நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 18, 2016

கவியரசர்

அக்கா.. அக்காவ்!..

வாம்மா.. தாமரை!.. வா.. வா!..

என்னக்கா.. நேத்து வீட்டில இல்லையே!.. எங்கே போயிருந்தீங்க?..

ஆமம்மா!.. நேத்து நானும் அத்தானும் இலக்கிய பேரவை நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம்!..  கவியரசர் நினைவு நாளில்லையா!..

ஓ!...



விழாவுக்கு நிறைய பேர்.. அதுவும் சின்ன வயசுப் பையன்களும் பொண்ணுங்களும் .. எல்லாம் கவியரசரோட ரசிகர்களாம்!.. ஆச்சர்யமா இருக்கு!..

ஏங்..க்கா?..

நாற்பது வருஷத்துக்கு முன்னால வந்த சினிமா பாட்டுகளை ரசித்து அதோட அழகுல ஆழ்ந்து அதப் பத்திப் பேசறது.. பாடுறதுன்னா சின்ன விஷயமா?...

ம்!..

அந்தப் பாட்டை அக்கு வேற ஆணி வேறயா பிரித்து அர்த்தம் சொல்றது.. ன்னா.. அந்தப் பாடலோட வெற்றி தானே!.. அதை எழுதுன கவியரசரோட வெற்றி தானே!..

நீங்க சொல்றது சரிதா...ங்கா!..

நேத்து விழாவில பேசுனது எத்தனை எத்தனை பாட்டு.. தெரியுமா!..

அதெல்லாம் இருக்கட்டும்.. நீங்க சொல்லுங்களேன்.. கவியரசர் பாட்டுகளைப் பற்றி!..

ஒன்னா... ரெண்டா?.. எந்தப் பாட்டைப் பற்றிச் சொல்றது!..

ஏதாவது!.. ஏன்.. நீங்களும் அத்தானும் அந்தக் காலத்தில ரசித்திருப்பீர்கள் தானே!.. அந்தப் பாடல்கள்..ல ஏதாவது!..

ஆகா.. கடைசி..ல நம்ம கதைக்கே வந்து விட்டாயா?...

அக்கா.. அக்கா.. சொல்லுங்க.. அக்கா!.. அத்தான் உங்களையே சுத்திச் சுத்தி வந்திருக்கார்!.. உங்களுக்கு குஞ்சம் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கார்!..

அதை ஏம்மா கேட்கிறாய்!?..

சொல்லுங்க..க்கா!..



ஹைஸ்கூல்..ல படிச்சுக்கிட்டு இருந்தப்போ.. ஒரு தடவை.. ஒரே ஒரு தடவை.. கூப்பிட்டு அனுப்பினார்..ன்னு நம்ம வீட்டு வாண்டுகளை அழைச்சிக்கிட்டு கிளித் தோப்புக்கு போனேன்... வாண்டுங்க கேட்டதுக்கு கிளிப்பிள்ளை பிடிக்கிறதுக்கு..ன்னு சொல்லிட்டேன்.. அங்கே போனா...

ம்!..

அவர் கையில ஒரு புத்தகம்... நீ கேட்டியே அந்தப் புத்தகம்..ங்கிறார்.. நான் எப்போ புத்தகம் கேட்டேன்.. ந்னு எனக்கே சந்தேகம்.. எனக்கு உடம்பு வெலவெலத்துப் போச்சு. பக்கத்துல இருந்த வாண்டுங்க எல்லாம் கிளிக் கூட்டைப் பார்க்கிறோம்..ன்னு ஓடிப் போச்சுங்க!..

என்னக்கா.. நீங்க பயங்கர திகில் படம் மாதிரி.. சொல்றீங்க!..

அப்போ.. உங்க அத்தான் என்ன பாட்டு பாடுனார் தெரியுமா?..

.....!?

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்..
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்!.. - அப்படின்னு!..

உடனே நீங்க - 
நீயில்லாமல் யாரோடு உறவாட வந்தேன்..
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்!.. ன்னு பாடலையா!..

நீ வேற!.. பயத்துல முகமெல்லாம் வேர்த்துப் போச்சு!.. என்ன சொல்றதுன்னே.. தெரியலை...

சரிதான்!..

இவரு.. அந்த நேரம் பார்த்து காது ஜிமிக்கியை சுண்டி விட்டார்.. பாரு.. அவ்வளவு தான் அவர் கையில இருந்த புத்தகத்தைப் பிடுங்கிக்கிட்டு.. ஒரே ஓட்டம்.. வீட்டுக்குள்ள வந்து தான் நின்னேன்..

என்னக்கா.. நீங்க.. அத்தானை ஏமாத்தீட்டீங்களே!..

வேர்க்க விறுவிறுக்க புத்தகத்தைத் திறந்து என்னான்னு பார்த்தால் - அந்தப் பாட்டை அப்படியே எழுதி வெச்சிருக்கார்!..

அட!.. கிளி விடு தூது, குயில் விடு தூது மாதிரி உங்களுக்கு பாட்டு ஒரு தூது ஆயிடிச்சா?..

அப்புறம் இந்தப் பாட்டு இலங்கை வானொலியால மனப்பாடம் ஆச்சு!..

ஆமாமா!.. இதெல்லாம் சீக்கிரமே மனப்பாடம் ஆயிடும்!..



அதுக்கப்புறம் - வேண்டாத தெய்வம் இல்லை!..
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற!.. 
- ங்கிற வரிகளை கோடு போட்டு புத்தகத்தைக் கொடுத்து விட்டேன்!..

ஓஹோ!.. அதுக்கப்புறம்!?..

அதுக்கப்புறம் என்ன!.. குஞ்சம் கொடுத்தவனே குங்குமம் கொடுப்பான்..ன்னு சாமி வந்து சொன்னதா!.. அத்தோட வீட்டுக்கு உண்மை எல்லாம் தெரிஞ்சு பந்தக்கால் நட்டுட்டாங்க!.. அக்காளுக்கும் அத்தானுக்கும் கல்யாணம் நடந்துடுச்சு!...

கொடுத்து வெச்சவங்க.. நீங்க!.. அதுசரி.. கல்யாணத்துக்கு அப்புறம் என்ன பாட்டு பாடினீங்க!..

இது வேறயா!..

சொல்லுங்க..க்கா!..

கல்யாணத்துக்கு அப்புறம் எத்தனையோ பாட்டு பாடியிருந்தாலும் அந்தப் பாட்டு மட்டும் இன்னும் கூடவே வருது!..

எந்தப் பாட்டு அக்கா?..

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்!..

ஆகா!.. அக்கா..ன்னா அக்கா தான்!.. எனக்கும் இந்தப் பாட்டு தான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்!..

அதுல பாரு.. தாமரை!..
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்..
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்!.. 
- அப்படி..ன்னு பாடுறப்போ - நான் பாதி.. நீ பாதி..ன்னு கூட இல்லை.. நான் வேறு இல்லை.. நீ வேறு இல்லை..ன்னுதான் அர்த்தமாகுது!..

ஆமாங்..க்கா!.. 
பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்.. உனக்காக வேண்டும்..
பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும்.. பசியாற வேண்டும்!..
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்.. நானாக வேண்டும்..
மடிமீது விளையாடும் சேயாக வேண்டும்.. நீயாக வேண்டும்!..

நீ கூட அருமையா பாடுறியே!..

போங்க..க்கா... உங்களை விடவா!..

சரி.. மீதியையும் நீயே பாடு.. கேட்போம்!.. 


சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை.. பொருளென்றும் இல்லை..
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.. 
விலையேதும் இல்லை!..
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே..
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை.. வேறேதும் இல்லை!..

அடடே!.. என்னம்மா... தாமரை.. கண்ணு கலங்குது?..

ஒன்னுமில்லே..க்கா!..

அதான்!.. டார்லிங் நினைப்பு வந்துடுச்சு!..

....அவங்களுக்கும் இந்தப் பாட்டு ரொம்பவும் பிடிக்கும்!..

யாருக்குத் தான் இந்தப் பாட்டைப் பிடிக்காது?.. கண்ணைத் துடைச்சிக்கோ.. என்ன இது சின்ன புள்ளையாட்டம்!..

அவர் பாட்டுக்கு எல்லாத்துக்கும் பாட்டு எழுதி வெச்சுட்டுப் போய்ட்டார்.. இருக்கிறவங்க மனசு தான் கிடந்து அடிச்சுக்குது!.. 

அதெல்லாம் அவருக்குக் கிடைச்ச வரம்.. அவரு எங்கே போய்ட்டாரு.. ன்னு நினைக்கிறே!.. எங்கேயும் போகலை.. நம்ம கூடவே இருக்கிறார்.. அதான் அவரே சொல்லிட்டாரே!.. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!.. - அப்படின்னு!..

உண்மைதான்.. அக்கா!.. கவியரசருக்கு மரணமே இல்லை!..




அந்த வேளையில் ஈசான்ய மூலையில் திடு..திடு.. என்று இடி முழக்கம்..
மழை வருவதற்கு அறிகுறியாய் சில்லென்று காற்றும் வீசியது..

சரிக்கா.. நான் கிளம்புகின்றேன்.. மழை வரும் போல இருக்கு!..

கொஞ்சம் இரு.. தாமரை.. துளசி கஷாயம் தர்றேன்.. மழைக் காலத்துக்கு நல்லது.. சளி ஜூரம் கிட்டே வராது!..

* * * 



நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!..
* * *

14 கருத்துகள்:

  1. அருமை ஜி தாமரையை கம்டு குறைய காலம் ஆகிவிட்டது கவியரசரின் அழகிய விடயங்கள் நன்று காணொளி ஸூப்பர்

    எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. கவியரசருக்கு ஏது மரணம்
    அருமையான பதிவு ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. கவியரசரின் பாடல்கள் காலத்தால் அழியாதவை...
    அவருக்கு எந்த நிலையிலும் மரணம் இல்லை...

    பதிவு ரொம்ப அருமை ஐயா... ரசிச்சி வாசிக்க வைத்தது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. என்றும் மனதில் நிற்கும் கவிஞனைப் பற்றிய பதிவிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. திரையில் இந்தப்பாடல்கள் வந்திருக்காவிட்டால் இத்தனை பேரும் கவியரசரை நினைவு கூர்ந்திருப்பார்களா எனக்கும் கண்ண தாசன் பாடல்கள் மிகவும் பிடிக்கும் ஏனோ தெரியவில்லை சிறிதே சோகமூட்டும் பாடல்கள் இன்னும் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      சோகப் பாடல்களும் ரசிப்புக்குரியதே..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. கண்ணதாசன் அவர்கள் பாடல் பகிர்வு அருமை.
    அவர் பாடல்கள் நிறைய நல்ல பாடல்கள்.
    காலத்தால் அழியா பாடல்கள், அழியா கவிஞர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      எந்த சூழ்நிலைக்கும் பொருந்தி வரக்கூடிய பாடல்கள் அவருடையது.. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. கவியரசர் நினைவு நாளில் அருமையான அஞ்சலி. அவருடைய பாடல்களின் ரசிகை நான். திரையிசைப் பாடல்களை இலக்கியத் தரத்துக்கு உயர்த்தியவர் அவர். சுவையான பதிவு. பாராட்டுக்கள் துரை சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      உண்மைதான் .. திரையிசைப் பாடல்களை இலக்கியத் தரத்துக்கு உயர்த்தியவர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..