நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 02, 2014

மாண்புமிகு முதல்வர்

மதுரையம்பதிக்கு ஆவணி மூலத்தன்று குதிரைகள் வருகின்றன!..

அரிமர்த்தன பாண்டியனின் முகம் மலர்ந்தது. தோள்கள் பூரித்தன.


மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி!.. திருவாதவூரர்!.. பாண்டியப் பேரரசின் மாண்புமிகு முதல்வர்!.. தம்மைப் பற்றி புறங்கூறுவார் பேச்சைக் கேட்டு மனம் கலங்கி சினங்கொண்டு - உடன் அழைத்து வருக!.. என்றது எத்தனை பெரிய தவறு!..

அரிமர்த்தன பாண்டியன் பேரன்புடன் - திருவாதவூரரின் கரங்களைப் பற்றிக் கொண்டான். ஆவணி மூலத்திற்கு இன்னும் சில தினங்களே!..

கம்பீரமான குதிரைகளைப் பற்றிய கனவில் - பாண்டியன் களித்திருந்த வேளையில் -  அருகில் வந்து நின்றனர் -  வேறு சில அமைச்சர்கள்..

பேரரசர் பிழை பொறுத்தருள வேண்டும் - மீண்டும் திருவாதவூரரைப் பற்றிக் கூறுவதற்கு!.. அவர் தம்முடன் கொண்டு சென்ற பொருட்களைக் கொண்டு திருப்பெருந்துறை எனும் ஊரில் கோயில் ஒன்றினை எழுப்பியுள்ளாரே அன்றி குதிரை ஏதும் வாங்கவில்லை.

எமது சொல்லில் மாமன்னர் நம்பிக்கை கொள்ளவில்லையெனில் - இதோ நமது ஒற்றர்கள் -  நடந்தவை அனைத்தையும் கூறுதற்கு!..

ஒற்றர்கள் கூறியவை கேட்டுக் கொதித்தான் பாண்டியன்.  விளைவு!?..

திருவாதவூரர் கொடுஞ்சிறையில் இடப்பட்டார்.

திருப்பெருந்துறையில் குருந்த மரநிழலில் வீற்றிருந்த - ஞானகுருநாதனைக் கண்டு அவர்தம் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து வணங்கி - 

என்னையும் ஏற்றுக் கொள்வீராக!.. என்று பணிந்து நின்ற நாள் முதல் -  இன்று வரை என் செயலால் ஆவதொன்றும் இல்லையே!.. அப்படியிருக்க, குருநாதர் சொல்லி அனுப்பியபடி தானே, குதிரைகள் வரும் நாள் ஆவணி மூலம் என்று மன்னனிடம் கூறினோம்!.. அது குற்றமா!.. ஆவணி மூலத்திற்குத் தான் இன்னும் சில நாட்கள் இருக்கின்றனவே.. அதற்குள் இதென்ன கொடுமை?.. - 

பலவாறாகச் சிந்தித்த திருவாதவூரர் - எல்லாம் அவன் செயல் - என்றவாறு பாண்டியனின் ஆட்கள் இழைத்த துன்பங்களைத் தாங்கிக் கொண்டார். 

அதன் பின் -  இறைவன் திருவாதவூரருக்காக,

சாய்ந்த கொண்டையுந் திருமுடிச்சாத்தும் வாள்வைரம்
வேய்ந்த கண்டியும் தொடிகளும் குழைகளும் வினையைக்
காய்ந்த புண்டர நுதலும் வெண்கலிங்கமுங் காப்பும்
ஆய்ந்த தொண்டர்தம் அகம்பிரி யாதழகெறிப்ப..

குதிரைச் சேவகனாக - பரிமேல் அழகனாக மாமதுரையின் மாட வீதிகளில்  வலம் வந்தான்!..

குதிரைகள் வந்து விட்டதை அறிந்த அரிமர்த்தனன் -  திருவாதவூரரை சிறையிலிருந்தும் விடுத்தான்.

வனப்பு மிக்க குதிரைகளைக் கண்டு மனம் மகிழ்ந்த மன்னன் -

பெருவிலையுள்ள  முத்துமணி  மாலைகளையும் பட்டுப் பீதாம்பரங்களையும் அளித்து - அமைச்சுப் பணிகளை செய்யவல்லார் உம்மைப் போல் யாருளர்!.. - எனப் புகழ்ந்து நின்றான்.

பரிகள் அழகா!.. பரிமேல் வந்த சேவகன் அழகா!.. என அயர்ந்து  நின்றான் அரிமர்த்தனன்.

நல்லவிதமாக உம்மிடம் பரிகளை ஒப்படைத்தோம். இனி நாளை எது நடந்தாலும்  உமக்கும் எமக்கும் யாதொரு வழக்குமில்லை!.. - என்றவாறு  குறுஞ்சிரிப்புடன்  கயிறு மாற்றிக் கொடுத்தான் - குதிரைச் சேவகன்!..

ஆனால் - பாண்டியன் அடைந்த மகிழ்ச்சி அன்று இரவே - பறிபோனது.

குதிரைகளாக வந்த குள்ளநரிகள் எல்லாம் - காரிருள் சூழ்ந்த  நள்ளிரவில் தமது மெய் உருவினை அடைந்தன. ஊர் நடுங்க ஊளையிட்டன. 

அதோடல்லாமல்  - லாயத்தில் கட்டிக் கிடந்த கிழட்டுக் குதிரைகளைக் கடித்து குதறி விட்டு  காட்டுக்குள் ஓடி மறைந்தன.

கடுங்கோபத்தில் கருத்தழிந்த வேந்தன், மீண்டும் தன் முதலமைச்சரை சிறைப் பிடித்தான்.

புண்ணிய மறையோர் குலத்தில் பிறந்தனம் என்ற பெருமையைப் பூண்டிருந்தீரே!.. காலம் பார்த்து எண்ணரிய நிதிக் குவியல்தனைக் கவர்வதற்கோ நீர் அமைச்சர் ஆகியது!?.. பழுது செய்து விட்டீர்!.. பிறராகில் மிகக் கடுமையாக தண்டிக்கப்படுவர்!.. ஆயினும்... - என வெகுண்ட மன்னன்,

இவரை  வேறெங்கும் செல்லவிடாமல் தடுத்தும் கடுமையாக ஒறுத்தும் - குதிரை வாங்குதற்கென களஞ்சியத்திலிருந்து எடுத்துச் சென்ற நம் பொருளை வாங்குவீராக!.. - எனக்கூறி கடும் மனம் படைத்த ஏவலாளர் வசம் ஒப்படைத்தான்.

மன்னனின் சொல்லைத் தலைமேற்கொண்ட தண்டலாளர்கள் - தாம் நற்பெயர் பெற வேண்டும் என்ற நாட்டத்தினால் -

நமசிவாய வாழ்க!.. நாதன் தாள் வாழ்க!..
இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!..

- என்று சிந்தித்திருந்த பெருந்தகையாளரைப் பெருந்துன்பத்துக்கு ஆளாக்கினர்.

மனம் ஆறாத அரிமர்த்தனனின் ஆணையின்படி வைகையாற்றின் சுடு மணலில் நிறுத்தப்பட்டார்.

ஆய்ந்தறியாத் தன்மையினால் அழுக்காகிப் போனது மன்னனின் மனமும் மாமதுரையின்  மண்ணும்!..

அதனைக் கழுவித் துடைத்திட - வைகை நதி பொங்கிப் பெருகி மதுரைக்குள் பாய்ந்தது!..


காலம் அல்லாத காலத்தில் வைகை பெருகியது எவ்வாறு?.. என்று எண்ணத் தலைப்படாத மன்னன் ஆற்றின் கரையை அளந்து அதன்படி வீட்டுக்கு ஒருவர் வந்து கரையை அடைக்க ஆணையிட்டான்.

அவ்வேளையில் - ஆதரவற்று தனிவாழ்வு வாழ்ந்த வந்தியம்மையின் கையால் பிட்டு உண்ணுதற்கு ஆவல் கொண்டான்  மாமதுரைச் சொக்கன்!..

அழுக்கு அடைந்த பழந்துணி ஒன்று அரைக்கு அசைத்து விழுத்தொண்டர் குழுக் கடந்த இண்டை நிகர் சுமை அடை மேல் கூடை கவிழ்த்து திருக்கரத்தில் மண் தொடு திண் படை ஏந்தியவனாக - கூலி கொடுத்து எனைக் கொள்வார் உண்டோ!.. - எனக் கூவி வந்தான்.

அப்படி வந்தவனை -  வா என்றழைத்த  - வந்தியும் உதிர்ந்த பிட்டு தருவதாகக் கூறி - தனக்கான பங்கினை  அடைக்கக் கூறினாள்.


வந்தியின் கடனை அடைக்க வந்த வள்ளல் - உதிர்ந்த பிட்டினை உண்பதும் ஆடுவதும் பாடுவதுமாக இருக்க - கரையோ, அடைபடாமல் - அடுத்தவர் அடைத்த பங்கினையும் அழித்தது.

மாணிக்கம் விற்ற மதுரையில் - உதிர்ந்த பிட்டுக்கு மண் சுமந்தான் ஈசன்.

அதோடல்லாமல் வேலைக்களத்தில் விளையாடிக் களித்ததற்காக அரசனிடம் பிரம்படியும் பட்டான்!..

பொங்கிப் பெருகிய  வைகையில் ஒரு கூடை மண்ணைக்  கொட்டியவாறு ஈசன் தன்னுரு கரந்தான்.  வைகையும் அத்துடன் அடங்கி ஒடுங்கியது.

ஈசன் மேல்பட்ட பிரம்படி அங்கிருந்தவர் மீதும் அண்டசராசரத்தின் அனைத்து உயிர்களின் மேலும் பட்டது. அதிர்ந்தான் அரிமர்த்தன பாண்டியன்.

அதேவேளையில் வந்தியம்மையை  சிவ கணங்கள் வரவேற்று விமானத்தில் அழைத்துச் செல்வதையும் கண்டான்.

அஞ்சி நடுங்கிய அரிமர்த்தனன் அயர்ந்து வீழ்ந்தனன். அப்போது -

யாம் - குதிரைச் சேவகனாக வந்ததும் வைகையை பெருகி வரச்செய்ததும். வந்தியம்மையின் பிட்டுக்காக கூலியாளாக வந்ததும் - இத்தனை எல்லாம் செய்தது திருவாதவூரன் பொருட்டு!..

நின் பொருளைப் பழுது செய்தான் என எண்ணி - நீ தண்டித்த  திருவாதவூரன் பொருட்டு!..

அறத்தின் வழி நின்று நீ ஈட்டிய செல்வத்தினைக் கொண்டு நமக்கும் நம்மைச் சேர்ந்த அடியார் தமக்கும் திருவாதவூரன் நன்மைகளைச் செய்தனன். அதன் பொருட்டு!..

அனைவரும் திருவாதவூரரின் பெருமையை உணரும்படிக்கு பெருமானின் குரல் வானில் கேட்டது.

ஆவுடையார்கோயில்
தென்னகத்தில் தனிப்பெரும் புகழோடு விளங்கும்  தெய்வத்திரு மதுரையம்பதிக்கு அருகில் உள்ள திருவாதவூர் எனும் தலத்தில் தான் மாணிக்க வாசகரின் திரு அவதாரம் நிகழ்ந்தது.

தந்தை - சம்புபாதாச்ருதர். தாய் - சிவஞானவதி அம்மையார்

சைவம் குன்றியிருந்த அக்காலத்தில் ஈசன் திருவருளால் சைவம் மீண்டும் தழைத்து ஓங்குதற்கெனத் தோன்றிய பெருமானின் இயற்பெயர் - திருவாதவூரர்.

பதினாறு வயதிற்குள் , அனைத்தும் கற்றுணர்ந்து ஞானச்சுடராக விளங்கிய திருவாதவூரரைப் பற்றி அறிந்த  அரிமர்த்தன பாண்டியன்  அவரை விரும்பி அழைத்து - தலைமை அமைச்சராக அமர்த்தி அரசவைக்கு அழகு சேர்த்து மகிழ்ந்தான். 

திருவாதவூரரின் திறமையான நிர்வாகத்தினால் மன்னனும் மக்களும் மகிழ்ந்தனர். ஆனால் அவர் மனம் அதில் நிறைவடையவில்லை. அவருடைய நாட்டம் எல்லாம் - ''..பிறவியின் பயனை அடைதற்குரிய வழி என்ன!..'' என்பதிலேயே இருந்தது.

அந்த சமயத்தில்  - குதிரைப் படைகளைப் பலப்படுத்த வேண்டும் என்று விரும்பிய மன்னனின் ஆணையை ஏற்றுக் கொண்டு  பெரும் பொருளுடனும் பணியாட்களுடனும் - கீழைக் கடற்கரையை நோக்கிப் புறப்பட்டு வந்த திருவாதவூரரை -  

திருப்பெருந்துறை எனும் தலத்தில் - குருந்த மர நிழலில் ஞானகுருநாதனாக வீற்றிருந்த சிவபெருமான் ஆட்கொண்டார்.


நயன தீட்சையுடன் ஸ்பரிச தீட்சையாக திருவடி சூட்டி, பஞ்சாட்சர உபதேசம் அருளினார்.

திருவாதவூரருக்கு மாணிக்கவாசகன் என்ற பெயரைச்  சூட்டினார் பெருமான்.

குருநாதரிடம் முழுமையாகத் தன்னை ஒப்புவித்த மாணிக்க வாசகர்  - ''..குதிரை வாங்கக் கொணர்ந்த பொன்னையும் பொருளையும் என்ன செய்வது?..'' எனக் கேட்டார்.  

குருநாதரோ -  ''..அதைக் கொண்டு அறப்பணி செய்க!..''  - என அருளினார்.

அதன்படியே - திருப்பெருந்துறையில் நின்று விளங்குமாறு திருக்கோயிலைக் கட்டினார். திருமடங்கள், நந்தவனங்கள்  அமைத்தார்.  மாகேசுவர பூசை பல நிகழ்த்தினார். அரசன் குதிரை வாங்குவதற்குத் தம்மிடம் அளித்த பொருள்கள் அனைத்தையும் கோயில் பணிகளுக்கே செலவிட்டார். 

அதன் பிறகு நிகழ்ந்தவையே - முன்னுரைத்த எல்லாம்!..


எல்லாவற்றையும் உணர்ந்து தெளிந்த பாண்டியன் மாணிக்க வாசகரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி  - ''..என் பிழை பொறுத்து பாண்டிய நாட்டின் அரசு உரிமையை ஏற்று  வழி நடத்துக!..'' - என்று  வேண்டிக்  கொண்டான்

அதனை மறுத்தருளிய மாணிக்கவாசகர்  - தாம் கொண்ட நோக்கத்தினை வெளிப்படுத்தவே - அவரை அவர் போக்கிலேயே விடுத்தனன் அரிமர்த்தன பாண்டியன்.

பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்
கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை
மண் சுமந்து கூலி கொண்டு அக்கோலால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதுங்கான் அம்மானாய்!..


- என ஈசனைப் போற்றிப் புகழ்ந்த மாணிக்கவாசகர் இறையருளின் படி தலயாத்திரை மேற்கொண்டார்.  உத்தரகோச மங்கை என்னும் திருத்தலத்தில் அஷ்ட மா சித்திகளையும் பெற்றனர்.

பின்னும் சோழ நாட்டின் பலதலங்களையும் தரிசித்து - திரு அண்ணாமலை திருக்கழுக்குன்றம் ஆகிய பதிகளில் இருந்து பல அருட் செயல்களை நிகழ்த்தி தில்லையம்பதியினை அடைந்தார். 


தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் வடக்கு திருவாசல் வழியாக பெருமான் , திருக்கோயிலுக்குள் சென்றதாக நம்பிக்கை.

தில்லையில் இருந்த காலத்தில் ஈழத்திலிருந்து வந்த புத்த சமயவாதிகளை வாதில் வென்று சைவ சமயத்தினை நிலை நாட்டினார். அவர்களுடன் வந்த  மன்னன் தன் மகளுடன் பெருமானின் திருவடிகளைப் பணிந்து வணங்கி தன் மகளின் குறையினை முறையிட பிறவி ஊமையாய் இருந்த ஈழ இளவரசியின் பிறவிப் பிணியினை பஞ்சாட்சரம் ஓதுவித்து நீக்கியருளினார்.

இவ்வேளையில் ஒருநாள் - 

உலகம் உய்யும் பொருட்டு எல்லாம் வல்லவனாகிய எம்பெருமான்  - அறவாழி அந்தணராக வந்து மாணிக்கவாசகப் பெருந்தகையை அணுகி நின்றான்.  

 தம்மை நாடி வந்த பெரியவரை அன்புடன் வரவேற்றார் - மாணிக்க வாசகர். 

வேடங்கொண்டிருந்த மறையவர் - பல சமயங்களிலும் பாடிய பாடல்களை முறையாகச் சொல்லும்படி மாணிக்க வாசகரிடம் கேட்டுக் கொண்டார். 

சுவாமிகளும் - தாம் பாடிய அனைத்தையும் மீண்டும் சொல்லியருளினார். 


வந்திருந்த அந்தணர் தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி - ''..பாவை பாடிய  திருவாயால்  கோவை பாடுக!..'' - என்று கேட்டுக்கொண்டார். 

அதன்படியே மாணிக்கவாசகர்  திருக்கோவை  அருளிச் செய்தார்.  

அந்தணர் அதையும் தம் திருக்கரத்தால் எழுதி முடித்து மறையவும் - அந்தணனாக வந்து தன்னை ஆட்கொண்டவர் சிவபிரானே என்பதை அறிந்து ஆனந்தக் கண்ணீர் வடித்து  வணங்கிப் போற்றினார்.  

விடியற்காலையில் பொன்னம்பலத்தின் வாசற்படியினில்  -

திருவாதவூரன் சொல்லக் கேட்டு எழுதிய திருச்சிற்றம்பலமுடையான் திருச்சாத்து - எனும் திருக்குறிப்புடன் ஓலை சுவடிகளைக் காணப் பெற்ற  தில்லைவாழ் அந்தணர்கள் , வியந்து -

மாணிக்கவாசகப் பெருமானை அணுகி - ''..இதன் பொருளை விளக்க வேண்டும்!..'' எனக் கேட்டுக் கொண்டனர். 

சுவாமிகள் தன் குடிலிலிருந்து  திருக்கோயிலுக்கு வந்தார். 


''..தில்லைச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானே - இதன் பொருள்!..'' 

- என்றருளியபடி அம்பலத்தில் ஆடும் ஆனந்தக்கூத்தனுடன் இரண்டறக் கலந்தார்.

அருள் வாதவூரருக்கு செப்பிய நாலெட்டில் தெய்வீகம்!.. - என்கின்றது பழந் தமிழ்ப் பாடல் ஒன்று. அதன்படி அவருக்கு முப்பத்திரண்டு வயதென உணர முடிகின்றது. 


மாணிக்கவாசகர் சிவசாயுஜ்யம் பெற்ற நாள்  - ஆனி மகம்!..

இன்று (ஜூலை 2) தில்லையில் - மாணிக்கவாசகப் பெருமானின் குருபூஜை!.

திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் - மாணிக்க வாசகர் ரிஷப வாகனராக திருவீதி வலம் வந்தருள்கின்றார்

சிவாலயங்கள் தோறும் மாணிக்க வாசகப் பெருமானைப் போற்றி வணங்கித் தொழுகின்றனர் - இறையன்பர்கள். 

தென்னாடுடைய சிவனே போற்றி!.. 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!..

எனும் மாணிக்க வரிகள் அவர் அருளியவை. 

திருவாசகத்தில் பிரபஞ்ச ரகசியங்களை விவரிப்பதுடன் மானுட கருப்பையில் கரு உருவாகும் விதத்தினையும் தெள்ளத் தெளிவாக  கூறுகின்றார். 

மகாஞானியாகிய மாணிக்க வாசகர் முதல் மந்திரியாக இருந்து வழி நடாத்திய நாட்டில் நாம் பிறந்திருக்கின்றோம் என்பது நமக்கெல்லாம் பெருமை. 

பெருமானைப் பற்றி இந்த அளவில் சிந்திக்கக் கூடியதே - அது  என் முன்னோர் செய்த தவம்!.. 

இன்னும் எழுதுதற்கு பெருமான் நல்லாசிகளைப் பொழிவாராக!..
 

வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!..

- என்று வள்ளலார் சுவாமிகள் போற்றுவது திருவாசகத் தேனமுதத்தை!..

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்!.. என்பது தொல்மொழி.

 ''..அம்மையே அப்பா.. ஒப்பிலாமணியே!.. அன்பினில் விளைந்த ஆரமுதே!..'' -  என இறைவனை விளித்தவர் மாணிக்கவாசகப்பெருமான்.

இறைவனை எப்படிப் பற்றிக் கொள்வது ?... 
இதோ இப்படித்தான்!..
இம்மையே உன்னை சிக்கெனப் பிடித்தேன்!
எங்கெழுந்தருளுவது இனியே!...

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!.. 
திருச்சிற்றம்பலம்!..
* * *

20 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  2. விஷயங்கள் பல தெரிந்து கொண்டேன்....

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. சுவாரஸ்யம் + மிகவும் அருமை ஐயா...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  4. அருமையான பகிர்வு.
    ஆவுடையார் கோவில் நான் சென்றிருக்கிறேன்...
    வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      நானும் ஆவுடையார் கோயிலைத் தரிசித்திருக்கின்றேன்..
      தங்களின் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  5. அருமையான பதிவு.
    நீங்கள் சொல்வது உண்மை. முன்னோர் செய்த தவத்தால் பெரியோர்களைப் பற்றி எழுத கிடைத்தது. மேலும் எழுத ஆசி வழங்குவார்கள்.
    நாங்களும் படித்து மகிழ முடிந்தது.
    வாழ்க வளமுடன்.
    ஊழிமலி திருவாதவூர் திருத்தாள் போற்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அனைவருக்கும் பெருமான் நல்லாசிகள் பொழிவாராக..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. மாணிக்க வாசகர் பற்றி ஆங்காங்கு கேட்ட செய்திகளை உமக்கே உரித்தான அழகு நடையில் கோர்வையாகக் கூறி இருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      வருகை தந்து கருத்துரைத்த தங்களுக்கு நன்றி..

      நீக்கு
  7. பொன்னார் மேனியன் - புலித்தாலை அரைக்கசைத்தவன் -
    அழுக்கு அடைந்த பழந்துணி ஒன்று அரைக்கு அசைத்து கூலி கொடுத்து எனைக் கொள்வார் உண்டோ!.. - எனக் கூவி வந்த காட்சியை கண்முன் நிகழ்த்தியதாக அமைந்த பதிவிற்குப்பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அழுக்கு அடைந்த பழந்துணியினை அரைக்கசைத்துக் கொண்டு கூலி ஆளாக வந்ததற்கு எல்லையற்ற அன்பு அல்லவா காரணம்!..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும்ம்கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  8. ஆவுடையார் கோயில் சென்று முழுமையாக அதன் கலையழகை ரசித்துள்ளோம், குடும்பத்துடன். தற்போது தங்களின் பதிவைப் படித்தபின் மாணிக்கவாசகரின் பெருமையை மேலும் அறியமுடிந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      மிக அழகான கலைநயம் மிக்க சிற்பங்களைக் கொண்டது ஆவுடையார் கோயில். அதுவும் மாணிக்க வாசகர் மேற்பார்வையில் எழுப்பப்பட்டது என்றால் கேட்கவும் வேண்டுமோ!..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  9. மாணிக்க வாசகர் பெருமையை மிக மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். பரிதனை நரியாக்கியது, பிட்டிற்கு மண் சுமந்த கதை என்று ஒரு சொற்பொழிவே கேட்டது மாதிரி இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  10. ஆவுடையார் கோவில் நான் இதுவரை போனதில்லை இதை படித்தபிறகு போகவேண்டும் என்ற அவா தோன்றிற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தேவகோட்டையிலிருந்து பக்கம் தானே.. ஆவுடையார்கோயில்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..