நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 29, 2013

தஞ்சை 23 கருட சேவை


தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களுள் தஞ்சை மாமணிக் கோவில்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, 108 திவ்ய தேசங்களுள் மூன்றாவதாக விளங்குபவை.  

தஞ்சை யாளி - வீரநரசிங்கப் பெருமாள், நீலமேகப் பெருமாள், மணிகுன்றப் பெருமாள் எனும் திருப்பெயர்களில் எம்பெருமான் குடிகொண்டிருக்கும் இத்திருக்கோயில்களில் வைகாசி திருவோண கருடசேவைப் பெருவிழா நாளை  (30/5) முதல் நடைபெற உள்ளது.
ஸ்ரீ வீரநரசிங்கப்பெருமாள், தஞ்சை

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள
நெருக்கி அவருயிர் செகுத்த எம்அண்ணல்,
வம்புலாம் சோலை மாமதிள் 
தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி,
நம்பிகாள்! உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம். 953.
                                              -   திருமங்கை ஆழ்வார் - திருப்பாசுரம்.


என்செய்கேன் அடியேனுரையீர் இதற்கென்று 
மென்மனத்தேயிருக்கும் புகழ்,
தஞ்சை யாளியைப் பொன்பெயரோன்றன் 
நெஞ்சமன்றிடந்தவனைத் தழலேபுரை
மிஞ்செய் வாளரக்கன் நகர் பாழ்படச் சூழ்
க டல்சிறை வைத்து இமை யோர்தொழும்,
பொன்செய் மால்வரையை மணிக்குன்றினை 
அன்றியென்மனம் போற்றி என்னாதே. 1576
                                    -   திருமங்கை ஆழ்வார் - திருப்பாசுரம்.

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,
ஏவல்ல எந்தைக்கு இடம்.2251
                                           - பூதத்தாழ்வார் - திருப்பாசுரம்.

பாரம்பர்யமாக நடைபெற்று கொண்டிருந்த கருட சேவைப் பெருவிழா ஓயாத சண்டை சச்சரவு, அரசியல் குழப்பங்கள், அந்நியர் படையெடுப்பு போன்ற பல காரணங்களினால் தடைப்பட்டிருந்தது. பலகாலம் கழித்து தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் வாழ்ந்த கருடாழ்வார் தாசர் என்னும் மகானால் மீண்டும் பன்னிரு கருட வாகனத்துடன் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. எனவே இவர் துவாதாச கருடாழ்வார் தாசர் என அன்புடன் அழைக்கப்பட்டார். அந்த விழாவே தற்போது 23 கருட சேவையாக சிறப்புடன் நிகழ்வுறுகின்றது.

ஸ்ரீ மணிக்குன்றப்பெருமாள் திருக்கோயில், தஞ்சை.
இதன்படி தஞ்சையில், எழுபத்தொன்பதாவது வருடமாக - கருடசேவைப் பெருவிழா இம்மாதம் வைகாசி திருவோணத்தை அனுசரித்து 30ம் தேதி முதல் அடுத்த மாதம் 2ம் தேதி வரை வெகுவிமரிசையாக நடக்கிறது. விழா துவக்க நாளான 30ம் தேதி, காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேலசிங்க பெருமாள் கோவிலில் ஆழ்வார் மங்களாசாஸனம். தொடர்ந்து, ஆழ்வாருக்கு கருடசேவை 31ம் தேதியும், நவநீத சேவை மறுநாள் (ஜூன் மாதம்) ஒன்றாம் தேதியும், விடையாற்றி விழா 2ம் தேதியும் என, நான்கு நாள் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ நீலமேகப் பெருமாள் திருக்கோயில், தஞ்சை
வரும் 31ம் தேதியன்று, தஞ்சையில் உள்ள 23 திருக்கோயிலின் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, அவரவர் கோவில்களில் இருந்து காலை ஆறு மணியளவில் புறப்பட்டு -  எட்டு மணியளவில் தஞ்சை நகரில் கொடிமரத்து மூலையை வந்தடைவர். பின்னர்

திருமங்கைஆழ்வார் அன்னவாகனத்தில் எம்பெருமானைத் தொழுத வண்ணம் முதலில் வர - பின் தொடர்வோர்...


1)ஸ்ரீநீலமேக பெருமாள் - ஆண்டாளுடன் 
2)ஸ்ரீவீரநரசிம்ம பெருமாள்,
3)ஸ்ரீமணிகுன்றப்பெருமாள்,
4)ஸ்ரீவரதராஜ பெருமாள்,வேளூர்
5)ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள்,வெண்ணாற்றாங்கரை

6)ஸ்ரீகோதண்டராமர், பள்ளிஅக்ரஹாரம்
7)ஸ்ரீலட்சுமிநாராயணன் பெருமாள், சுங்காந்திடல்
8)ஸ்ரீயாதவ கண்ணன், கரந்தை
9)ஸ்ரீவெங்கடேச பெருமாள் ,கரந்தை
10)ஸ்ரீயோகநரசிம்ம பெருமாள், கொண்டிராஜபாளையம்

11)ஸ்ரீகோதண்டராமர், கொண்டிராஜபாளையம்
12)ஸ்ரீவரதராஜ பெருமாள், கீழராஜவீதி
13)ஸ்ரீகலியுக வேங்கடேச பெருமாள், தெற்குராஜவீதி
14)ஸ்ரீராமஸ்வாமி, அய்யங்கடைத்தெரு (பஜார்)
15)ஸ்ரீஜனார்த்தன பெருமாள், எல்லையம்மன் கோவில் தெரு

16)ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்,கோட்டை
17)ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள், கோட்டை
18)ஸ்ரீரங்கநாத பெருமாள், மேல அலங்கம்
19)ஸ்ரீவிஜயராமஸ்வாமி, மேலராஜவீதி
20)ஸ்ரீநவநீத கிருஷ்ணஸ்வாமி,மேலராஜவீதி
 
21)ஸ்ரீபூலோககிருஷ்ணன், சகாநாயக்கன்தெரு
22)ஸ்ரீநவநீதகிருஷ்ணன், மானம்புச்சாவடி
23)ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்,மானம்புச்சாவடி

கருட சேவை 2012
23 திருக்கோயில்களின் ஸ்வாமிகள் சர்வ அலங்காரமாக கருட வாகனத்தில் எழுந்தருளி - கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்து மீண்டும் கொடிமரத்து மூலையை வந்தடைவர். பின் மகாதீப ஆராதனைக்குப் பின் அங்கிருந்து தமது கோவில்களுக்கு சென்றடைவர். இதேபோல ஜுன் முதல் தேதி , நவநீதசேவை தரிசனம் நிகழ்வுறும். முன்போலவே கொடிமரத்து மூலையில் ஒன்றாகக் கூடி பக்தர்கள் தரிசனம் செய்ய ராஜவீதிகளில் திருஉலா நடைபெறும்

கருட சேவை 2012
ஜுன் இரண்டாம் தேதியன்று விடையாற்றி விழா. பிரம்மோற்ஸவம் முடிந்தபின், தேவர்களை அவரவர் இருப்பிடம் அனுப்பி வைக்கும் வைபவமாக,  காலை 10 மணிக்கு வெண்ணாற்றங்கரையில் நீராட்டு விழா. மதியம் 12 மணிக்கு  வீரநரசிங்கர் கோவிலில் திருமஞ்சனம், தீபாராதனை நடைபெறும்.

விழா ஏற்பாட்டை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் திரு.பாபாஜி ராஜாபான்ஸ்லே அவர்கள் தலைமையில் திவ்யதேச பொது மக்கள், ஸ்ரீ ராமானுஜ தர்சன சபையினர் மற்றும் ஹிந்து அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு நிகழ்ந்த வைபவ படங்களை இணைப்பில் கண்டு மகிழுங்கள்.

http://anudinam.org/2012/06/15/23-temple-garuda-sevai-in-thanjavur/

தமிழகத்தில் - குடந்தை(12) திருநாங்கூர் (11), காஞ்சி , ஆழ்வார் திருநகரி இன்னும் பல தலங்களிலும் மற்றும் திருப்பதியிலும் கருடசேவை நடந்து வருகின்றது. எனினும்  -

வெகு சிறப்புடன் 23 கருடசேவை வைபவம் நிகழ்வது தஞ்சையம்பதியில் மட்டுமே.

கருடசேவையைத் தரிசித்தால் நான்கு அஸ்வமேத யாகங்களைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நாமும் தரிசிப்போம்!... நலம் பெறுவோம்!...

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா எனும் நாமம்!...

4 கருத்துகள்:

  1. தெய்வீக பகிர்வு... தகவல்கள் மிகவும் அருமை... கொடுத்துள்ள இணைப்பிலும் படங்களைப் பார்க்கிறேன்... நன்றி ஐயா... வாழ்த்துக்கள் பல...

    ஓம் நமோ நாராயணா

    பதிலளிநீக்கு
  2. நன்றி.. திரு.தனபாலன் அவர்களே!... தங்களின் தொடர்ந்த வருகை மகிழ்ச்சிக்கு ஆளாக்குகின்றது!..

    பதிலளிநீக்கு
  3. நேரில் பார்த்து வணங்கியது போல் ஓர் உணர்வு நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  4. கருடசேவைத் திருவிழாவினை நேரில் பார்த்து வணங்கும் வாய்ப்பினை உடைய தாங்கள் மனம் உவந்து கூறும் வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியினை அளிக்கின்றது. தங்கள் வருகைக்கு நன்றியும் வணக்கமும்!...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..