நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 08, 2015

உந்தனோடு உற்றேன்

நேற்று வியாழக்கிழமை மதுரை தல்லாகுளத்தில் இருந்து பூப்பல்லக்கில்  எழுந்தருளிய கள்ளழகர் - அழகர் மலையை நோக்கிப் புறப்பட்டார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆனந்தம் பொங்க வழியனுப்பி வைத்தனர்.



மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஏப்ரல் 21 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைத் திருவிழா நிறைவு பெற்றதைத் தொடர்ந்து -

அழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கியது.

அழகர் கோயிலிலிருந்து வாணவேடிக்கைகளுடன் 2/5 அன்று மாலை தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் கள்ளழகர்.

வழிநெடுகிலும் பல்வேறு திருக்கண் - மண்டகப் படிகளில் எழுந்தருளியவாறு - மதுரைக்கு வந்தருளினார்.

3/5 அன்று மூன்றுமாவடியில் மகத்தான எதிர்சேவை நிகழ்ந்தது.

சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக - 4/5 அன்று காலையில் - தல்லாகுளம் பெருமாள் கோயிலில் இருந்து பச்சைப் பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் - பொங்கிப் பெருகி ஓடிய வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

ஆற்றில் இறங்கிய அழகரை - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர்.



தொடர்ந்து, வைகையாற்றில் இருந்து வண்டியூரை நோக்கிப் புறப்பட்ட - கள்ளழகர் - வழியில் ராமராயர் மண்டகப்படியில் எழுந்தருளினார். 



அங்கு - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரின் திருமேனியில் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீர்த்தவாரி நேர்த்திக் கடன் செலுத்தினர். 

தொடர்ந்து - ராமராயர் மண்டகப்படியில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளிய பின் - அண்ணாநகர் வழியாக வண்டியூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் எழுந்தருளினார். 

ஸ்ரீ வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பாடாகிய கள்ளழகரைத் திரளான பக்தர்கள் தரிசித்து இன்புற்றனர்.

தொடர்ந்து - 5/5 அன்று - வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் நல்கிய பெருமாள் நாரைக்கும் முக்தி கொடுத்தருளினார்.




ஆதி காலத்தில் - துர்வாச முனிவரின் சாபத்தினால் மண்டூகம் - தவளை - ஆனார் சதபஸ் எனும் முனிவர். அவருடைய சாபம் தீர்ப்பதற்காகவே - வைகை ஆற்றில் பெருமாள் கள்ளழகராக எழுந்தருள்வதாக ஐதீகம். 

தேனூர் மண்டபத்தில் சிறப்பு வழிபாடுகள் முடிந்த பின்னர் - அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் வண்டியூர் ஆஞ்சநேயர் திருக்கோயிலை வந்தடைந்தார். அங்கே - பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்து - அழகரை வழிபட்டனர் பக்தர்கள்.

தொடர்ந்து - பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளியவாறு மதிச்சியத்தில் உள்ள ராமராயர் மண்டபத்திற்கு இரவு கள்ளழகர் வந்து சேர்ந்தார். 

அங்கே அவர் - விடிய விடிய தசாவதாரத் திருக்காட்சியருளினார். 

முத்தங்கி சேவையில் தொடங்கி தசாவதாரத் திருக்கோலங்கலில் திகழ்ந்த அழகர் பெருமான் - விடியற்காலையில் மோகினி அலங்காரத்தில் திருக்காட்சி நல்கினார். 

அழகரின் தசாவதார வைபவத்தினைத் திரளான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

அதன்பின் ஏகாந்த சேவையில் திகழ்ந்த கள்ளழகர் - (6/5) மாலைப் பொழுதில், ராமராயர் மண்டகப்படியில் இருந்து ராஜ அலங்காரத்துடன் புறப்பாடாகி - ஆழ்வார்புரம் சடாரி மண்டபத்தில் எழுந்தருளினார். 

அங்கிருந்து மூங்கில் கடை வழியாக - தல்லாகுளம் - ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் (6/5 புதன் கிழமை நள்ளிரவு) எழுந்தருளினார்.

நேற்று (7/5) வியாழக்கிழமை அதிகாலை - கண்டாங்கி உடுத்து வேல்கம்பு, வளரி - இவற்றுடன் அனந்தராயர் பூப்பல்லக்கில் அழகர் எழுந்தருளினார்.




கருப்பசுவாமி திருக்கோயிலில் வையாழி ஆனதும் அழகர் மலையை நோக்கிப் புறப்பட்டார்.

அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து - தமுக்கம் மைதானத்தின் எதிரே உள்ள பொதுப்பணித் துறை அலுவலகம் - புது நத்தம் சாலை வழியாக ரிசர்வ் லைன் மாரியம்மன் திருக்கோயிலை அடைந்தார்.

அங்கிருந்து பிற்பகலில் புறப்பாடாகி - புதூர், மூன்றுமாவடி வழியாக சுந்தரராஜன் பட்டிக்குச் சென்று அங்கே மறவர் மண்டகப்படியில் எழுந்தருளினார்.

நள்ளிரவில் கள்ளழகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இன்று (8/5) அதிகாலை திருமஞ்சனம் நிகழ்ந்த பின் - திருக்கோயிலை நோக்கிப் புறப்பட்டார்.

அப்பன் திருப்பதி வழியாக - பகல் பொழுதில் திருக்கோயிலை வந்தடைகின்றார்.


அழகர் பல ஊர்களைக் கடந்து வழிநடையாகினார். 
நானூறுக்கும் மேற்பட்ட திருக்கண்களில் எழுந்தருளினார்.

அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் வருகை புரிந்தார்.
வைகையாற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் தரிசனம் அளித்தார்.
மண்டூக மகரிஷிக்குக் கருட வாகனத்தில் திருக்காட்சி நல்கினார்.
சேதுபதி மண்டகப்படியில் பூம்பல்லக்கில் இருந்தருளினார். 


பல்லாயிரக்கணக்கான பக்தர்களைச் சந்தித்த பூரிப்புடன் வரும் கள்ளழகர் பெருமானை ஆயிரக்கணக்கான அன்பர்கள் கூடியிருந்து கண்ணேறு கழித்து வரவேற்கின்றனர்.

நாளை - அழகருக்கு உற்சவ சாந்தி மஞ்சள் நீர் சாற்றுமுறை நிகழ்கின்றது.

அத்துடன் அழகர்கோயிலின் சித்திரைத் திருவிழாவும் நிறைவடைகின்றது.

மதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்கியதில் இருந்து வலைத்தளத்தில் நம்முடன் பயணித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள் பல!..

வழிநெடுகிலும் - திருவிழா நிகழ்வுகளை அழகிய படங்களாக வழங்கிய அன்பின் திரு. குணா அமுதன், ஸ்டாலின், அருண் - ஆகிய நண்பர்களை என்றும் நினைத்திருக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

மதுரையில் சித்திரைத் திருவிழா நிறைவு பெற்றாலும் - 
உடலும் உள்ளமும் திருவிழாக் கூட்டத்தின் ஊடாகவே இருக்கின்றன!..


உவகையும் நிறையப் பெற்றேன்
ஊழ்வினை அகலப் பெற்றேன்..
உணர்வதும் உணரப் பெற்றேன்
ஊரெலாம் புகழப் பெற்றேன்..

உனதருள் நலமும் பெற்றேன்
உளமெலாம் மகிழப் பெற்றேன்..
உந்தனோடு அன்பில் உற்றேன்
உயிரினில் ஒளியைப் பெற்றேன்..

கள்ளழகர் திருவடிகள் போற்றி.. போற்றி!..  
சிவாய திருச்சிற்றம்பலம்.
* * *

16 கருத்துகள்:

  1. மதுரையில் சித்திரைவிழா தொடங்கிய நாளிலிருந்து தங்கள் பிதிவின் முலம் கண்டோம். இறையருள் தங்கள் முலம் கிடைத்தது மகிழ்ச்சி. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை என்றாவது காண வேண்டும் என்ற ஆவலில்,,,,,,,,,,,,, தங்கள் பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் பாலமகி..
      சித்திரைத் திருவிழாவினை தொடர்ந்து தரிசனம் செய்ததற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. திருக்கண் என்றால் என்ன.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      திருக்கண் என்பது - உலா வரும் ஸ்வாமி இருந்து செல்லும் மண்டபங்கள்..

      பாரம்பர்யமுள்ள கல் கட்டுமான மண்டபங்கள். அந்தந்த ஊர்க்காரர்களாலும் கால காலமாக தொடர்ந்து மண்டகப்படி செய்து வரும் உபயதாரர்களாலும் திருவிழாக்காலங்களில் நிர்வகிக்கப்படுவது.

      அனுமதியுடன் தற்காலிகமாக அமைக்கப்படுவதும் உண்டு.

      இந்த ஆண்டு அழகர் எழுந்தருளிய மண்டபங்கள் 410.

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சித்திரை திருவிழா நிகழ்ச்சி கண்டு களித்தேன் நண்பரே நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சித்திரை திருவிழா சிறப்பாக நடை பெற்றதைக் கண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமை ஐயா...

    உதவின அனைவருக்கும் நன்றிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்றும் உரியது.
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. தங்களால் சித்திரைத் திருவிழாவினைக் காணும் பேரு பெற்றேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. தொடர்ந்து உங்களுடன் விழாவினைப் பார்த்து வருகிறோம். தங்களின் இறைப்பணி தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. சித்திரைத் திருவிழா குறித்த தகவல்கள்,ப்டங்கள் அருமை. தரிசித்தோம் தங்கள் வழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      சித்திரைத் திருவிழாவினைத் தரிசித்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..