நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

உலக நீர் நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலக நீர் நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 15, 2020

வந்தே மாதரம்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்று
நமது பாரதத் திருநாட்டின்
சுதந்திரத் திருநாள்


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே இதை
வந்தனை கூறி மனதில் இருத்தியென்
வாயுற வாழ்த்தேனோ இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!..




பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே..
-: மகாகவி பாரதியார்:-

வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஃஃஃ

வியாழன், மார்ச் 23, 2017

ஒரு துளி நீர்!..


உலக தண்ணீர் நாளை முன்னிட்டு நேற்று வெளியாக வேண்டிய பதிவு..

இணையம் இணையவில்லை...

ஆனாலும் என்ன!..

என்றென்றும் நீரை மதித்து வாழும் சிறப்பினை உடையவர்கள் நாம்!..

அந்தச் சிறப்புடன் இந்தக் கதைக்குள் அழைக்கின்றேன்..
***

இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் வெள்ளந்தி!..

இதோ அருகில் வந்து விட்டோம்!..

கேள்வி கேட்டவன் அந்த நாட்டின் மன்னன்.. மாமன்னன்!..

பதிலுரைத்தவன் அரசவையின் விகடகவி - வெள்ளந்தியான்...


காலையில் சூரியன் எழுந்ததிலிருந்து - இதே பதிலைச் சொல்லிக் கொண்டிருக்கின்றாய்!.. இப்போது சூரியன் இருப்பதோ உச்சியில்!...

அரசே!.. தாங்கள் தூரங்களைக் கடந்தவரில்லை.. அதனால் தான் களைப்பு மேலிடுகின்றது!..

ஓஹோ!.. (அரண்மனைக்கு வா.. உனக்கு இருக்கின்றது பூசை!..)

அரசனின் உள் மனம் கொக்கரித்தது...

ஆனாலும், குதிரைக்கு இப்போதே நாக்கு தள்ளி விட்டது!...

குதிரைக்கு இயலவில்லை எனில் தாங்கள் இறங்கி நடக்கலாமே!..

அரசனின் மனம் கொதித்தது - இந்த வார்த்தைகளைக் கேட்டு..

ஆனாலும் ஒன்றும் செய்வதற்கு இல்லை..

ஏனெனில், அரசன் என்ற அடையாளத்தை இறக்கி வைத்து விட்டு எளியவனாக சென்று கொண்டிருக்கின்றான் - விகடகவியின் விருந்துக்கு ...

மன்னனின் கண்கள் சுரைக்குடுக்கையைத் தேடின..

அதில் தண்ணீர் இருக்கின்றதா?...

இருக்கிறது.. பாவம்.. இந்த வாயில்லா ஜீவனுக்குக் கொடுப்போம்!..

என்று சொல்லியபடி - மீதமாக இருந்த தண்ணீரை குதிரையின் வாய்க்குள் ஊற்றி விட்டான் வெள்ளந்தி....

இப்போது சுரைக்குடுக்கையில் துளி நீர் கூட இல்லை...

இருப்பினும் கலங்காமல் சொன்னான் -

வேண்டுமானால் இன்னும் இரண்டு இலந்தம்பழங்களை வாய்க்குள் போட்டுக் கொள்ளுங்களேன்.. உமிழ்நீர் ஊறிக் கொண்டிருக்கும்!..

ம்.. நேரம்.. இதெல்லாம் நேரம்!.. - மன்னனின் மனம் மருகியது..

(உமிழ்நீர் அருந்த உயிர்த் தாகம் தீருமா?.. ஏற்கனவே ஏகப்பட்ட இலந்தம் பழங்களைச் சுவைத்ததால் வாய் முழுதும் ரணமாகிக் கிடக்கின்றது.. இந்த லட்சணத்தில் இன்னும் இரண்டா!?..)

வெள்ளந்தி!.. நீ ஏன் இப்படி நாட்டின் கடைக்கோடியில் இடம் வாங்கியிருக்கின்றாய்!..

என்ன செய்வது அரசே!.. ஊருக்குள் உள்ளதெல்லாம் தான் வலுத்தவர்களின் வகையறாக்களுக்குப் போய் விட்டதே!.. தாங்கள் எளியேனுக்கு அளித்த வெகுமதிகளினால் கடைக்கோடியில் தான் இடம் கிடைத்தது!..

ம்.. இடித்துரைப்பதற்கு ஒன்றும் குறைவில்லை!...

உள்ளதைச் சொன்னேன்!.. அரசே!.. ( இருந்தாலும், தாங்கள் இன்னும் வாரிக் கொடுத்திருந்தால் ஊருக்குள் இடம் வாங்கியிருக்க மாட்டேனா?..)

அங்கென்ன மாளிகையா எழுப்பியிருக்கின்றாய்!..

அதற்கெல்லாம் வழியேது ஐயனே!.. சாதாரண ஓலைக் குடிசைதான்!..

என்னது?.. ஓலைக் குடிசையிலா மன்னனுக்கு விருந்து?..

கொடுக்கக் கூடாது தான்.. ஆனாலும், தாங்கள் தான் இப்போது மன்னன் இல்லையே!..

திடுக்கிட்டான் மன்னன்.. இதெல்லாம் எனக்குத் தேவை தான்!..

நா வறண்டது.. ஒரு குவளை நீருக்காக ஏங்கியது...

கண்ணெதிரே ஆளில்லாப் பொட்டல்.. அருகம்புல் கூட இல்லாமல் விரிந்து கிடந்தது...

இவ்வேளையில் மன்னனின் மனம் சற்றே பின்னோக்கி ஓடியது..


உலக மகா கலையரசிகளின் நாட்டிய நிகழ்வுகளால் மகிழ்ந்திருந்த - அந்த வேளையில் அரக்கப் பரக்க ஓடிவந்து எதிரில் நின்றான் வாயிற்காவலன்...

தூங்கிக் கிடந்த எதிரி துருப்பிடித்த வாளுடன் எழுந்து விட்டானோ!..  - என அயர்ந்தான் தளபதி..

வரிக் கொடுமையை எதிர்த்து மக்கள் கொடி பிடித்து விட்டார்களோ?.. - என, அதிர்ந்தார் அமைச்சர்..

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. அஞ்சவேண்டாம் என்பதைப் போலிருந்தது வாயிற்காவலனின் விண்ணப்பம்..

மகாராஜா!.. வைர வைடூரிய கோமேதகங்களுடன் தூர தேசத்து வணிகர்கள் தங்களைச் சந்திக்க விரும்புகின்றார்கள்!..

இதைக் கேட்டதும் பெருமகிழ்ச்சி கொண்ட மன்னன் நடன மாமணிகளை சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளும்படிச் சொன்னான்..

கண்கவரும் நாட்டிய மாமணிகளை விட -
காடுமலை கடந்து வந்த நவ மாமணிகள் அவனது சிந்தையில் களி நடம் புரிந்தன...

சற்றைக்கெல்லாம் அரசவைக்குள் வணிகர்கள் புன்னகையுடன் வந்தனர்..


வைர வைடூரிய ரத்தினங்கள் பதிக்கப் பெற்ற பொன் நகைகளை
மன்னன் காணத் தந்தனர்...

தகவலறிந்த அரசி ஓடோடி வந்தாள்... அந்த அளவில் வணிகர்கள் கொண்டு வந்திருந்த அத்தனையும் கொள்முதலாகி விட்டன...

எல்லாவற்றினுள்ளும் அந்த நவரத்ன மாலை தலை சிறந்து விளங்கியது!..

இதைப் போல இவ்வுலகில் எவரிடத்தும் இல்லை!.. - வணிகர்கள் பணிவுடன் சொன்னார்கள்...

அப்படியாயின் இது என்னவருக்கே ஆகட்டும்!.. - என்று சொல்லி பூரிப்புடன் கணவனின் கழுத்தில் அணிவித்தாள்...

அரசவையில் இருந்தவர்கள் ஜயகோஷம் எழுப்பினர்..

 மன்னன் வாழ்க.. நாடு வாழ்க!..

இப்படியிருந்தால் நாடு எப்படி வாழும்!.. - வெள்ளந்தி மட்டும் முணுமுணுத்துக் கொண்டதை மன்னன் கவனித்தான்...

அன்றையப் பொழுது மன்னனின் நினைவுக்கு வந்ததும்
இனிமேல் நடக்க இருப்பதும் விளங்கி விட்டது..
***

மன்னா!.. இதோ.. எளியேனின் குடில்!.. வலது காலை எடுத்து வைத்து வருக!..

நினைவுகளில் இருந்து விழித்துக் கொண்ட மன்னன் நினைத்தான்...

கண்ணெதிரே இருப்பது காய்ந்து போன ஓலைக் குடில்..
அதற்குள் இருக்கப் போவது பழைய கஞ்சியும் பச்சை மிளகாயும்!..
இதற்கு வலது கால் என்ன!.. இடது கால் என்ன?...

எப்படியோ சமாளித்தவனாக குதிரையிலிருந்து இறங்கினான்....

எதிர் நின்று வரவேற்க யாரொருவரையும் காணோம்!..

அரண்மனையின் யானை பெருங்குரலெடுத்துப் பிளிறி
வரவேற்றதெல்லாம் நினைவுக்கு வந்தது..

என்ன செய்வது?... எல்லாம் தலையெழுத்து... இன்றைக்கு இறைவன் அளந்தது இவ்வளவு தான்!..

வருக.. வருக.. குடிலின் உள்ளே வருக!..

களைப்புடன் மன்னன் - குடிலின் உள்ளே நுழைந்தான்...

முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கொடு!.. தாகம் கண்களை மறைக்கின்றது..

சற்று நேரம் இருந்து பேசி மகிழ்ந்த பின் விருந்து உண்ணலாமே!..

ஏன்?.. இதுவரைக்கும் பேசியதெல்லாம் போதாதா!.. முதலில் தண்ணீர் கொடு!..

வந்த களைப்பில் உடல் முழுதும் வியர்த்திருக்கின்றது.. இவ்வேளையில் நீர் அருந்தினால் ஜலதோஷம் ஏற்படும்.. சற்றே மயிலிறகு கொண்டு வீசட்டுமா?..

மயிலிறகும் வேண்டாம்.. வெட்டி வேரும் வேண்டாம்.. முதலில் தண்ணீர் கொடு!..

மன்னா.. அதோ அங்கே பாருங்கள்.. அண்டை நாட்டின் எல்லை.. அங்கே எல்லைக் காவல் பூங்காவில் உயர்ந்திருக்கும் பசுமையான மரங்களைப் பாருங்கள்!.. சற்றே அருகில் நமது சுங்கச் சாவடி கண்ணுக்குத் தெரிகின்றதா!.. வெட்ட வெளியாய்.. மொட்டைத் திடலாய்!..

வெள்ளந்தி!.. முதலில் தண்ணீர் கொடு.. குடிப்பதற்கு!..

அரசே.. கோபங் கொள்ளற்க!.. இதோ விருந்துண்ணலாம்.. உங்களுக்காக..
தலை வாழையிலையில் புத்தரிசிப் பொங்கல்,நெய்ப் பணியாரம், தேங்காய்ப் பூரணம், கொழுக்கட்டை, அவல் சர்க்கரை சுழியன், அதிரசம், வரகரிசிப் புட்டு, தேங்காய் தினை கருப்பட்டி உருண்டை, சிறுபருப்பு அடை, பால் பாயசம்.. -

அதெல்லாம் கிடக்கட்டும் தண்ணீர் எங்கே?..

இதோ.. இங்கே!..

நோக்கிய இடத்தில் இருந்ததைக் கண்டு அதிர்ந்தான்!..

என்ன இது?.. - மன்னன் அலறினான்...

நத்தையின் கூட்டுக்குள் தண்ணீர்!..

என்ன செய்வது மன்னா.. இங்கே தண்ணீர் பற்றாக்குறை.. 
எனவே, சிறு துளியை பெருவெள்ளமாகக் கொள்ளுதல் வேண்டும்!..

உனக்கு என்னடா வேண்டும்?.. 
இந்த நவரத்ன மாலை வேண்டுமா?.. 
இருந்து ஆளும் இந்த நாடு வேண்டுமா?..

இல்லையேல் என்னுடைய உயிர் வேண்டுமா?..
எடுத்துக் கொண்டு ஒரு குவளை நீரைக் கொடு!.. 

அரசே.. அதெல்லாம் ஒரு சிற்றெறும்பின் தாகத்தைக் கூட தீர்க்காது!..

வேறென்ன தான் வேண்டும்!..

எனக்கொரு வரம் வேண்டும்!..

வரமா?.. என்ன அது?..

நீர்நிலை காக்க வேண்டும்.. நீராதாரம் பெருக்க வேண்டும்!..

மன்னன் அதிர்ந்தான்.. கடைவிழியில் நீர் திரண்டது..

சட்டெனத் திரும்பிய வெள்ளந்தி - ஓலைக் குடிலின் மறுபுறத்திலிருந்து மண்கலயத்தில் குளிர்ந்த நீருடன் வெளிப்பட்டு -

மன்னனின் முன்பாக பணிவுடன் சமர்ப்பித்தான்...

மெய் சிலிர்த்திட திருக்கோயில் பிரசாதத்தினைப் போல்
அந்த மண் கலயத்தை ஏந்தினான் -  மன்னன்..

விலாமிச்சை வேருடன் ஏலமும் ஊறித் திளைத்திருந்த குளிர் நீர்
துளித் துளியாக மன்னனின் உயிருடன் கலந்து தாகத்தைத் தணித்தது..


மன்னா.. இதோ.. தங்கள் முன்னிருக்கும் உணவு வகைகள் எல்லாமும் நமது வளநாட்டில் விளைந்தவை தான்!..

ஆனாலும் -
நம் நாடும் வறட்சியினால் சூழப்படுகின்றது...
மழை நீர் தேக்கி வைக்கப்படுவதேயில்லை...
காடு கரைகள் ஏற்றம் பெற்றாலும் ஏரி குளங்கள் தூர் வாரப்படவில்லை..
மாதந்தவறாமல் பெய்யும் மழையும் திரண்டோடி கடலைத் தான் சேர்கின்றது..

இதைத் தங்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களோ -
தங்களைத் துதித்துப் பாடிக் கொண்டு வீணே வயிறு வளர்க்கின்றனர்...

எதிர்த் திசையைப் பாருங்கள்..
எதற்கும் உதவாத பாலையிலும் பயிர் செய்கின்றனர்..

எல்லாம் நீர் மேலாண்மையினால் தானே!..

தங்களுடைய முன்னோர்கள் செய்த நலன்களைப் போல தாங்களும் 
மக்கள் துயர் தீர்த்து மங்காப் புகழ் எய்த வேண்டும் என்பதே ஆவல்!..

மக்கள் நலம் பேண வேண்டாமா.. 

அரசே!.. மழை வளம் காக்க வேண்டாமா!..

இதை உணர்த்துவதற்காகத் தான் இத்தனை நாடகமும்.. அல்லவா!..

என்னைப் பொறுத்தருளல் வேண்டும்!..

நீர் வாழ்க!..

ஆமாம்.. நீரும் நிலமும் வாழத்தானே வேண்டும்!..

நான் உம்மை வாழ்த்தினேன் - வெள்ளந்தி!..

மன்னா!.. தாங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்..
தங்களால் நீரும் நிலமும் வாழ வேண்டும்!..

இதோ எமது வெகுமதியாய்.. இந்த நவரத்ன மாலை.. ஏற்றுக் கொள்க!..

மன்னா!.. இதெல்லாம் அழகுக்கு மட்டுமே!.. ஆபத்துக்கு உதவாது!.. 
இருந்தாலும், இந்த நவரத்ன மாலை தங்களிடம் இருப்பதுவே பெருமை!..

பட்டம் பதவி, பெருவிலை ஆரம், கொற்றம் குடை - என, 
எல்லாவற்றையும்.. ஒரு துளி நீருக்காக இழக்கத் துணிந்தீர்கள்!..

நீரின் பெருமையை தாங்கள் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகின்றேன்..

நல்மணி மாலைகளை நிலவறைக்குள் சேர்த்து வைப்பதனால் அல்ல..
நெல்மணி மாலைகளைக் குதிர்களுக்குள் நிறைப்பதனால் மட்டுமே -

தங்களுடைய புகழ்க்கொடி உயரே பறந்து கொண்டிருக்கும்!...

அகமகிழ்ந்த மன்னன் வெள்ளந்தியை ஆரத் தழுவிக் கொண்டான்..

வாழ்க மன்னன்!.. வாழ்க வளநாடு!.. - என, முழங்கினான் வெள்ளந்தி.. 


எதிர்வரும் ஆண்டுகளில் -
நீருக்காகப் போராட வேண்டியிருக்கும் என்கின்றனர் - ஆர்வலர்கள்...

இன்றைய நவீன அறிவியலால்
நீரும் நிலமும் பாழானதென்பது உண்மை..


ஆனாலும்,
நீர் நிலைகளைக் காப்பாற்றி -
இயற்கையைப் பேணுதலே அறிவுடைமை.


நீர் காப்போம்!.. 
நிலம் காப்போம்!..

நீர் உயரட்டும்.. 
நீருடன் கூடி நிலமும் உயரட்டும்!.. 
***

செவ்வாய், மார்ச் 22, 2016

நீர் வாழ்க..

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு. (0020)

பஞ்ச பூதங்களின் வரிசையில்
இரண்டாவதாகக் குறிக்கப்படுவது - நீர்..


அதனால் தான் -

நீரின் சிறப்பை வான் சிறப்பு - என, இரண்டாவதாக வைத்து
வள்ளுவப் பெருந்தகையும் நமக்கு அறிவுறுத்துகின்றார்..

ஆனால், நாம் தான் கேட்கவில்லை..

கேட்டிருந்தால் - 

கடந்த வருடக் கடைசியில் பெய்த மழையினால் -
ஏரி குளங்கள் நிறைந்து சென்னை மாநகர் செம்மையுற்றிருக்கும்..

சில பகுதிகள் சீரழிவுகளில் இருந்து தப்பித்திருக்கும்..

நீர் மேலாண்மை!..

மிகச் சிறப்பான சொல்லாட்சி..

அதனை வெறும் சொல்லாகக் கொள்ளாமல்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே - 
செயலாற்றிக் காட்டியவர்கள் நம் முன்னோர்கள்..

ஏனடா.. இந்தப் பழம்பெருமை!.. - என்று ,
தருக்கிக் கொண்டவர்களால் தான்
நிலமும் நிலத்தடி நீரும் மாசடைந்தன...


காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் 
கண்டதோர் வைகை பொருணை நதி - என 
மேவிய ஆறுகள் பலஓட திருமேனி
செழித்த தமிழ்நாடு!..

என்று இறும்பூதெய்துகின்றார் மகாகவி..

ஆனால் - இன்றைய நிலை?..

செம்மையாகப் பராமரிக்கப்படாத வடிகால்கள் கண்காட்சியாகின்றன!..

நீர் நிறைந்த ஆறுகளால் செம்மையுற்றிருந்த
தமிழகத்தைப் பாழாக்கியது - நாம் தானே!..

குளங்களும் ஏரிகளும் கண்மாய்களும் அழித்து ஒழித்த அவலத்தை 
நம் முன்னோர்கள் கண்டிருப்பார்களேயானால்
இதற்காகவா - இப்பாடு பட்டோம்!.. - என,
நாக்கைப் பிடுங்கிக் கொண்டு மாண்டிருப்பார்கள்...

கண்மாய்களின் நகர் எனப் புகழுடையது -  மாமதுரை..

எல்லாம் நிர்மூலமாகிப் போயின..

மிச்சம் மீதியுள்ள கண்மாய்களும் -
சீமைக் கருவேலமரங்களால் செம்மை இழந்தன..

நாம் என்னதான் செய்ய உத்தேசித்துள்ளோம்?..

நாற்பது எனும் நெடிய ஆண்டுகளைக் கடந்த நிலையில்
புதிது புதிதாகப் பலரும் கோடானுகோடிகளில் புரண்டு
புன்னகையும் பொன்னகையுமாய் குதுகலிக்கக் காணும்

இதே தமிழகத்தில் -

நீரோடித் திளைத்த ஆறுகளும் இல்லை..
நீராடிக் களித்த குளங்களும் இல்லை...

ஆளோடித்தாள் விளைத்த நிலங்களும் இல்லை..
ஆனைகட்டிப் போரடித்த களங்களும் இல்லை..

ஊர்க்காட்டுக் குளம் - குருவிக்குக் கூட
நீரின்றி வறண்டு கிடக்கும் அவலம்..

ஆனாலும் அதைப் பார்த்துக் கொண்டே
அடுத்த தேர்தலைப் பற்றிய பேச்சுகளில்
ஆவலாகிக் கிடக்கின்றோம்!..


அந்த நாட்டில் தண்ணீர் இல்லை..
இந்த நாட்டில் மழை இல்லை..

அதெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்!..

நம் நாடு ஏன் இப்படி நாசமாகப் போனது?..

சிந்தித்ததுண்டா?..

நாம் ஏன் இதனை இதுவரையிலும் கேட்கவில்லை!..

சிந்தித்ததுண்டா?..

இல்லை.. இல்லை.. ஒரு நாளும் இல்லை!..

இறைவன் இருக்கின்றானா?.. இல்லையா?..

அறிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றது - மனம்..

அந்த வேளையில் - 


இறைவனாவது ஏது?.. இயற்கை தான்!..
- என்று நிலைநாட்டும்போது மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது..

அப்படி -

இயற்கைதான்!.. - என்று முன்னெடுத்துச் சொல்லும்போது,

அந்த இயற்கையைக் காத்து - பின் அடுத்த சந்ததிக்குக் கொடுக்க மட்டும்
ஏன் இந்தச் சமுதாயம் தடுமாறுகின்றது?..

கடவுளைக் கண்டதில்லை!..  

சரி...  ஆனால், இயற்கையைக் காண்கின்றோமே!..

கடவுளுக்கு யாதொன்றும் செய்ய வேண்டாம்..

ஏனெனில் - வேண்டுதல் வேண்டாமை அற்றவன் அவன்!..

ஆனால் இயற்கைக்குச் செய்யவேண்டுமே!.. 

நாம் இயற்கைக் காத்தால் தானே - இயற்கை நம்மைக் காக்கும்!..

அதனால் தான், நம்முன்னோர்கள் -
நல்லனவற்றைச் சொன்னார்கள்.. செய்தார்கள்..

காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனிமனத்தால்!..

- என்பது ஞானசம்பந்தப்பெருமானின் திருவாக்கு..

நல்ல மனம் கொண்டு, கா - எனப்படும்
பூந்தோட்டங்களையும் மரக்கூட்டங்களையும் பேணிக்காத்து
குளம் முதலான நீர் நிலைகளை விளங்கச் செய்பவர் தம்மை -
எவ்விதத் தீவினைகளும் வந்து தீண்டாது..
இது திருநீலகண்டத்தின் மீது ஆணை!..

- என்று அறுதியிட்டுக் கூறியருள்கின்றார்..

மனித நேயம்
இன்னும் ஒருபடி மேலாக,

பரவப்படுவான் பரமனை ஏத்தீர்
இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயீர்
கரகத்தால் நீரட்டிக் காவினை வளர்க்கீர்
நரகத்தில் நிற்றீரோ நாள் எஞ்சினீரே!..

- என்று கடிந்து கொள்பவர் திருமூலர்..

மக்களே..
நீங்கள் பரமனைப் போற்றி வணங்கினீரில்லை.. போகட்டும்..
யாதொரு தான தர்மங்களையும் செய்தீர்களில்லை.. அதுவும் போகட்டும்..

ஆனால், குடங்களில் நீர் எடுத்து ஊற்றி,
மரக்கூட்டங்களை வளர்க்காமல் போனீரே!..

நரகம் என்று தனியாக ஒன்று இல்லாவிடினும்
நீவிர் வாழும் எஞ்சிய நாட்களில்
நீவிர் வாழும் இடமே நரகமாகிப் போகுமே!..
என்ன செய்யப் போகின்றீர்கள்?..

- என்று கேட்கின்றார் திருமூலர்..

எப்பேர்ப்பட்ட விஷயம்!..

ஆற்றங்கரை மரம் எனில், அதுவாக -
மண்ணிலிருந்து நீரை உறிஞ்சிக் கொள்ளும்..

ஆனால் -

முகவை போன்றதொரு வறண்ட நிலத்தில்
வாழ முயற்சிக்கும் மரம் எனில்
நீருக்குப் பரிதவிக்குமே!..

அதற்கு நாம் தானே -
குடத்தில் நீரெடுத்துத் தோளில் சுமந்து
வேரில் ஊற்றி வளர்த்தெடுக்க வேண்டும்!..

அப்போதுதானே - அந்த மரம்
இலைகளும் கிளைகளுமாக
தழைத்துப் படர்ந்து கருமுகிலைப்
பிடித்து இழுத்து வரும்!..

தான் வளர்ந்த மண்ணை வளமாக
ஆக்கி அழகு பார்த்திருக்கும்!..

மரங்கள் நன்றியுடையவை..

தாளுண்ட நீரைத் தலையாலே தருதலால்!..
- என்று ஔவையார் புகழ்ந்துரைப்பார்..

அதுவன்றி -

வந்ததடா யோகம்!.. என்று  
வறண்ட நிலத்தில் 
வாழத் துடிக்கும் 
மரத்தை வன்கோடரி 
கொண்டு வெட்டிப் பிளந்து 
விறகாக்கி அடுப்பேற்றி
தணல் மூட்டிப் புகையாக்கினால்
நம் வாழ்வும் அதுபோலத்தானே ஆகும்!..

அதுமாதிரி ஆகக்கூடாது எனில் -
திருமூலர் அருளும் திருப்பாடலின் உட்பொருள்தான் என்ன?..

சலசல.. என்றோடும் ஆறொன்று அருகில் இல்லாவிடினும்
குடத்தில் முகந்து எடுக்கின்ற அளவுக்கு ஒரு குளத்தையாவது 
ஒரு ஊற்றையாவது பராமரிக்க வேண்டும் என்பதே!..

பெரியோர் வாய்ச்சொல் அமிர்தம் - என்றொரு சொல்வழக்கு உண்டு..

அதனை நன்றாக உணர்ந்திருந்ததால் தான்
அன்றைய நாட்களில் மன்னரும் மற்றோரும்
நீர் நிலைகளைப் பராமரித்து நீர் மேலாண்மை செய்தார்கள்...



மாமன்னன் கரிகாற் பெருவளத்தானின் 
அரண்மனைகள் இன்றில்லை..

ஆனால் - 
கரிகாற்சோழன் உருவாக்கிய 
கல்லணை காலங்களைக் கடந்து நிற்கின்றது..

மாமன்னன் ராஜராஜனின் 
மாடமாளிகைகள் காணக் கிடைக்கவில்லை..

ஆனால் - 
ராஜராஜசோழன் உருவாக்கிய 
நீர் சுழற்சி முறை பெருமையைப் புகழ்கின்றது..

மாமன்னன் ராஜேந்திரனின் 
கோட்டை கொத்தளங்கள் தூர்ந்து போயின..

ஆனால் - 
ராஜேந்திரன் உருவாக்கிய 
சோழகங்கம் நீரலைகளுடன் திகழ்கின்றது..

அந்த மன்னர்கள் அனைவரும் தமக்கென வாழாது 
தமிழ் மண்ணிற்கென வாழ்ந்த தகைமையாளர்கள்..

அத்தகைய மன்னர்களோடு 
மக்களும் செய்த அறப்பணிகள் பல நூறு!..



இன்று நாம் உண்பதும் உடுப்பதும் உறங்கிக் களிப்பதும்
அவர்கள் செய்த புண்ணியமே!..

அவர்களை நாம் நினைவு கூர்வது போல
நம்மை அடுத்து வரும் சந்ததி நினைவு கூர்தல் வேண்டும்!..

அதற்கானவற்றை நாம் செய்யவேண்டியது
அவசியம்.. அவசியம்!..


இன்று 
சர்வதேச தண்ணீர் தினம்!..

நீர் ஆதாரங்கள் எப்படியெல்லாம் நம்மால் சிதைவுற்றன -
என்ற விவரங்கள் கண் முன்னே கொட்டிக் கிடக்கின்றன..


எதிர்வரும் ஆண்டுகளில் -
நீருக்காக போராட வேண்டியிருக்கும் என்கின்றனர் - அறிவியலார்.

இன்றைய நவீன அறிவியலால்
நீரும் நிலமும் பாழானதென்பது உண்மை..

ஆனாலும்,
நீர் நிலைகளைக் காப்பாற்றி -
இயற்கையைப் பேணுதலே அறிவுடைமை.


நீர் காப்போம்!.. 
நிலம் காப்போம்!..

நீர் வாழ்க.. 
நீருடன் கூடி நிலமும் வாழ்க!.. 
***

ஞாயிறு, மார்ச் 22, 2015

தண்ணீர்.. தண்ணீர்..

நீர்!..

தண்ணீர்!..

உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்கி..

பருகும் நீரை கண்ணன் என்று மனம் உருகுகின்றார் - நம்மாழ்வார்.


இவ்வண்ணமே - சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் -

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்!..

- என விளிக்கின்றாள்..

வைணவத்துடன் இணைந்து சைவமும் ஈசனைப் புகழும் விதம் இதோ!..

நிழல் திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன்!..

- என்று ஆனந்தப் பரவசம் எய்துபவர் மாணிக்கவாசகப் பெருமான்.

திருப்பெருந்துறையில் - இறைவன் குரு வடிவாக வீற்றிருக்க,

(கல்லாக இருக்கும் என் மனதை)
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே!..

என்று உருகுகின்றார். மேலும் எம்பெருமானை -

காக்கும் என் காவலனே!.. காண்பரிய பேரொளியே!..
ஆற்றின்ப வெள்ளமே!..

- என்றெல்லாம் புகழ்ந்துரைக்கின்றார் - மாணிக்கவாசகப் பெருமான்.

அதானால் தான் -
திருவாசகத்திற்கு உருகார் - ஒரு வாசகத்திற்கும் உருகார்!.. - என்றானது.


சூழொளி நீர் நிலம் தீ தாழ்வளி ஆகாசம்.. - என்று ஆனவன் இறைவன் என்று போற்றுகின்றார் - சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்.

இறைவனின் பேரழகை -

நீரோடு கூவிளமும் நிலாமதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றைத்
தாரோடு தண்கரந்தைச் சடைக்கு அணிந்த தத்துவன்!..

- என்று சுட்டிக் காட்டி மகிழும் திருஞானசம்பந்தப் பெருமான் -

கா - எனப்படும் பூந்தோட்டங்களையும் மரக் கூட்டங்களையும் பேணிக்காத்து - குளம் முதலான நீர் நிலைகளை விளங்கச் செய்பவர் தம்மை - எவ்வித தீவினையும் வந்து தீண்டப்பெறாது. இது திருநீலகண்டத்தின் மீது ஆணை!..

- என்று அறுதியிட்டுக் கூறியருள்கின்றார். 

இறை வழிபாட்டில் எளிமையினைக் கூறியருளும் ஞானசம்பந்தப் பெருமான் நம் பொருட்டு இறைவனிடம் வைக்கும் வேண்டுகோள் என்ன!.

பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே!..

நெடுங்களத்தில் வீற்றிருக்கும் எம்பெருமானே!.. நின் பொருட்டு பூவும் நீரும் சுமந்து வரும் நின் அடியாருடைய இடர்களைக் களைந்தருள்வாய்!..


ஞானசம்பந்தப் பெருமான் - இவ்வாறு கூறியருளியதற்கு ஏற்றார் போல,

திருஐயாற்றில் திருக்கயிலாயத் திருக்காட்சி கண்டபின் - திருக்கோயிலினுள் புகுந்த விதத்தை திருநாவுக்கரசர் - இவ்வாறு கூறியருள்கின்றார்.

மாதர்ப் பிறைக் கண்ணியானை 
மலையான் மகளொடும் பாடிப் 
போதொடு நீர் சுமந்தேத்தி 
புகுவார் அவர்பின் புகுவேன்!..

எம்பெருமானின் பூசனைக்கென - 
நறுமணம் மிக்க மலர்களோடு நீரையும் சுமந்து கொண்டு செல்லும் அடியவர்களைப் பின் தொடர்ந்து - திருக்கோயிலினுள் புகுந்தேன்!..

அப்பேர்ப்பட்ட அடியார் - திருநாவுக்கரசு என இறைவனால் திருப்பெயர் சூட்டப் பெற்றவர்,

ஞானசம்பந்தப் பெருமானால் - அப்பா!.. - என அழைக்கப்பட்ட புண்ணியர்,

எளியர்க்கு எளியராக நீர் சுமந்து செல்வோர் தம்மைப் பின் தொடர்ந்து - திருக் கோயிலினுள் புகுகின்றார்.


திருமுனைப்பாடி நாட்டில் - திருவாமூர் எனும் திருத்தலத்தில் - புகழனார் மாதினியார் எனும் தம்பதியரின் அன்புச் செல்வங்கள் - திலகவதி மற்றும் மருள் நீக்கியார்.

நிச்சயிக்கப் பெற்ற மணாளன் போர் முனையில் வீர மரணம் அடைந்து விட - திலகவதியின் வாழ்க்கை கேள்விக் குறியாகின்றது.

மகளின் நிலை கண்ட தந்தை மனம் உடைந்து சிவகதியடைகின்றார். கணவனைத் தொடர்கின்றார் - மாதினியார்.

தம்பிக்காக உயிர் தாங்குகின்றார் - திலகவதியார். 

தாம் கொண்ட செல்வத்தைக் கொண்டு அறம் செய்கின்றார் - மருள் நீக்கியார்.

சோலைகளை வளர்த்தார். 
குளங்களை உருவாக்கினார். 
தண்ணீர்ப் பந்தல்களை அமைத்தார் 

- என பெரிய புராணம் கூறுகின்றது.

ஆயினும், மனம் அமைதி அடையாததால் - சைவ சமயத்தை விட்டு நீங்கி புறச்சமயத்தில் ஒழுகினார்.

சகோதரி திலகவதியாரின் வேண்டுதலினால் - சூலை நோயுடன் மீண்டும் சைவ சமயத்திற்குத் திரும்பினார்.

நோயின் கொடுமை தாங்கமாட்டாதவராக - திரு அதிகை வீரட்டானத்தில் இறைவனைத் துதித்து - பாடிய திருப்பதிகத்தில் - 

சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்!.. - என்று தன் நிலையைக்குறிக்கின்றார்.

நீரும் பூவும் தூபமும் கொண்டு உன்னை வழிபட மறந்தறியாத எனக்கு இந்த நிலையா!.. என் நோயைத் தீர்த்தருளல் ஆகாதா?..

இப்படி வருந்திய மருள்நீக்கியார் தான் - திருநாவுக்கரசர் ஆகின்றார்.

இவரைப் பற்றிக் கேள்விப்பட்டதாலேயே - திருநாவுக்கரசர் திருப்பெயரில் -  திங்களூரில் அப்பூதி அடிகள் எனும் தனவந்தர் - தண்ணீர்ப் பந்தல் அமைத்து அறம் செய்கின்றார்.

பின்னும் திருநாவுக்கரசர் - திருத்தல யாத்திரையின் போது - வயோதிகத்தினால் வாட்டமுற்றுக் களைத்து மயங்குகின்றார். 

அப்போது, வாழைத் தோட்டத்தின் அருகில் - தண்ணீருடன் தயிர் சோற்றுப் பொதியும் கொணர்ந்து - இறைவன் தம் கையால் அப்பர் பெருமானுக்குப் பரிமாறி - களைப்பு நீக்குகின்றான்.

இந்தத் திருவிளையாடல் நிகழ்ந்த திருத்தலம் - திருப்பைஞ்ஞீலி.

திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தின் தலவிருட்சம் - வாழை.
திருநாவுக்கரசரின் தாகம் தீர்த்ததால் திருக்குளத்தின் பெயர் - அப்பர் தீர்த்தம். 

நின்றாகி எங்கும் நிமிர்ந்தார் தாமே
நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே!..

- என்று போற்றிப் புகழ்ந்துரைக்கும் அப்பர் பெருமான் -  

சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே
திருஆலங்காடுறையும் செல்வர் தாமே!..

-  என்று, தீர்த்தங்களை - சிவ ஸ்வரூபமாகக் கண்டு மகிழ்கின்றார்.


போலியான புறச் சடங்குகள் அற்ற - இறை வழிபாடு எல்லாருக்கும் கூடி வருவதல்ல!..

இறைவனை வழிபடுவதே புண்ணியம் என்கின்றார் திருமூலர்.

அப்படியான -  புண்ணியம் செய்ய முற்படுவோர்க்கு பூவும் நீரும் கிடைத்தே தீரும் - என்றருள்கின்றார்.

புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறியாமல் நழுவுகின்றாரே..

- என்பது திருமூலரின் திருமந்திரம்.

வழுவாத மழைக்கு மரங்களே ஆதாரம்.

கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ நாள் எஞ்சினீரே!..

மரங்களைப் பேணி வளர்க்காதவர் - எஞ்சிய நாட்களுடன் நரகத்தில் நிற்பர்!..
- என்று நம்மை எச்சரித்து அறிவுரை அளிப்பவர் திருமூலர்.

ஆனால் -

நாம் தான் கேளாச் செவியராக -
பசுமை அழிவதைக் கண்டும் காணா விழியராக ஆனோம்!..


Mabella slum in Sierra Leone's capital Freetown.
Natwarghad - Gujarat.
Polluted water flowing Jian River in Luoyang, North China
Village in Tariq district, Baghdad. Iraq.
ஊற்று, சுனை, குட்டை, குளம், அகழி, கிணறு, ஏரி, ஆறு - நினைக்கவே பிரமிப்பு.

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நீர் மேலாண்மைத் திறம் நம்முடையது.

ஆனால் - இன்று பெய்யும் மழையைத் தேக்கி வைப்பதற்கும் வகையற்றுப் போனோம்.


திருக்கோயில்களில் திருவிழாக்களின் நிறைவு - தீர்த்தவாரி, தெப்பம்!..

இன்று பல திருக்குளங்களைத் திடல்களாக ஆக்கிய பெருமை நம்முடையது.

ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகள..

- என்று சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் சொல்லுகின்றாள்..

அவள் மட்டுமா சொல்லுகின்றாள் - அப்படி!..

இதோ அருணகிரியார் திருவாக்கு -

சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயற் பொழில்!..

இப்போது - நாம் அழித்தது போக மிச்சம் மீதியிருக்கும் வயற்பொழில்களில் நீருக்கே பஞ்சம்!..

அப்புறம் எங்கே வயல் நீரில் வாளையும் விராலும் சேலும் கெண்டையும் துள்ளி விளையாடுவது?..


இன்று சர்வதேச தண்ணீர் தினம்!.. உலக நீர் நாள்!..

நீர் ஆதாரங்கள் எப்படியெல்லாம் நம்மால் சிதைவுற்றன - என்ற விவரங்கள் கண் முன்னே கொட்டிக் கிடக்கின்றன..

எதிர்வரும் ஆண்டுகளில் நீருக்காக போராட வேண்டியிருக்கும் என்கின்றனர்.

நீர் நிலைகளைக் காப்பாற்றி - இயற்கையைப் பேணுதலே அறிவுடைமை.

நீரிடை பூத்த தாமரையில் - நான்முகன் விளங்குவதும்
நீரிடை அனந்த சயனத்தில் அரங்கன் துலங்குவதும் 
நீரின் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்வதற்காகவே!..

ஆயிரம் முகத்தினொடு இறங்கிய கங்கையாளை தனது ஜடா மகுடத்தில் சிறை வைத்து - கட்டுப்படுத்திய சிவபெருமானின் திருவிளையாடல் - 
நீரின் மேலாண்மையை உணர்த்துதற்கே!..


ஏதொன்றும் கொடுக்க இயலவில்லையே என ஏங்கித் தவிக்கும் 
விழிகளின் கண்ணீர்த் துளியினை அன்புடன் ஏற்றுக் கொள்கின்றேன்!..

- என்கின்றான் ஸ்ரீஹரிபரந்தாமன்.

அது - அன்பு ததும்பி ஆற்றாமையில் தவிக்கும் உள்ளங்களுக்கு!..

நாம் தான் வேறு மாதிரி ஆயிற்றே!..

அனைத்தையும் கெடுத்து விட்டோம்!. அல்லலுற்று ஆற்றாது அலைகின்றோம்!. ஆதரித்து அருள்வாய் ஐயனே!..

விழி நீர் சிந்துவதற்குக் கடைசி புகலிடம் 
அவனது திருவடிகள் மட்டுமே!..

பஞ்ச பூதங்களின் வரிசையில் 
நீர் இரண்டாவதாக குறிக்கப்படுகின்றது.

வள்ளுவப் பெருந்தகையும் வான் சிறப்பு என நீரின் சிறப்பை இரண்டாவதாக வைத்து நமக்கு அறிவுரைக்கின்றார்.

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு. (0020)

நீர் காப்போம்!.. நிலம் காப்போம்!..
வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்!..
* * *