நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 04, 2017

மதுரைக்கு வாங்க.. 4

வாத்யாரே!..

பசங்களா!.. வாங்க.. வாங்க!..

நாங்க வந்துட்டோம்!...

நீங்க வருவீங்க..ன்னு அக்கா..கிட்ட சொல்லி அதோ அந்த ஃபிளாஸ்க்..ல காபி போட்டு இருக்கு... எடுத்து வந்து குடிங்க.. கதை கேக்கலாம்!..

அக்கா எங்கே வாத்யாரே!..

கோயிலுக்குப் போயிருக்காங்க...


நீங்க கூட போகலையா?..

நான் தான் உங்களுக்காக காத்திருக்கேனே!..

என்ன.. வாத்யாரே!.. உங்களைத் தொந்தரவு செய்திட்டோமா!..

அதெல்லாம்.. இல்லே... தங்கமான பசங்க.... மனசு வச்சி வர்றீங்க.. சொல்றதை கேட்டுக்கிறீங்க... உங்களுக்காக நான் இத கூட செய்யலே..ன்னா எப்படி?..

வாத்யாரே.. இதென்ன டிகிரி காபியா?.. சூப்பரா இருக்கு!..

அதுக்கெல்லாம் கறந்த பால் வேணும்!.. பாக்கெட் பால்...ல டிகிரி காபி எப்படி போடறது?.. இது வறுத்து அரைச்ச காபி!... சரி.. கதைக்குள்ள போகலாமா?..

ஓ... போகலாமே!...

தருமி.. வேர்க்க விறுவிறுக்க அரண்மனைக்கு ஓடி வந்தார்..
வாசல்..ல காவற்காரன்.. அவங்கிட்ட விவரத்தைச் சொன்னார்...

அவனும் - உள்ளே போங்க.. ஐயரே!.. அப்படின்னான்..

எனக்கு பாதை தெரியாதுடா.. அம்பி.. நீயே அழைச்சிட்டுப் போ!.. அப்படின்னார்..

அவன் தருமியை அழைச்சிட்டுப் போய் அரச சபையில விட்டான்..

அப்போதான் அவர் பாண்டிய ராஜாவை நேருக்கு நேரா பார்க்கிறார்... விலா எலும்பு எல்லாம் கட.. கட..ன்னு ஆடுது..

ஏன் வாத்யாரே!.. நம்ம ஊர்ல மந்திரிங்களைப் பார்க்கிறதுக்கு கெடுபிடியா இருக்கே.. அந்த மாதிரி அந்தக் காலத்திலயும் இருந்திச்சா?..

அப்படியெல்லாம் இல்லை.. ஏழை எளிய மக்களும் சுலபமா.. ராஜ சபைக்குப் போய் தங்களோட பிரச்னையை சொன்னதா வரலாறு எல்லாம் இருக்கு...

இது பக்கத்தில ராஜாவைப் பார்க்கிற பயம்.. மரியாதை..

தருமிக்கு நாக்கு வறண்டு போச்சு.. என்ன பேசறது.. எப்படி பேசறது..ன்னு புரியலை...

ராஜா செண்பகப் பாண்டியன் கேட்டான்..

உங்களுக்கு என்ன பிரச்னை?.. அப்படின்னு...

மகாராஜா.. எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை.. தங்களுக்குத் தான் ஏதோ சந்தேகம்..ன்னு!...

ஓ!.. அந்த விஷயமா!.. எங்கே.. சொல்லுங்கள்.. கேட்போம்!..

எனக்கு சட்டுன்னு.. பேச வராது.. இந்த ஓலைல எல்லாம் வெவரமா எழுதி இருக்கு... - ன்னு சொல்லி ஓலையை நீட்டினார்...

இடையில ஒரு அதிகாரி ஓலையை வாங்கி ராஜாக்கிட்ட கொடுத்தான்..

ஓலையை வாங்கிய ராஜா படிச்சுப் பார்த்தான்.. முகமெல்லாம் சந்தோஷம்..

அதைப் பார்த்ததும் அங்கேயிருந்த மற்றவர்களுக்கும் சந்தோஷம்..

அப்பாடா!... எப்படியோ நம்ம தலையெல்லாம் தப்பிச்சுது..ன்னு!..

நல்ல விளக்கம்.. தீர்ந்தது சந்தேகம்.. ஆகவே உமக்குத் தான் ஆயிரம் பொற்காசுகள்..  - என்று அறிவித்தான் அரசன்...

அப்போ தான் அந்தப் பெரியவர் எழுந்தார்..

யாரு.. அந்த சாமியார் தானே!..

அவர் சாமியார் இல்லை.. அவர் தான் நக்கீரர்.. பாண்டிய ராஜா சபையில மூத்த புலவர்.. அவருக்கு நிகரே இல்லை...

அரசே.. தாங்கள் தெரிந்து கொண்ட விளக்கத்தை எல்லோருக்கும் சொல்லலாமே!.. - என்றார்..

அரசன் அந்த ஓலையை - ஓலை வாசிக்கிறவன்..கிட்ட கொடுத்தான்..
அவனும் வாசிச்சான்..

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே!..

இதைக் கேட்டதும் அங்கேயிருந்த மற்ற புலவர்கள் எல்லாம்.. ஆகா!.. என்றார்கள்..

அவங்களைத் திரும்பிப் பார்த்துட்டு முறைத்தார் நக்கீரர்...

இதெப்படி சரியாகும் .. கூந்தலுக்கு இயற்கையில வாசம் எல்லாம் கிடையாது... நாலு நாளைக்கு கூந்தலை வாராமல் விட்டால் என்ன கதியா இருக்கும்... இதைப் போய் நறுமணம் என்கின்றானே இந்தப் புலவன்!..

செண்பகப் பாண்டியன் திடுக்கிட்டான்.. இதென்னடா.. வம்பு!..

அரசே.. இந்த மாதிரி பிழையான பாட்டுக்கெல்லாம் பரிசு கொடுத்து கஜானாவை காலி செய்து விடாதீர்கள்!..

இதற்கும் அங்கேயிருந்த மற்ற புலவர்கள் எல்லாம்.. ஆகா!.. என்றார்கள்..

இதெல்லாம் போதாதென்று நக்கீரர் கேள்வி மேல கேள்வி கேட்டார்.. 

யார் ஐயா நீர்?.. எங்கேயிருந்து வருகின்றீர்?.. தவறான கருத்தை அரசர் முன் வைக்கின்றீரே!.. நீர் எங்கே படித்தீர்?.. என்னவெல்லாம் படித்தீர்?..

தருமிக்கு அடிவயிறு கலங்கி விட்டது...

ஏதேது.. தலைக்கு ஆபத்து வந்துடுமோ?.. சொக்கேசா!.. - ன்னு, கூச்சல் போட்டபடி அங்கேயிருந்து ஓட்டம் பிடிச்சு கோயில்ல வந்து நின்னார்...

அழுகையும் ஆத்திரமும் பொங்கி வரறது... ஏதோ சத்தம்..

யாரும் துரத்திக்கிட்டு வர்றாங்களா..ன்னு பின்னாடி திரும்பிப் பார்த்தார்... ஒருத்தரும் இல்லை..

முன்னாலே ஈஸ்வரன்..

இவருக்கு கோபம் வந்தது.. ஆனா - ஈஸ்வரன் முந்திக்கிட்டு கேட்டார்..

பொற்காசுகள் எங்கே!..

ஐயா... நீங்க எனக்கு நல்லது தான் செய்ய நினைச்சீங்க.. ஆனா.. என் தலை எழுத்து சரியில்லை.. அதனாலே அங்கே இந்தப் பாட்டுல குற்றம் குறை எல்லாம் இருக்கு...ன்னு சொல்லி துரத்தி அடிச்சிட்டாங்க!..

இதைக் கேட்டு ஈஸ்வரனுக்குக் கோபமான கோபம்..

வா!.. என்னான்னு போய் கேட்போம்!.. - ன்னு சொல்லிட்டு வேகமா நடந்தார்..

தருமி பின்னாலேயே ஓடி வந்தார்...

ஐயா..  அரண்மனைப் பக்கம் போகாதீங்க.. அரசாங்கத்தை எல்லாம் எதிர்த்துக்க வேணாம்.. அங்கே எல்லாருமே சந்தேகம் பிடிச்சுப் போய் இருக்காங்க!.. எல்லாத்துக்கும் ஆமாம்.. போடுறாங்க!... கூந்தல்..ல வாசம் இருந்தா என்ன.. இல்லே..ன்னா என்ன?... பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கு எதுக்கு?..

ஈஸ்வரன் எதையும் கேட்டாம அரண்மனைக்குள்ள போய் -
ராஜாவுக்கு முன்னால கம்பீரமா நின்னார்....

பசங்கள் ஆர்வமாக நோக்கினார்கள்...

இன்னிக்கு திருவிழா படங்களை எல்லாம் குணா அமுதன், ஸ்டான்லி அனுப்பியிருக்காங்க.. பார்க்கலாமா!..

ஓ.. பார்க்கலாமே!...

2/5 செவ்வாய்க்கிழமை
ஐந்தாம் திருநாள்
-: பகல் :-

தங்கச் சப்பரத்தில்
சொக்கரும் மீனாளும் 
இராமாயணச் சாவடிக்கு எழுந்தருளினர்..

2/5 செவ்வாய்க்கிழமை
ஐந்தாம் திருநாள்
-: இரவு :-

தங்கக்குதிரை வாகனத்தில்
சுந்தரேசரும் அங்கயற்கண்ணியும்
திருவீதி உலா








3/5 புதன்கிழமை
ஆறாம் திருநாள்
-: பகல் :-

தங்கச் சப்பரத்தில் 
சுந்தரேசரும் அங்கயற்கண்ணியும்
திருக்கோயில் மண்டகப்படியில் எழுந்தருளினர்..

3/5 புதன்கிழமை
ஆறாம் திருநாள்
-: இரவு :-

தங்க வெள்ளி ரிஷப வாகனங்களில்
சுந்தரேசரும் அங்கயற்கண்ணியும்
திருவீதி உலா

சைவ சமய ஸ்தாபித லீலை








மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமைபங்கன் திருஆலவாயான் திருநீறே!..(2/66) 
-: திருஞானசம்பந்தர் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
*** 

8 கருத்துகள்:

  1. படங்கள் அழகு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி
    பசங்களோடு நானும்....

    பதிலளிநீக்கு
  3. புகைப்படங்கள் அனைத்தும் வெகு அழகு. நானும் விழாவில் கலந்து கொண்ட உணர்வு.

    பதிலளிநீக்கு
  4. வழக்கம்போல படங்கள் அழகு. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. படமும் கருத்தும் கவர்ச்சியாக உள்ளன!

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  6. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
    தாமத வருகைக்குப் பொறுத்துக்கொள்க. இன்றைய நிகழ்வைத்தான் காணமுடிந்தது ஐயா. இனி தொடர்வேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா... படங்கள் அழகு...
    தங்கள் எழுத்து எப்பவும் போல்...

    பதிலளிநீக்கு
  8. படங்கள் அழகு! இறைவன் என்ன அழகு!!

    கீதா: படங்கள் வெகு அழகு குறிப்பாகக் குழந்தைகள் கோலாட்டம் வெகு அழகு!!! எப்படி மகிழ்வுடன் கலந்துகொள்கிறார்கள்!! எனது இளவயதில் கோலாட்டம் அடித்த நினைவு வந்தது...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..