நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 27, 2025

வில்வம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 13
வெள்ளிக்கிழமை

வில்வம் 


மங்களம் மிகுந்த வில்வ மரத்தின் இலை, காய், பழம், வேர் போன்றவை அருமருந்தாகப் பயன்படுகின்றன.

சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்படுவனவற்றில்  வில்வ இலைகள் மிகவும் உயர்ந்தவை.. புனிதமானவை.. 

வில்வம் நிர்மால்யம்..
ஒருமுறை அர்ச்சித்த வில்வ இலைகளைக் கொண்டு மீண்டும் அர்ச்சிக்கலாம்.
உலர்ந்த வில்வ இலைகளில் நீர் தெளித்து விட்டு ஆறு மாதங்கள் வரை அவற்றைக் கொண்டு சிவபூஜை செய்யலாம்..

வில்வ மரத்தின் இலைகள் -
திரிநேத்திரம், திரிகுணம் திரிசூலம் எனும் மூன்றையும்
மனம் வாக்கு காயம் எனும் மூன்றையும் பக்தி கர்ம ஞானம் எனும் மூன்றையும்
 குறிப்பதாக ஆன்றோர் சொல்வர்..

சைவத்தில் வில்வத்தையும், வைணவத்தில் துளசியையும் பார்த்தாலே புண்ணியம் என சொல்லப்படுகின்றது. 

வில்வ மரத்தின் இலைகள் வேதங்களுக்கு இணையானவை..

ஒருமுறை வேதங்கள் சிவபெருமானை வழிபடுவதற்காக ஸ்ரீ பிரம்ம தேவனைக் கேட்டபோது வில்வ மரம் என்றாக வரம் கொடுத்தார்... 

அவ்வண்ணமே வேதங்கள் வில்வ மரங்களாக -
வில்வ வனம் எனும் திருவைகாவூர் திருத்தலம் தோன்றியது..

வில்வத்திற்கு கூவிளம் என்று தமிழில் பெயர்..

கூவிளம் என்றே தேவாரத் திருப்பதிகங்களில் பாடப்படுகின்றது..

வில்வ மரத்தில் ஸ்ரீ மகாலக்ஷ்மி வாசம் செய்கின்றாள்..

திரு அரங்கத்தில் தாயார் சந்நிதியின் முன்பாக வில்வ மரம் தழைத்துள்ளது.

வீடுகளில் வில்வம் வளர்ப்பது பற்றி  சைவ சமயப் பெரியோரின் ஆலோசனை பெறுவது அவசியம்..

கோயில்களில் இருக்கின்ற வில்வ மரத்தைப் பராமரித்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்..

வில்வ பழத்தை உலர வைத்து உள்ளிருக்கும் சதைப் பற்றை நீக்கிவிட்டு கிண்ணம் போல ஆக்கி அதில் திருநீறை வைத்துப் பூசுவது உத்தமம்..

வில்வம்  ஆன்மிகத்திலும், மருத்துவத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கின்றது.   சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் சிறந்து விளங்குகின்றது. 

துளசியைப் போலவே அதிக அளவு பிராண வாயுவைத் தருகின்றது.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க வல்லது. மேலும்,  பித்தத்தை சமன்படுத்துவதோடு, ஜீரண சக்தியையும் மேம்படுத்துகிறது.

வில்வ மருத்துவத்தை தகுந்த சித்த மருத்துவர் ஆலோசனையின் வழியே தான் பின்பற்ற வேண்டும்..


கொக்கிறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கணி சடையர்
அக்கினொடாமை பூண்டழகாக அனலது ஆடும் எம் மடிகள்
மிக்கநல்வேத வேள்வியுளெங்கும் விண்ணவர்விரைமலர் தூவப்
பக்கம்பல்பூதம் பாடிடவருவார் பாம்புர நன்னகராரே.. 1/42/2
-: திருஞானசம்பந்தர் :-

தேன் திகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்
ஆன் திகழைந்து உகந்தாடும் பிரான் மலையார்த்தெடுத்த
கூன் திகழ் வாளரக்கன்முடி பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட வூருறை உத்தமனே..
4/107/10
-: திருநாவுக்கரசர் :-

கரந்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி அம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே.. 7/96/10
-: சுந்தரர் :-

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

புதன், ஜூன் 25, 2025

நவநீத சேவை

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 11
ஞாயிற்றுக்கிழமை

ஆனி மாதம் இரண்டாம் நாள் 
திங்களன்று (16/6) காலை 
தஞ்சை மா நகரில் நடைபெற்ற 
இருபத்தைந்து கருட சேவையைத் தொடர்ந்து ராஜ வீதிகளில் செவ்வாயன்று நடைபெற்ற 
(பதினைந்து) நவநீத சேவை எனும் வெண்ணெய்த் தாழி உற்சவம்.. 


















கருட சேவையன்றும் நவநீத சேவைன்றும் 
ராஜ வீதிகளில் மக்கள் - சித்ரான்னங்கள் மோர் பானகம் முதலானவற்றை  வழங்கியும் பட்டறைகளை இழுத்து வருகின்ற மாடுகளுக்கு பழங்கள் கொடுத்தும் நீரில் தீவனங்களைக் கரைத்து வைத்தும் புண்ணியம் தேடிக் கொண்டனர்..

ஓம் ஹரி ஓம்
நம சிவாய ஓம்
**

திங்கள், ஜூன் 23, 2025

சமையல்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 9
திங்கட்கிழமை


பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்

மகாபாரதப் போரின் போது உணவு வழங்கி உபசரித்த மாமன்னன்..

சோற்றால் மடையடைத்த சோழ நாடு...

உண்ணீர் உண்ணீர் என்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடியுறும்..

இதெல்லாம் இம்மண்ணுக்கே உரிய பெருஞ்சிறப்புகள்..

ஆனால் 
இன்றைக்கு வீடுகள் பலவற்றிலும்  - வார நாட்களில் சில வேளைகளாவது - ஆடம்பரத்தின் காரணமாக சமையல் நிறுத்தப்படுகின்ற சூழ்நிலை  உருவாகிக் கொண்டிருக்கின்றது..

சமையலையும் சாப்பாட்டையும் பிறர் வசம் ஒப்படைப்பதற்கு (ஒப்படைத்து விட்டு -  வக்கணையாகத் தின்கின்ற வேலையை மட்டும் கைவசம் வைத்துக் கொள்வதற்கு) இளந்தலைமுறையினர் தயாராக இருக்கின்றனர்..

கேட்டால்,
சும்மா ஒரு மாற்றுக்கு!.. - என்ற பதில்...

இப்படியே போனால் வீட்டிலுள்ள
மற்றவர்கள் கதி??...

குடும்ப வாழ்க்கை என்பதே அழிந்து விடும். 

ஊர் விட்டு ஊர் வந்து அலுவலகப் 
பணி செய்வோரும் உடல் நலம் குன்றியோரும் உணவகங்களைத் தான் நாடியாக வேண்டும்..

ஆனால் இன்றைய நிலைமை வேறு..

வீட்டில் சமையல் நிறுத்தப்பட்டு வெளியில் உணவைப் பதிவு செய்து வரவழைத்துச் சாப்பிடும் பழக்கம் - மேலை நாடுகளைப் போல பரவுகின்றது.. 

அது  குடும்பங்களின்  சீரழிவிற்கு வழி வகுக்கின்றது.

நமது நாட்டிலோ
வாழும் முறையில்
அன்புடன் சமைப்பதையும் ஆதரவுடன் உபசரிப்பதையும்   இல்லாததாக்கி விடுகின்றது...

சமையல் என்பது நமது பாரம்பரியத்தின் அருங்கலைகளில் ஒன்றாக விளங்குவது மட்டுமல்ல
தனிப்பட்ட குடும்பத்தின் கலாச்சார அச்சாணி...

சமையல் கூடம் இல்லாத வீடுகள் நம்மிடையே இல்லை.. 

வரவேற்பறை படுக்கையறை
கழிவறை - இவை மட்டுமே  நமது கலாச்சாரம் ஆகாது..

சமையலறையையும் மூடி விட்டு படுக்கையறை மட்டும் போதும் என்று நினைப்பது  அவலம்..

மேலைத் திருமண வாழ்வியல் முறைகள் என்றுமே பிரச்னைக்குரியவை..

படுக்கையறை   மட்டுமே வாழ்க்கை ஆகாது..

அதற்கொரு அறை இதற்கொரு அறை என்பது நாகரிகம் என்றாலும் அதுவே நம்முடைய வாழ்வியல்  இல்லை..

மேலைத் தேசங்களுக்கு இணையாக தற்போது நமது நாடும் திருமண முறிவுகளில்
இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.. .

இங்குள்ள குடும்பக் கலாச்சாரம் அழிந்தால்  மேலை நாகரிக அடிவருடிகளுக்கு கொண்டாட்டம்..

குடும்ப உணர்வுகள் அழியும் போது மன நலமும் சேர்ந்தே அழிகின்றது.

தொடர்ந்து வெளியில் சாப்பிடுவதால் உடலானது நோய்களின் கிடங்காக மாறுகின்றது. 

தனியறையில் மகிழ்ந்து
வெளியறையில் சாப்பிடுவது மட்டுமே குடும்ப நலனுக்குக் காரணமல்ல.

எப்போதாவது வெளியில் சாப்பாடு என்பது ஓரளவுக்கு ஏற்புடையது..

இன்றைக்கு எல்லாமே மாற்றப்பட்டு விட்டன..

எனினும்,
மன மகிழ்வுடன் சமைப்பதும் சாப்பிடுவதும் உள்ளத்திற்கும் இல்லத்திற்கும்  இன்றியமையாதவை..

அதனால் தான் நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கச் சொன்னார்கள்..

வெளியில் சாப்பிட்டு விட்டு வந்ததற்காக  அடுத்த வீட்டு அண்ணன்கள் அடி வாங்கியது 1960 களின் நிலைமை...

இக்காலத்தில்  ஒவ்வொரு விடுமுறை நாளிலும்  ஒவ்வொரு உணவகத்தில் சாப்பிடுவது என்பது நாகரிகம் ஆகிவிட்டது ... 

உடனுக்குடன் பதிவு  செய்து வரவழைத்துச்
சாப்பிடும் வழக்கம் மக்கள் மத்தியில் கௌரவமாகி வருகின்றது.,

இந்தப் பழக்கம் வருத்தத்துக்கு உரியதாகும்...

இவையே உணவு - இவற்றையே சாப்பிட  வேண்டும் - என, முன்பதிவு செய்யும்படியாக விளம்பரங்கள் வாயிலாகத் தூண்டுவதும் உளவியல் ரீதியான காரணம். 

விளம்பரங்கள் ஒரு சில வழிகளில் மட்டுமே நன்மை தருகின்றன..

நமது விருப்பத்தை  முடிவு செய்வதற்கு  நிறுவனங்கள் யார்?..

நமது முன்னோர்கள் அக்காலத்தில் யாத்திரை, வெளியூர் என்று சென்றபோது சமைத்து எடுத்துச் சென்றது எல்லாம் கேலிக் கூத்து என்றாகி விட்டது...

அப்போது உணவு பாதுகாப்பு இருந்தது.. ஆரோக்கியம் இருந்தது..

கீழான அவலம் தேடி வரும் முன்  - 
நமது வீட்டில் நாமே
அக்கறையுடன் சமைத்து,
அன்புடன் பரிமாறி
 ஆதரவுடன் சாப்பிட்டு அடுத்த தலைமுறையினருக்கு வாழ்ந்த காட்டி   மகிழ்ச்சி கொள்வோம்..

யாரோ சமைக்க யாரோ முன் பதிவு செய்ய -  உனக்கென்ன பிரச்னை ??..
என்றால் -

ஏதோ ஒரு ஆதங்கம் தான்!..


ஓம்  சிவாய நம
**

சனி, ஜூன் 21, 2025

கருட சேவை 2

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 
சனிக்கிழமை

கடந்த திங்களன்று காலை தஞ்சை மா நகரில் நடைபெற்ற 
இருபத்தைந்து கருட சேவை.. 
இரண்டாம் பகுதி..













உச்சிப் பொழுதில்  மேல ராஜவீதி ஸ்ரீ விஜயராமர் திருக்கோயிலில் தனித்தனியே தீப ஆராதனை நிகழ்ந்த பின் அவரவர் திருக்கோயிலுக்குத் திரும்பினர்..

ஓம் ஹரி ஓம் 
நம சிவாய ஓம்
**

புதன், ஜூன் 18, 2025

கருட சேவை 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 4
புதன் கிழமை

கடந்த திங்களன்று காலை தஞ்சை மா நகரில்  நடைபெற்ற இருபத்தைந்து கருட சேவை முதல் பகுதி..

முதல் இரண்டு படங்களில் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்..  

மூன்றாவது ஸ்ரீ நீலமேகப்பெருமாள்.

















ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய 
**

ஞாயிறு, ஜூன் 15, 2025

தரிசனம் 2

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி முதல் நாள்
ஞாயிற்றுக்கிழமை


ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் இருந்து புறப்பட்ட பல்லக்குகள்
திட்டை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயில் 
குளமங்கலம், 
கூடலூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
கடகடப்பை ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் கோயில்
புன்னை நல்லூர் ஸ்ரீ கைலாச நாதர் கோயில்களில் தங்கி மறுநாள் காலையில் தஞ்சை கீழவாசல் ஸ்ரீ பூமாலை வைத்திய நாதர் கோயிலில் காலை சந்தி பூஜை நடந்த பின் கீழவாசல் கோட்டை வழியாக அரண்மனைக்கு எழுந்தருளி கீழ ராஜவீதி தெற்கு ராஜவீதிகளில் பவனி வந்தபின் மேல ராஜவீதி ஸ்ரீ கொங்கணேஸ்வரர் கோயிலில் உச்சி கால பூஜை கண்டருளி வடக்கு ராஜவீதியில் பவனி வந்து கரந்தைக்குள் பிரவேசம் ஆகின..  


கரந்தை ராஜவீதி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பல்லக்குகளுக்கு வரவேற்பும் சாயரட்சை பூஜையும்...

வீட்டுக்கு வீடு மங்கல ஆரத்தி... 
முன்னிரவுப் போதில் ஆலயப் பிரவேசம்.. 

இரவு ஒன்பது மணியளவில் பதுமை மாலையிட
சிவகண வாத்தியங்கள் முழங்க - மகா ஆரத்தியுடன்  யதா ஸ்தானம் சேர்ந்தனர்..

ஏழூர் சென்று விட்டுத் திரும்புகின்ற பல்லக்குகளை வரவேற்பதற்கு
கடும் கூட்டம்.. மக்கள் நெரிசல்..

வீட்டில் தரிசனம் செய்து விட்டு வந்தனர்..

என்னால் கோயிலுக்குச் செல்வதற்கு இயலவில்லை... 

நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்
குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான் குடி
கற்குடி தென் களக்குடி செங் காட்டங்குடி
கருந்திட்டைக்குடி கடையக்குடி காணுங்கால்
விற்குடிவேள் விக்குடி நல்வேட்டக் குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே.. 6/71/3
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**