நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 04, 2019

சிவ புராணம்

இன்றைய இரவுப் பொழுது ஸ்ரீ மகா சிவராத்திரியாக மலர்கின்றது..

சிவ நெறியைச் சார்ந்தவர்களுக்கு மகத்தான நன்னாள்...

சிவ ராத்திரிக்கு என பற்பல புராணங்களில் இருந்து திருக்குறிப்புகள் காட்டப்படுகின்றன...

இரவு முழுதும் சிவாலயத்தில் இருந்து தரிசனம் காண்போர் அதிகம்..

நான்கு கால பூஜைகளில் லிங்கோத்பவ காலம் எனப்படும் மூன்றாம் கால பூஜை விசேஷமானது...

லிங்கோத்பவ காலத்தில் அம்பிகையே ஈசனை வழிபாடு செய்வதாக ஐதீகம்..

இந்த இரவுப் பொழுதில் உபவாசம் இருந்து
ஈசன் எம்பெருமானின் புகழ் பரவுதலே வாழ்வின் நலம் கூடும் என்பர் ஆன்றோர்...

அவரவர்க்கு இயன்ற அளவில் திருக்கோயிலுக்கு அபிஷேக ஆராதனைப் பொருள்கள் வழங்குவதோடு தேவார திருவாசக பாராயணம் செய்வதும் நல்லது..

ஈசனைச் சிந்தித்திருக்க இனிதாகும் வாழ்வு...

இந்தப் பொழுதில் வந்தித்திருப்பதும் சிந்தித்திருப்பதும் பூர்வ ஜன்ம புண்ணியம்...

ஸ்ரீ மஹா சிவராத்திரியாகிய நன்னாளில் -

சோழநாட்டில் காவிரிக்கு வடகரைத் தலமாகிய
சாயா வனம் எனப்படும் திருச்சாய்க்காடு எனும் திருத்தலத்தில் 
அப்பர் பெருமான் அருளிச் செய்த திருப்பதிகம் - நமது தளத்தில்...

திருப்பதிகத்தின் திருப்பாடல் ஒவ்வொன்றிலும்
ஈசன் எம்பெருமானின் பெருஞ்செயல் ஒன்று பயின்று வருகின்றது..

எல்லார்க்கும் விளங்கும்படியான இனிய தமிழில் அத்திருப்பதிகம்...

பொருள் உணர்ந்து சிவ வழிபாடு
நிகழ்த்தி வாழ்வின் நலங்களை எய்துவோமாக!... 

திருத்தலம்
திருச்சாய்க்காடு

ஸ்ரீ சாயாவனேஸ்வரர்  
இறைவன் - சாயாவனேஸ்வரர், சாய்க்காட்டு நாதன்..
அம்பிகை - குயிலினும் நன்மொழியாள்


குயிலினும் நன்மொழியம்மை
தீர்த்தம் - காவிரி, ஐராவத தீர்த்தம்..
தலமரம் - சாயை எனும் கோரைப்புல் 


வில்லேந்திய வேலவன் - சாயாவனம்.. 
அப்பர் பெருமான் அருளிய தேவாரம்
நான்காம் திருமுறை
அறுபத்து ஐந்தாம் திருப்பதிகம்

தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண்டேயன்
வீடுநாள் நெருங்கிற்றென்று மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செல்லுமஞ்சிப் பாதமே சரணம் என்னச்
சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே..(01)

வடங்கெழு மலை மத்தாக வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சங்கண்டு பல்தேவர் அஞ்சி
அடைந்து நும்சரணம் என்ன அருள்பெரிது உடையராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே.. (02)

அரணிலா வெளிய நாவல் அருள் நிழலாக ஈசன்
வரணிய லாகித் தன்வாய் நூலினாற் பந்தல் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்னனாக்கித்
தரணி தான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே.. (03)

அரும்பெருஞ் சிலைக்கை வேடனாய் விறற்பார்த்தற் கன்று
உரம்பெரிது உடைமை காட்டி ஒள்ளமர் செய்து மீண்டே
வரம் பெரிது உடையனாக்கி வாளமர் முகத்தின் மன்னுஞ்
சரம்பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.. ( 04)

இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களோடு
மந்திர மறையதோதி வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற்கருள் செய்தாரும் சாய்க்காடு மேவினாரே.. (05)

ஆமலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து
பூமலி கொன்றைச் சூட்டப் பொறாத தன் தாதை தாளைக்
கூர்மழு ஒன்றால் ஓச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாம நற் சண்டிக்கீந்தார் சாய்க்காடு மேவினாரே.. (06)

மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் அமரர் ஏத்த ஆயிர முகமதாகி
வையகம் நெளியப் பாய்வான் வந்திழி கங்கை என்னுந்
தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே.. (07) 

குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரம்
துவர்ப்பெரும் செருப்பால் நீக்கி தூய வாய்க் கலசம் ஆட்ட
உவப்பெருங் குருதி சோர ஒருகணை இடந்தங்கு அப்ப
தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே..(08)

நக்குலா மலர்பன்னூறு கொண்டுநன் ஞானத்தோடு
மிக்க பூசனைகள் செய்வான் மென்மலரொன்று காணா
தொக்குமென் மலர்க் கண்ணென்றங் கொருகணை இடந்தும் அப்பச்
சக்கரங் கொடுப்பர் போலுஞ் சாய்க்காடு மேவினாரே.. (09)

புயங்கள் ஐஞ்ஞான்கும் பத்து மாயகொண்டு அரக்கன் ஓடிச்
சிவன் திருமலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி அஞ்ச
வியன்பெற எய்திவீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே
சயம்பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.. (10)

-: திருச்சிற்றம்பலம் :-


சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை..
என்பது ஔவையார் அருளிய அமுதவாக்கு..

நினைப்பவர் மனமே கோயிலாக் கொள்ளும் ஈசன்
இந்த நிலையில் தான் 
இமைப்பொழுதும் இதயத்திலிருந்து நீங்காத பேற்றினை
ஆன்மாக்களுக்கு அருள்கின்றான்..

அவ்வண்ணமாக எவ்வேளையும் 
சிந்தித்திருக்கும்படிக்கு
ஈசன் எம்பெருமான் எல்லாருக்கும்
நல்லருள் புரிவானாக..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ 

24 கருத்துகள்:

  1. அனைவரும் நலம் பெறட்டும் வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்களுக்கு நல்வரவு.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. குட்மார்னிங். வழக்கம்போல படங்களும் பாக்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. மஹா சிவராத்திரி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. மகா சிவராத்திரி சிறப்பு பதிவு அருமை.
    சாய்க்காடு இறைவன், இறைவி, முருகனை தரிசனம் செய்து மகிழ்ந்தேன்.
    முன்பு அடிக்கடி போகும் கோவில்.
    திருப்பதிகம் படித்தேன், நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. மகிழ்வான சிவராத்திரி காலை வணக்கம் துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அருமையான திருப்பதிகத்தையும் வாசித்தேன். படங்களும் அருமை வழக்கம் போல்.

    எல்லோருக்கும் நலம் நல்கட்டும் ஈசன் எம்பெருமான்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாருக்கும் ஈசன் அருளால் நலம் விளையட்டும்...

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நான் பார்க்க ஆசைப்படுகின்ற, இதுவரை பார்த்திராத கோயிலுக்கு உங்கள் மூலமாக இன்று சென்றேன். நன்றி. விரைவில் நேரடி தரிசனம் காண்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் தரிசனம் செய்யுங்கள்..
      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. சிவராத்திரி சிறப்புப் பகிர்வு.... வெகு சிறப்பு.

    அனைவருக்கும் நல்லதே கிடைக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  9. இந்தக் கோயிலுக்குப் போக ஆசைதான். இந்தப் பக்கமே அதிகம் சென்றதில்லை. சமயம் வாய்க்கணும். அருமையான தரிசனம். பாடல்கள் பகிர்வு எல்லாமே நன்றாக இருந்தன. மிக்க நன்றி. வேலவனுக்கு வில் கொடுத்திருப்பது இந்த ஊரில் தானா? கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் பார்த்தது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      திரு ஐயாற்றிலும் முருகன் வில்லேந்திய கோலத்தில் எழுந்தருளியுள்ளான்... நன்றி..

      நீக்கு
  10. சாய்க்காடு தலம் பற்றிய பாடலை மிகவும் ரசித்தேன். தோடுலா மலர்கள் - இதழ்களை உடைய பூ. ஏன் அப்படிச் சொல்லியிருப்பார்? இதழ்கள் இல்லாத மலர்கள் உண்டோ? யோசியுங்கள்.

    நான் கர்நாடகத்தில் நிறைய பேர் 'நஞ்சுண்ட சாமி' என்ற பெயர் வைத்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். தமிழ் அவ்வளவுதூரம் அங்கு பரவியிருந்தது.

    இறைவன் இறைவிகள் திருநாமம், தமிழில் கொஞ்சும்படி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      தோடுலா மலர்கள் என்பது சிறப்பின் காரணமாக இருக்கலாம்..
      இதழ்கள் இல்லாத மலர் இல்லை தான்... நெல்லை மாவட்டத்தில் திருப்புடை மருதூர் இறைவனுக்கு நாறும்பூ நாதன் என்பது பெயர்..

      வாசமில்லா மலர்கள் ஏது?..

      அம்பிகையும் நறுமலர்க் குழலி என்று சிறப்பிக்கப்படுகின்றாள்..

      தமிழில் உரிச் சொற்கள் என்பன உண்டு.. அதைப் போலவே இதற்கும் பொருள் கொள்ளக் கூடியதாக இருக்கும்..

      மற்றபடிக்கு தாங்கள் உணர்ந்திருந்திருப்பதைக் கூறுங்களேன்...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. வில்லேந்திய வேலவன் மனம் கவர்ந்துவிட்டான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..
      திரு ஐயாற்றிலும் வில்லேந்திய வேலவனைத் தரிசிக்கலாம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. அன்பின் தனபாலன்..
    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..