நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 08, 2022

மங்கல மார்கழி 24

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

-: குறளமுதம் :-

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு..
190
*
-: அருளமுதம் :-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..

திருப்பாடல் - 24


அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்..
*
-: ஆழ்வார் திருமொழி :-


குலந்தான் எத்தனையும் பிறந்தே இறந்தெய்த் தொழிந்தேன்
நலந்தான் ஒன்றுமிலேன் நல்லதோர் அறம்செய்துமிலேன்
நிலம்தோய் நீள்முகில்சேர் நெறியார்த் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட்கொண்டருளே.. 1031
-: ஸ்ரீ திருமங்கையாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம்
திருச்சோற்றுத்துறை


இறைவன்
ஸ்ரீ ஓதவனேஸ்வரர்
ஸ்ரீ அட்சயபுரீஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ அன்னபூரணி

தீர்த்தம்
காவிரி, சூரிய தீர்த்தம்
தலவிருட்சம்
பன்னீர் மரம்

கொடும்பஞ்சம் நேரிட்ட காலத்தில் அடியார் ஒருவர் ஏனைய உயிர்களின் பசிப்பிணி தீர்ப்பதற்கு முனைந்தார்..

அது கண்டு இரங்கிய இறைவன் அந்த அடியாருக்கு அட்சய பாத்திரத்தினை வழங்கி அருள் புரிந்தனன்..

திரு ஐயாற்றின் சப்த ஸ்தான தலங்களுள் மூன்றாவது ஆகும்.. காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள கோயில்.. 

தஞ்சையிலிருந்து கண்டியூர் வழியாக சிற்றுந்துகள் மூலம் இவ்வூரைச் சென்றடையலாம்..


கோல அரவுங் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியும்
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே.7/94
-: ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-

திருப்பொன்னூசல்
திருப்பாடல் எண் - 7


உன்னற் கரியதிரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல்
என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

9 கருத்துகள்:

  1. குறளமுதம் அருந்தி அருளமுதம் பருகி, குன்றம் ஏந்தியவனை தரிசித்து சிவனைச் சரணடைந்தேன்.  நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  2. அமுதமும் தரிசனமும் சிறப்பு.

    திருப்பதி மலை மீது கோபுரம் படம் ரொம்ப அழகு! திருப்பதிதானே?

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..

      அது திருப்பதியே தான்.. காலி கோபுரத்தின் அழகிய காட்சி..
      வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நாலைந்து முறை ராமேஸ்வரம் போயும்/உத்தரகோசமங்கையைத் தாண்டிச் சென்றும் இன்னமும் தரிசனம் கிட்டவில்லை. திருச்சோற்றுத்துறையும் போகலை. நல்லதொரு தரிசனத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றியக்கா..

      நீக்கு
  4. அன்பின் ஜி..
    வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

    பதிலளிநீக்கு
  5. பதிவு மகிழ்ச்சி அளித்தது. மார்கழி மாதத்தில் தினம் தினம் ஒரு திருத்தலம் தரிசிக்க உங்கள் மூலம் வாய்ப்பு கிடைக்கிறது. அனைவரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல ஈசன் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..