நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 10, 2017

அருள்வழி

இன்று வைகாசி மூலம்..

நாட்டையும் மக்களையும் நன்னெறிக்கு உய்த்தருளிய
திருஞானசம்பந்தப் பெருமான் சிவப் பரம்பொருளுடன்
இரண்டறக் கலந்த நாள்...

பெருமான் அருளிய திருப்பதிகங்கள் -
திருக்கடைக்காப்பு எனும் சிறப்புடையவை..

முதல் மூன்று திருமுறைகளாக விளங்குபவை..

இறைவனை இயற்கையை ஏத்தும் திருப்பாடல்கள் அவை..

மக்களுக்கு நன்வழியைக் காட்டிய வித்தகர் - ஞானசம்பந்தப்பெருமான்..


ஒதுக்கப்பட்டிருந்த சமுதாயத்தினராகிய
திருநீலகண்ட யாழ்ப்பாணரையும்
அவரது துணைவியார் மதங்கசூளாமணி அம்மையாரையும்
தனது அடியார் திருக்கூட்டத்தினுள் இருத்தி -
தான் செல்லும் தலமெங்கும் தன்னுடன் அழைத்துச் சென்றவர்..

மக்கள் மனங்களின் மாசுகள் அறும்படிக்கு
நல்வழி காட்டியவர் - ஞானசம்பந்தப் பெருமான்..

இன்றைய நாளில் -
பெருமான் தரிசித்த திருத்தலங்களுள்
சிலவற்றை நாமும் தரிசனம் செய்வோம்...


திருப்பிரமாபுரம் 
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசியென் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே!..(1/1)

தில்லையம்பதி 
செல்வ நெடுமாடஞ் சென்று சேண் ஓங்கிச்
செல்வமதி தோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே!.. (1/80)

திருகோடிகா 
இன்றுநன்று நாளைநன்று என்றுநின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே!.. (2/99)

திருந்துதேவன்குடி 
மருந்துவேண் டில்இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்து தேவன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள் வேடங்களே!..(3/25)


திருஐயாறு 
நீரோடு கூவிளமும் நிலாமதியும் வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருஐயாறே!..(1/130)

திருஆனைக்கா 
வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதும்ஏதம் இல்லையே!..(3/53)

திருச்சிராப்பள்ளி 
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே!..(1/98)

திருவலஞ்சுழி 
என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே!..(2/106)

திருக்குடமூக்கு 
கழைவளர் கவ்வைமுத்தங் கமழ்காவிரி யாற்றயலே
தழைவளர் மாவின்நல்ல பலவின்கனி கள்தயங்குங்
குழைவளர் சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இழைவளர் மங்கையோடும் இருந்தானவன் எம்மிறையே!..(3/59)

திருநாகேச்சுரம் 
கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
வில்லான் எழில்வே வவிழித் தவனே
நல்லார் தொழுநா கேச்சர நகரில்
செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே!..(2/24)

திருக்கோழம்பம் 
காரானைக் கடிகமழ் கொன்றையம் போதணி
தாரானைத் தையலோர் பால்மகிழ்ந் தோங்கிய
சீரானைச் செறிபொழிற் கோழம்பம் மேவிய
ஊரானை ஏத்துமின் நும்மிடர் ஒல்கவே!..(2/13)


திருஆரூர் 
வளைக்கை மங்கைநல் லாளையோர் பாகமாத்
துளைக்கை யானை துயர்படப் போர்த்தவன்
திளைக்குந் தண்புனல் சூழ்திரு ஆரூரன்
இளைக்கும் போதெனை ஏன்றுகொ ளுங்கொலோ!..(3/45)

திருக்கோளிலி 
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமங்
கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே!..(1/62)

திருஆலவாய் 
மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை வரிவளைக் கைம்மடமானி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதுவும் இதுவே!..(3/120)

திருநெல்வேலி 
அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று 
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலிஉறை செல்வர்தாமே!..(3/92)

திருக்கச்சி ஏகம்பம்
மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
பிறையானைப் பெண்ணொடு ஆணாகிய பெம்மானை
இறையானை ஏர்கொள் கச்சித் திருஏகம்பத்து
உறைவானை அல்லது உள்காது எனதுள்ளமே!..(2/12)


திருஅண்ணாமலை
பூவார்மலர் கொண்டு அடியார்தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார்
தூமாமழை நின்று அதிரவெருவித் தொருவின் நிரையோடும்
ஆமாம்பிணை வந்துஅணையுஞ் சாரல் அண்ணாமலையாரே!..(1/69)

திருக்கயிலாய மாமலை 
சிங்கவரை மங்கையர்கள் தங்களன செங்கைநிறை கொங்குமலர்தூய்
எங்கள்வினை சங்கையவை இங்ககல அங்கமொழி எங்குமுளவாய்
திங்களிருள் நொங்கவொளி விங்கிமிளிர் தொங்கலொடு தங்கவயலே
கங்கையொடு பொங்குசடை எங்களிறை தங்குகயிலாய மலையே!..(3/68)

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நம சிவாயவே!..

ஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
***

7 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    திருத்தலங்களின் வரலாறு அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. ஞானசம்பந்தர் குருபூஜை சமயம் அவர் சென்ற கோவில்களையும், தேவார பாடல்கள் பகிர்வுக்கு நன்றி.
    திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான தொகுப்பு... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  4. இவைஎல்லா மருவாத பெயர்களல்லவா பல இடங்களுக்கும் சென்றிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொரு சிவத்தலத்தைப்பற்றியும் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களின் தொகுப்பு அருமை ஐயா.

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..