நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 31, 2019

ஐயாறடைகின்ற போது..

இன்றைக்கு ஆடி அமாவாசை...

அத்துடன் - 
அப்பர் பெருமான் திரு ஐயாற்றில் திருக்கயிலாய தரிசனம் கண்ட நாள்..

நமது தமிழ்ச்செல்வியும் அவளது கணவர் செந்தில்நாதனும்
அவர்களுடன் தாமரைச்செல்வியும் திருஐயாற்றுக்கு கயிலாய தரிசனம் காண்பதற்கு வந்திருக்கின்றார்கள்...

நாமும் அவர்களுடன் பயணிப்போம்!...



செல்வி!.. தாமரை கையைப் பிடித்து அழைத்து வா.. கூட்டம் நெரிசலா இருக்கு!.. தாமரை நீயும் கவனமா வாம்மா!..

சரிங்க.. அத்தான்!..

ஏங்க.. நீங்க காலைல.. வந்தீங்களே...
அப்போ இவ்வளவு கூட்டம் இருந்ததா?..

சரியாப் போச்சு!... பூசப் படித்துறையில கால் வைக்க முடியலே... அமாவாசை தர்ப்பணத்துக்கு வந்தவங்க பாதிப்பேர் இன்னேரம் வீட்டுக்குப் போயிருப்பாங்க!.. அதான் கூட்டம் கொஞ்சம் குறைவா இருக்கு..

ஏன்.. அத்தான்!... அமாவாசை தர்ப்பணம்..ன்னா திருவையாத்துல மட்டும் ஏன் இவ்வளவு கூட்டங் கூடுது?..


காசிக்கு சமமான ஆறு ஸ்தலங்கள்..ல திருவையாறும் ஒன்னு... அதுவுமில்லாம.. அப்பர் ஸ்வாமிகளுக்கு கயிலாய தரிசனம் கிடைத்ததும் இங்கே தான்!.. அதனால தான் இங்கே காவிரியில முழுகி தர்ப்பணம் செய்றதை புண்ணியமா நினைக்கிறாங்க!..

என்னென்ன தலங்கள்...ன்னு சொல்லுங்களேன்!..

ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரி மாயூரம் அர்ஜூனம்
சாயாவனம் ச ஸ்ரீவாஞ்சியம் காசீ க்ஷேத்ரே ஸமான ஷட்..

அப்படின்னு ஸ்லோகம்..

திருவெண்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், சாயாவனம், ஸ்ரீ வாஞ்சியம் - ஆக, ஆறு ஸ்தலங்கள்..

அத்தான்.. நல்ல விவரமாத் தான் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க!..

எல்லாம் அங்கே இங்கேன்னு படிச்சதுதான்.. 

ஏங்க.. பூசப் படித்துறைக்குப் போய்ட்டு வரலாமா?..

கூட்டம் ஏகத்துக்கும் இருக்கே செல்வி!... தாமரையை வேற அழைச்சிக்கிட்டு கஷ்டப்படுத்தனுமா?..

அக்கா.. எனக்கொன்னும் பிரச்னை இல்லை!.. வாங்க போகலாம்!..

இதுதாம்மா பூசப் படித்துறை.. புஷ்ய மண்டபம்..ன்னும் சொல்லுவாங்க.. எல்லா திருவிழா சமயத்திலயும் ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் இந்த மண்டபத்தில எழுந்தருள்வாங்க... இந்த பக்கத்தில இருக்கிற மண்டபங்கள்...ல தான் திதி கொடுக்கிறது தர்ப்பணம் பண்றதெல்லாம் நடக்கும்..

ஓ!...

அப்படியே மெதுவா இறங்கி காவிரிய கும்பிட்டுட்டு வாங்க!... 
கோயிலுக்கு உள்ளே சீக்கிரம் போயிடனும்... அப்பதான் சாமி பார்க்க
வசதியா இருக்கும்!...

தாமரை... அக்கா கையை பிடிச்சுக்கம்மா!...

இதுதான் தெற்கு கோபுர வாசல்.. யமனை விரட்டிய ஆட்கொண்டார் சந்நிதி.. இவரை கும்பிட்டுக்கோங்க... யமபயம் இருக்காது..எதிர்பாராத அடிதடி, விபத்து இதெல்லாம் ஏற்படாது!...

இதென்ன அத்தான்.. கேணியில இருந்து புகை வருது?..

அது கேணி இல்லேம்மா.. குங்கிலியக் குண்டம்!..

அப்படின்னா?..

திருக்கடவூர்ல கலயன்.. ன்னு ஒரு சிவபக்தர் வாழ்ந்தார்.. அவருக்கு சிவாலயங்கள்..ல குங்கிலிய தூபமிடுவது இஷ்டமான ஒன்று.. அவர் ஏற்படுத்திய குண்டம் தான் இது.. 

அவர் தனது சிவப்பணியினால் சிறப்பு பெற்றவர்.. குங்கிலியக் கலய நாயனார்.. அப்படின்னு சிறப்பு.. அவர் ஏற்றி வைத்த குண்டம் காலகாலமா புகைந்து கொண்டிருக்கின்றது..

ஏன் அத்தான்.. மழைக் காலங்கள்....லயும் இந்தக் குண்டம் புகையுமா?..

மழைக் காலத்துல மேலே பந்தல் போட்டு இருப்பாங்க!..
அதனால மழையினால பாதிப்பு இருக்காது...
குங்கிலியம் போட்டுட்டு கோயிலுக்குள்ளே போவோம்!..

தாமரை.. இப்போ நாம இருப்பது நான்காம் பிரகாரம்.. இந்த கோயிலுக்கு வெளி வீதியைச் சேர்த்து ஐந்து பிரகாரம்.. இதற்குள்ளே மூன்று கோயில்கள்.. மூலஸ்தானம்.. வடகயிலாயம்.. தென் கயிலாயம்..

அதோ தென்மேற்கு பக்கமா தெரியுதே..அந்தக் கோயில் தான்
அப்பர் ஸ்வாமிக்கு தரிசனம் கிடைத்த தென் கயிலாயம்..
வடக்கு பிரகாரத்தில வட கயிலாயம்..ன்னு ஒரு கோயில்..
ராஜராஜ சோழனுடைய மனைவியான உலகமாதேவி கட்டியிருக்காங்க!..

தென்கயிலாயம் தரிசனம் செய்யத் தான் இவ்வளவு கூட்டமும்!... மூலஸ்தானம் எல்லாம் கூட்ட நெரிசல் குறைந்தால் தான் பார்க்க முடியும்..


திருநாவுக்கரசருக்கு கயிலாய தரிசனம் என்பது என்ன வரலாறு அத்தான்?..

காளஹஸ்தி தரிசனம் முடிந்ததும் அங்கேயிருந்து திருக்கோகர்ணத்தைத் தரிசித்தார்.. அப்படியே வடநாட்டிலுள்ள தலங்களையும் தரிசிக்க ஆவலானது.. அத்தோடு கயிலாய மாமலையையும் தரிசிக்க முடிவெடுத்தார்..

வயதான காலத்தில் உடன் வந்தவர்களை மறுத்து விட்டு ஸ்வாமிகள் தன்னந்தனியராக நடந்தார்...

..... ..... .....

கயிலாய மாமலையில் ஏறும் போது மிகவும் சிரமத்துக்கு ஆளானார்.. கால்கள் தேய்ந்து போயின.. கைகளை ஊன்றி தவழ்ந்து சென்றார்.. முழங்கால்களும் தேய்ந்து முறிந்தன.. அதன்பிறகு ஊர்ந்தபடியே மலைச் சரிவில் பயணித்தார்..

என்ன கஷ்டம்!.. என்ன கஷ்டம்!.. இருந்தாலும் வயதான பெரியவருக்கு தான் எவ்வளவு தைரியம்!..

தாமரை.. ஏம்மா.. கண்ணு கலங்குது!..

இதோ இருக்கிற தஞ்சாவூர்..ல இருந்து திருவையாறு வர்றதுக்குள்ள.. நாம நொந்து நூலாகிப் போறோம்!.. கடுமையான பனிமலையில தன்னந்தனியா வயசான காலத்தில அதுவும் ஊர்ந்தபடியே போனாங்களே... எல்லாம் நமக்காகத் தானே.. அவ்வளவு கஷ்டத்தையும் ஏத்துக்கிட்டாங்க...

தாமரை.. அப்பர் ஸ்வாமிகளுக்கு முன்னே.. காரைக்காலம்மையாரும் இப்படித் தான் கயிலாய மலையில கஷ்டப்பட்டு தலையை ஊன்றிப் போனாங்க!.

ஆமாம் அக்கா!.. அவங்க வரலாற்றைப் படிக்கிறப்பவும் கேக்கிறப்பவும் கண்ணீர் வருமே!..

அதுக்கு அப்புறம்.. அப்பர் ஸ்வாமிகள்.. மானசரோருவ ஏரிக் கரைக்கு வந்துட்டாங்க.. அதுக்கு மேலே அவங்களா..ல நகரக்கூட முடியலே.. இருந்தாலும் மனமுருகிப் பதிகம் பாடினார் - ஸ்வாமிகள்..

திருக்கயிலாய மாமலை 
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி  
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி!..

அப்போ.. ஈஸ்வரன் துறவியா உருமாறி வந்தார்..

ஐயா..  இதுக்கு மேலே போறதுக்கு 
உங்க உடம்பு ஒத்துக்காது..
வந்த வழியே திரும்பிப் போய்டுங்க!.

- அப்படின்னு ஒரு வெடிகுண்டைப் போட்டார்..

அதெல்லாம் முடியாது.. கயிலை தரிசனம் செய்யாம இங்கேருந்து போக மாட்டேன்!...


- அப்படின்னு விடாப்பிடியா இருந்தார் திருநாவுக்கரசர்....

பக்தனோட மன உறுதி பரமனுக்கு சந்தோஷமா இருந்தது..

நீ வந்து என்ன - என்னைத் தரிசனம் செய்றது?..
நானே வந்து உனக்கு தரிசனம் தர்றேன்!..

- அப்படின்னு முடிவு செஞ்சார் - ஈஸ்வரன்....

ஐயா.. இதோ இந்த தடாகத்தில மூழ்குங்க.. நீங்க நினைச்ச மாதிரி சிவ தரிசனம் காணலாம்..


- அப்படின்னு சொன்னார்..

அதைக் கேட்ட அப்பர் ஸ்வாமியும் அந்த ஏரியில இறங்கி தண்ணீரில் மூழ்கினார்.. அப்பர் ஸ்வாமி எழுந்தபோது காட்சி கொடுத்த இடம் தான் திருவையாறு..

சிவனும் சக்தியும் இந்த உலகத்தில உள்ள உயிர்த் திரளா ஆனந்தத் திருக்காட்சி கொடுத்தாங்க.. யானையாக, பசுவாக, மானாக, கிளியாக புறாவாக, கோழியாக, பன்றியாக - இப்படி சகல உயிர்கள்..லயும் சிவ சக்தி தரிசனம் கண்டார் அப்பர் ஸ்வாமிகள்..

அதனால தான் கண்டறியாதன கண்டேன்!.. ந்னு பாடி உருகினார்..

அந்தத் திருப்பதிகத்தில இருந்து ரெண்டு பாட்டைத் தான் பாடுங்களேன்..

ரெண்டு என்ன?.. மூனு பாடலே பாடுகிறேன்!...

காதல் மடப்பிடியோடும் களிறு 
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதுஞ்சுவடு படாமல் ஐயாற டைகின்றபோது
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்!..

பேடையொடாடிச் சேவல்
பிறையிளங் கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிள, பூங்குயிலாலும் ஐயாறடைகின்ற போது
சிறையிளம் பேடையொடாடிச் சேவல் வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்!..

பேடையொடாடும் நாரை 
பேடை மயிலொடுங் கூடி 
ஏடு மதிக்கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடிக்
காடொடு நாடுமலையுங் கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்றபோது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்!..

ஆகா.. தித்திக்கும் தேவாரம்... அற்புதம்.. அருமை!..

தாமரை.. அதோ.. சாமி புறப்பாடு ஆயிற்று!.. 


எம்பெருமானே!.. ஐயாறப்பா.. தாயே.. அறம் வளர்த்த நாயகி!.. 
எல்லாரையும் நல்லா வைக்கணும் சாமி!..

ஐயாறு அகலாத செம்பொற்சோதீ!..
ஐயாறா.. ஐயாறா.. சரணம். சரணம்!..

காவாய் கனகத் திரளே போற்றி..
கயிலை மலையானே போற்றி.. போற்றி!..


தொடர்ந்து பெரு முழக்கமாக சிவகண வாத்தியங்கள் அதிர்கின்றன..

ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியின் திருமுன்பாக அப்பர் பெருமான்!.

ஏக காலத்தில்
ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகிக்கும்
அப்பர் பெருமானுக்கும் மகா தீபாராதனை நிகழ்கின்றது... 

அடியார்கள் கண்களில் எல்லாம் ஆனந்தக் கண்ணீர்..
தாமரையும் செல்வியும் செந்தில் நாதனும் மெய்மறந்து நிற்கின்றனர்..

அப்பர் கண்ட கயிலாய தரிசனம் அடியவர்களுக்கும் ஆயிற்று..
அப்படியே அத்திருக்காட்சி நமக்கும் ஆயிற்று...

அந்த அளவில் - அடியவர் குழாம் ஐயாறு அகலாத செம்பொற்சோதியின் திருமூலஸ்தானத்தை நோக்கி நகர்கின்றது..

பூதங்கள் பலவும் வைத்தார் பொங்கு வெண்ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயன் ஐயாறனாரே!.. (4/38)
-: அப்பர் ஸ்வாமிகள் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

28 கருத்துகள்:

  1. நீண்ட இடைவெளிக்குப்பிறகு தாமரைச்செல்வியும், தமிழ்ச்செல்வியும் கலந்துரையாடியது அருமையாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
  2. ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகி திருமுன்பாக அப்பர் பெருமான் வணங்கிய கோலம் கண் முன் வந்தது. அந்த படமும் அழகு.
    திருத்தாண்டகம் பாடல்,மாதர்பிறைகண்ணியானை தேவார திருப்பதிக பாடல்களை பாடி தரிசனம் செய்தேன்.
    வாழ்த்துக்கள். நன்றி.
    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. திருவையாறு தரிசனம் எனக்கு இடுகையின் வாயிலாக வாய்த்தது. நாங்கள் சென்றிருந்தபோது, நேரமின்மை காரணமாக இந்தக் கோவிலுக்குச் செல்லவில்லை.

    இன்றைய இடுகை ரொம்ப நல்லா வந்திருக்கு.

    விலங்கோ பறவையோ...அவங்க தனிமையா இருக்கவும் நீங்க விடலை. போய் படம் எடுத்திருக்கீங்க (காவிக்கொண்டுவந்து போட்டிருக்கீங்க)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      அந்தப் படங்கள் எல்லாம் இணையத்தில் கிடைத்தவை...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. அப்பர் கண்ட அனைத்துக் காட்சிகளையும் கண் முன்னே கொண்டு வந்த பதிவு. இன்னொரு முறை திருவையாறு போகணும்னு ஆவலைத் தூண்டி விட்டது! அழகான விளக்கங்கள், அருமையான சொல்லாடல்கள், தமிழ்ச்செல்வியாகவும், தாமரைச் செல்வியாகவும் வந்து கேட்கும் கேள்விகளுக்கு செந்தில்நாதனாகப் பதில் அளிக்கும் அழகு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் தங்களது நல்லாசிகளே..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. ஸ்ரீவாஞ்சியம்... அட... எங்கள் கைவிட்டுப்போன எமவாகன உபயத்துக்கான வாய்ப்பு மறுபடி வந்து கதவைத் தட்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      ஸ்ரீ வாஞ்சியம் தரிசனம் செய்திருக்கின்றீர்களா....

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. நினைவு தெரியாத வயதில் சென்றபின், சென்ற வருடம் ஒரு அவசர விசிட் செய்தோம்.

      நீக்கு
  6. உரையாடலிலேயே பல தகவல்களை சொல்லி விட்டீர்கள். கயிலாய மலை ஏறியவர் யாருமில்லை. ஏறச் சென்ற ஆஃபரையும் ஈசன் விடவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      காரைக்காலம்மையாரும் அப்பர் பெருமானும் திருக்கயிலை சென்று திரும்பியவர்கள்...

      சுந்தரர் ஒருவரே திருக்கயிலையில் ஐக்கியமானவர்...

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. சேரமான் பெருமாள் நாயனார்? ஔவையார்?

      நீக்கு
  7. இந்த அளவில் நானும் தரிசனம் முடித்துக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  8. கண்டேன் அவர் திருப்பாதம்..கண்டறியாதன கண்டேன். இந்த பாடலுக்கு நிகர் எது? அடடா? அனுபவித்துக்கொண்டே இருக்கலாம் அவனின் திருப்பாதங்களை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. ஆடி அமாவாசை இன்று தான் எங்களுக்கு.
    ஈசனை, அறம் வளர்த்த நாயகியையும் கோலாஹலமாகத் தரிசித்தாயிற்று.

    அப்பர் மஹானுக்குக் கிடைத்த அற்புத தரிசனம்
    நெஞ்சை நெகிழ்த்துகிறது.

    குங்குலிய நாயனாரும் சேரப் பதிவே மணக்கிறது.
    உங்களுடனும், தமிழ்ச் செல்வி,தாமரைச் செல்வியுடன்,
    பிரகாரம் சுற்றிக் கூட்டத்தில் ஒதுங்கி இறைவனையும் உணர்ந்தோம்.

    மிக மிக நன்றி துரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றியம்மா...

      நீக்கு
  10. உரையாடல் மூலம் மிகவும் ஈர்த்து விட்டீர்கள் ஐயா... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. துரை அண்ணா வழக்கம் போல தாமரை செல்வி, அத்தான் என்று உரையாடல் மூலம் பல வரலாறுகள், விவரங்கள் எல்லாம் அருமையாகச் சொல்லியிருக்கீங்க.

    அப்ப கனி வேண்டி முருகன் உலகை மயில் வாகனத்தில் பறந்திட, பிள்ளையார் கனி வேண்டி அம்மை அப்பன் தான் உலகம் என்று அம்மை அப்பனை வணங்கிப் பெற்றது போல காசிக்குச் செல்ல முடியாமல் போனால் காசிக்கு நிகரான இந்த ஆறு தலங்களில் திருவையாற்றில் கூடப் பிரார்த்தனை செய்யலாம் போல!! அப்பருக்கு தரிசனம் கிடைத்த வரலாறும் அறிந்தது என்றாலும் உங்கள் எழுத்திலும் வாசித்து மகிழ்ந்தோம்..

    படங்கள் எல்லாம் வெகு சிறப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா...

      ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பார்கள்..

      அது போல காசிக்குச் செல்ல இயலாதவர்கள் அது குறித்து வருந்தாமல் அருகிருக்கும் சிவாலயத்தையே காசியாகப் பாவித்து வணங்கலாம்...

      ஐயன் அருள் செய்து நிற்பான்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
    2. மாம்பழக் கதையின் தத்துவமே தனி தி/கீதா, சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா நம்மைப் போன்ற பாமரர்களுக்காக மாம்பழம், அண்ணன், தம்பி சண்டை என்று சொல்லிச் சென்றால் தான் புரியும் எனச் சொல்லுகின்றனர். உண்மையான தத்துவமே வேறே!

      நீக்கு
  12. அன்பின் அக்கா...

    நம்மை என்று எங்களுடன் உங்களையும் ஏன் சேர்த்துக் கொள்கிறீர்கள்!?...

    ( இஃகி..இஃகீ)

    அருணகிரியார் மட்டுமே
    தந்தை வலத்தால் அருட்கைக் கனியோனே!.. என்று விநாயகரைக் குறிப்பிடுகின்றார்..

    இதன் மெய்ப்பொருள் என்பது வேறு....

    வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
  13. எத்தனை தகவல்கள்....

    ஐயாறப்பனை தரிசிக்க உங்கள் பதிவு உதவிற்று. ஒரு முறை இங்கே சென்று வர வேண்டும் என மனதுக்குள் அவா... அழைப்பு வர வேண்டும்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..