நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 24, 2016

அருள் ஞானசம்பந்தர்

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆனி மாதத்தின் முதல் நாள்!..

பகல் பொழுது முழுதும் கொக்குகளும் குருவிகளும் பறந்து திரிந்திருக்கும் அந்தப் பாசிக் குளம் வெறிச்சோடி இருந்தது...

நீரின் மீது வெள்ளிக் கீற்றுகளாகத் துள்ளிக் கொண்டிருக்கும் மீன்களைக் கூட காணவில்லை...

காரணம் - ஆனி மாதத்திலும் குறையாத வெயில்!..

நீரின் ஆழத்தில் அல்லித் தண்டுகளுக்குள் மீன்கள் அனைத்தும் அடைக்கலமாகியிருக்க -

கொக்குகளும் குருவிகளும் வெயிலுக்கு அஞ்சி -
குளக்கரையின் நாணற் புதருக்குள் ஒதுங்கிக் கிடந்தன..

அப்படிப்பட்ட கோடையின் அந்த நாள் -  சிறப்புற இருப்பதை அங்கிருந்த எந்த உயிரினமும் அறிந்திருக்கவில்லை..

சோழ வளநாட்டில் காவிரிக்குத் தென்பால் அழகிய சிற்றூர்..

எங்கெங்கு காணினும் பச்சைப் பசேலென்று!...
நிலமகள் கர்வம் கொள்ளும் படிக்கு அழகென்றால் அப்படிப்பட்ட அழகு!..-

தெய்வப் பசுவான காமதேனுவின் மகளான பட்டி எனும் பசு  சிவவழிபாடு செய்து உய்வடைந்த சிறப்புடையது - இந்த ஊர்..

மேலும் - ராஜரிஷி எனும் சிறப்பை விஸ்வாமித்திரர் எய்தியது - இங்கே தான்.. 

எல்லாவற்றுக்கும் மேலாக - 
ஸ்ரீராமபிரானும் சிவபூஜை செய்த பெருமையை உடையது - இந்த ஊர் ..

இத்தகைய ஐதீகங்களால் பெருமை கொண்டிருந்த தலத்தின் பெயர் - 

திருபட்டீச்சுரம்...

பட்டீச்சுரம் - அன்றைய தினம் விழாக்கோலம் பூண்டிருந்தது. 

காரணம்... 


ஞானசம்பந்தப்பெருமான் - எழுந்தருள்கின்றார்...

சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் - ஆளுடைய பிள்ளையாகத் தோன்றியவர்..

 தன் மூன்றாம் வயதில் - அம்பிகை அருளிய பாலினை அருந்தியவர்..

அதனால் - சிவஞானம் எய்தியவராக,

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி
காடுடைய சுடலைப்பொடி பூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரால்முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மானிவன் அன்றே!..

- எனத் திருப்பதிகம் பாடி - தான் கண்ட திருக்காட்சியினைத் தன் தந்தை சிவபாத இருதயருக்கும் காட்டியவர்

தோணிபுரம் எனும் சீர்காழியில் திருக்குளத்தினில் நீராடுதற்கு என தண்ணீரில் மூழ்கிய தந்தையைக் காணாது மனம் தவித்து அம்மே...அப்பா!.. என அரற்ற, 

அது பொறுக்க மாட்டாது எந்தை ஈசனுடன் விடை வாகனத்தில் தோன்றிய அம்பிகை, 

அளப்பரிய கருணை உணர்வினால் உந்தப்பட்டவளாய் - பெருகி வழிந்த திருமுலைப்பாலினை பொற்கிண்ணத்தில் ஊட்டினாள்!.. என்றால் -  

ஞானசம்பந்தப் பெருமானின் பெருமையைச் சொல்வதும் எளிதோ!..


அம்பிகையின் ஞானப்பாலினை அருந்தியதால் - சிவஞானம் நிரம்பப் பெற்ற திருஞானசம்பந்தர் நம் ஊருக்கு சிவதரிசனம் செய்ய வருகின்றார்.. அவரைக் காண்பதற்கும் அவர் தம் திருப்பதிகத்தினைக் காதாரக் கேட்பதற்கும் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்!...

இப்படியாகப் பேசிக் கொண்டு பெருந்திரளான மக்கள் ஆவலுடன் வீதியின் இரு மருங்கிலும் கூடியிருக்கின்றனர்.. 

அப்போது - கையில் தண்டத்துடன் வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்தான் வாலிபன் ஒருவன்..

அவன் கிராமத்தின் தலையாரி.. காவல் வீரன்..

அங்கிருந்த பெரியோர்கள் அவனைக் கையமர்த்தினர்.. 

குடிப்பதற்கு குளிர்ந்த மோரினை வழங்கினர்..  
மோரினை அருந்தி - தாக சாந்தியடைந்த அவன் சொன்னான்.. 

சுவாமிகள் - ஆவூர் பசுபதீச்சுரத்தில் சிவதரிசனம் செய்த பின் திருச்சத்தி முற்றத்தைத் தரிசித்து  விட்டு - தம் அடியார்களுடன் வந்து கொண்டு இருக்கின்றார்கள்!... 

- என்று... 

இதைக் கேட்டதும்  கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பட்டீச்சுரத்தில் கூடியிருந்த மக்களுக்கு அமுதமழை பெய்ததைப் போலிருந்தது...

நல்ல செய்தி சொன்ன தலையாரிக்கு தோளில் பட்டு அணிவித்து ஆரவாரம் செய்தனர்..

அதோ - சற்று தொலைவில் சிவ கோஷங்கள் கேட்கின்றன.. 

அவ்வளவுதான்!.. மக்களுக்கு உற்சாகம் பீறிட்டது.  

ஆரவாரத்துடன்,  இவர்களும் எதிரொலியாக சிவகோஷங்களை முழக்கினர்..

பூரண கும்பங்களையும் மங்கல தீபங்களையும் ஏந்தியபடி  மங்கள இசையுடன் எதிர் கொண்டனர். 

ஆங்காங்கே வழிநடையில் குளிர் நிழலாக தென்னங் கீற்றுகளினால் பந்தல் அமைத்து வாழை, மாவிலை, பாளை, கமுகு, பனங்குலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன...

வீதியெங்கும் வெட்டிவேர் விலாமிச்சை போன்ற திரவியங்கள் ஊறிக் கிடந்த நீர் தெளிக்கப்பட்டிருந்ததால் - சுகந்த மணம் பரவியிருந்தது..

அத்துடன் ஆங்காங்கே தூப ஸ்தம்பங்களில் அகில் சந்தனம் சாம்பிராணி - ஆகிய இவைகளும் கமழ்ந்து கொண்டிருந்தன..

இருந்தாலும் - ஞானசம்பந்தப் பெருமானைத் தரிசிக்க ஆதவனும் ஆசை கொண்டு முகங்காட்டியதால் - சற்றே அதிகமாக பூமி தகித்தது. 

அதோ!... அதோ!...  

முத்துக் குடை தெரிகின்றது.. 
முத்துச் சின்னங்கள் தெரிகின்றன..

இவற்றுடன் - அடியார்கள் சுமந்து வரும்  முத்துப் பல்லக்கும் தெரிகின்றது!..

மக்களிடையே - அலைகடலையும் மிஞ்சிய ஆரவாரம்!...

அலங்காரப் பந்தலுக்கு சற்று முன்பாக -  பாதந்தாங்கிகள் - தாம் சுமந்து வந்த பல்லக்கினை இறக்குகின்றார்கள்..

முத்துப் பல்லக்கினுள் முழு நிலவாக - திருஞானசம்பந்தப்பெருமான்... 

அன்பும் அருளும் ததும்பி வழியும் திருமுகம்.  
உச்சி முடிக்கப்பட்ட கொண்டை. 

அந்தக் கொண்டையில் - என்ன தவம் செய்தேன்!..- என்றபடிக்கு மல்லிகைச்சரம். 
ஞானஒளி வீசும் திருமேனி முழுதும் மந்திரமாகிய திருநீறு.  
பெருமானின் திருக்கரங்களில் ஈசன் அருளிய பொற்றாளம்.

வெயிலின்  வெப்பத்தால் வெண்மணல் சற்றே சுடுகின்றது...

பல்லக்கினின்று பெருமான் -
பாதமலர்களைப் பூமியில் வைக்க முற்படுகின்றார்..

கூடியிருந்த மக்கள் - வாச மலர்களால் நடை பாவாடை விரிக்கின்றனர்..

அந்த நொடியில் தான் - அந்த அற்புதம் நிகழ்கின்றது.. 

அன்றைக்கு சீர்காழியில் முந்திக் கொண்டு திருமுலைப் பாலூட்டி பெருமை சேர்த்துக் கொண்டாள் அம்பிகை. 

பின்னும் திருக்கோலக்காவில் நம் தகுதிக்கு வெண்கலத் தாளம் கொடுப்பதாவது என்று  பொற்றாளம் கொடுக்க - அதில் ஒலியாய் ஓசையாய் இயலாய் இன்னிசையாய் அமர்ந்து கொண்டாள் - பராசக்தி. 

இன்றைக்கு என்ன செய்கின்றாள் பார்ப்போம்!.. - என எண்ணிய எம்பெருமான் - தம் அருகில் பணி செய்து நின்ற பூதகணங்களை நோக்கினார்.

வானத்தில் திருக்கயிலாய வாத்யங்களின் பேரொலி கேட்டது..
முத்துப்பந்தலை ஏந்தியவாறு, சிவபூதங்கள் நின்று கொண்டிருந்தன..

ஏறிட்டு நோக்கியருளினார் - ஞான சம்பந்தப்பெருமான்..

இது எம்பெருமான் பட்டீசுரர் அளித்தது!.. - எனக் கூறி ஞானசம்பந்தப் பெருமானின் சிவிகையின் மேல் நிழல் செய்தன. 

அருளே நிறைந்த அன்னையும் ஐயன் அளித்த முத்துப் பந்தலின் ஊடாக - அதன் இயல்பான குளிர்ச்சி மேலும் தழைக்கும்படி தண்ணிழலாகப் பொருந்தி எங்கும் குளிர்ந்து விளங்கும்படி பரவி நின்றாள்..

திருக்கோயிலில் உள்ள ஓவியம்
திருநெல்வாயில் அரத்துறையில் முத்துப்பல்லக்கு வழங்கப்பட்டதைப் போல
பட்டீச்சுரத்தில் முத்துப் பந்தல் அருளப்பெற்றது...

வானில் இருந்து இறங்கிய முத்துப்பந்தலை பணிந்து வணங்கி அடியவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

கண் முன்னே நிகழ்ந்த அற்புதத்தினைக் கண்டு எங்கும் ஹர ஹர என்று ஜய கோஷம்!..

ஸ்வாமிகளின் பாதாரவிந்தத்தில் விழுந்து வணங்கினர் மக்கள்..

அடியவர்களும் அன்பர்களும் ஆரவாரத்துடன் முத்துப்பந்தலின் தண்ணிழலில் ஞானசம்பந்தப்பெருமானை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர். 

ஈசனின் கருணையினைப் போற்றியவாறே ஞானசம்பந்தப் பெருமானும் தன் பூம்பாதங்களைத் தரையில் பதித்து மெல்ல நடக்க - 

திருக்கோயிலின் மூலத்தானத்திலிருந்து நந்தியம்பெருமானுக்கு - ஆணை பிறந்தது. 

ஞானசம்பந்தன் நடந்து வரும் அழகினைக் காணவேண்டும். 
சற்றே விலகி இருப்பாய்!...


விலகியிருக்கும் நந்தியும் கொடிமரமும்
அதன்படி பலிபீடமும் நந்தியும் கொடிமரமும் - விலகி அமைந்தன. 

அற்புதத்திற்கு மேல் அற்புதமாக நிகழ்ந்தது கண்டு - 
மக்கள் அனைவரும் பேரானந்தம் எய்தினர்...


காலைமட வார்கள்புன லாடுவது கௌவைகடி யார்மறுகெலாம்
மாலைமண நாறுபழையாறைமழ பாடியழகாய மலிசீர்ப்
பாலையன நீறுபுனை மார்பனுறை பட்டிசர மேபரவுவார்
மேலையொரு மால்கடல்கள் போல்பெருகி விண்ணுலகமாளுமவரே!.. (3/73)

ஞானசம்பந்தப் பெருமானும் அம்மையப்பன் மேல் அன்பெனும் வெள்ளம் கரை புரள  - திருப்பதிகம் பாடி மகிழ்ந்து - வணங்கி இன்புற்றனர்.

இப்படி ஞானசம்பந்தப் பெருமான் தோணி புரத்து அம்மையப்பனின் புத்திரராக விளங்கி நாடெங்கும் சிவதரிசனம் செய்து திருக்கடைக்காப்பு எனும் தமிழ் அமுதினைப் பொழிந்தார். 

அவர் செல்லும் வழியெங்கும் அற்புதங்கள் தான்...

இவர் பொருட்டு வளம் குன்றிப் பாலையாயிருந்த நனிபள்ளி எனும் தலம்  நெய்தலாகி -  பின் மருதமாயிற்று.  

திருப்பாச்சிலாச்சிராமத்தில் முயலகம் எனும் நோயால்  - நெடுநாளாக உணர்வற்றுக் கிடந்த மழவனின் மகள் நோய் நீங்கப் பெற்றாள்.

திருச்செங்கோட்டுக்கு வருகை புரிந்தபோது கொங்கு நாடெங்கிலும் பரவிக் கிடந்த குளிர் காய்ச்சல் - இவர் தம் திருப்பதிகத்தால் நீங்கி ஒழிந்தது.

திருமருகலில் வணிகர் குலமகளின் காதல் மணாளன் நாகந்தீண்டி இறக்க, கதறி அழுத அவளின் கண்ணீர் ஓயும் வண்ணம் மணாளனை உயிர்ப்பித்து மணம் முடித்து அருளினார்.  

திருநாவுக்கரசருடன் இணைந்து தலயாத்திரை செய்யுங்கால் திருவீழிமிழலையில் ஏற்பட்ட பஞ்சம் நீங்க இறைவனிடம் படிக்காசு பெற்று மக்களின் துயர் தீர்த்ததுடன்,  


திருமறைக்காட்டில் வேதங்களால் அடைத்துத் தாழிடப்பட்ட திருக்கோயிலின் கதவுகளைத் திறந்தும் அடைத்தும் மக்களுக்கு உதவினார். 

திருக்கொள்ளம்பூதூரில் முள்ளியாற்றில் வெள்ளப்பெருக்கின் போது ஆளில்லா ஓடத்தை அதுவாகவே செல்லும்படிக்கு  இயக்கி - அக்கரைக்கு அன்பர்களை அக்கறையுடன் சேர்த்தருளினார்.




மதுரையில் சமணத்தை வென்று சைவம் நிலை நாட்டினார். அத்துடன் பாண்டியனின் கூன் நிமிரப் பெற்றது. மன்னனும்  நின்றசீர் நெடுமாறன் ஆகினான். 


தொண்டை நாட்டில் திருஓத்தூர் எனும் தலத்தில் இறைபணிக்காக வளர்க்கப் பட்ட பனைகள், ஆண்பனைகள் ஆகிவிட, அவற்றை அன்பர்களின் பொருட்டு பெண்பனைகளாக்கி அருளினார்.  

திருமயிலையில், பாம்பு தீண்டி இறந்த - சிவநேசஞ் செட்டியாரின் அன்பு மகள்  பூம்பாவையை அஸ்திக் கலசத்திலிருந்து மீண்டும் உயிருடன் எழுப்பி அருளினார்..

இப்படியெல்லாம் தமிழுடன் தண்கருணையையும் சுரந்த திருஞானசம்பந்த மூர்த்தி - நம் பொருட்டு அருளிய திருப்பதிகங்கள் - நாளும் பாராயணம் செய்வோர்க்கு எல்லா நலன்களையும் வழங்கவல்லவை. 

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன்
வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.. 

பில்லி, சூனியம், மாந்திரீகம், பரிகாரம், அது, இது - என, 
நாம் - மதி மயங்கி, அங்குமிங்கும் அலைந்து திரிந்து அல்லல் அடையாதபடிக்கு - நல்வழி காட்டியருளிய ஞானகுரு.

எல்லாவற்றுக்கும் மேலாக - தீண்டத்தகாதவராகக் கருதப்பட்ட -
திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் நட்பு கொண்டவர்.

இசைவாணராகிய திருநீலகண்டருடன் அவரது மனைவி மதங்க சூளாமணி அம்மையாரையும் தன்னுடன் பேணிக் காத்தருளியவர். 

அவர்கள் இருவரையும் - திருத்தலங்கள் தோறும் தன்னுடன் அழைத்துச் சென்று சிறப்பித்தவர்.

திருஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகங்களை - 
திருநீலகண்டர் தான் - தனது யாழில் மீட்டினார்.

இதுதான் - பேதங்களைக் கடந்த - உயரிய நிலை!.. 

இத்தகைய உயரிய நிலையை -
சிவநேசச்செல்வர்களுக்கு அருளிய - ஞானகுரு திருஞானசம்பந்தப்பெருமான்.

போற்றுதற்குரிய திருஞானசம்பந்தப்பெருமானின் குருபூஜை இன்று!..


நல்லூர் பெருமணம் எனும் ஆச்சாள் புரத்தில் - நம்பியாண்டார் நம்பிகளின் திருமகள் தோத்திர பூர்ணா எனும் நங்கையை  பெருமானுக்கென குறித்தனர். 

திருமண வேளையில்,  

பெருமானின் திருக்கரத்தில் - நம்பியாண்டார் நம்பி  மும்முறை மங்கல நீர் வார்த்துத் தமது மகளைக் கன்யா தானம் செய்து கொடுத்தார். 

ஞானசம்பந்தர், தோத்திரப் பூரணாம்பிகையின் திருக்கரம் பற்றி அக்னியை  வலம் வந்தார்.

அவ்வேளையில் - 

இவளொடும் சிவனடி சேர்வன்!.. - என திருஉளங்கொண்டார்.

திருப்பதிகம் பாடியருளினார். சிவப்பெருஞ்ஜோதி ஆங்கே மூண்டெழுந்தது. 

காதல் மனையாளின் கரம் பிடித்தபடி - ஜோதியை வலம் வந்த ஞான சம்பந்தப் பெருமான் - அஞ்செழுத்து மந்திரத்தை ஓதியவாறே - அதனுள் புகுந்தார்.

அவருடன் - திருமண மங்கலங்களை நிகழ்த்திய திருநீலநக்க நாயனார், முருக நாயனார்,  திருநீலகண்ட யாழ்ப்பாணர், அவர் மனைவி - ஆகியோரும் அந்தப் பிழம்பினுள் புகுந்தனர். அழியாஇன்பம் அடைந்தனர்.

திருமணத்திற்கு வந்த அனைவரும் சிவஜோதியுட் கலந்தனர்

இன்று வைகாசி மூலம்..
ஞான சம்பந்தப் பெருமான் முக்தி நலம் எய்திய நாள்.. 

ஞான சம்பந்தர் அழியா முத்தி நலம் எய்திய நாள் வைகாசி மூலம்..
பெருமான் அருளிய வழியில் நம் மனம் செல்வதாக!..
***
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் 
வீழ்க தண்புணல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழக வையகமும் துயர் தீர்கவே!..

ஞானசம்பந்தர் திருவடிகள் 
போற்றி போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.
* * *  

15 கருத்துகள்:

  1. ஞானசம்பந்தரின் வரலாறு அருமை,, தங்கள் எழுத்தில் அதனைப்படித்தது மகிழ்ச்சி,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. திருஞானசம்பந்தர் குரு பூஜை அன்று அவர் பதிவு படிக்க ஆனந்தம்.
    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்..
    ஞானப்பால் உண்டவர், தேவாரம் பாடிச் சவைமும் தமிழும் தழைக்க செய்தவர் புகழ் வாழ்க!
    அவர் காட்டிய பாதையில் செல்வோம்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி
    ஞானசம்பந்தர் வரலாற்றுப்பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. நாட்கள் அனைத்துமே நல்ல நாட்களே என்று பாடிய
    திருஞான சம்பந்தரைப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. தொண்டை நாட்டில் திருஆத்தூர் தலம் மட்டும் இதுவரை நான் செல்லவில்லை. இப்பதிவில் தாங்கள் கூறியுள்ள பிற தலங்களுக்குச் சென்றுள்ளேன். தற்போது தங்களால் ஞானசம்பந்தப்பெருமான் தொடர்புடைய தலங்களுக்கு மறுபடியும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      விரைவில் நல்வாய்ய்பு கிடைக்கும்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அருள் ஞானசம்பந்தரை பற்றி
    சிறு வயதில் படித்தது ஐயா...
    இப்போது நினைவூட்டியமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. திருஞானசம்பந்தரின் வரலாற்றை அறிந்து கொண்டோம் ஐயா. அருமையான தொகுப்பு. இந்தத் தலங்களில் எல்லாமே சென்றதில்லை. அறிந்து கொண்டோம் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அறிந்த செய்திகள் சில அறியாதவை பல.பதிவிட்டதற்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..