நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
திங்கட்கிழமை
இன்று கொத்தமல்லி மகாத்மியம்..
கொத்தமல்லி நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளையும் வாயு பிரச்னைகளையும் குணமாக்கும் தன்மை உடையது..
இது பசியைத் தூண்டுகின்ற மூலிகை..
மற்ற விளைபொருள்களைப் போலவே பலவித பூச்சி மருந்துப் பிரயோகங்களுடன் தான் சந்தைக்கு வருகின்றது..
எனவே
கொத்தமல்லி இலையை உப்புத் தண்ணீரில் நன்கு அலசி விட்டு அளவோடு உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது..
வீட்டில் தோட்ட வெளி அல்லது
மாடித் தோட்டம் இருப்பின் நாமே தொட்டிகளில் கொத்த மல்லியை பயிரிட்டுக் கொள்ளலாம்..
இப்படியிருக்க
நம்முடன் சர்வ சாதாரணமாக புழங்குகின்ற கொத்த மல்லித் தழை செய்கின்ற அற்புதங்கள் பற்பல...
அவற்றுள் ஒரு சில..
வெறும் கொத்த மல்லித் தழைச் சாற்றுடன் எலுமிச்சை சாறு உப்பு மிளகுத் தூள் சேர்த்து அருந்தலாம்.
கொத்தமல்லித் தழைச் சாற்றுடன் மோர் உப்பு கலந்தும் அருந்தலாம்.
கொத்தமல்லிச் சாறு அருந்தும் போது பசித்த பின்னரே சாப்பிட வேண்டும்.
இப்படித் தொடர்ந்து பருகுவதால் காமாலை போன்ற நோய்கள் வராமல் தடுக்கப் படுகின்றது..
உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறுகின்றன..
வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்னைகளும் குணமாகின்றன..
கல்லீரல் பலப்படுகின்றது...
பித்தம் கட்டுக்குள் இருக்கும்.
புத்தம் புதிய கொத்த மல்லித் தழையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாகக் கழுவி விட்டு ஒரு குவளை சுத்தமான நீர் விட்டு சிற்றரவையில் அரைத்துப் பிழிந்து - வடிகட்டி எடுத்தால் கொத்த மல்லிச் சாறு..
பச்சைக் கொத்தமல்லி சட்னி அரைப்பது போலத் தான் இதுவும்...
இதில் பச்சை மிளகாய் அறவே கிடையாது..
இதைத் தயார் செய்வது மிகவும் எளிதானது.
இதை அனைவரும் பருகலாம்,
தினமும் டீ, காஃபிக்கு பதிலாக இதனை அருந்தலாம்..
உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை எனில் இதை விட்டு விடவும்..
இயற்கை நலம்
பேணுவோம்..
சிவாய நம ஓம்
**