நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 13
வெள்ளிக்கிழமை
வில்வம்
மங்களம் மிகுந்த வில்வ மரத்தின் இலை, காய், பழம், வேர் போன்றவை அருமருந்தாகப் பயன்படுகின்றன.
சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்படுவனவற்றில் வில்வ இலைகள் மிகவும் உயர்ந்தவை.. புனிதமானவை..
வில்வம் நிர்மால்யம்..
ஒருமுறை அர்ச்சித்த வில்வ இலைகளைக் கொண்டு மீண்டும் அர்ச்சிக்கலாம்.
உலர்ந்த வில்வ இலைகளில் நீர் தெளித்து விட்டு ஆறு மாதங்கள் வரை அவற்றைக் கொண்டு சிவபூஜை செய்யலாம்..
வில்வ மரத்தின் இலைகள் -
திரிநேத்திரம், திரிகுணம் திரிசூலம் எனும் மூன்றையும்
மனம் வாக்கு காயம் எனும் மூன்றையும் பக்தி கர்ம ஞானம் எனும் மூன்றையும்
குறிப்பதாக ஆன்றோர் சொல்வர்..
சைவத்தில் வில்வத்தையும், வைணவத்தில் துளசியையும் பார்த்தாலே புண்ணியம் என சொல்லப்படுகின்றது.
வில்வ மரத்தின் இலைகள் வேதங்களுக்கு இணையானவை..
ஒருமுறை வேதங்கள் சிவபெருமானை வழிபடுவதற்காக ஸ்ரீ பிரம்ம தேவனைக் கேட்டபோது வில்வ மரம் என்றாக வரம் கொடுத்தார்...
அவ்வண்ணமே வேதங்கள் வில்வ மரங்களாக -
வில்வ வனம் எனும் திருவைகாவூர் திருத்தலம் தோன்றியது..
வில்வத்திற்கு கூவிளம் என்று தமிழில் பெயர்..
கூவிளம் என்றே தேவாரத் திருப்பதிகங்களில் பாடப்படுகின்றது..
வில்வ மரத்தில் ஸ்ரீ மகாலக்ஷ்மி வாசம் செய்கின்றாள்..
திரு அரங்கத்தில் தாயார் சந்நிதியின் முன்பாக வில்வ மரம் தழைத்துள்ளது.
வீடுகளில் வில்வம் வளர்ப்பது பற்றி சைவ சமயப் பெரியோரின் ஆலோசனை பெறுவது அவசியம்..
கோயில்களில் இருக்கின்ற வில்வ மரத்தைப் பராமரித்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்..
வில்வ பழத்தை உலர வைத்து உள்ளிருக்கும் சதைப் பற்றை நீக்கிவிட்டு கிண்ணம் போல ஆக்கி அதில் திருநீறை வைத்துப் பூசுவது உத்தமம்..
வில்வம் ஆன்மிகத்திலும், மருத்துவத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கின்றது. சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் சிறந்து விளங்குகின்றது.
துளசியைப் போலவே அதிக அளவு பிராண வாயுவைத் தருகின்றது.
ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க வல்லது. மேலும், பித்தத்தை சமன்படுத்துவதோடு, ஜீரண சக்தியையும் மேம்படுத்துகிறது.
வில்வ மருத்துவத்தை தகுந்த சித்த மருத்துவர் ஆலோசனையின் வழியே தான் பின்பற்ற வேண்டும்..
கொக்கிறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கணி சடையர்
அக்கினொடாமை பூண்டழகாக அனலது ஆடும் எம் மடிகள்
மிக்கநல்வேத வேள்வியுளெங்கும் விண்ணவர்விரைமலர் தூவப்
பக்கம்பல்பூதம் பாடிடவருவார் பாம்புர நன்னகராரே.. 1/42/2
-: திருஞானசம்பந்தர் :-
தேன் திகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்
ஆன் திகழைந்து உகந்தாடும் பிரான் மலையார்த்தெடுத்த
கூன் திகழ் வாளரக்கன்முடி பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட வூருறை உத்தமனே..
4/107/10
-: திருநாவுக்கரசர் :-
கரந்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி அம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே.. 7/96/10
-: சுந்தரர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**