நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 09, 2015

ஆரூர் குடமுழுக்கு

பூங்கோயில் எனப் புகழப்படும் திருக்கோயிலில் -
கொட்டும் மழையில் சிறப்புடன் - திருக்குடமுழுக்கு நிகழ்ந்தது..

திரு ஆரூரில் - பிறக்க முக்தி என்றனர் ஆன்றோர்..

ஐம்பூதப் பகுப்பினில் - மண்ணின் தலமாகத் திகழ்வது - திருஆரூர்..
மிகத் தொன்மையான திருத்தலம் - என்று கணிக்கப்படுவது..

கிழக்கு ராஜகோபுரம்
விடங்கத் தலங்கள் ஏழனுள் - முதலாவதான திருத்தலம்..
கோயில் ஐவேலி, குளம் ஐவேலி - எனும் புகழினை உடையது..

மூர்த்தி, தலம், தீர்த்தம் - எனும் சிறப்புடன் சக்தி பீடமாகவும் திகழ்வது..
நால்வராலும் போற்றி வணங்கப்பட்ட பெருமை உடையது..

எண்ணரும் சிறப்புகளை உடைய திருக்கோயிலுக்கு -
கடந்த திருமுழுக்கு 2001ல் நிகழ்ந்துள்ளது..

பதிநான்கு ஆண்டுகளுக்குப் பின் -
நேற்று (8 நவம்பர்) காலை திருக்குடமுழுக்கு நடைபெற்றது..

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து விட்டு,
வீட்டிலிருந்து புறப்படும்போது சிலுசிலு என்று காற்று வீசிக் கொண்டிருந்ததே தவிர, மழைத் தூறல் ஏதும் இல்லை..

காலை 6.00 மணிக்கு தஞ்சை ஜங்ஷனில் இருந்து காரைக்கால் பாசஞ்சர் புறப்பட்ட போதும் - மழைத் தூறல் ஏதும் இல்லை..

நீடாமங்கலத்தைக் கடந்ததும் - பூஞ்சாரலுடன் மழைத் தூறல்..

அதற்குப் பின் -


ஆரூர் ஜங்ஷனில் இறங்கி, திருக்கோயில் சென்று -
திருக்குடமுழுக்கினைக் கண்டு, சந்நிதிகளைத் தரிசித்தபடி,
திருச்சுற்றில் வலம் வந்து வணங்கியபின் -

ஆரூரிலிருந்து மதியம் இரண்டு மணிக்கு திருச்சி செல்லும் பாசஞ்சரில் புறப்பட்டு - வீட்டுக்கு வந்து சேரும் வரை மழை விடவே இல்லை..

திருக்கோயிலினுள் - கொட்டும் மழையினூடாகப் படமெடுத்தது - இனிமை..

அவற்றுள் சில படங்களும் காணொளியும் - இன்றைய பதிவில்!..

கிழக்கு ராஜகோபுர விநாயகர்

ஸ்ரீ அசலேஸ்வரர் திருக்கோயில்


அசலேஸ்வர மூலத்தான திருக்குடமுழுக்கு
கிழக்கு ராஜகோபுரங்கள்
வடக்கு ராஜ கோபுரம்


ஸ்ரீ ஜேஸ்டா தேவி


மேற்கு ராஜகோபுரம்

கடந்த நான்காம் தேதி பூர்வாங்க - யாகசாலை பூஜைகள் தொடங்கின..

எட்டுகால வேள்விகள் நிறைவேறி - பூர்ணாஹூதி மகாதீபாராதனை நடந்தபின் - அதிகாலையில் திருச்சுற்றிலுள்ள 80 சந்நிதிகளின்
198 கும்பங்களுக்கு திருக்குடமுழுக்கு நடத்தப்பெற்றது..

அதன் பின், இரண்டாம் கட்டமாக,

திருமூலத்தானம், தியாகேசர் சந்நிதி, நீலோத்பலாம்பிகை சந்நிதி, கமலாம்பிகை சந்நிதி, அசலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் ஒன்பது ராஜ கோபுரங்கள் - அனைத்திற்கும்,

காலை 9.30 மணியளவில் மகாகும்பாபிஷேகம் நிகழ்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது..




கொட்டும் மழையில் ஆழித்தேர்
திருப்பணி செய்யப்பெற்ற ஆழித்தேரின் வெள்ளோட்டம் - சென்ற மாதம் 26 அன்று நடந்தது..

ஆனால் - இன்றைக்கு,
மற்ற தேர்களுடன் கடும் மழையில் - ஆழித்தேர் நின்று கொண்டிருக்கின்றது..

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ஆழித்தேர் -
முறையாக பாதுகாக்கப்படவேண்டும் - என, மனதில் ஆவல் மேலிட்டது..

அந்த ஆவலுடன் -


ஆரூரில் இருந்து மழையினோடும் மகிழ்ச்சியினோடும் - தஞ்சைக்குத் திரும்பினேன்..

ஐயன் ஆரூரனும் அன்னை கமலாம்பிகையும்
அனைவருக்கும் நலங்களையும் வளங்களையும் 
வழங்கியருள்வார்களாக!..

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்தநாளோ
மான்மறிக்கை ஏந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருஆரூர்க் கோயிலாய்க் கொண்ட நாளோ!.. (6/34)
-: திருநாவுக்கரசர் :-

ஆரூரா.. ஆரூரா!.. 
தியாகேசா.. ஆரூரா!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
* * *