நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 18, 2014

திருவேதிகுடி - 2

திருமணத் தடையினை  நீக்கி அருளும்  திருத்தலம்!.
மணமாலைக்கு வரம் அருளும் திருத்தலம்!. 
என்றே - திருவேதிகுடி  - அறியப்படுகின்றது.

ஆரவாரமான, ஆடம்பரமான எந்தவொரு பெரிய விளம்பரங்களும் இல்லை.

இந்த தலத்தில் - அம்பிகை தவம் இருந்தாள். ஐயன் திருமணம் கொண்டார் - என்றெல்லாம் ஐதீகம் இருப்பதாகவும் தெரியவில்லை.

ஆனாலும் ,


அன்றாடம் - ஐயன் வேதபுரீஸ்வரரையும் அன்னை மங்கையர்க்கரசியையும் தேடி வந்து கொண்டிருக்கின்றனர்  - அன்பின் வழிப்பட்ட மக்கள்!..

அதற்குக் காரணம் -

தனக்கென வாழாத் தகைமையாளர்களாகிய அப்பர் சுவாமிகளும், ஞான சம்பந்த மூர்த்தியும் தான்!..

அருளாளர்களாகிய அவர்களின் திருவாக்கினின்றும் உதித்த - தமிழமுதத் திருப்பதிகங்கள் தான் - திருவேதிக்குடியின் பெருமைகளுக்குக் காரணம்!..


சோழ வளநாட்டில்  - காவிரிக்குத் தென்கரைத் தலம் என குறிக்கப்பட்டிருக்கும் திருத்தலங்களுள் பதிநான்காவது திருத்தலம் திருவேதிக்குடி.

ஞானசம்பந்தர் அருளிய ஒரு திருப்பதிகமும் {3/78}, திருநாவுக்கரசர் அருளிய ஒரு திருப்பதிகமும் {4/90} என  - இரண்டு திருப்பதிகங்கள் - திருவேதிக்குடிக்கு.

ஞானசம்பந்தப்பெருமான் அருளிய  திருப்பதிகத்தின் முதல் பாடல் - இது.

நீறுவரி ஆடரவொ டாமைமன என்புநிரை பூண்பர் இடபம்
ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல் ஆதியர் இருந்தஇடமாந்
தாறுவிரி பூகம்மலி வாழைவிரை நாறஇணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே. 


சர்வ காரணன் ஆகி - அண்டபகிரண்டமும் பணிந்து வணங்கும் ஆதி நாதன் ஆகிய சிவபெருமான் -

திருநீறு விளங்க , படம் விரித்தாடும் பாம்பையும், ஆமை ஓடு , ருத்ராட்சம், என்பு முதலான மாலைகளையும் அணிந்தது இடப வாகனத்தில்  வீற்றிருந்து அருளும் தலமாகிய  - திருவேதிகுடி,

விரிந்த பாளைகளை உடைய பாக்கு மரங்களில் ருந்தும், கனிந்த பழங்களை உடைய  வாழைத் தோட்டங்களில் இருந்தும் பரவும் நறுமணத்தால்  நிறைந்தும்,

வாளை மீன்கள் இணை பிரியாமல் விளையாடும்படிக்கு நீர் நிறைந்த  மடுக்களால் வயல்வளம் மிகுந்தும் விளங்குகின்றது - என வர்ணிக்கின்றார்.

திருப்பதிகத்தின் - இரண்டாம் திருப்பாடலில் - 

வெற்பரையன் மங்கையொருபங்கர் நகர் என்பர் திருவேதிகுடியே!..

மலையரசனின் திருமகளாகிய உமாதேவியை - தன்னுடன் இணைத்து, மங்கையொரு பங்கனாக விளங்கும் சிவபெருமானின் தலம் திருவேதிகுடியே!.. - என்று புகழ்கின்றார்.

திருப்பதிகத்தின் - ஏழாம் திருப்பாடல்.

உன்னிஇருபோதும் அடிபேணும் அடியார்தம் இடர் ஒல்கஅருளித்
துன்னியொரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன்இடமாம்
கன்னியரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி அருமங்கலம்மிக
மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே. 


காலையிலும் , மாலையிலும்  திருவடிகளைச் சிந்தித்துப் போற்றும் தன் அடியார்களுடைய துன்பங்களை நீக்கி அருள் செய்பவனும்

தன்னையடைந்த - சனகர் , சனந்தனர் , சனாதனர் , சனற்குமாரர் எனும் முனிவர்களுக்கு  தக்ஷிணாமூர்த்தி என திருக்கோலம் கொண்டு, ஆலமரத்தின் கீழிருந்து அறம் உரைத்தவனும் ஆகிய - சிவபெருமான் விளங்கும் இடம் - 

கன்னியருடன் ஆடவர் சிறப்புற திருமணம் செய்து கொள்ளும் மங்கல நாளில் திருமணத்திற்குரிய மங்கலச் சடங்குகள் மிகச் சிறப்புற நிகழவேண்டும்!.. என மின்னியல் நுண்ணிடை நன்மங்கையர் தொழுது வணங்கும்  திருவேதிகுடி!.. 

திருப்பதிகத்தின் - எட்டாம் திருப்பாடல்.

உரக்கரநெ ருப்பெழநெ ருக்கிவரை பற்றிய ஒருத்தன்முடிதோள்
அரக்கனை அடர்த்தவன் இசைக்கினிது நல்கியருள் அங்கணன் இடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை
விரைக்குழல் மிகக்கமழ விண்ணிசை உலாவு திருவேதிகுடியே.


இப்படி வேண்டி நின்று, அன்பின் வழி மணமங்கலம் எய்தியபின் - காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்ட இன்பத்தில் -

முருக்கம்பூ போல சிவந்த இதழ்களையுடைய இளங்கன்னியரும் ஆடவரும்  - ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு பூசி மகிழும் நறுமணம் விண்ணுலகம் எங்கும்  கமழ்கின்றது.

- என்று புகழ்கின்றார்.  


இவ்வாறே - அப்பர் சுவாமிகள் - தாம்  அருளிய திருப்பதிகத்தின் ஆறாவது திருப்பாடலில் -

எண்ணும் எழுத்துங் குறியும் அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான் திருவேதிகுடி
நண்ண அரிய அமுதினை நாமடைந் தாடுதுமே. 
 


அன்பினால் அடைந்து அடிதொழும் அடியவர் தம்மை -  பற்றித் தொடரும் தீவினகளைத் தீர்த்தருளும் பிரான் என்று போற்றுகின்றார். 

திருப்பதிகத்தின் - ஏழாவது திருப்பாடலில்

ஊர்ந்த விடையுகந் தேறிய செல்வனை நாமறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையோர் பாகம் மகிழ்ந்துடையான்
சேர்ந்த புனற்சடைச் செல்வப் பிரான்திரு வேதிகுடிச்
சார்ந்த வயலணி தண்அமுதை அடைந் தாடுதுமே.

விருப்பமுடன் விடை வாகனத்தில் பவனி வரும் செல்வனாகிய பெருமானை நாம் முழுமையாக அறியோம் .  இன்மொழி கூறும் அம்பிகையுடன் மகிழ்ந்து என்றும் பிரியாதவன்.   அவளைத் தன்மேனியில் ஒரு பாகமாக  உடையவன்.  

சடையிற் கங்கையைச் சூடி விளங்கும் செல்வப்பிரான். வயல்கள் சூழ்ந்த திருவேதிகுடியில் குளிர்ந்த அமுதம் போல வீற்றிருக்கின்றனன். பெருமானை  அடைந்து  அவன் அன்பினில் திளைத்து ஆடுவோம்!.. 

- என்று நமக்கு நல்வழி காட்டுகின்றார்.

ஒரு ஜாதகத்தில் - இரண்டாம் வீடு - குடும்ப ஸ்தானம். தனம், கல்வி, வாக்கு இவற்றைக் குறிப்பிடும் ஸ்தானம் ஆகிறது.

ஏழாம் வீடு - களத்திர ஸ்தானம்.  மனைவி அல்லது கணவன் அமையும் ஸ்தானம். இல்லறத்தைக் குறிப்பிடும் ஸ்தானம்.

இந்த ஏழாம் வீட்டில் நல்ல கிரகம் தங்கி இருக்க ஜாதகரின் வாழக்கை மிகவும் இன்பமாக இருக்கும். அவர் மனதில் உதிக்கும் எண்ணங்கள் ஏழாம் வீட்டின் அதிபர் நிலையைப் பொருத்தே இருக்கும். ஜாதகத்தில் இரண்டாம் இடம், ஏழாம் இடம் நன்றாக இருந்துவிட்டால் கவலையே இல்லை.

இந்த ஏழாம் இடம் நன்றாக அமையும்படிக்கு, மேலைத் தொல்வினைகள் தொலையவும்,  நல்வினைகள் சேரவும்   - 

ஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசு சுவாமிகளும், ஒரு சேர - தமது திருப்பதிகங்களில் நல்வாக்கு அருள்கின்றனர்.

அப்படி அருளிய நல்வாக்கு, திருப்பதிகங்களின் ஏழாவது திருப்பாடலாக அமைந்ததே -  பெருஞ்சிறப்பு  என்று ஆன்றோர் அறிவிக்கின்றனர்.

அதிலும், ஞானசம்பந்தப் பெருமான் தமது திருப்பதிகத்தின் பலன் கூறி அருளும் போது - ஆணையிட்டு அருளிய திருப்பதிகங்கள் ஐந்து.

அந்த,  ஐந்தினுள்  ஒன்று - திருவேதிகுடிக்கு உரியது!..

கந்தமலி தண்பொழில்நன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி ஆதிகழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்களென்ன நிகழ்வெய்து இமையோர்
அந்தவுல எய்திஅரசாளும் அதுவே சரதம் ஆணைநமதே!..


- என்று ஞானசம்பந்தர் திருப்பதிகத்தினை நிறைவு செய்கின்றார்.

மகளுக்கு நல்லபடியாக வரன் அமைய வேண்டுமே.. என்ற  - கலக்கம். சென்ற வருடம் முழுதும். ஏனெனில், அங்கு இங்கு என்று - வரும் ஜாதகங்கள் எல்லாமே - சொல்லி வைத்தாற் போல - ஒன்று போலவே வந்தன.

இயன்றவரை - வெள்ளிக் கிழமைகளில் செல்லும் தலம் - தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில்!..   

அப்படி - ஒரு வெள்ளியன்று மாரியம்மன் கோயிலுக்குச் சென்றபோது, 

மங்கலம் கொண்டு விளங்கிய மாதரசி ஒருவர், அவர்களாகவே அருகிலுள்ள கத்தரிநத்தம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும்படி கூறினார். 

முன் எப்போதும் அறிந்திராதவர் - அந்த மாதரசி. ஆயினும் அவர்களுடைய முகத்தில் விளங்கிய தேஜஸ் - அந்த சுமங்கலி யாரென்று உணர்த்திற்று. 

அதன்பின், கத்தரி நத்தம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலில்  - ஒரு பிரதோஷ நாளில் வழிபட -  கிடைத்த  விடை - திருவேதிக்குடி.

அதன்படி - திருவேதிகுடியில் ஸ்ரீ மங்கையர்க்கரசியையும் ஸ்ரீ வேதபுரீஸ்வர ஸ்வாமியையும் வழிபட்டு நிற்க - அடுத்த முப்பது நாட்களுக்குள் திருமணம் கூடி வந்தது. 

திருமாங்கல்யதாரணம்
ஒருவருக்கு ஒருவர் தகவல்களைப் பகிர்ந்து கொண்டது இணையத்தின் வழியே!..

இடையில், ஒருநாள் திருப்பாம்புரம் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் திருக்கோயிலில் தரிசனம் செய்து கொண்டிருந்த போது - தொலைபேசியில்  செய்தி வந்தது - பெண் பார்க்க வருகின்றோம் - என்று!.. 

அதன்பின்,  பெண் பார்க்கும் படலம் - தஞ்சை பெரியகோயிலில் ஸ்ரீ வராஹி அம்மன் சந்நிதியில்!.. 

நிச்சயதார்த்தத்திற்கு முன் - பூவைத்தல் எனும் சம்பிரதாயம் ஒன்று எங்களில் உண்டு.   அந்த நாளில்  - அம்பாளின் உத்தரவுப்படி, மாலை மாற்றிக் கொண்டது - தஞ்சை ஸ்ரீ கோடியம்மன் சந்நிதியில்!.. 

உவரி - ஸ்ரீமாடஸ்வாமி சந்நிதியில்
குதுகலத்துடன் - குலுமனாலியில்
அனைத்தும் மங்கலகரமாக கைகூடி மாங்கல்யதாரணம் ஆகி - இப்போது மகளும் மருமகனும் அபுதாபியில்!..

தஞ்சாவூர் - திருவையாறு  வழித்தடத்தில்  உள்ளது  கண்டியூர்.

கண்டியூரில் ஸ்ரீபிரம்மசிரக்கண்டேஸ்வரர் திருக்கோயிலை ஒட்டினாற்போல வீரசிங்கன்பேட்டை செல்லும் சாலையில் மூன்று கி. மீ. தொலைவில் உள்ளது - திருவேதிகுடி..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாற்றுக்கு அடிக்கடி பேருந்துகள் இயங்குகின்றன. ஆனால் உள்புறம் திருவேதிகுடிக்கு இயங்கும் பேருந்துகள் குறைவு.

ஆயினும், திருவையாற்றில் இருந்து கண்டியூர் வழியாக திருவேதிக்குடிக்கு சிறு பேருந்துகள் இயங்குகின்றன. திருக்கோயிலின் அருகிலேயே பேருந்து நிறுத்தம்.

திருவேதிக்குடி சிறிய கிராமம். திருக்கோயிலுக்கு அருகில் அர்ச்சனைப் பொருட்களுக்கு என கடைகள் ஏதும் இல்லை. எனவே - திருவையாற்றில் அனைத்தும் கிடைக்கும். தேவையானவற்றை வாங்கிக் கொள்ளவும்.

திருமணம் அருளும் திருவேதிகுடி திருப்பதிகங்கள் - அடுத்து வரும் பதிவுகளில்!.. 

சீரும் சிறப்பும் மிக்க திருவேதிகுடி திருக்கோயிலுக்கு 
நாளை (மார்ச் 19) காலை 9.00 - 10.30 மணிக்குள் 
திருக்குடமுழுக்கு நடைபெறுகின்றது.

அனைவரும் வருக!.. இறையருள் பெறுக!..

நான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும்!. 
ஸ்ரீமங்கையர்க்கரசி உடனாகிய ஸ்ரீ வேதபுரீஸ்வர ஸ்வாமி 
நல்லருள் புரிவாராக!..

சிவாய திருச்சிற்றம்பலம்.

16 கருத்துகள்:

  1. திருவேதிகுடி திருத்தலத்திற்கு சென்றதில்லை.... சிறப்பான விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  2. திருவேதிகுடி திருத்தலத்தின் ஸ்ரீமங்கையர்க்கரசி உடனாகிய ஸ்ரீ வேதபுரீஸ்வர ஸ்வாமி
    தங்கள் மகளுக்கு நல்வாழ்க்கை அமைத்து கொடுத்தமைக்கு மகிழ்ச்சி.
    உங்கள் மகள், மருமகன் மகிழ்ச்சியாக இப்போது அபுதாபியில் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
    சுமங்கலி யாரென்று உணர்த்தியது கேட்டு மெய்சிலிர்த்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      வெகு நாட்களுக்குப் பின் - தங்களின் வருகை..
      தங்களின் அன்பான கருத்துரை கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  3. நடந்த திருமணத்துக்கு வாழ்த்துக்கள் இப்போதெல்லாம் இணையத்தின் மூலம் திருமணம் நிச்சயமாகி நடந்தாலும் கோவிலுக்குச் சென்றதால் நடை பெற்றது என்று நினைப்பதும் ஒரு நம்பிக்கையே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களுடைய நல்வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  4. திருவேதிக்குடி தகவல்கள் அனைத்தும் சிறப்பு! இறைவன் அருளால் தங்கள் மகளுக்கு நல்ல வரன் அமையப்பெற்றது குறித்து மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சுரேஷ்..
      தங்களுடைய வருகை கண்டு மகிழ்ச்சி..
      தங்களுடைய நல்வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி..

      நீக்கு
  5. திருவேதிக் குடி மகிமைக்கு உங்கள் வீட்டுத் திருமணமே சாட்சி . உங்கள் மகள் சீரோடும், சிறப்போடும், எல்லா வளமும், நலமும் பேர் ஆண்டவனை வேண்டுகிறேன்.
    என் ஆசிகளையும் வழங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..
      தங்களின் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  6. தங்கள் அன்பு மகளின் திருமணத்தை நேரில் கண்ட மகிழ்ச்சி இன்று ஏற்பட்டது.
    மணமக்களுக்கு கரந்தை நண்பர்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      என் பிள்ளைகள் இருவருமே - தங்கள் அன்பினில் தான்!..
      தங்களின் நல்வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றியும் மகிழ்ச்சியும்!..

      நீக்கு
  7. சிறப்பான தலம் பற்றி உங்கள் பதிவு மூலம் அறிந்தேன்.

    படங்களும் அருமை.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  8. மகிமை நிறைந்த திருவேதிக் குடி மகளின் திருமணத்திற்கும் காரணமா? அற்புதம் மகளின் திருமண வாழ்வு சிறபாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!
    சிறப்பான பதிவு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி
      தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி..
      அன்பின் நல்வாழ்த்துகளைக் கண்டு மிக்க நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..