நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 30
சனிக்கிழமை
செய்தித் தொகுப்பு
நன்றி : விக்கி
ஜூலை 15 - 1903
இன்று
கல்விக் கண் திறந்த
பெருந்தலைவர்
பிறந்த நாள்
1954 ஏப்ரல் 13 அன்று ஆட்சிப் பொறுப்பேற்ற காமராஜர் 1963 அக்டோபர் 2 வரை தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி செய்தார்..
ஒன்பது அமைச்சர்களோடு எளிமையான நேர்மையான தூய்மையான ஆட்சியை நடத்தினார்..
அவரது ஆட்சியில் மிகச் சிறப்பானது -
அனைத்துக் கிராமங்களிலும் கல்விக்கூடங்கள்
திறக்கப்பட்டதே..
அனைவருக்கும் இலவசக் கல்வித் திட்டம், மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றுக்கு ஈடு இணை இல்லை..
1957 - ல் பதினைந்தாயிரத்து எண்ணூறாக (15,800) இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962 - ல் இருபத்தொன்பதாயிரமாக (29,000) ஆக உயர்ந்ததே சான்று..
பின்தங்கிய சமுதாய மாணவர்களின் கல்வி, வேலை வாய்ப்புகளில் பெற்று வந்த இட ஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத் தந்தவர் காமராஜர்..
அவரது ஆட்சிக் காலத்தில் தஞ்சை மருத்துக் கல்லூரிக்கு
அடிக்கல் நாட்டப்பட்ட போது அதில் முதலமைச்சர் பெயர் இல்லாமல் இருப்பதைக் கவனியுங்கள்..
பெருந்தலைவர் ஆட்சியில் முதலாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாசனத் திட்டங்கள் :
கீழ் பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டுர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை பாசனத் திட்டம், சாத்தனூர் பாசனத் திட்டம், கிருஷ்ணகிரி பாசனத் திட்டம் காவிரி பாசன மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை.
இவை தவிர, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம், வீடூர் நீர்த் தேக்கத் திட்டம், கொடையாறு வாய்க்கால் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன..
அவரது ஆட்சி காலத்தில்
தமிழகத்தில் தொழில் புரட்சி நடந்தது.
சென்னை - பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை. திருச்சி - திருவெறும்பூரில் உயர் அழுத்த கொதிகலன் தொழிற்சாலை (BHEL).
அசோக் லேலண்ட், டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலை, சிம்சன், இந்தியா பிஸ்டன்ஸ், டி.வி.எஸ், லூகாஸ் தொழிற்சாலைகள் எல்லாம் அந்தக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டவை தான்
காமராஜர் ஆட்சியில்தான் பெரியாறு நீர்மின் உற்பத்தித் திட்டம், குந்தா நீர்மின் உற்பத்தித் திட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் ஆகியன தொடங்கப்பட்டன..
சென்னையில் கிண்டி, அம்பத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர், விருத்தாசலம், கும்பகோணம், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜபாளையம், நாகர்கோவில்
மற்றும் மார்த்தாண்டம் ஆகிய ஊர்களில் தொழிற்பேட்டைகளும் தொடங்கப்பட்டன
1957 - 58 -ல் சென்னை மாகாணத்தின் பட்ஜெட்டை
தமிழிலேயே சமர்ப்பித்தார் காமராஜர்..
தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டதும் காமராஜர் ஆட்சியில் (1956) தான்..
குறைவான விலையில் உயர் கல்விக்கான பாட நூல்களைத் தமிழில் வெளியிடுவதற்காக ஆய்வுக் குழு செயல்பட்டது. இத்துடன் ‘ தமிழ்ப் பாடநூல் வெளியீட்டுக் கழகம் ’ தோற்றுவிக்கப்பட்டது..
இரண்டு முறை பிரதமர் பதவி தேடிவந்தும் அதனை மறுத்து லால் பகதூர் சாஸ்திரி அவர்களையும் இந்திராகாந்தி அவர்களையும் பிரதமராக ஆக்கியவர் காமராஜர் அவர்களே..
எளிமையான நேர்மையான தூய்மையான ஆட்சியைத் தந்த காமராஜர் - அவரது காலத்திலேயே - மிக மிக மோசமான வார்த்தைகளால் பொது வெளியில் தூற்றப்பட்டார்.. இகழப்பட்டார்..
ஏழைப் பங்காளனாகத் திகழ்ந்த அவரை வீழ்த்தியதால் விளைந்த பாவம் - தமிழக மக்களை சும்மா விட்டு விடுமா?..
**
பெருந்தலைவர் புகழ் வாழ்க.. வாழ்க..
***




















