது? இப்போது நன்றாகச் செப்பனிட்டபின்பு, மொபைல்லாம் அனுமதிப்பதில்லை போலிருக்கு. என்னைக் கேட்டால், கொடிமரம் வரை மொபைல் அனுமதிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த.,

      நானும் இவ்விதமே யோசிப்பேன்...
      ஆனாலும் நிர்வாக நடைமுறைகள் வேறு..

      சரிந்து விழுந்த கோபுரம் சீர்செய்யப்பட்டு விட்டதாக நினைவு..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. பாதாள விநாயகரை தரிசனம் செய்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் தரிசனம் செய்யுங்கள்..
      புது அனுபவமாக இருக்கும்...

      நீக்கு
  16. உங்கள் தயவில் காளகத்தி நாதரை தரிசனம் செய்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  17. நீங்கள் சொன்னதும் நான் வந்து திறந்து பார்த்தேன். எனக்கு அப்படி ஒன்றும் இங்கு வரவில்லையே கீதா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் எனக்குத்தான் இங்கு படுத்துகிறது என்று நினைக்கிறேன் ஸ்ரீராம். இப்ப குறைஞ்சுசுருக்கு...ஒன்றுதான் வருகிறது

      கீதா

      நீக்கு
  18. துரை அண்ணா இனிய காலை வணக்கம்

    நேற்றிலிருந்து முயற்சி ..திருக்காளகத்தியை தரிசிக்க...வந்தால் விளம்பரங்கள் உள்ளே நுழையத் தடை போடுகிறது...என்ன என்றே தெரியவில்லை...

    உங்கள் தளம் திறந்தாலே விளம்பரம் வந்து பாப் அப் ஆகி விடுகிறது...அதுவும் நிறைய என்ன என்றே தெரியலையே துரை அண்ணா..சரி காளகத்தி பார்த்துவிட்டு வரேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  19. அண்ணா சில நாட்கள் முன்னர் கில்லர்ஜி தளம் மற்றும் மதுரைத்தமிழனின் தளத்திலும் இப்படி த்தான் விளம்பரங்கள் வந்து கொண்டே இருந்தன...கமென்ட் போட முடியாமல்....இப்போது வருவதில்லை. அது போல் உங்கள் தளத்திலும் அப்புறம் நின்றுவிடும் என்று நினைக்கிறேன் அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  20. துரை அண்ணா நீங்கள் பெருமபலும் கோயிலிலேயே தலை சாய்த்துப் படுத்து தரிசனம் செய்வது ஆஹா போட வைத்தது. எனக்கும் அப்படியான ஆசை உண்டு.

    அண்ணா காளகத்தி சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை, ஒழுங்கு முறை அதுவும் திருப்பதிக்கும் இதற்கும் மேனேஜ்மென்டில் வித்தியாசங்கள் நிறைய இருக்கு என்பதில் எனக்கும் வருத்தம் உண்டு.

    பாதாள விநாயகர்..../// அது போலத்தானே அண்ணா பேருந்தில், ரயிலில் இறங்கவும் ஏறவும் முண்டியடித்தி யாருக்கும் இடமில்லாமல் செய்யும் ஒரு கூட்டம் ...என்ன சொன்னாலும் திருந்தப் போவதில்லை மக்கள்.

    நான் காளஹத்தி வழிபட்டு சொல வருடங்கள் ஆயிற்று...

    நல்ல விவரணங்கள் மீண்டும் வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. ஹை இப்போது விளம்பரம் வரவில்லை!!! ஹப்பா சந்தோஷம்....


    கீதா

    பதிலளிநீக்கு
  22. தரிசனம் வேண்டுமென்றால் வேறெங்கும் அலைய வேண்டாம்,
    உங்கள் தளம் வந்தாலே போதும்.

    பதிலளிநீக்கு
  23. திருக்காளஹத்தி தரிசனம் அருமை. ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன் குடும்பத்துடன். நல்ல விவரணங்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..