நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 25, 2017

மார்கழிக் கோலம் 10

தமிழமுதம்

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை..(036)
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 10  


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்..
***

தித்திக்கும் திருப்பாசுரம்

நாச்சியார்கோயில் கல் கருடன்

கும்பகோணத்தை அடுத்துள்ள
நாச்சியார்கோயில் பிரம்மோத்சவத்தில்
இன்று பெருமாள் கல் கருட வாகனத்தில்
எழுந்தருள்கின்றார்..

காப்புன்னை உன்னக் கழியும் அருவினைகள்
ஆப்புன்னை உன்ன அவிழ்ந்தொழியும் - மூப்புன்னை
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி..(2156)
-: பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***
நல்லதோர் வீணை


சிவ தரிசனம்

திருத்தலம்
திருநெடுங்களம்



இறைவன் - ஸ்ரீ நெடுங்களநாதர் 
அம்பிகை - ஸ்ரீ மங்கலநாயகி

தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - அகத்திய தீர்த்தம்

திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில்
துவாக்குடியில் இருந்து 
5 கி.மீ தொலைவில் உள்ளது..

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு


மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே!..(1/52)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 10  

மழலையுடன் மகேசனும் மகேஸ்வரியும்
புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப் பெருந்துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் 
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே!..

இந்த அளவில்
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி நிறைவு பெறுகின்றது..
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 03 - 04  


முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்...

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்..

***

இன்று கிறிஸ்துமஸ்..

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்..
நல்ல மனிதர் நடுவே குழந்தை வடிவம் பெறுகிறார்..
உலகெங்கும் 
அன்பும் அமைதியும் மலரட்டும்..


அனைவருக்கும்
அன்பின் இனிய 
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

7 கருத்துகள்:

  1. பத்தாம்நாள் மார்கழிக்கோலம் தரிசித்தேன்
    அன்பின் இனிய கிரிஸ்துமஸ் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. மார்கழிக்கோலம் கண்டேன். அருமை. நெடுங்களநாதர் இரு முறை கண்டுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாகக் காணும் வாய்ப்பு கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா!
    உள்ளத்தை நிறைத்த அருமையான தரிசனம்.
    நன்றியோடு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. அதுக்குள் பத்தாம் நாள் வந்து விட்டதே.. சிவாயநம.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. தாமதமான கிறித்துமஸ் வாழ்த்துகளுடன், நாற்றத்துழாய்முடி நாராயணன், மற்றும்சிவ தரிசனமும் அருமை!!

    நேற்று தங்கள் தலத்தையும் எபி தளத்தையும் ஒரு சேரத் திறந்தால் உடன் கணினி போய்விட்டது. இரு தளங்கள் சேர்ந்து பார்க்க முடியவில்லை. அப்புறம் நானும் தளம் பக்கம் மாலைதான் வர முடிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கல்கருடன் கோயிலுக்குச் சென்று தரிசித்திருக்கிறேன் ஒரே ஒரு முறை...

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..