நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 25, 2016

தாழையாம் பூ முடித்து

தந்ததன.. தானனனா..  ஆஆ...

- என, தொலை தூரத்துத் தெம்மாங்கு சத்தம்...

அந்தத் தெம்மாங்கு - அது ஒன்றே - நீண்டு விரிந்து விளைந்திருக்கும் வயற்காட்டினைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது..

நன்றி - ஓவியர் திரு. மாதவன்
தெம்மாங்கினைத் தொடர்ந்து -
தென்னங்கனி பிளந்தாற்போல,
காளை ஒருவனின் கம்பீரமான குரல்..
அவனருகில் இளங்கன்னி ஒருத்தி!..

இருந்தும் -  சிறிது சோகமும் கூட!..

ஏன்!.. எதற்கு?..

தொடர்ந்து கேட்போம் வாருங்கள்..

ஒட்டுக் கேட்பது தவறில்லையா?..

வீட்டுக் கதவில் காதை வைத்துக் கேட்பது தான் தவறு.. பெருந்தவறு!..
இங்கே வெட்டவெளியில் காற்றலையில் அல்லவா தெம்மாங்கு தவழுகின்றது... கேட்டு மகிழ்வதில் தவறே இல்லை!..

தாழையாம் பூ முடித்துத் தடம் பார்த்து நடை நடந்து..
வாழை இலை போல வந்த பொன்னம்மா!..
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா?..

அதென்னங்க தாழையாம் பூ முடிச்சி?...

இருங்க... இந்தப் பையனோட பாட்டுக்கு அந்தப் பொண்ணும் இசைப்பாட்டு பாடுது.. முதல்ல பாட்டைக் கேட்போம்.. அப்புறமா.. அர்த்தத்தைப் பார்ப்போம்!..

பாளை போல் சிரிப்பிருக்கு.. பக்குவமா குணமிருக்கு..
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா...
இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா!..

ஆகா!...

தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும்பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா.. அது
மானாபிமானங்களைக் காக்குமா?..
மானாபிமானங்களைக் காக்குமா?..

மானமே ஆடைகளாம் மரியாதை பொன்னகையாம்
நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள்
நாட்டு மக்கள் குலப்பெருமை தோன்றுமே!..
நாட்டு மக்கள் குலப்பெருமை தோன்றுமே!..

அடடா!...

அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா?. வீட்டில்
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா!..
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா!..

மண்பார்த்து விளைவதில்லை.. மரம் பார்த்து படர்வதில்லை..
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா... அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா!...
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா!...


தாழையாம் பூ முடித்துத் தடம் பார்த்து நடை நடந்து..
வாழை இலை போல வந்த பொன்னம்மா!..
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா?..

அற்புதம்.. அற்புதம்!.. ஆனா.. அவங்க ரெண்டு பேரும் அப்படியே மாடு கன்றை ஓட்டிக்கிட்டு போறாங்களே?..

ஆமாம்.. சாயங்காலப் பொழுதாச்சே... வயக்காட்டு வேலைய முடிஞ்சது.. வீட்டுக்குப் போக வேணாமா?... கம்புக்கு களை எடுத்தாச்சு.. தம்பிக்கும் பொண்ணு பார்த்தாச்சு.. அப்படிங்கற மாதிரி... வரப்போட வரப்பா வேலையும் பார்த்தாச்சு.. வருங்காலத்துக்கு பேசவேண்டியதையும் பேசியாச்சு!..

அப்போ - ரெண்டு பேருக்கும் காதல் தானே!..

காதல் தான்... ஆனா, அதுக்கும் மேலே!... அதனால தான் - தாழையாம் பூ முடிச்சி தடம் பார்த்து நடை நடந்து.. ந்னு வார்த்தை வந்தது!...

அதுக்கு என்னங்க அர்த்தம்?...

மல்லிகை முல்லை - இந்த மாதிரி பூவெல்லாம் ரெண்டு நாள்ல வாடிப் போனா -  வாசமும் சேர்ந்து காணாப் போயிடும்.. ஆனா, இந்த தாழம்பூ இருக்கே - அது ஒரு தனி ரகம்.. நாளாக நாளாகத் தான் அதனோட மடல்கள்..ல இருந்து வாசம் வீசும்...

அது சரி!... 

அந்தக் காலத்தில சின்ன பெண்ணுங்களுக்கு சடை அப்படின்னாலே - தாழம்பூ சடை தான்.. குஞ்சம் தான்!.. போற பக்கமெல்லாம் வாசம் கமகம...ன்னு!..

சரி.. அதுக்கும் இதுக்கும் என்னாங்க சம்பந்தம்?..

இருக்கே!... தாழையாம் பூ முடிச்சி.. அதுக்கப்புறம்?...

தடம் பார்த்து நடை நடந்து!...

அப்படின்னா.... பாதையைப் பார்த்து நடக்கிறது... கிராமங்கள்..ல சொல்வாங்க... வயக்காட்டுத் தடம்... ஒத்தையடித் தடம்... வண்டித் தடம்..

ஆமாங்க... நானும் படிச்சிருக்கேன்... ரயில் தடம் புரண்டது.. அப்படின்னு போடுவானுங்க... அதுக்கு இது தானா அர்த்தம்!... நல்லாயிருக்கே!...

பாதையைப் பார்த்து நடக்கிறது..ன்னா.. எல்லா பாதையும் பாதையில்லை... நல்லவங்க நடந்த தடம்.. அந்தத் தடம் பார்த்து நடப்பது தான் வாழ்க்கை!...

அடடா!.. நீங்க என்னா தமிழ் வாத்தியாருக்குப் படிச்சீங்களா?...

படிக்கலாம்..ன்னு தான் போனேன்... லஞ்சம் அதிகமா கேட்டானுங்க..கொடுக்க முடியலே.. அதனாலே படிக்க முடியாமப் போச்சு!...

அப்பவே.. லஞ்சமெல்லாம் உண்டா?...

அப்ப ஆரம்பிச்ச வியாதி தானே!... இன்னைக்குப் புரையோடிப் போய் நாறிக் கிடக்குது...

சரி.. வாழை இலை போல வந்த பொன்னம்மா.. அப்படின்னா!..

பொன்னம்மா..ன்றது அந்தப் பொண்ணோட பேரு.. பொன் - தங்கம்..ன்னு தெரியும்.. அதோட பெருமையும் புரியும்... அப்படி குணமுடைய பொண்ணு வாழையில போல வந்தாளாம்!...

அது தான் எப்படி..ங்கறேன்!..



பச்சைப் பசுந்தளிரா வாழைக் குருந்து மேல வந்து - அப்படியே மயில் தோகை மாதிரி விரிஞ்சும் விரியாம ரொம்பவும் மென்மையா இருக்கும்.. தொட்டாலே கிழிஞ்சு போயிடும்.. இதுக்கு தான் தலை வாழை இலை..ன்னு பேரு...

அடடா!..

இப்படி எந்த ஒரு குறையும் இல்லாம முன்னவங்க போன தடம் பார்த்து காய்ந்தாலும் காயாத தாழம்பூவை சூடிக்கிட்டு வர்றவளே!... என் வாசலுக்கு என்ன வாங்கிக்கிட்டு வந்தாய்?... அப்படின்னு கேக்கிறான்!... புரிஞ்சுதா!...

இதுக்கும் மேல புரியாம இருக்குமா!...

அதுக்குத் தான் அந்தப் பொண்ணு சொல்லுது... தென்னம்பாளையைப் போல சிரிப்பிருக்கு.. பக்குவமா குணமிருக்கு.. ஆளழகும் சேர்ந்திருக்கு... இதுக்கு மேல என்ன வேணும் - ஏழையாப் பொறந்த எங்களுக்கு!...

ஆகா!... என்னா ரசனை!... ஒருத்தரோட மனசு அவரோட சிரிப்பில தெரியும்.. அப்படி..ன்னு சொல்லுவாங்க.. அதுபோல கன்னையோட மனசு அவனோட தென்னம்பாளைச் சிரிப்பில தெரியுது... இல்லீங்களா!..

அதுல பாருங்க!... பொன்னும் பொருளும் பூந்தட்டு சீதனமும் ஒரு மானம் மரியாதையான வாழ்க்கைக்கு போதுமா!.. அப்படின்னு.. கேக்குறதுக்கு - அந்தப் பொண்ணு சொல்லுது -

தன் மானம் தான் இடுப்புச் சேலை... சுயமரியாதை தான் என்னோட நகைநட்டு.. என்னோட வழித்துணை பரம்பரையா வர்ற நாணம்!.. இதெல்லாம் இருந்த போதுமே.. எங்களோட குலப்பெருமை எட்டுத் திசையும் கொடி கட்டித் தோன்றுமே!... - அப்படின்னு!... என்ன அருமையா இருக்கு!..

அந்த நாணம் இல்லாதது தான் - நாட்டுல நடக்கிற எல்லா தப்புக்கும் காரணம்!..  நாணம் இருக்கிற எவருமே ஒழுக்கம் தவறி நடக்க மாட்டாங்க!.. கழிவறைக்கு வெளியே ஒன்னுக்கு போறதில இருந்து அடுத்தவன் பொண்டாட்டிய புள்ளை குட்டிகளோட இழுத்துக்கிட்டு ஓடறது வரைக்கும் - வெட்கம் கெட்டவங்க செய்யிற வேலை தானே!..

சரியாச் சொன்னீங்க!.. இருந்தாலும் கன்னையனுக்குச் சந்தேகம் வருது.. பொன்னம்மா நம்மைப் பார்த்து ஆளழகு ..ன்னு சொல்லிடிச்சு.. அதுக்கு நாம தகுதியா?.. நமக்குத் தான் ஒரு கையும் காலும் வெளங்காதே!.. அவளை எப்படி நாம காப்பாத்த போறோம்!... அதனால அவனே கேட்கிறான்...

கைகால் விளங்காதவன் மேல யார் இஷ்டப்படுவாங்க!.. நீ என்ன தான் எம்மேலெ இஷ்டப்பட்டாலும் உங்க வீட்டில சம்மதிப்பாங்களா!... முடவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்படறது யாருக்குத் தான் சந்தோஷமா இருக்கும்?..

மனக்குறை இருக்கும் தானே!...

அதுக்கு பொன்னம்மா சொல்லுது பாருங்க... மண்ணைப் பார்த்தா பயிர் வளருது?.. மரத்தைப் பார்த்தா கொடி படருது?. அந்தப் பயிர்லயும் கொடியிலயும் குத்தம் குறை உண்டா?..

என்னோட கண்ணு ரெண்டையும் பாருங்க... அதுல ஒரு களங்கமும் உண்டா.. சொல்லுங்க!.. என்னைப் புரிஞ்சுகிட்டது அவ்வளவுதானா?...

பொண்ணுங்க மனசை புரிஞ்சுக்கிறதே - ஒரு புண்ணியம்!..

அதுக்கு மேல கன்னையனுக்கு கேள்வி ஏதும் இல்லை!.. நாம காப்பாற்றலே.. ன்னாலும் அவ நம்மளைக் காப்பாற்றிடுவா... ன்னு நம்பிக்கை பிறக்குது... அப்புறம் என்ன!... கள்ளச் சிரிப்பு தான்.. குறும்புப் பார்வைதான்!...

இந்தப் பாட்டுல - களங்கமில்லாத அன்பு தான்.. வாழ்க்கைக்கு அடிப்படை.. ன்னு சொல்றாங்க..

இப்படியெல்லாம் தான் அன்றைக்கு வாழ்ந்தாங்க... ஆனா இன்னிக்கு நடக்கிறதெல்லாம் கேள்விப்பட்டா...

ரத்தம் கொதிக்குது... வேணாம்!... அந்தப் பேச்சை விடுங்க... ஏதோ இன்னைக்கு சாயங்காலப் பொழுது நல்லபடியா ஆனது... இன்னொரு சமயம் சந்திப்போம்!...

நல்லது.. மறுபடியும் பார்ப்போம்!..
* * *


ஜூன் 24..

கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கும்
மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் அவர்களுக்கும் - பிறந்த நாள்..


கவியரசரும் மெல்லிசை மன்னரும் வழங்கிய பாடல்களுள் -
மண் மணக்கும் பாடல் ஒன்றினை - என்னளவில் வழங்கியுள்ளேன்..

காலத்தை வென்று நிற்கும் - தாழையாம் பூ முடித்து - எனும் இனிய பாடலை
இங்கே - கேட்டு மகிழுங்கள்..

மெல்லிசை மன்னரின் இசையில் பாடியவர்கள் -
T.M. சௌந்தரராஜன், P. லீலா..

நடித்து வண்ணம் கூட்டியவர்கள் -
சிவாஜி கணேசன், சரோஜாதேவி..

இந்தப் பாடல் பெரும் சிறப்பு எய்துவதற்குக் காரணமான - 
மகத்தான கலைஞர்களையும் நினைவு கூர்தல் மகிழ்ச்சி..



நேற்றே இந்தப் பதிவினை வழங்கியிருக்க வேண்டும்..

வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று 18 மணி நேர வேலை..
ஆறு மணி நேர ஓய்வில் மீண்டும் சனிக்கிழமை வேலைக்குச் செல்ல வேண்டும்..

தவிரவும் இணைய இணைப்பு சொல்லும்படியாக இல்லை..

எனவே தான் தாமதம் ஆகிவிட்டது..

மேலும் - அவர்கள் இன்று இல்லை என்று நினைக்கவே முடியவில்லை..

அவர்கள் வழங்கிய இனிய பாடல்களுடன் தான் நாளும் பொழுதும் விடிகின்றது..

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. - என்றார் கவியரசர்..

அந்த சொல் மெல்லிசை மன்னருக்கும் பொருந்தும்..

அவ்வண்ணமாகிய 
அந்த மாபெரும் வித்தகர்களை 

நெஞ்சம் மறப்பதில்லை..
நெஞ்சம் மறப்பதேயில்லை!..  
***

11 கருத்துகள்:

  1. சிறப்பானதோர் பகிர்வு. மறக்க முடியாதவர்கள்... மறக்கமுடியாத பாடலும் இசையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. காலத்தால் மறக்க முடியாத கவிஞனைப்பற்றிய தங்களது பாணி விடயங்கள் அருமை ஜி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. என்றும் நிரந்தரமாக நம் இதயத்துள் இருக்கும் கவிஞனையும் கலைஞனையும் நினைவுகூர்ந்தமைக்கு நன்றி. தாங்கள் கூறிய விதம் மிக அருமை.என் இளமைப் பருவத்தில் தாழம்பூ சடை வைத்து பூ தைத்தவர்களைப் பார்த்துள்ளேன். மிகவும் அழகாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      பழைமையை நினைவு கூர்தல் எத்தனை மகிழ்ச்சி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. அருமை.. அருமை ஐயா..
    பாடலும் விளக்கமும் நான் நிரந்தரமானவன் எனக்கு அழிவில்லை என்ற கவிஞனுக்கு உங்கள் பாணியில் ஒரு அருமையான படைப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பாடல்களுக்குப் பொருள் இருந்தது கதையோடு ஒட்டி இருந்தது. என்றும் நினைக்க வைக்கும் திறன் இருந்தது அவற்றை இயற்றிய கலைஞர்கள் காலத்தால் அழியாதவர்கள் அவர்களை நினைக்க வைக்கும்அருமையான பதிவு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      பாடலில் பொருளும் திரைக் கதைகளில் கருத்துகளும் நிறைந்திருந்த மாதிரி இனியொரு காலம் வரக்கூடுமோ?..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. வாழையிலை போல வந்த ..
    வாழை இலையை கட்டாகத்தான் கட்டுவார்கள்
    புடவையை அவ்வாறு கட்டிக்கொண்டு வந்ததை கவிஞர் சொல்லியிருக்கலாம் என தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..