நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 14, 2021

பொங்கலோ பொங்கல்..

 அனைவருக்கும்

ன்பின் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்!..


அது ஏன் இன்றைக்கு பொங்குவது மட்டும் பொங்கல்!?..

அதே அரிசி.. அதே வெல்லம் தானே!..

ஏனென்றால் -
இன்றைக்கு தான் அபிராம பட்டர் சொல்வது போல -

சிற்றெறும்பு முதல் குஞ்சரக் கூட்ட முதலான
சீவ கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பினைக் குறையாமலே கொடுத்த!...

இறைவனுக்கு அல்லது இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாள்..

இறைவனுக்கோ அல்லது இயற்கைக்கோ
நன்றி செலுத்துவது என்றால் எப்படி?..

இறைவனுக்கும் இயற்கைக்கும்
ஒருவாய் பொங்கச் சோறு ஊட்டி விடுவதா?..

இயற்கையுடன் இணைந்து திகழும்
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும்!.. - என்று நினைப்பது!..

இது தான் பொங்கல்!..

இதைத் தவிர வேறெதுவும் பொங்கல் அல்ல!..


மார்கழி இருபத்தேழாம் நாளன்று
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் வைத்தனளே -

அது தான் பொங்கல்!...

சூடகம், தோள்வளை, தோடு,
செவிப் பூ, பாடகம் 
மேலும் புத்தாடை - இவை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்..

முழங்கை வழியாக வழியும் 
புத்துருக்கு நெய்யினால் மூடப்பெற்ற 
பாற்சோற்றை கூடி இருந்து 
உண்டு மகிழ்ந்து உள்ளம் குளிர்ந்தோம்!..

கூடி இருந்து குளிர்ந்தோம்!.. - என்கின்றாள்...

இன்னார் - இனியார்.. - என்ற பேதம் ஏதும் இல்லாமல்
எல்லாரும் ஒன்றாகக் கூடியிருந்து -

இது எங்கள் வீட்டுப் பொங்கல்!..
இது எங்கள் வீட்டுப் பொங்கல்!...
 - என்று

ஒருவருக்கொருவர் மீதூறிய அன்புடன் அளவளாவி
உண்டும் உண்பித்தும் கொண்டாடுவதே பொங்கல்!..

நிறைந்த பொங்கலுடன் மஞ்சள் இஞ்சி வாழை செங்கரும்பு
இவற்றுடன் இயன்ற அளவிலான காய்களும் கனிகளும் படைத்து

எல்லாரும் நல்லா இருக்க வேணும்!.. - என்று,
நெஞ்சில் அன்பு பொங்கிட கைகூப்பி நிற்கும் நாளே நன்னாள்..

அந்நாளே தை முதல் நாள்!..


நெய் தவழும் பாற்சோற்றை
கையில் எடுத்து உண்டால்
நெய் தான் வழியும்!..

நெய் தவழும் பாற்சோற்றை அடுத்தொருவர்க்கு ஊட்டி விட்டால் 
நெய் மட்டுமல்ல நெஞ்சில் கருணையும் சேர்ந்து தான் வழியும்!..

அதைத் தான் கோதை நாச்சியாள் செய்தனள்...

புல்லையும் பாடினாள்.. பூக்களையும் பாடினாள்..
நீள்நிலத்தைப் பாடினாள்...நெடுவானைப் பாடினாள்..

கார்முகிலைப் பாடினாள்... கடுமழையைப் பாடினாள்.. 
கதிர் நிலவைப் பாடினாள்.. கோள்களையும் பாடினாள்.. 

நெற்கதிரைப் பாடினாள்.. நெடுவயலைப் பாடினாள்..
கண் வண்ணம் பாடினாள்.. கயல் வண்ணம் பாடினாள்..

அல்லியையும் பாடினாள்.. ஆம்பலையும் பாடினாள்..
கருங்குருவியைப் பாடினாள்.. கவிக்குயிலையும் பாடினாள்...

கன்றினையும் பாடினாள்.. கார் எருமையைப் பாடினாள்..
பால்பசுவைப் பாடினாள்.. படர் நெய்யைப் பாடினாள்..

அரசனையும் பாடினாள்.. அடியனையும் பாடினாள்.. 
ஆண்மையையும் பாடினாள்.. பெண்மையையும் பாடினாள்..

தூங்குதலைப் பாடினாள்.. மொழி வாங்குதலைப் பாடினாள்...
வாழ்தலையும் பாடினாள்.. வளர்தலையும் பாடினாள்..

பாடும்பொருள் நீ என்று பரமனையே பாடினாள்...
பரந்தாமன் அவனுக்கே மாலையைச் சூடினாள்..

அவள் பாடிய பாடல்களின் வழியே -
அறிவு எனும் புத்தரிசியை அன்பு என்னும் வெல்லத்துடனும்
பரிவு எனும் பாலுடனும் கனிவு எனும் நெய்யுடனும் 
கலந்து பொங்கல் செய்தனள்..

அந்தப் பொங்கலைத் தான் 
தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தந்தனள்...

அது கண்டு தெய்வம் கனிந்தது...
மாலையாய் மார்பினில் ஏற்று மகிழ்ந்தது...

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் நமக்களித்த வழியில்
தைப் பொங்கலைக் கொண்டாடி மகிழ்வோம்..


தைப் பொங்கல் வாழ்க.. 
தமிழ்ப் பொங்கல் வாழ்க!...


வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***