நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

பெருந்தலைவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெருந்தலைவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூலை 15, 2023

படிக்காத மேதை

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 30
சனிக்கிழமை

செய்தித் தொகுப்பு
 நன்றி : விக்கி

ஜூலை 15 - 1903

இன்று
கல்விக் கண் திறந்த
பெருந்தலைவர்
பிறந்த நாள்


1954 ஏப்ரல் 13 அன்று ஆட்சிப் பொறுப்பேற்ற காமராஜர் 1963 அக்டோபர் 2 வரை தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி செய்தார்..


ஒன்பது அமைச்சர்களோடு எளிமையான நேர்மையான தூய்மையான ஆட்சியை நடத்தினார்..

அவரது ஆட்சியில் மிகச் சிறப்பானது -
அனைத்துக் கிராமங்களிலும் கல்விக்கூடங்கள் 
திறக்கப்பட்டதே.. 


அனைவருக்கும் இலவசக் கல்வித் திட்டம், மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றுக்கு ஈடு இணை இல்லை..


1957 - ல் பதினைந்தாயிரத்து எண்ணூறாக (15,800) இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962 - ல் இருபத்தொன்பதாயிரமாக (29,000) ஆக உயர்ந்ததே சான்று..

பின்தங்கிய சமுதாய மாணவர்களின் கல்வி, வேலை வாய்ப்புகளில் பெற்று வந்த இட ஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத் தந்தவர் காமராஜர்..


அவரது ஆட்சிக் காலத்தில் தஞ்சை மருத்துக் கல்லூரிக்கு  
அடிக்கல் நாட்டப்பட்ட போது அதில் முதலமைச்சர் பெயர் இல்லாமல் இருப்பதைக் கவனியுங்கள்..


பெருந்தலைவர்  ஆட்சியில் முதலாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாசனத் திட்டங்கள் :
கீழ் பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டுர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை பாசனத் திட்டம், சாத்தனூர் பாசனத் திட்டம், கிருஷ்ணகிரி பாசனத் திட்டம்  காவிரி பாசன மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை.



இவை தவிர, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம், வீடூர் நீர்த் தேக்கத் திட்டம், கொடையாறு வாய்க்கால் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன..


அவரது ஆட்சி காலத்தில்
தமிழகத்தில் தொழில் புரட்சி நடந்தது. 
சென்னை - பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை. திருச்சி - திருவெறும்பூரில் உயர் அழுத்த கொதிகலன் தொழிற்சாலை (BHEL).

அசோக் லேலண்ட், டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலை, சிம்சன், இந்தியா பிஸ்டன்ஸ், டி.வி.எஸ், லூகாஸ் தொழிற்சாலைகள் எல்லாம் அந்தக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டவை தான்

காமராஜர் ஆட்சியில்தான் பெரியாறு நீர்மின் உற்பத்தித் திட்டம், குந்தா நீர்மின் உற்பத்தித் திட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் ஆகியன தொடங்கப்பட்டன..


சென்னையில் கிண்டி, அம்பத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர்,  விருத்தாசலம், கும்பகோணம், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜபாளையம், நாகர்கோவில்
மற்றும் மார்த்தாண்டம் ஆகிய ஊர்களில் தொழிற்பேட்டைகளும் தொடங்கப்பட்டன

1957 - 58 -ல் சென்னை மாகாணத்தின் பட்ஜெட்டை
தமிழிலேயே சமர்ப்பித்தார் காமராஜர்.. 

தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டதும் காமராஜர் ஆட்சியில் (1956) தான்..

குறைவான விலையில் உயர் கல்விக்கான பாட நூல்களைத் தமிழில் வெளியிடுவதற்காக ஆய்வுக் குழு செயல்பட்டது. இத்துடன் ‘ தமிழ்ப் பாடநூல் வெளியீட்டுக் கழகம் ’ தோற்றுவிக்கப்பட்டது..


இரண்டு முறை பிரதமர் பதவி தேடிவந்தும் அதனை மறுத்து லால் பகதூர் சாஸ்திரி அவர்களையும் இந்திராகாந்தி அவர்களையும் பிரதமராக ஆக்கியவர் காமராஜர் அவர்களே..


எளிமையான நேர்மையான தூய்மையான ஆட்சியைத் தந்த காமராஜர் - அவரது காலத்திலேயே - மிக மிக மோசமான வார்த்தைகளால் பொது வெளியில் தூற்றப்பட்டார்.. இகழப்பட்டார்..


ஏழைப் பங்காளனாகத் திகழ்ந்த அவரை வீழ்த்தியதால் விளைந்த பாவம் - தமிழக மக்களை சும்மா விட்டு விடுமா?..
**

பெருந்தலைவர் புகழ் வாழ்க.. வாழ்க..
***

புதன், ஜூலை 15, 2020

ஏழைப் பங்காளன்

அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது..

நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா!.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே!..


சந்தோஷமும் துக்கமும் ஏழை நெஞ்சுக்குள் அலை அலையாய் புரண்டன..

கல்யாணங்காட்சி..ன்னு ஒன்னும் இல்லாம - நாடு நாடு..ன்னு காடு மேடு எல்லாம் சுத்தித் திரிஞ்ச புள்ளை.. ஆசையா முகத்தைப் பாத்து சோறு போட்டு கொள்ளை நாளாச்சு..

என்னைய விட்டா யாரு பொறுப்பா பாத்துக்குவாங்க.. இனிமேயாவது ஒரு எடத்துல ஒக்காந்து புள்ளைய பாத்துக்கணும்.. நாமளும் காமாட்சி கூட பட்டணத்துக்கே போயிறலாம்!..

அன்னையின் மனம் ஆசைப்பட்டது. ஆனாலும் - கூடவே தயக்கம்!..

காமாட்சிக்கு இது தெரிஞ்சா - என்ன பதிலு வருதோ தெரியலையே.. நாகு!..

அன்பு மகளுடன் - தன் தயக்கத்தைப் பகிர்ந்து கொண்டது தாய் மனம்..

அண்ணாச்சி.. ஒண்ணுஞ்சொல்ல மாட்டாக!..

தாய்க்கு ஆதரவாகப் பேசியது - அந்த ஏழைக் குடும்பத்தின் இளங்கிளி..

விளைந்த வெள்ளரி வீதிக்கு வரத்தானே வேண்டும்!..

ஒருவழியாக வெளியில் வந்தது விஷயம்..

ஒம் மனசுல இப்படியும் ஆசை இருக்கா.. அதெல்லாம் சரிப்படாது..ன்னேன்.. நீ எங்கூட வருவே.. உங்கூட இன்னும் நாலுபேரு வருவாங்க!.. கூடவே ஊரு பொல்லாப்பும் சேந்து வரும்!..

இதெல்லாம் பாக்குறதுக்கா நா மந்திரியானது.. ன்னேன்?.. பட்டணம் எல்லாம் உந்தோதுக்கு ஒத்து வராது.. நீ இங்கேயே இரு.. ன்னேன்!..

நறுக்கு தெறித்தாற்போல பேச்சு..

தாயின் ஆசை அத்துடன் அடங்கிப் போனது..

சீராட்டி பாராட்டி வளர்த்த அன்பு மகனை - நாட்டுக்காக அர்ப்பணித்தார்..

நாட்டுக்காக - உழைப்பைத் தருவர்..
நாட்டு மக்களுக்காக  பொருளைத் தருவர்.. பொன்னையும் தருவர்..

ஆனால் -

தன் உயிருக்கும் உயிரான செல்வ மகனை - கொடையாகக் கொடுத்த தாய் -

சிவகாமி அம்மையார்!..

(கலங்கும் கண்களோடு இந்தப் பதிவு!..)


தமிழகம் இதுவரையிலும் கண்டிராத -
இனியும் காண இயலாத - தங்கமகனின் பிறந்த நாள் இன்று!..

இலவசக் கல்வி, ஏழைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு, இலவசப் புத்தகங்கள், பிள்ளைகளுக்கு  சீருடை என்றெல்லாம் வழங்கியவர் பெருந்தலைவர்..

கல்லாய் கிடந்த மக்கள் கல்வி கற்று எழுந்திடக் கை கொடுத்தவர் - காமராஜர்.
* * *

கிட்டங்கியில கேப்பை தான் போடுறாங்க.. நல்ல அரிசி வாங்கிக் கொடு ராசா!..
தாய் ஆசையுடன் கேட்டார்..

அதற்கு நாட்டின் முதல்வராக இருந்த மகன் சொன்ன பதில் -

ஊருக்கு ஒன்னு..  உனக்கு ஒன்னா?.. இதையே நீயும் ஆக்கித் தின்னு!..

தாய், விதவை தங்கை நாகம்மாள் மற்றும் அவருடைய பிள்ளைகள் என்று எல்லாரும் இருந்த குடும்பத்துக்கு மாதந்தோறும் அனுப்பி வைத்த தொகை -  

ரூபாய் நூற்றிருபது மட்டுமே!.. 


அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள், காலக் கோளாறினால்  ஏற்பட்ட கடும் வறட்சியை - சரியாகக் கையாளத் தெரியாமல் சறுக்கி விழுந்தனர். 

பனை ஏறி விழுந்தவனைக் கிடா ஏறி மிதித்ததைப் போல - 
அப்போது மொழிப் பிரச்னையும் சேர்ந்து கொண்டது.

அடுத்து வந்த தேர்தலில் - 

எதிரணியினர் பேசியது புதியதாக புரட்சியாக இருந்தது. இனிமையாக இதமாக இருந்தது. அதனால் அன்றைய மக்கள் அவர்களின்  பின் ஓடினர்.  

மக்களோடு மக்களாக இருந்ததால் -  காமராஜருக்கு  வீர வசனம் பேசுவதற்குத் தெரியவில்லை.  

எதிர் அணியினர் விஷம் கக்கினர். அவர்கள் பேசியவற்றில் ஒரு சில!..

ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்!.. ஒரு படி நிச்சயம்!..
தட்டினால் தங்கம் வரும்!.. வெட்டினால் வெள்ளி வரும்!..

குடல் கருகுது!.. கும்பி கொதிக்குது!..
குளுகுளு கார் ஒரு கேடா!..

இந்த மாதிரி பல வசனங்களால் சொந்த மண்ணிலேயே காமராஜர் தோற்றுப் போனார். 

அண்டங்காக்கை, பனையேறி  - என்றெல்லாம்  பழிக்கப்பட்டார்.

இன்னும் ஒருபடி மேலே போய் - காமராஜர் சுவிஸ் பேங்கில் பணம் போட்டு வைத்திருக்கிறார் - என்று புழுதி வாரி வீசப்பட்டது. 

காட்சி மாறியது. அதன் பின்  நாட்டில் - நடந்தது அனைத்தும் அனைவருக்குமே தெரிந்த விஷயம்!.. 

நாவில் ஈரமின்றிப் பேசியவர்கள் எல்லாம் - 
லஞ்ச லாவண்யங்களில் மூழ்கித் திளைத்தனர்..
தாமும் தம் மக்களும் என - தின்று கொழுத்தனர்.



பொதுக்கூட்டங்களில் - தன்னைப் பாராட்டி யாராவது பேசினால், கொஞ்சம் நிறுத்து.. ன்னேன்!.. - என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். 

வேறு எவரையும் தாக்கிப் பேசினால், 

அதுக்கா இந்தக் கூட்டம்..ன்னேன்!.. - என்று தடுத்துரைப்பார்..


தனக்கு ஆங்காங்கே தரப்பட்ட சில்லறைகளை கூட தன்னுடன் வைத்துக் கொள்ளாமல் கட்சிக்குத் தாரை வார்த்தவர்.

யாரும் அன்பளிப்புகளைக் கொடுக்க முனைந்தால் - 
இதெல்லாம் கஷ்டப்படுற தியாகிகளுக்குக் கொடுங்க..ன்னேன்!.. -  என்பார்

இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்தவர்..

மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என வரையறுத்து - அதன்படி முதல் ஆளாகப் பதவி விலகியவர். 

சட்டசபைத் தேர்தலில் விருதுநகர் மக்கள் அவரைத் தோற்கடித்தனர். 

உடனிருந்த கட்சிக்காரர்கள் அழுதார்கள். 
பொதுவான நல்ல மனிதர்களும் அதிர்ந்தார்கள்..

இதான் ஜனநாயகம்..ன்னேன்.. ஜெயிச்சவனைக் குறை சொல்லாம தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டா மறுபடி ஜெயிக்க முடியும்..ன்னேன்!.. 

- என்று சற்றும் தளர்ச்சியில்லாமல் சொன்னவர் பெருந்தலைவர்.



கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷம் அது ஒன்றுதான்!..

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர். 


பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர்..

அவருடைய அதிகபட்ச ஆடம்பர உணவு - சோற்றுடன் முட்டை.

இறந்தபோது அவருடைய கையிருப்பு என மிச்சம் இருந்தவை -  

ஒரு சில வேஷ்டி சட்டைகள்..
ஓய்வு நேரத்தில் படித்த புத்தகங்கள்..
எளிய சமையலுக்கான பண்ட பாத்திரங்கள்..
நூறு ரூபாயும் கொஞ்சம் சில்லறையும்!.. 

சிவகாமி அம்மையாரின் மரணத்தின் போது
பள்ளியில் பயிலாதவர் தான் பெருந்தலைவர்.. ஆனாலும் படிக்காத மேதை!..

அவர் படித்த நூல்களை அவரது நினைவாலயத்தில் காணலாம்..

அரசாங்க பணத்தை அரசின் சாதனைகள் பற்றிய விளம்பரங்களுக்கு செலவு செய்ய மாட்டேன் என்று மறுத்த அதிசய மனிதர்..

அறம் சார்ந்த ஆட்சியை அரசியலை நடத்திய மாமனிதர் - பெருந்தலைவர்.. 

அனைவரையும் படிக்க வைத்தார்..
படித்தவர்களுக்கு வாழ்வு கொடுத்தார்..

அவரால் முன்னுக்கு வந்த லட்சோபலட்சம் பேர்களுள் எளியேனும் ஒருவன்..

(சூழ்நிலையின் பொருட்டு இது மீள்பதிவு..)

எங்கள் ஐயாவின் பிறந்த நாளாகிய இன்று
அவருடைய திருவடிகளை நினைத்து
வணங்கி எழுகின்றேன்..

இது கூட எங்கள் ஐயாவுக்குப் பிடிக்காது தான்!..
ஆனாலும், என் பிறவி கடைத்தேற வேண்டுமே!..

பெருந்தலைவரின் புகழ் 
என்றென்றும் வாழ்க!.. 
* * *