நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 09, 2017

மதுரைக்கு வாங்க.. 8

வாத்யாரே.. இந்த கோயில் கட்டி எத்தனை வருசம் இருக்கும்?..

கோயில் கோபுரங்களும் மற்ற மண்டபங்களும் பல்வேறு கால கட்டத்தில பல்வேறு மன்னர்கள் கட்டியிருக்காங்க...

ஆனா, மூலஸ்தானம் பொற்றாமரைக் குளமும் மூவாயிரம் வருஷங்கள் பழைமை உடையது...ன்னு சொல்றாங்க..

அடேங்கப்பா.. மூவாயிரம் வருஷம்!.. - பசங்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினார்கள்..

மலர்!.. நீ இதுக்கு முன்னாலே மதுரை கோயிலுக்கு வந்திருக்கியா?..

ஓ.. பத்தாம் வகுப்பு படிச்சப்போ சுற்றுலா வந்திருக்கோம்!..

சொல்லவேயில்லை!..

நீங்க கேக்கவேயில்லையே!..

ஒருவாரம் சுற்றிப் பார்த்தாலும் முழுசா பார்த்த திருப்தி கிடைக்காது!..
எவ்வளவோ அற்புதங்கள் நடந்த கோயில்.. மதுரையில் அறுபத்து நான்கு திருவிளையாடல் நடந்தது..ன்னு சொல்லுவாங்க!..

அம்மனுக்கும் ஸ்வாமிக்கும் தங்க விமான மூலஸ்தானம்..
தனித்தனியா திருவாசல்.. ஆக கிழக்கு ராஜ கோபுரங்கள் இரண்டு ..
மற்ற திசைகளுக்கு ஒன்றாக மூன்று.. ஆக ஐந்து ராஜ கோபுரங்கள்..
உள் பிரகார வாசல் கோபுரங்கள் ஒன்பது...
இதெல்லாம் சேர்த்து மொத்தம் பதினாலு கோபுரங்கள்...

ராஜ கோபுரங்கள்...ல உயரமானது தெற்கு வாசல் கோபுரம்...

கோயில்ல உள்ள மண்டபங்கள்...ல ஆயிரங்கால் மண்டபம் தான் பெரியது.. பழமையானது... மொத்தம் 985 தூண்கள் என்கின்றார்கள்...

இது தவிர - அஷ்ட சக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலிப் பிள்ளை மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக் கூட்டு மண்டபம், ஆறுகால் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், கம்பத்தடி மண்டபம், புது மண்டபம்.. ன்னு ஒன்பது மண்டபங்கள்...

புது மண்டபம்..ங்கறது கோயிலுக்கு வெளியே இருக்கிறது..
கோயில் கடைகள் இருப்பதெல்லாம் அங்கே தான்...

அவ்வளவு தானா?...

அதெல்லாத்தையும் சொல்லணும்..னா நாள் கணக்கில ஆகும்!..
இன்னொரு முக்கியமான சிறப்பு என்ன தெரியுமா?..

வாத்யாரே!.. நான் சொல்லவா?..

ம்ம்.. சொல்லு!..

திருவள்ளுவர் இங்கே தான் திருக்குறளை அரங்கேற்றினார்...
எங்க தமிழ்ப் பாடத்தில வந்திருக்கு!..

ஓ!.. இப்படித்தான் மறக்காம நினைவு வெச்சுக்கணும்!...

பழந்தமிழ் நூல்கள்...ல அதிகமா பாடப்பட்டிருப்பது மதுரை தான்...

மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று
ஆனை கட்டிப் போரடித்த அழகான மாமதுரை..

- அப்படி..ன்னு சொல்றதே மதுரையோட பெருமைக்கு சான்று..

சரி.. பசங்களுக்கெல்லாம் பசிக்குது!.. வாங்க போய் ஜிகர்தண்டா குடிப்போம்!..
சாயங்காலம் திரும்ப வந்து பார்ப்போம்!..

என்னடா பசங்களா.. அக்கா சொல்ற மாதிரி ஜிகர்தண்டா குடிக்கலாமா!..

குடிக்கலாமே!..

நேற்று (8/5) மாமதுரை நகரில் 
நடந்த தேரோட்டம்










தேன்பெருகுஞ் சோலை தென்னன் வளநாடு
வாழை வடக்கினும் வளர்கமுகு தெற்கீனும்
கட்டுக் கலங்காணும் கதிருழக்கு நெல்காணும்
பஞ்சங் கிடையாது பாண்டியன் வளநாட்டிலே..
- அல்லி அரசாணி மாலை -
-: புகழேந்திப்புலவர் :-
*** 
9/5 செவ்வாய்க்கிழமை
-: பன்னிரெண்டாம் திருநாள் :-
- காலை-
திருக்கோயிலுள் எழுந்தருளல்

- இரவு -
பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தவாரி
தேவேந்திர பூஜை

அம்மையப்பன் 
ரிஷப வாகனங்களில் ஆரோகணித்து
திருக்கோயிலுக்குள் எழுந்தருளல்



சுரும்புமுரல் கடிமலர்ப் பூங்குழல் போற்றி உத்தரியத் தொடித்தோள் போற்றி
கரும்புருவச் சிலை போற்றி கவுணியர்க்குப் பால் சுரந்த கலசம் போற்றி
இரும்பு மனம் குழைத் தென்னை எடுத்தாண்ட அங்கயற்கண் எம்பிராட்டி
அரும்பும் இளநகை போற்றி ஆரணநூபுரம் சிலம்பும் அடிகள் போற்றி!..
-: திருவிளையாடற்புராணம் :-

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மையானைத்
தலையாய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானைத் தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே!.. (6/19)
-: திருநாவுக்கரசர் :-

இந்த அளவில்
மதுரையம்பதியில்
சித்திரைத் திருவிழா மங்கலகரமாக 
நிறைவுறும் வேளையில்

ஸ்ரீ கள்ளழகர்
நேற்று (8/5) மாலைப் பொழுதில்
அழகர் மலையிலிருந்து புறப்பட்டார்.. 








இன்று காலையிலிருந்து
எதிர்சேவை கண்டருள்கின்றார்.. 

ஓம் நமோ நாராயணாய
ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

8 கருத்துகள்:

  1. மதுரை கண்டேன். திருவிளையாடற் புராணம் கண்டேன். கண்டேன், கண்டறியாதன கண்டேன்.....

    பதிலளிநீக்கு
  2. அருமை ஜி
    புகைப்படங்களின் தெளிவுகள் பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. மயங்கினேன்- தங்கள் தமிழிலும், தாங்கள் எடுத்துக்காட்டிய தமிழிலும், எடுத்துப்போட்ட படங்களின் அழகிலும்.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    பதிலளிநீக்கு
  4. இந்த வருடம் மதுரை செல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. இன்று அழகர் வந்தார். அவரையும் வீட்டிலிருந்தே தொலைக்காட்சி பெட்டியில்.
    போண வருடம் நேரே போய் தரிசனம் செய்தேன்.
    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
  6. மதுரை.... நீங்கள் சொல்வது போல பத்து நாளாவது அங்கே தங்கி சித்திரைத் திருவிழா முழுவதும் காண வேண்டும்.... பார்க்கலாம்! இந்த வருடம், தமிழகத்தில் இருந்தும் ஒரு நாள் கூட செல்லவில்லை என்பதில் வருத்தமே!

    பதிலளிநீக்கு
  7. அருமையான நடை....அழகான தமிழ்!! அதில் இறைவனைப் பற்றியும் கோவில் பற்றியும் பாடல்கள் மூலமும் ரசித்தோம் ஐயா...

    பதிலளிநீக்கு
  8. புகைப்படங்கள் மிகவும் நேர்த்தியாக உள்ளன. அதில் ஒன்றில் ஒரு பையன் துள்ளி மேலெழுந்து ....எப்படி இது என்று தோன்றியது....

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..