நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

தீபாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீபாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், அக்டோபர் 31, 2024

தீபாவளி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 14
வியாழக்கிழமை

தீபாவளிப் பண்டிகை

அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள


இதோ தீபாவளி!.. 

பல வழிகளிலும் நாம் துயரருற்று 
உடலளவிலோ மனதளவிலோ 
 கஷ்டப்பட்டிருக்கின்றோம்..

எல்லாவற்றையும்
இந்நாளில் புறந்தள்ளி வைப்போம்..




நமது சந்தோஷம் நம்மோடு - என்றில்லாமல் நலிந்தோர்க்கும் மெலிந்தோர்க்கும் சற்றேனும் ஆதரவு காட்டி பண்டிகையைக் கொண்டாடுவோமாக!..

எல்லா வழிகளிலும் கவனமாக இருந்து தீபாவளி நாளை சிறப்பிப்போம்... 




தீபாவளி என்ற மகத்தான பண்டிகையை தீப ஒளித் திருநாள்  என்று - சிலர் அவர்களாகவே மாற்றி வைத்துக் கொண்டு -

டிவாலி,   டீ வாளி,  தீ வாளி என்றெல்லாம் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றனர் - ஊடக விளம்பரங்களில்.. 

அதிலே ஒரு அற்ப
மகிழ்ச்சி..  


1980  களில்  தீபாவளி நாளன்று    விடியற் காலையிலேயே திருச்சிராப்பள்ளி வானொலி -  மங்கல இசை முழக்கத்துடன் ஆன்றோர்களது அருளுரைகளை ஒலிபரப்பு செய்யும்..

அப்படியொரு நிகழ்வில்  வாரியார் ஸ்வாமிகளின் அருளுரையில் இருந்து தான் -

சிவபெருமானுக்குரிய எட்டு விரத நாட்களில் தீபாவளியும் ஒன்று.
 
தீபாவளி.. தீப 
ஆவளி எனில்  - தீபங்களின் வரிசை என்ற பெயர்க் காரணத்தையும் தெரிந்து கொண்டேன்.. 

ஆனால், சமீப காலங்களில்  - மக்களின் அதீத ஆர்வத்தினால்
மாமிச உணவுகளில் புரள்வதும் மதுப் புட்டிகளுடன் உருள்வதும் தான் தீபாவளி என்று பதிவாகிக் கொண்டு இருக்கின்ற்து..

தீபாவளி என்கின்ற இந்த வார்த்தை தீபமாலை என்று 
தேவாரத்தில் வருகின்றது..

அந்நாளில்  தீபமாலை எனும் தீபாவளி  - பெரும் திருநாளாக இல்லாமல் சாதாரண நிகழ்வாகக் கூட இருந்திருக்கலாம்..

யார் கண்டது!?.. 

ஆயினும்,
தீபமாலை என்ற சொல் தீபாவளியைக் குறிப்பதாக சான்றோர் சொல்கின்றனர் ..

எண் திசைப் பாலகர்களாகிய இந்திரன் முதலானோர் மகிழ்ச்சியுடன் எங்கும் சூழ்ந்து    விளக்குகளை மகிழ்ச்சியுடன் ஏற்றி வைத்து தூபம் இட்டு வழிபடுகின்ற திருவடிகளை உடைய சிவ பெருமான்  உறைகின்ற கொச்சை வயம் எனப்படுகின்ற சீர்காழி..








எண்டிசை பாலரெங்கும் இகலிப் புகுந்து
  முயல்வுற்ற சிந்தை முடுகிப்
பண்டொளி தீபமாலை இடுதூப மோடு
  பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டல் மிண்டி வருநீர பொன்னி
  வயல்பாய வாளை குழுமிக்
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன
  வளர்கின்ற கொச்சை வயமே.  2/83/4
திருஞானசம்பந்தர் 
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்

அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

செவ்வாய், அக்டோபர் 29, 2024

கடைத் தெரு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 12 
 செவ்வாய்க்கிழமை

இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி..

சம்பந்தம் இல்லாமல்
எல்லா தரப்பினருக்கும் கொண்டாட்டம்
மகிழ்ச்சி.. ..


தஞ்சை - நகர பேருந்து நிலையத்திற்கும் புது ஆற்றுப் பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்று அந்தப் பகுதியில் தீபாவளிக்கு என
அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகள் அதற்றப்பட்டுள்ளன.



இதனால்   பேருந்து நிலைய சாலையில் கீழராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, தெற்கு அலங்கம் இங்கெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளை நாடிச் செல்கின்றனர் மக்கள்..


தரைக்கடை அமைப்பபர்கள் பெரும்பாலும் எளிய வியாபாரிகளே..

இவர்களுள் தமிழ் மக்களுடன் வட புலத்து மக்களும் கடை விரித்து இருப்பர்..
 
முதல் போட்டு பொருட்களை வாங்கியிருப்பவர்கள் நஷ்டப்படாமல் இருக்க வேண்டும்..



அடித்தட்டு மக்களின்  சந்தோஷம் இந்த மாதிரியான கடைகளில் தான்..
சாதாரண மக்களால்
கைக்கு எட்டிய விலையில்
 பெரிய கடைகளில் வாங்கவே முடியாது.என்பது எல்லாருக்கும் தெரியும்..

பல ஆண்டுகளாகவே தஞ்சை காந்திஜி  சாலையில 
தீபாவளிக்காக தற்காலிக கடைகள் அமைத்திருப்பார்கள்.  தீபாவளி வரையில் தான்..
 

இந்த வருடம் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி தரைக் கடைகள் அகற்றப்பட்டிருக்கின்றன. 

இத்தனை வருடங்களாக தீபாவளி நேரத்தில் இப்படித் தான் நெரிசல்..


மாநகரின் ஏனைய சாலைகள் மாற்றுச் சாலகளாகி விடுவது இயல்பு.
  
பேருந்துகள் இதர வாகனங்கள்
சுற்றிக் கொண்டு செல்வதால் மக்கள எவ்வித சிரமத்தையும் உணர்ந்ததில்லை. 


போக்குவரத்து நெரிசல் காரணமாகக் காட்டப்பட்டாலும் உண்மை எது என்று தெரியவில்லை. 


தீபாவளி சமயத்தில் நகரில் உள்ள பெரிய துணிக் கடைகளை விட  இந்தத் தரைக் கடைகளில் தான் மக்கள் கூட்டம் அலை மோதும்...



50,100 என்றெல்லாம் வசதிக்கேற்றபடி கிடைக்கின்ற புதுத் துணிகள் முதற்கொண்டு வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்திலும் 
மனம் மகிழ்ச்சி கொள்ளும் அடித் தட்டு மக்களும் இருக்கிறார்கள்..



தீபாவளி முதல் நாள் இரவு வரை  இந்தத் தரைக் கடைகளில் தான் அதிக பொருட்களை வாங்கி மகிழ்வர்..

தீபாவளி நேரத்தில் வாரம் முழுதும் பகல் இரவு - என, காவல் துறையினரின் எச்சரிக்கை அறிவிப்புகள் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருக்கின்ற நிலையில்  - பெருத்த அசம்பாவிதங்கள் ஏதும் நடந்ததில்லை..


காந்திஜி சாலையின்  நெரிசலில்  மகிழ்ச்சியுடன்
நடந்து சென்ற நாட்கள் நெஞ்சில்  அலை மோதுகின்றன..

வருகின்ற ஆண்டுகளில் தரைக் கடை வியாபாரத்திற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கட்டும்..

படங்களுக்கு நன்றி
நம்ம தஞ்சாவூர
ஃஃ

வாழ்க தஞ்சை
வளர்க தஞ்சை

முருகா முருகா
முருகா முருகா
***

ஞாயிறு, நவம்பர் 12, 2023

தீபாவளி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 26
ஞாயிற்றுக்கிழமை

இன்று
தீபாவளித் திருநாள்


அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்


சிறு சிறு தொல்லைகள்
நம்மிடையே இருந்து 
குடைச்சல்கள் கொடுத்தாலும்
உலகை உற்று நோக்கும்போது
நாம் மிகப்பெரிய வரப்ரசாதிகள்!..


நம்மைச் சூழ்ந்திருக்கும் 
தீமைகளில் இருந்து நம்மை நாம் 
மீட்டுக் கொள்ளும் நாளே
நல்லநாள்..


இதனை உணர்த்துவதே 
தீபாவளி எனும் நன்னாள்..


இந்நாளில் 
நம்மை நாம் மீட்டுக் கொள்கின்ற 
ஞானத்தை அருளும்படிக்கு 
எல்லாம் வல்ல இறைவனை 
வேண்டி நிற்போம்..




அனைவருக்கும் 
அன்பின் இனிய 
தீபாவளி 
நல்வாழ்த்துகள்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, அக்டோபர் 27, 2019

நலம் எங்கும் சூழ்க..

அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்!..


ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப் 
போரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சத்தி தரும் சித்தி தருந்தான்!..
-: பழம் பாடல் :-

மகிழ்ச்சி.. மட்டற்ற மகிழ்ச்சி..

அந்த ஒன்றினை நாடியே அனைவரது பயணமும்..

பண்டிகை நாட்களில் - இருப்போரும் இல்லாதோரும்
எய்த நினைப்பது மகிழ்ச்சி ஒன்றினையே...

அந்த மகிழ்ச்சி தான் நெஞ்சிற்கு நிம்மதி!..

நெஞ்சிற்கு நிம்மதியான மகிழ்ச்சியும் இன்பமும் எங்ஙனம் கைகூடும்?..

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.. (0039)

- என்று வள்ளுவப் பெருந்தகை வழிகாட்டுகின்றார்... 

இதற்குத்தான் -

அறஞ்செய விரும்பு - என்றார் ஔவையார்...

நெஞ்சுக்கு நிம்மதி தெய்வத்தின் சந்நிதி!..

- என்று கூறி, 
எளிய மக்களை திருக்கோயில்களுக்கு ஆற்றுப்படுத்தினர் ஆன்றோர்...

இன்றைய நாட்களில் எல்லாம் தலை கீழாயிற்று...
அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை...

வரும் நாட்களில் இறையருளால் எல்லாம் நலமாகி
மகிழ்ச்சியும் நிம்மதியும் அனைவருக்கும் ஆக வேண்டும்!..
என்று நல்லநாள் தனில் வேண்டிக் கொள்கின்றேன்..


அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
நங்குரு மரபிற் கெல்லாம் முதற்குரு நாதன் ஆகி
பங்கயந் துளவம் நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கை எம்பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி!..
-: காஞ்சி புராணம் :-

ஸ்ரீ மறைக்காட்டுறையும் மணாளன்
திருமறைக்காடு (வேதாரண்யம்)
தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளாமணிதான் கண்டாய்
காண்டற்கரிய கடவுள் கண்டாய் 
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே.. (6/23)  
-: அப்பர் பெருமான் :-


தனந்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!..
-: அபிராமி பட்டர் :-

சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலன் 
விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!.. 
-: அருணகிரியார் :-

ஸ்ரீ அமிர்த நாராயணப்பெருமாள் - திருக்கடவூர் 
திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.. (2282)
-: பேயாழ்வார் :-
திரு அரங்கத்துச் செல்வன் 
பச்சைமா மலைபோல்மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் 
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!.. (873) 
-: தொண்டடிப்பொடியாழ்வார் :- 


வந்தாய் என்மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழுஞ்சுடரே எங்கள் நம்பி
சிந்தாமணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனியான் உன்னை என்றும் விடேனே!.. (1046) 
-: திருமங்கையாழ்வார் :- 
***

மத்தாப்புகளும் வெடிகளும்
தீபாவளித் திருநாளின் ஒரு அங்கமாகி விட்டன..

ஊடகங்களில் பலரும் பலவிதமாக கருத்துகளை
உபதேசம் செய்து கொண்டிருக்கின்றனர்...

ஜல்லிக் கட்டுக்குத் தடை வாங்கியதைப் போல
தீபாவளி வெடிகளுக்கும் தடை விதிக்க வேண்டும்..
என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்...

கூடிய விரைவில் மாற்று இயக்கங்களால் - ஒட்டு மொத்த
தீபாவளிக் கொண்டாட்டத்திற்கும் தடை கேட்கப்படலாம்..
என்றே தோன்றுகின்றது...

அந்நிலையிலிருந்து நம்மை நாமே மீட்டுக் கொள்வோம்...


இயன்றவரைக்கும் 
சுற்றுச்சூழலைப் பாதுகாத்து - 
தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம்.. 

நாமும் மகிழ்வோம்..
பிற உயிர்களையும் மகிழ்விப்போம்!..
***

இனிய பாடலுடன்
தீபாவளிக் கொண்டாட்டம்..

திரைப்படம் -  மூன்று தெய்வங்கள்
பாடல் - கவியரசர்
இசை - மெல்லிசை மன்னர் 


தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்..
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்!..
-: கவியரசர் கண்ணதாசன் :-


அன்பும் அறநெறியும் நிலை நாட்டப்பட்ட நாள் இன்று..

அனைவருக்கும் 
அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்!..

வாழ்க நலம்..  
* * *

புதன், நவம்பர் 07, 2018

அருள்நிறை ஐப்பசி

அருள்நிறை ஐப்பசி...

மகத்தான புண்ணிய சரிதங்கள் நிறைந்த மாதம்..

தர்மம் எழுந்திடவும் அதர்மம் விழுந்திடவும்
தீப மங்கலம் எங்கும் பொலிந்து நின்றது!...

என்று - ஐப்பசி மாதத்தில் நிகழும் 
தீபாவளியைப் பற்றி சொல்லப்பட்டாலும்
உளம் நிறைந்ததாக விளங்கும் சிலவற்றைக் காண்போம்!...

ஜகத்ஜனனியாகிய அம்பிகை - தன்னை அலட்சியம் செய்த 
பிருங்கி முனிவனின் ஆணவம் அழிவதற்காக 
கெளதம மகரிஷியைக் குருவாகக் கொண்டு, 
அவர் உபதேசித்தபடி கடுந்தவம் மேற்கொண்டு - 
ஈசனின் இடப்பாகத்தைப் பெற்றது - இந்த மாதத்தில் தான்!..


ஒருசமயம் -

திருக்கயிலாய மாமலையில்
அம்மையும் அப்பனும்  திருக்காட்சி நல்கிய போது
ஸ்ரீநான்முகனும் ஸ்ரீஹரிபரந்தாமனும் 
முப்பத்து முக்கோடித் தேவர்களும்
சேர்ந்து வலம் செய்து சேவித்து மகிழ்கையில் -
பிருங்கி முனிவர் மட்டும் அம்பிகையை விடுத்து
சிவபெருமானை வலம் வந்து வணங்கினார்...


அம்பிகைக்கு என்னவோ போலிருந்தது...

மறுநாள் பெருமானுடன் நெருங்கி அமர்ந்திருக்க -
அப்போதும் பிருங்கி முனிவர் மனம் தளராமல் -
ஒரு வண்டாக மாறி ஈசனுக்கும் அம்பிகைக்கும்
இடையே புகுந்து வலஞ்செய்து ஈசனை மட்டும் வணங்கினார்.

பிருங்கியின் இச்செயலால் அம்பிகை மிகவும் வருந்தினாள்.


அது - அம்பிகையை வலம் செய்து வணங்காததற்கானது
என்று உலகிற்கு வெளிப்படையாகத் தோன்றினாலும்
பிரபஞ்சத்தில் சிவசக்தி ஐக்கியத்தை அறியாத
பிருங்கியின் மடமையைக் குறித்ததே!.

உண்மையை உணராத பிருங்கியின் மீது கோபமுற்றாள் அம்பிகை...

அந்த அளவில் -
பிருங்கியின் உடலில் இருந்த சக்தியினை அகற்றி விட்டாள்...
வலுவிழந்த பிருங்கி தள்ளாடித் தவித்து வீழ்ந்தார்...

அதை கண்டு இரக்கம் கொண்ட பெருமான்
பிருங்கிக்கு மூன்றாவது கால்  வழங்கினார்.

தன்னை அலட்சியம் செய்த பிருங்கிக்கு
ஐயன் உதவியதைப் பார்த்துப் பரிதவித்தாள் அம்பிகை...

மனம் வருந்தியவளாக - திருக்கயிலையை விட்டு நீங்கி
கடும் வறட்சியால் பன்னிரு ஆண்டுகள் பாழ்பட்டுக் கிடந்த -
வனத்தினுள் நுழைந்து அங்கே அமர்ந்து விட்டாள். -

அம்பிகையின் திருப்பாதம் பட்டதும் -
அந்த வனம் தழைத்துப் பூத்துக் குலுங்கியது!..

மலர்ந்த பூக்களின் வாசம் காற்றில் பரவியது...

விஷயம் அறிந்து விரைந்து வந்த கெளதம மகரிஷி
அம்பிகையை வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார்...

அவருடைய உபசரிப்பினால் மகிழ்ந்த அம்பிகை
தனது மனக்குமுறலை அவரிடம் சொன்னாள்.

அம்பிகையைத் தமது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்ற கௌதமர் -
அங்கே அம்பிகைக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்தபின்
புதியதாக ஒரு விரத முறையை உபதேசித்தார்...

புரட்டாசியின் அஷ்டமி திதியிலிருந்து
ஐப்பசி அமாவாசை வரையிலான இருபத்தோரு நாட்கள்
நோன்பு நோற்கும்படி கூறினார்...

கடுமையான விரதமாகிய அதை -
அம்பிகை மனமுவந்து ஏற்று சிவபூஜை செய்தாள்.

கடுமையான ஆசார அனுஷ்டானங்களுடன்
அம்பிகை நோற்ற விரதத்தின் பயனாக
சிவபெருமான் ரிஷபவாகனராக ஆங்கே எழுந்தருளினார்..

அம்பிகை கோரியபடி தனது திருமேனியில்
இடப்பாகத்தை மகிழ்வுடன் வழங்கினார்...



அதன்பின்
அனைத்தையும் உணர்ந்து தெளிந்த பிருங்கி முனிவர், 
மனம் வருந்தி அம்பிகையைத் தொழுது வணங்க  -
அம்பிகை அவரை மன்னித்தருளி மீண்டும் முன்போலவே
பலமும் நலமும் தந்தருளினாள் என்பர் ஆன்றோர்...

அம்பிகையும் தான் விரும்பியதை அடைய
கடும் விரதங்களை உவகையுடன் நோற்று மகிழ்கின்றாள்.
அவளும் குருமுகமாக உபதேசம் பெற்று
சிவபூஜை செய்கின்றனள் - என்பதை உணரும்போது
நாம் சர்வ சாதாரணம் என்பது புரியவரும்...

கௌரியாகிய அம்பிகை இந்த விரதத்தை நோற்றதால் 
கேதார கெளரி விரதம் எனப் பெயரானது...

இப்படி - ஈசனின் திருமேனியில் 
அம்பிகை செம்பாதியாக இடம் பெற்ற நாள் தான் - தீபாவளி...


துலா மாதம் எனப்படும் ஐப்பசியில் தான்
கங்கை ஆகாயத்திலிருந்து பூமிக்கு வந்தனள்...

தனது முன்னோர்களான சகர புத்திரர்கள்
மோட்சம் அடைய வேண்டித் தவமிருந்தான் மன்னன் பகீரதன்..

அவனது கடுந்தவத்துக்கு இரங்கி 
ஆகாய கங்கை ஆயிர மாமுகங்கள் கொண்டு
எனைத் தாங்குவார் யார் - இவ்வையகத்தில்!..
- என்று, ஆணவத்துடன் வெளிப்பட்டாள்.

அவளது வேகம் பூவுலகைச் சிதைத்து விடும் 
என்பதை உணர்ந்திருந்த நான்முகன் - 
சிவபெருமானை வேண்டி நின்றார்...

கருணை கொண்ட ஈசன்
கங்கையைத் தாங்கியருள சித்தம் கொண்டார். 

ஆணவத்துடன் பூமியை நோக்கிப் பாய்ந்த கங்கை
சிவபெருமானின் விரிசடைக் கற்றைகளுக்குள் சிறைப்பட்டாள்...

இந்நிகழ்வினை
திருநாவுக்கரசு ஸ்வாமிகள் குறித்தருள்கின்றார்...


மயலாகுந் தன்னடியார்க்கு அருளுந் தோன்றூம்
மாசிலாப் புன்சடைமேல் மதியந்தோன்றும்
இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்
இருங்கடல் நஞ்சுண்டிருண்ட கண்டந் தோன்றும்
கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை
ஆயிரமா முகத்தினொடு வானில் தோன்றும் 
புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம்புனித னார்க்கே!.. (6/18)
-: திருநாவுக்கரசர் :-

கங்கையைப் பொறுத்தருளுமாறு
ஈசனைப் பணிந்து நின்றான் - பகீரதன்...

பரமேஸ்வரன் தனது ஜடா மகுடத்திலிருந்து
மிகச்சிறிய அளவாக கங்கையை விடுத்த வேளை -

துலாமாத தேய்பிறைச் சதுர்த்தசியின் ப்ரம்ஹ முகூர்த்தம்!..

தூயவளான கங்கை பூமிக்கு வந்த வேளை - தீபாவளி!..

அதனால் தான் தீபாவளி அன்று - ப்ரம்ஹ முகூர்த்த நேரத்தில்
நீராடுதல் கங்கா ஸ்நானம் எனப்பட்டது!..

தேய்பிறைச் சதுர்த்தசி - தீபாவளியும் அமாவாசையும்
இந்த ஆண்டு சற்று இடைவெளியில் நடைமுறையாகி இருக்கின்றன.. 


கங்கையில் குளித்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.
அதிலும் குறிப்பாக தீபாவளி அன்று கங்கையில் நீராடுவது மகத்துவம் என்றால் அது எத்தனை பேருக்கு இயலும்?..

அதனால் தான் தீபாவளி கொண்டாடப்படும்
ஐப்பசியில் காவிரி முதற்கொண்டு சகல நீர் நிலைகளிலும்
கங்கை கலந்து நிற்கின்றாள் என்று குறித்தனர் ஆன்றோர்...

காவிரியில் நீராடுவதாகக் கொண்டாலும்
கங்கையில் நீராடுவதாகக் கொண்டாலும்
நம் பாவங்கள் தீர்ந்து விடுமா!?..

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்கு தண்குமரித் துறை ஆடிலென்
ஒங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென்
எங்கும் ஈசன் என்னாதவர்க்கு இல்லையே.. (5/99)

- என்று, திருநாவுக்கரசு சுவாமிகள் உய்யும் வழியினைக் காட்டுகின்றார். 

அவ்வழியினில் -
எங்கும் ஈசன் என்பதை உணர்ந்து 
சிற்றுயிர்களை வாழ வைப்பதுடன்,
ஏழை எளியோர்க்கு இயன்றவற்றைச் 
செய்வதைக் குறிக்கோளாகக் கொள்வோம்.


நலங்கள் பெருக வேண்டும்..
நன்மைகள் மலர வேண்டும்!..
அதர்மம் அகல வேண்டும்..
தர்மம் தழைக்க வேண்டும்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
* * *