நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 21, 2025

கொத்தமல்லி

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
திங்கட்கிழமை


இன்று கொத்தமல்லி மகாத்மியம்..

கொத்தமல்லி நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளையும்  வாயு பிரச்னைகளையும் குணமாக்கும் தன்மை உடையது..
இது பசியைத் தூண்டுகின்ற மூலிகை.. 

மற்ற விளைபொருள்களைப் போலவே பலவித பூச்சி மருந்துப் பிரயோகங்களுடன் தான் சந்தைக்கு வருகின்றது..

எனவே
கொத்தமல்லி இலையை உப்புத் தண்ணீரில் நன்கு அலசி விட்டு  அளவோடு உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது..

வீட்டில் தோட்ட வெளி அல்லது
மாடித் தோட்டம் இருப்பின் நாமே தொட்டிகளில் கொத்த மல்லியை பயிரிட்டுக் கொள்ளலாம்..

இப்படியிருக்க
நம்முடன் சர்வ சாதாரணமாக புழங்குகின்ற கொத்த மல்லித் தழை செய்கின்ற அற்புதங்கள் பற்பல...

அவற்றுள் ஒரு சில..

வெறும் கொத்த மல்லித் தழைச் சாற்றுடன் எலுமிச்சை சாறு உப்பு மிளகுத் தூள் சேர்த்து அருந்தலாம்.

கொத்தமல்லித் தழைச் சாற்றுடன் மோர் உப்பு கலந்தும் அருந்தலாம்.

கொத்தமல்லிச் சாறு அருந்தும் போது  பசித்த பின்னரே  சாப்பிட வேண்டும்.
 
இப்படித் தொடர்ந்து பருகுவதால் காமாலை போன்ற  நோய்கள் வராமல் தடுக்கப் படுகின்றது..

உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறுகின்றன..

வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்னைகளும் குணமாகின்றன..

கல்லீரல் பலப்படுகின்றது...
பித்தம் கட்டுக்குள் இருக்கும்.

புத்தம் புதிய கொத்த மல்லித் தழையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாகக் கழுவி விட்டு ஒரு குவளை சுத்தமான நீர் விட்டு சிற்றரவையில் அரைத்துப் பிழிந்து - வடிகட்டி எடுத்தால் கொத்த மல்லிச் சாறு..

பச்சைக் கொத்தமல்லி சட்னி அரைப்பது போலத் தான் இதுவும்...
இதில் பச்சை மிளகாய் அறவே கிடையாது..

இதைத் தயார் செய்வது மிகவும் எளிதானது.
இதை அனைவரும் பருகலாம்,
தினமும் டீ, காஃபிக்கு பதிலாக இதனை அருந்தலாம்..

உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை எனில் இதை விட்டு விடவும்..

இயற்கை நலம் 
பேணுவோம்..

சிவாய நம ஓம்
**

ஞாயிறு, ஜூலை 20, 2025

கார்த்திகை

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 4
கார்த்திகை
ஞாயிற்றுக்கிழமை


நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோநம
          ஞான பண்டித ஸாமீ நமோநம ... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்தம யூரா நமோநம ... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ... அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு ... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக ... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ... பெருமாளே..

முருகா சரணம் 
சரணம் சரணம்

ஓம் சிவாய நம ஓம்
**

வெள்ளி, ஜூலை 18, 2025

வெள்ளி 1

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
முதல் வெள்ளி

இன்று
ஸ்ரீஅகத்தியர்
நமக்காக இயற்றி அருளிய
கீர்த்தனம்

பாடியிருப்பவர்
ஸ்ரீமதி சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத்


ஸ்ரீ சக்ர ராஜ 
சிம்ஹாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி

ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி

நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி
(ஸ்ரீசக்ர)

(புன்னாக வராளி)
பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும்

உலகம் முழுதும் எனது அகமுறக் காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி

(நாதநாமக்ரியை)
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்

நிழல் எனத் தொடர்ந்த முன் ஊழ் கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி

(சிந்து பைரவி)
துன்பப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயம் நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்

அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா…அகிலாண்டேஸ்வரி
(ஸ்ரீசக்ர)

மிக்க நன்றி..
இணையத்தில் கேட்பதற்கான இணைப்பு

ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய
**

திங்கள், ஜூலை 14, 2025

முசுகுந்தர் 2

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 
திங்கட்கிழமை


இன்று திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு

குன்றில்
குமரன் சிரிக்கட்டும்..
நல்லோர்
அனைவரது வாழ்வும் செழிக்கட்டும்..

முருகா சரணம்
சரணம் சரணம்..


ஆனி ஹஸ்தம் எனது ஜன்ம நட்சத்திரம் ( 3/7).. ஸ்ரீ மகமாயி தரிசனம் செய்தேன்.. 

இன்று பொது வழக்கத்தில் ஜூலை 14.. 

ஒவ்வொரு நாளும் இறைவனின் அருட்கொடை எனக் கொண்டு இப்பதிவுடன் பகிர்ந்து கொள்கின்றேன்..


முசுகுந்தர்  பற்றிய பதிவின் தொடர்ச்சியாக இன்று..


ஒரு சமயம் திருக் கயிலாய மலைச் சாரலில் தழைத்திருந்த வில்வ விருட்சத்தின் கீழ் அமர்ந்து ஐயனும் அம்பிகையும் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.
 

திருக்கயிலாய வனத்தில் மயில்கள் ஆட, குயில்கள் இசைப் பணியாற்றிக் கொண்டிருந்தன.. அந்த மகிழ்வுடன் மான்கள் துள்ளிக் கொண்டிருந்தன..

குரங்குகளும் கூட்டங்கூட்டமாக தங்கியிருந்தன. 

அப்படி - 
அந்த வில்வ மரக் கிளையில் அமர்ந்திருந்த வயதான ஆண் முசு (குரங்கு) ஒன்று, அம்மையப்பனைக் கண்டுணர்ந்து கிளியில் இருந்த படியே - வில்வ  இலைகளைப் பறித்து, ஒவ்வொன்றாக
கீழே அமர்ந்திருந்த பார்வதி - பரமேஸ்வரர் மீது போட்டது. 

இதைக் கண்ட  அம்பிகை சற்றே கோபம் கொண்டாள். 

அப்போது
" தேவி இந்த முசுவை கோபிக்க வேண்டாம்.. இதன்  செயலை நாம் அர்ச்சனையாகக்  கொள்வோம்!.. " - என்று  சாந்தப்படுத்தினார் பெருமான்..

உமையாம்பிகையும் மனமிரங்கி முசுவுக்கு அருள் புரிந்தாள் . 

அந்தக் கணத்தில் அந்த முசுவின் மனதிலுள்ள அஞ்ஞானம் நீக்கி மெய்ஞானம் உண்டாயிற்று... 

ஞானம் பெற்ற குரங்கு  கீழே இறங்கி வந்து அம்மையப்பனை வலம் செய்து வணங்கி, தன்னைப் பொறுத்தருள வேண்டி தண்டனிட்டது. 

" நீ பிழை ஏதும் செய்யவில்லை..  வில்வ பத்ரங்களால் எம்மைப் பூசித்த அதனால் , மனு வம்சத்தில்  அரசனாகப் பிறந்து
உலகம் முழுவதையும் ஆள்வாயாக "  - என்று அருள் புரிந்தார்..

" மானிடப் பிறவி எடுத்தாலும் 
அம்மையப்பனை என்றும் மறவாமல் இருக்க வேண்டும்..
உலக மாயையில் வசப்பட்டு என் மனதில்  அகந்தை தோன்றாமல்  இருக்க வேண்டும்.. 

அம்மையப்பனாகிய
தங்களையும் மறவாதிருக்க வேண்டும்.. 

அதே சமயத்தில்
அடிமையாகிய நானும் என்னை
மறவாதிருக்க வேண்டும்..

அதனால் அடியேன்  குரங்கு முகத்துடனேயே பிறக்கும்படி  அருள் புரியுங்கள்.. " - என்று பணிவுடன் வேண்டி நின்றது முசு..

பெருமானும் முசு கேட்டுக் கொண்டவாறே வரம் தந்தருளினார்...

இதுவே திருக்கயிலாயத்தில்
 வில்வக் கிளை உதிர்த்த முசு - இந்தப் பூமியில்
செல்வப் பெருங் கிளையான சோழர் 
தம் திருக் குலத்தில்
முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறப்பெய்தி இறவாப்  புகழ் பெற்ற புனித வரலாறு..

முருகன் - தெய்வயானை திருமணத்தில் முசுகுந்தர் கலந்து கொண்டதாக ஒரு வரலாறும் உள்ளது..


இன்றும் திருக் கயிலாய மாமலையில் முசுகுந்தர் மெய்க்காவலாக இருக்கின்றார் என்பது ஐதீகம்..

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ வாரியார் ஸ்வாமிகளின் உபந்யாசத்தில்  தெரிந்து கொண்ட முசுகுந்தர் புராணத்தை என்னளவில் தந்துள்ளேன்..

பிழைகளை மன்னிக்கவும்..

முசுகுந்தர் திருவடிகள் போற்றி

ஆரூரில் 
முசுகுந்தர் சித்திரம்


நந்தீசர் நின்ற திருக்கோலம்


தஞ்சை
 பெரியகோயில்
விடங்கர்



ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ
காமனையும் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ
மான்மறி கை ஏந்தியோர் மாதோர் பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திரு ஆரூர் கோயிலாக் கொண்டநாளே... 6/34/1
-: திருநாவுக்கரசர் :-

திவயதேசங்களில் ஒன்றான
தஞ்சை ஸ்ரீ நீலமேகப் பெருமாள் திருக்கோயிலுக்கும்
இன்று மகா சம்ப்ரோக்ஷணம்..

ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

வெள்ளி, ஜூலை 11, 2025

முசுகுந்தர் 1

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 27
வெள்ளிக்கிழமை

வீதிவிடங்கர் பற்றிய பதிவின் தொடர்ச்சியாக இன்று..


தேவேந்திரனைக் கண்டதும் சத்திய லோகத்தின் கதவுகள் திறந்து கொண்டன..

நான்முகப் பெருமானின் நான்கு முகங்களிலும் புன்னகை...

" வழக்கம் போலவே பிரச்னை... இம்முறை விருத்திராசுரன் வருகின்றானாம் பெரும் படையுடன்..." 

" தேவேந்திரா!.. உடனடியாக பூவுலகம் சென்று முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியைக் கேள்... அவர் ஒருவரால் மட்டுமே  அசுரப் படைகளை அழித்து உனக்கு உதவ முடியும்.. "

" அவரிடம் அப்படி என்ன மகத்துவம்?.."

" அவர் ஒருவரே அகந்தையை அழித்துப் பிறந்தவர்.. அதைப் பிறகு தெரிந்து கொள்ளலாம்.. இப்போது உடனடியாக பூவுலகத்திற்குச் செல்!.." 

பிரம்மதேவர் மொழிந்ததைக் கேட்ட இந்திரனுக்கு அமரலோகம் மறந்து போனது.. அரம்பையரும் மறந்து போயினர்...

திரு ஆரூரை நோக்கி விரைந்தான்.. 

ஐராவதத்தினைத் தொடர்ந்து உச்சைச்சிரவமும் ஓடிற்று..

வந்து நின்ற தேவேந்திரனை வணங்கி வரவேற்று உபசரித்தார் முசுகுந்தர்..

தேவேந்திரன் தனது பிரச்னையை விளக்கினான்.

உதவியென வந்து நிற்கின்ற
 தேவேந்திரனுக்கு ஆறுதல் கூறி அவனுக்குத் துணையாகச் சென்று அசுரப் படைகளை அழித்தார் முசுகுந்த சக்ரவர்த்தி..

தேவேந்திரன் பூரித்திருந்தான்...

" என்ன வேண்டும் கேளுங்கள்... தருகின்றேன்!.. "

ஈசனின் கருணையினால் நல்லதோர் எண்ணம் தோன்றிற்று முசுகுந்தரின் மனதில்..


" ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் திருமார்பில் இருந்து வெளிப்பட்டதும் தாம் பூஜித்துக் கொண்டிருப்பதுமான ஸ்ரீ சோமாஸ்கந்த  மூர்த்தியை அடியேனுக்கு அளிக்க வேண்டும்!.. "

தேவேந்திரன் அதிர்ந்தான்..
இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை..

" சரி... நாளை உதயத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்... "

மறுநாள் உதயத்தில் முசுகுந்தர் அதிர்ந்தார்...

காரணம் அங்கே ஏழு சோமாஸ்கந்த விடங்கத் திருமேனிகள் இருந்தன... 

இந்திரன் அர்த்தத்துடன் புன்னகைத்தான்.. 

மூலத் திருமேனியை விட்டுக் கொடுக்க விருப்பம் இல்லாமல் அதைப் போலவே ஆறு திருமேனிகளை  உருவாக்கி ஒன்றாகக் கலந்து வைத்திருந்தான்..

" முசுகுந்தர் அவர்களே..  இவற்றுள் ஒன்று மட்டுமே மூலமானது.. அதனைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.. தாங்கள் தான் தபோ பலமும் மனோ பலமும் ஈசனிடம் பேரன்பு மிக்கவர் ஆயிற்றே!... "

முசுகுந்தர் ஒரு விநாடி ஈசனைத் தியானித்தார்.. 

உண்மையான விடங்கத் திருமேனி அவரது நெஞ்சுக்குள் ஒளிர்ந்தது..

ஓடிச் சென்று அதன் திருப்பாதங்களைத் தொட்டார்.. அந்த அளவில்  ஏனைய ஆறு திருமேனிகளும் சுயம் பிரகாசமாக ஒளிர்ந்தன...

தனது திட்டம் தவிடு பொடியானதை உணர்ந்து கொண்ட இந்திரன் எல்லாவற்றையும் முசுகுந்தரிடமே ஒப்படைத்து கௌரவித்தான்..

முசுகுந்தர் அவற்றை திருவாரூர் முதலான ஏழு தலங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்...

இருந்தாலும் மனம் ஆறவில்லை அமரர் கோனுக்கு..

" முசுகுந்தரது மகத்துவம் தான் எத்தகையது?!.. "

ஈசனின் அருள் வாக்கு ஒலித்தது...

" தினமும் மாலைப் பொழுதில் ஆரூர் வந்து வழிபடுவாயாக... கீழைத் திருவாசல் வழியாக எழுந்தருளும் போது எம்மை நீ பற்றிக் கொள்... "

விடங்கர் சந்நிதியில் சுந்தரர்

நித்ய பிரதோஷ திருத் தலம் ஆனதால் ஸ்வாமிக்கு எதிரில் நந்தீசன் நின்று கொண்டு இருக்கின்றார்.. 

கீழைத் திருவாசல் வழியாக ஸ்வாமி எழுந்தருள்வது எப்போது என்று இந்திரனும் காத்துக் கொண்டிருக்கின்றான்..

ஓம் 
சிவாய நம ஓம்
**

புதன், ஜூலை 09, 2025

நலம் வாழ்க

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 25
புதன்கிழமை


திங்கள் பதிவு..
வந்ததுக்கு நாலு இட்லி  மட்டும் தான்!

இன்றைய பதிவில் ஆரோக்கிய குறிப்புகள் சில..

தக்கதொரு பாரம்பரிய மருத்துவரைக் கலந்து கொள்வது நல்லது..

பார்வை தெளிவாக இருக்க, சில உணவுப் பழக்க வழக்கங்கள்..

வைட்டமின் A ,C,  மற்றும் E நிறைந்த உணவுகளைச் சாப்பிடுதல்..

பாதாம், வெண்ணெய், பூசணி விதைகள் ஆரஞ்சு ,, கேரட் கீரைகள், கொட்டைகள், விதைகள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்வது..

கண்களை அடிக்கடி சிமிட்டுதல், போதுமான தூக்கம், கண் பயிற்சி..

மூட்டு வலி நீங்க, ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள், மஞ்சள், மற்றும் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

மஞ்சளில் உள்ள குர்குமின் மூட்டு வலியைப் போக்கும்..

முருங்கை விதை , சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றது..

முருங்கை விதையில் துத்தநாகம், வைட்டமின் A , இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் உள்ளன..

சிறுநீரகத்தில் நச்சு சேராமல்  முருங்கை விதை தடுக்கின்றது..

முருங்கை விதையை எப்படிப் பயன்படுத்துவது!?..

தினமும் ஐந்து முருங்கை விதைகளை எடுத்து நெய்யில் வறுத்து பொடியாக அரைத்து சுடு சோற்றில் பிசைந்து சாப்பிடலாம்.. அல்லது பாலுடன் சேர்த்துக் காய்ச்சி அருந்தலாம். 

முருங்கை - ஊட்டச் சத்து மிக்க 
விதைகளுள் ஒன்று..

நமது நலம்
நமது கையில்

ஓம் சிவாய நம ஓம்
**

திங்கள், ஜூலை 07, 2025

திருச்செந்தூர்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 23
திங்கட்கிழமை

இன்று
இரண்டாம் படை வீடாகிய திருச்செந்தூர் திருக்குடமுழுக்கு



சேல் பட்டழிந்தது செந்தூர் 
வயற்பொழில் தேங்கடம்பின்
   மால் பட்டழிந்தது பூங்கொடியார் 
மனம் மா மயிலோன்
      வேல் பட்டழிந்தது வேலையும் 
சூரனும் வெற்பும் அவன்
         கால் பட்டழிந்தது இங்கு என் தலைமேல் 
அயன் கையெழுத்தே.. 40
  -: கந்தரலங்காரம் :-

முருகனருள்
எங்கும் நிறையட்டும்

ஓம் சிவாய நம ஓம்
**

வெள்ளி, ஜூலை 04, 2025

விடங்கர்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 
வெள்ளிக்கிழமை

கடந்த வாரத்தில் ஒருநாள் தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இப்படிக் கூறினர்..
 
இந்திரனிடம் இருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தி எடுத்து வந்த ஏழு திருமேனிகளையும் ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினார் .. 


இதன் நிகழ்வு கூறுவதற்கே இப்பதிவு..

சோழ வள நாட்டின்
திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருக்காராயில், திருக்குவளை, திருவாய்மூர் மற்றும் திருமறைக்காடு ஆகிய ஏழு தலங்களும் சப்த விடங்க தலங்கள் எனப்படுகின்றன.

திரு ஆரூர்
வீதி விடங்கர்.. அஜபா நடனம்
உடலில் மூச்சுக் காற்று போல   நடனம்

திருநள்ளாறு 
நக விடங்கர்..
உன்மத்த நடனம்..
பித்தன் ஆடுவது போல  நடனம்..

திரு நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்)
- சுந்தரவிடங்கர்.. தரங்க நடனம்
கடலில் அலைகள் புரண்டு எழுவது போன்ற  தரங்க நடனம்

திருக்காராயில் (திருக்காரவாசல்)
 ஆதிவிடங்கர்.. குக்குட நடனம்.
சேவற் கோழியைப் போல   நடனம்

திருக்கோளிலி (திருக்குவளை)
 அவனி விடங்கர்.. பிருங்க நடனம்.
வண்டு மலருக்குள் குடைந்து ஆடுதல் போன்ற நடனம்

திருவாய்மூர் 
 நீலவிடங்கர்.. கமல நடனம். நீரில் தாமரை மலர் அசைவது போன்ற  நடனம்

திருமறைக்காடு (வேதாரணியம்)
புவனி விடங்கர்.. ஹம்சபாத நடனம்.
அன்னப் பறவை அடியெடுத்தாற் போல்  நடனம்..

விடங்கர் என்பது உளியால் செதுக்கப்படாத மூர்த்தி எனப் பொருள்.. 

இந்திரனின் சூழ்ச்சியை மீறி அவனிடமிருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தி பெற்று வந்த ஒரே வடிவமான கொண்ட ஏழு திருமேனிகளும் இந்த ஏழு தலங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது ஐதீகம்..

என்ன சூழ்ச்சி?..
ஏன் பெற்று வந்தார்!..
எதற்காகப் பெற்று வந்தார்?..

விவரங்களை
அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்..

இந்த ஏழு தலங்களிலுமுள்ள  கோயில்களில் திருமூலஸ்தானத்திற்குத் தென் புறமாக  விடங்கர் சந்நிதிகள் விளங்கும்..

இவையே முசுகுந்த சக்கரவர்த்தி அவர்களால் அமைக்கப்பட்டவை..

ஏழு தலங்களின் கோயில்களும் முசுகுந்த சக்கரவர்த்தி அவர்களுக்கு முந்தியவை.. காலத்தால் மிகவும் பழைமையானவை...

ஆரூர் வீதி விடங்கரின் அழகில் மயங்கிய ராஜராஜ சோழச் சக்கரவர்த்தி - தான் எழுப்பிய தஷிணமேருவில் விடங்கருக்கும் தனிச்சந்நிதி அமைத்து மகிழ்ந்தார்..

இது தவிர உபய விடங்கர் சந்நிதிகளும் விளங்குகின்றன.. 

அவற்றுள் திரு ஐயாறு, திருப்பூவனூர்,
திருவீழிமிழலை, கீழ்வேளூர்,
திருவாவடுதுறை,
 திருஒற்றியூர்  
திருக்கச்சூர்
தலங்களும் அடங்கும்..

இதே போல்
பிரதி விடங்கர் சந்நிதிகளாக - 
நல்லூர்,  திருவீழிமிழலை, கீழ்வேளூர், தஞ்சை தக்ஷிண மேரு, திருக்கோட்டாறு, கச்சனம், அம்பர் மாகாளம், திருவாவடுதுறை, திருமலைராயன் பட்டினம், திருத்துறைப்பூண்டி, நாகூர்,  தீபாம்பாள்புரம், சிங்கப் பெருமாள் கோயில், திருப்பைஞ்ஞீலி, பாரியூர், தொட்டிக் கலை, மேலையூர் முதலான தலங்கள் குறிக்கப்படுகின்றன...

ஆதி விடங்கத் தலங்கள் தவிர்த்த ஏனைய பிரதி விடங்கத் தலங்களின் பெயர்கள் விக்கியில் இருந்து நன்றியுடன் பெறப்பட்டவை...

சிவாய நம ஓம்
**

திங்கள், ஜூன் 30, 2025

ஆனி மகம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி மகம்
திங்கட்கிழமை


இன்று
ஸ்ரீ மாணிக்க வாசகர் குருபூஜை


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..

பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..

கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வா என்ற வான் கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்று ஊதாய் கோத்தும்பீ..


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா
போற்றி


மாணிக்க வாசகர் திருவடிகள் போற்றி

சிவாய நம ஓம்
**

வெள்ளி, ஜூன் 27, 2025

வில்வம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 13
வெள்ளிக்கிழமை

வில்வம் 


மங்களம் மிகுந்த வில்வ மரத்தின் இலை, காய், பழம், வேர் போன்றவை அருமருந்தாகப் பயன்படுகின்றன.

சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்படுவனவற்றில்  வில்வ இலைகள் மிகவும் உயர்ந்தவை.. புனிதமானவை.. 

வில்வம் நிர்மால்யம்..
ஒருமுறை அர்ச்சித்த வில்வ இலைகளைக் கொண்டு மீண்டும் அர்ச்சிக்கலாம்.
உலர்ந்த வில்வ இலைகளில் நீர் தெளித்து விட்டு ஆறு மாதங்கள் வரை அவற்றைக் கொண்டு சிவபூஜை செய்யலாம்..

வில்வ மரத்தின் இலைகள் -
திரிநேத்திரம், திரிகுணம் திரிசூலம் எனும் மூன்றையும்
மனம் வாக்கு காயம் எனும் மூன்றையும் பக்தி கர்ம ஞானம் எனும் மூன்றையும்
 குறிப்பதாக ஆன்றோர் சொல்வர்..

சைவத்தில் வில்வத்தையும், வைணவத்தில் துளசியையும் பார்த்தாலே புண்ணியம் என சொல்லப்படுகின்றது. 

வில்வ மரத்தின் இலைகள் வேதங்களுக்கு இணையானவை..

ஒருமுறை வேதங்கள் சிவபெருமானை வழிபடுவதற்காக ஸ்ரீ பிரம்ம தேவனைக் கேட்டபோது வில்வ மரம் என்றாக வரம் கொடுத்தார்... 

அவ்வண்ணமே வேதங்கள் வில்வ மரங்களாக -
வில்வ வனம் எனும் திருவைகாவூர் திருத்தலம் தோன்றியது..

வில்வத்திற்கு கூவிளம் என்று தமிழில் பெயர்..

கூவிளம் என்றே தேவாரத் திருப்பதிகங்களில் பாடப்படுகின்றது..

வில்வ மரத்தில் ஸ்ரீ மகாலக்ஷ்மி வாசம் செய்கின்றாள்..

திரு அரங்கத்தில் தாயார் சந்நிதியின் முன்பாக வில்வ மரம் தழைத்துள்ளது.

வீடுகளில் வில்வம் வளர்ப்பது பற்றி  சைவ சமயப் பெரியோரின் ஆலோசனை பெறுவது அவசியம்..

கோயில்களில் இருக்கின்ற வில்வ மரத்தைப் பராமரித்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்..

வில்வ பழத்தை உலர வைத்து உள்ளிருக்கும் சதைப் பற்றை நீக்கிவிட்டு கிண்ணம் போல ஆக்கி அதில் திருநீறை வைத்துப் பூசுவது உத்தமம்..

வில்வம்  ஆன்மிகத்திலும், மருத்துவத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கின்றது.   சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் சிறந்து விளங்குகின்றது. 

துளசியைப் போலவே அதிக அளவு பிராண வாயுவைத் தருகின்றது.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க வல்லது. மேலும்,  பித்தத்தை சமன்படுத்துவதோடு, ஜீரண சக்தியையும் மேம்படுத்துகிறது.

வில்வ மருத்துவத்தை தகுந்த சித்த மருத்துவர் ஆலோசனையின் வழியே தான் பின்பற்ற வேண்டும்..


கொக்கிறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கணி சடையர்
அக்கினொடாமை பூண்டழகாக அனலது ஆடும் எம் மடிகள்
மிக்கநல்வேத வேள்வியுளெங்கும் விண்ணவர்விரைமலர் தூவப்
பக்கம்பல்பூதம் பாடிடவருவார் பாம்புர நன்னகராரே.. 1/42/2
-: திருஞானசம்பந்தர் :-

தேன் திகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்
ஆன் திகழைந்து உகந்தாடும் பிரான் மலையார்த்தெடுத்த
கூன் திகழ் வாளரக்கன்முடி பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட வூருறை உத்தமனே..
4/107/10
-: திருநாவுக்கரசர் :-

கரந்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி அம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே.. 7/96/10
-: சுந்தரர் :-

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

புதன், ஜூன் 25, 2025

நவநீத சேவை

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 11
ஞாயிற்றுக்கிழமை

ஆனி மாதம் இரண்டாம் நாள் 
திங்களன்று (16/6) காலை 
தஞ்சை மா நகரில் நடைபெற்ற 
இருபத்தைந்து கருட சேவையைத் தொடர்ந்து ராஜ வீதிகளில் செவ்வாயன்று நடைபெற்ற 
(பதினைந்து) நவநீத சேவை எனும் வெண்ணெய்த் தாழி உற்சவம்.. 


















கருட சேவையன்றும் நவநீத சேவைன்றும் 
ராஜ வீதிகளில் மக்கள் - சித்ரான்னங்கள் மோர் பானகம் முதலானவற்றை  வழங்கியும் பட்டறைகளை இழுத்து வருகின்ற மாடுகளுக்கு பழங்கள் கொடுத்தும் நீரில் தீவனங்களைக் கரைத்து வைத்தும் புண்ணியம் தேடிக் கொண்டனர்..

ஓம் ஹரி ஓம்
நம சிவாய ஓம்
**