நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 24, 2013

கள்ளழகர் வருகிறார்..

வைகையில் கலந்த கருணைக் கடல்!... 


108 திவ்யதேசங்களில் ஒன்றான ''திருமாலிருஞ்சோலை'' எனப்படும் அழகர் கோவிலின் சார்பில் சித்திரைத் திருவிழா தல்லாகுளம் பெருமாள் கோயிலில் 10/4 அன்று காலை பந்தல் கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. 


மதுரையில் மீனாட்சிக்கு சுந்தரேசுவரருடன் திருமணம் நிறைவேறியதும் அதைத் தொடர்ந்து அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும். இதன் பொருட்டு,

23/4  செவ்வாய் மாலை 5.30 மணிக்குமேல் 6 மணிக்குள் கள்ளழகர் கண்டாங்கிப் பட்டு உடுத்தி, கைத்தடி, கம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திலிருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். 

கள்ளந்திரி, அப்பன் திருப்பதி உள்பட வழிநெடுக 18 மண்டபங்களில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். 

24/4 புதன் கிழமை அதிகாலையில் - 21 கி.மீ. தூரத்தைக் கடந்து - மதுரை மாநகருக்கு வரும் கள்ளழகரை மூன்று மாவடி பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்று  எதிர்சேவை நடத்துகின்றனர். 

அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் இரவு 2 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை பெருமாள் ஏற்றுக்கொண்டு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். 

அங்கு விடிய விடிய அழகருக்கு பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர் 3 மணிக்கு தல்லாகுளத்தில் ஆயிரம் பொன் சப்பரத்தில் திருக்காட்சி.

மறுநாள்  25/4 வியாழன் அன்று காலை 7.31 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக - லட்சக் கணக்கான பக்தர்கள் - ''கோவிந்தா!... கோவிந்தா!...'' - என்று தரிசனம் செய்து மகிழ, 


மக்கள் வெள்ளத்தில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகின்றார். மக்கள் அனைவரும் ''அழகர் பச்சைப்பட்டு உடுத்தி வரவேண்டும்..'' - என்று ஏங்கியிருப்பர். இருப்பினும் உடுத்தும் பட்டு அழகரின் விருப்பம்.

அழகர் வரும்போது மக்கள், வெல்லம் பொரிகடலை கலந்து பிரசாதமாக ஒரு சொம்பில் வைத்து அதை வாழை இலையால் மூடி, அதன் மேல் கற்பூரம் ஏற்றி தாங்களாகவே - தங்கள் உளம் நிறைந்த - அழகருக்கு ஆரத்தி எடுத்து மகிழ்வர்.


கோடை வெயிலின் உக்ரம் குறைவதற்காக - கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள்  மக்களின் மேல் நீரைப் பீய்ச்சி அடிப்பார்கள். நேர்த்திக் கடனாக மக்களுக்கு விசிறிகள் கொடுப்பதும், தண்ணீர், பானகம், மோர் வழங்குவதும் அன்னதானம் நடைபெறுவதும் - என மதுரையே கோலாகலமாக இருக்கும் தருணம்.

தொடர்ந்து காலை 11 மணிக்கு ராமராய மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு தீர்த்தவாரி நடைபெறும். 

அன்று பகலில் ராமராயர் மண்டபத்தில் அங்கப்பிரதட்சணம் நடைபெறுகிறது. இரவில் வண்டியூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் திருக்கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம்.

26/4- வெள்ளி அன்று காலை சேஷ வாகனத்தில் புறப்படும் கள்ளழகர், வைகை ஆற்றில் பிற்பகலில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கிறார். அன்றிரவு -

ராமராயர் மண்டபத்தில் விடியவிடிய தசாவதாரத் திருக்கோலம் நிகழ்கின்றது.

27/4- அதிகாலை மோகினி அவதாரத்தில் கள்ளழகர் காட்சியளிக்கின்றார்.. பிற்பகல் ராஜாங்க திருக்கோலத்தில் அனந்தராயர் பல்லக்கில் புறப்படுகிறார். அன்றிரவு தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருள்கின்றார்.

28/4- அன்று கருப்பசுவாமி கோவிலில் விடைபெற்று, பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி திருமலையை நோக்கிப் புறப்படுகின்றார். அன்றிரவு அப்பன் திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் மண்டபங்களில் அழகரின் தரிசனம் வேண்டி  காத்திருப்பார்கள். 
29/4  திங்கள் காலையில் கள்ளழகர் - அழகர்மலை சென்றடைகிறார். 
30/4 செவ்வாய் அன்று விடையாற்றி - உற்சவ சாந்தி, மஞ்சள்நீர் சாற்று முறையுடன் சித்திரைத் திருவிழா மங்களகரமாக நிறைவு பெறுகிறது.
சித்திரைத் திருவிழா இனிதே நிறைவு பெற்றாலும், 
வீட்டின் வெளியே சாலையில் நம் பொருட்டு வழிநடையாய் எழுந்தருளிய கள்ளழகரை -  கண்ணாரக் கண்டு மகிழ்ந்து கை தொழுது வணங்கினாலும், வீட்டுக்குள் நுழைந்ததும் மனம் எண்ணும்  - 
அடுத்து எப்போது அழகர்  வருவார்?.... 
கள்ளழகர் திருவடிகளே சரணம்!...

2 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..