நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 23, 2021

மங்கல மார்கழி 8

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
-: குறளமுதம் :-

என்பிலதனை வெயில் போலக் காயுமே
அன்பிலதனை அறம்.. (77)
*
-: அருளமுதம் :-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை..

திருப்பாடல் - 8


கீழ் வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்..8
*
-: ஆழ்வார் திருமொழி :-


வெள்ளநீர் பரந்து பாயும்
விரிபொழில் அரங்கந் தன்னுள்
கள்ளனார் கிடந்த வாறும்
கமலநன் முகமும் கண்டு
உள்ளமே வலியை போலும்
ஒருவனென் றுணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்துன்
கள்ளத்தே கழிக்கின் றாயே.. 895
-: ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம் - திருக்கோடிகா


இறைவன்
ஸ்ரீ கோடீஸ்வரர்
ஸ்ரீ கோடிகா நாதர்


அம்பிகை
ஸ்ரீ திரிபுரசுந்தரி
ஸ்ரீ வண்டாடு பூங்குழலாள்

தீர்த்தம்
காவிரி, சிருங்க தீர்த்தம்
தலவிருட்சம் - பிரம்பு


இத்தலத்தில்
ஸ்ரீ பைரவ மூர்த்தி
பிறவிப் பிணி தீர்ப்பவராக
விளங்குகின்றார்..
ஆதியில்
வேத்ர வனம் எனப்பட்ட திருத்தலம்..

ஸ்ரீ திரிபுரசுந்தரி
தன்னை வழிபட்ட
துர்வாச முனிவருக்கு
ஸ்ரீ வேங்கடேச திருக்கோலத்தில்
காட்சியளித்தனள்..

இவ்வைபவம்
புரட்டாசி இரண்டாம்
சனிக்கிழமையில்
நிகழ்கின்றது..


வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையு மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருவாரூர்த் திருமூலட் டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே..(6/81)
-: ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-

திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் எண் - 8


முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே..
*
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 15 - 16


ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்..

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

 

6 கருத்துகள்:

  1. தேவாரத் தேனமுதமுடன் திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களையும் வாசித்துக் கொண்டேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீ தேவாதி தேவன் திருவடிகளே சரணம் ...

    பதிலளிநீக்கு
  3. தேவாதி தேவனைச் சென்று சேவிக்கணும். எப்போ முடியுமோ! :(

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..