நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 03, 2015

அலை தவழும் செந்தில்

திருச்செந்தூர்..

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் இரண்டாவதான திருத்தலம் -

இத்திருக்கோயிலின் முக்கியத் திருவிழாக்களுள் ஆவணித் திருவிழாவும் ஒன்று.


நிகழாண்டின் - ஆவணிப் பெருந்திருவிழா - நேற்று புதன்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது..

முன்னதாக - செவ்வாய்க்கிழமை மாலையில் - திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பெற்ற கொடிப்பட்டம் ஊர்வலமாக வந்து  திருக்கோயில் சேர்ந்தது..

புதன் கிழமை நள்ளிரவுக்குப் பின் ஒரு மணிக்கு திருநடை திறக்கப்பட்டு - 1.30 மணியளவில் விஸ்வரூப தரிசனமும் 2.00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நிகழ்ந்தது.

அதன்பின் - கொடிமரத்துக்கு பதினாறு வகையான அபிஷேகங்கள் நடந்த பின் - அதிகாலை 5.15 மணிக்கு கொடியேற்றமும் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் மகா தீபாராதனையும் நடந்தது..

மாலை நான்கு மணியளவில் - தங்க சப்பரத்தில் அப்பர் பெருமான் எழுந்தருள - திருவீதிகளில் உழவாரப் பணி செய்து திருக்கோயில் வந்து சேர்ந்தார்..

தொடர்ந்து இரவில் ஸ்ரீபலி நாயகர் அஸ்திர தேவருடன் தந்தப் பல்லக்கில் ஒன்பது சந்திகளில் திருவீதி உலா எழுந்தருளினார்.

திருவிழா நாட்களில் - காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் - கண் கொள்ளாக் காட்சியாக கந்தவேள் எழுந்தருள்கின்றான்..

இப்பெருந் திருவிழாவில் தான் - முருகப்பெருமான் - மும்மூர்த்திகளாக அம்சம் கொண்டு அருள்கின்றனன்..

ஐந்தாம் திருநாளின் போது இரவு 7.30 மணியளவில் குடவருவாயில் தீபாராதனை. 

அச்சமயம் செந்தில் நாதனும் தேவியரும் தனித்தனியாக தங்கமயில் வாகனங்களில் வீதியுலா எழுந்தருள்வர்.

ஆறாம் திருநாள் காலையில் கோரதம்.. இரவில் வெள்ளி ரதம்..

ஏழாம் திருநாளன்று அதிகாலையில் 5.30க்குள் சண்முகப்பெருமான் உருகு சட்ட சேவை நிகழும்.

தொடர்ந்து காலையில் ஸ்வாமி வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபத்தை சென்றடைவார். அங்கே சிறப்பு அபிஷேக அலங்கார தீப ஆராதனை நிகழும்.


அன்றைய தினம் மாலை - 
தங்க சப்பரத்தில் சிவப்புப் பட்டு சாத்தி ஸ்ரீசிவ அம்சமாக எழுந்தருள்வார்..

இவ்வேளையில் தான் முன்புறம் முருகனாகவும் பின்புறம் நடராஜராகவும் திருக்கோலம் கொள்கின்றார்..

ஏன்.. இப்படி!?...

திருச்செந்தூருக்கு - அருணகிரிநாதர் வந்தபோது - அவர் மனம் மகிழும்படியாக செந்தில் நாதன் சிவநடனம் காட்டியதாக வரலாறு..

அருணகிரியாரின் பொருட்டு -  நடனங்காட்டிய திருக்கோலத்துடன் நமக்கும் அருள்கின்றான்..

எட்டாம் திருநாளின் போது காலையில் வெள்ளிச் சப்பரத்தில் வெண்பட்டு சாத்தி ஸ்ரீபிரம்ம அம்சமாக தரிசனம்.. 

மேலக்கோயில் வந்தடையும் பெருமானுக்கு - சிறப்பு அபிஷேக அலங்கார தீப ஆராதனை நிகழும்.

பகல் 12 மணிக்கு மேல் - பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சைப் பட்டு சாத்தி - 
ஸ்ரீ விஷ்ணு அம்சமாகத் தரிசனம் அருளி - திருக்கோயில் வந்து சேர்வார்..

ஒன்பதாம் திருநாளன்று சிவசண்முகப்பெருமான் - தங்க திருக்கயிலாய வாகனத்திலும் தேவியர் வெள்ளிக் கமல வாகனங்களிலும் எழுந்தருள திருவீதியுலா..

பத்தாம் திருநாளன்று - திருத்தேரோட்டம்.. 

செப்/11 அன்று காலை ஆறு மணிக்குள்ளாக - தேவியருடன் திருமுருகன் திருத்தேருக்கு எழுந்தருள்கின்றனன்.

சிறப்பு பூஜைகளுடன் தீப ஆராதனை நிகழ்ந்ததும் - தேர் வடம் பிடிக்கப்படும்.

செப்/13 அன்று மாலை - திருமுருகன் தேவியருடன் வீற்றிருக்க மஞ்சள் நீராட்டு நிகழும்.

அந்த அளவில் - பன்னிரண்டு நாள் திருவிழா மங்கலகரமாக நிறைவுறும்..


சில ஆண்டுகளுக்குமுன் - எட்டாம் திருநாளில் தரிசனம் செய்திருக்கின்றேன்.. 

பற்பல அற்புதங்கள் நிகழ்ந்த திருத்தலம் - திருச்செந்தூர்..

அப்பர் பெருமான் - தம் திருவாக்கினால் - 

நம் செந்தில் மேய வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்!..

- என்று, திருமறைக்காட்டில் - சிவபெருமானைத் துதிக்கின்றார்..

விறல்மாரன் ஐந்து மலர்வாளி சிந்த
மிகவானில் இந்து - வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல ஒன்ற
வினைமாதர் தந்தம் - வசைகூற

குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
கொடிதான துன்ப - மயல்தீர
குளிர்மாலை யின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து - குறுகாயோ..

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த - மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் எறிந்த - அதிதீரா

அறிவால் அறிந்துன் இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் - களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த - பெருமாளே!..
(திருப்புகழ்)
* * *

திருமுருகனின் புகழ் பாடும்
தேவகோட்டை கமலா பழனியப்பன் 


அருணகிரிநாதருக்குத் திருநடனங்காட்டியருளிய வைபவத்தை -
அடுத்து வரும் பதிவுகளில் காண்போம்..


வந்த வினையும் வருகின்ற வல்வினையும் 
கந்தன் என்று சொல்லக் கலங்குமே - செந்தி
நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவவாராதே வினை..

முருகன் திருவருள் முன்னின்று காக்க!..
சரவண பவகுக சண்முக சரணம்!.. 
* * * 

24 கருத்துகள்:

  1. அன்பின் ஜி திருச்செந்தூராரின் திருவிழாத் தகவல்கள் நன்று
    காணொளி கண்டு திருமுருகனின் புகழ் பாடிய தேவகோட்டை கமலா பழனியப்பனின் படித்து மகிந்தேன் வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. திருச்செந்தூர் அழைத்துச்சென்றமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. தங்களின் இனிய பதிவினால் திருச்செந்தூர்த் தலப் பெருமைகளை
    அறிந்தேன் ஐயா!
    அற்புதம்!
    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. தங்களால் திருச்செந்தூருக்கு சென்று வந்த ஓர் உணர்வு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. திருச்செந்தூர் திருவிழா பதிவு மிக அருமை சார். திருச்செந்தூர் எங்கள் ஊரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவு தான். நாங்கள் அடிக்கடி திருசெந்தூருக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு வருவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      நாங்களும் வருடந்தோறும் தரிசிக்கும் திருத்தலம் - திருச்செந்தூர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

  6. மூன்று நான்கு முறை திருச்செந்தூருக்குச் சென்றிருக்கிறோம் சிவநடனம் செய்தி அறியாதது. ஒரு முறை கூட்டத்தில் தரிசனமே செய்ய முடியவில்லை. செந்தூரில் கடலில் நீராடுவது சுகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா

      நாங்கள் வருடந்தோறும் திருச்செந்தூர் செல்வோம்..
      எனினும் ஒரு முறை தான் ஆவணித் திருவிழா தரிசனம்..
      அதுவும் பச்சை சாத்தி அன்று தான் கண்டோம்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. திருச் செந்தூர் முருகனின் அற்புதங்கள் அழகுக் கோலங்கள் இனிய பாடலும் கண்டும் கேட்டும் மகிழ்ந்தேன். நம் ஊர்க் கோவில் நல்லூர் முருகனுக்கு திருவிழா நடக்கும் இக் காலத்தில் கண்டு களிக்க முடியாத துர்பாக்கியம். இருந்தாலும் இக் காணொளி மூலம் அக் குறை தீர்க்கப் பட்டது அப்படியே நல்லூர் முருகனோ என்று ஆச்சரியப் படும் அளவுக்கு அனைத்தும் ஒரே மாதிரி இருந்தது கண்டு சொக்கி விட்டேன். மிக்க நன்றி சகோ! வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அந்த திருவிழா - நல்லூர் கந்தன் கோயிலில் நடைபெற்றது என்றே நினைக்கின்றேன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்....ஆம் இங்கே அந்த செந்தில்நாதனைப் பற்றிய தகவல் அலை!!! அறியாதவை பல அறிந்து கொண்டோம். மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. செந்தூரின் ஆவணி நிகழ்வை இன்று அறிந்தேன் ஐயா! சில தடவை தருசனம் பெற்றேன் தையில் மலைப்பயணம் போகும் போது!ஆனால் ஆவணியில் போகும் வரம் கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      கவலை வேண்டாம். விரைவில் கேட்ட வரம் கிடைக்கும்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. வணக்கம்,
    திருச்செந்தூர் சென்றுள்ளேன், தங்கள் பதிவு மூலம் எனக்கு தெரியாத பல தகவல்கள் கண்டேன், அருமை. எப்படித் தான் தாங்கள் இவ்வளவு விடயங்கள் சொல்கிறீர்களோ???????
    தாங்கள் வியக்கும் வண்ணம் நானும் ஒரு பதிவு எழுத நினைத்துள்ளேன் முடியுமா? என தெரியல முயற்சிக்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      வருக.. வருக..
      தாராளமாக - நீங்களும் எழுதலாம்.. முடியாதது என்று ஏதாவது இருக்கின்றதா என்ன?..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. செந்தூர் முருகன் தரிசனம், முருகன் பாடல் மிக அருமை. சாய்ந்தாடு பாடல் இப்போதுதான் முதன் முதலாய் கேட்கிறேன், நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. அன்புடையீர்..

    நகரத்தார் அவர்களாகவே இயற்றி சீரான தாளத்துடன் பாடும் பாடல்கள் பலவும் கேட்டு மகிழத்தக்கவை.. செட்டி நாட்டிலிருந்து தஞ்சாவூர் வழியாக வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நடைபயணம் செல்லும் பக்தர்களிடம் நிறைய பாடல்களைக் கேட்கலாம்..

    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..