நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வடுவூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வடுவூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2017

ஸ்ரீராம தரிசனம்

பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென்
உள்ளம் பரவச  மிகவாகுதே!..

ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் அவர்கள் ஸ்ரீகிருஷ்ணனை நினைந்து இயற்றிய கீர்த்தனை அது!..

அந்த இனிய வரிகள் வடுவூர் வாழும் அழகனுக்கும் பொருந்தும்

தேடி வந்த  திரவியமாக சக்ரவர்த்தித் திருமகன்..

வடுவூர் ஸ்ரீராமனின் திருமுகம் கண்டு மயங்காதவர் எவர்!?..

நன்றி - Fb
நேற்று வடுவூர் வடிவழகனின் தரிசனம்..

ஆடி மாத திருமஞ்சன வைபவம் (ஜேஷ்டாபிஷேகம்)..

கண்ணாரக் கண்டு மகிழ்ந்தது நெஞ்சம்...

ஆகஸ்ட்  2 முதல் செப்டம்பர் 7 வரை நிகழ்கின்றது

கண்ணாரக் கண்டு மகிழ்ந்தது நெஞ்சம்...

அபிஷேக நிகழ்வுகளைப் படமெடுக்க இயலவில்லை..

இன்றைய பதிவின் படங்கள் ஆலய தரிசனம்...

நன்றி - திருக்கோயில் பட்டர்
வானம் மேகமூட்டமாக இருந்தது.. ஆயினும் மழை வரவில்லை..
கீழுள்ள படங்கள் எனது கைவண்ணம்..








ஸ்ரீ ஹயக்கிரீவர் சந்நிதியில் முன்பாக திருமஞ்சனம்  நிகழ்த்தப் பெற்றது..
அதனால் திருச் சுற்றில் எவரையும் அனுமதிக்கவில்லை..

செவலைப் பசுக்களுடன் கோசாலை விளங்குகின்றது..



திருக்கோயிலின் தல விருட்சம் மகிழ மரம்..

தீர்த்தம் - சரயு எனும் திருக்குளம்..


கடுங்கோடையில் நீரின்றிக் கிடக்கின்றது..
இந்தவேளையில் இயந்திரங்களைக் கொண்டு தூர் வாரிக் கொண்டிருக்கின்றார்கள்..

சில தினங்களுக்கு முன் பெய்த மழையினால் பூமி சற்றே நனைந்திட - குளத்தினில் கொஞ்சமாக தண்ணீர் நிற்கின்றது..

திருக்கோயிலின் கிழக்காக தேரடி..
அருகே ஸ்ரீராமபக்த ஹனுமான் தனி சந்நிதியில் விளங்குகின்றார்..

வடுவூர் ஸ்ரீராமனைப் பற்றிய முந்தைய பதிவு  - இங்கே!..


தஞ்சையிலிருந்து 20 கி.,மீ. தொலைவில் மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ளது வடுவூர்.

புகழ்பெற்ற பறவைகளின் சரணாலயமான வடுவூர் ஏரி ஊருக்கு முன்பாக உள்ளது..

அந்த ஏரியும் கோடையின் கொடுமைக்குத் தப்பவில்லை..
முற்றாக வறண்டு கிடக்கின்றது...


வடுவூர் ஏரியின் இன்றைய நிலை
நாளையோ அதற்கடுத்த நாளோ நீர் நிறைந்து ததும்பக்கூடும்..

வடுவூர் ஏரி பறந்து திரியும் 
பறவைகளுக்குச் சரணாலயம்!..
வள்ளல் ஸ்ரீராமனின் பாதம் 
வருந்துகின்ற உயிர்களுக்குச் சரணாலயம்!..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வடுவூருக்கு நகர பேருந்துகள் இயங்குகின்றன. 

மேலும் 
புதிய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்குடி , திருத்துறைப்பூண்டி செல்லும் அனைத்து புறநகர் பேருந்துகளும் வடுவூரில் நின்று செல்கின்றன. 

நெஞ்சம் எனும் கல் நெகிழ்ந்துருக 
வேண்டுமாயின்
வடுவூருக்கு வாருங்கள்!..
வடிவழகைப் பாருங்கள்!..

கொங்குமலி கருங்குழலாள் கௌசலைதன் குலமதலாய்
தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே
எங்கள் குலத்தின்னமுதே இராகவனே தாலேலோ!..(721)
- குலசேகராழ்வார் -

ஸ்ரீராம் ஜயராம் 
ஜய ஜயராம்..
***