நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 19, 2019

வெள்ளி மலர் 1

இன்று ஆடி மாதம். முதல் வெள்ளிக்கிழமை..

இன்றைய தரிசனம் -
புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில்!..

தமிழகத்தில் சிறப்பாக விளங்கும் திருக்கோயில்களுள் ஒன்று..

தஞ்சையின் கிழக்கே ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயில்....

சில ஆண்டுகளுக்கு முன்
திருக்கோயிலின் தெற்காக நெடுஞ்சாலையைத் தவிர்த்து
கண்ணுக்கெட்டியவரை பசுமையான வயல்வெளி தான்..

திருக்கோயிலின் மேற்காக தஞ்சை மாநகர் கீழவாசல் கரம்பை வரைக்கும்
சமுத்திரம் எனப்பட்ட மிகப்பெரிய ஏரி தான்...

இன்றைக்கு வயல் வெளிகள் எல்லாம்
அட்டைப் பெட்டியை ஒத்த வீடுகளாகிப் போயின...

சமுத்திரம் ஏரியையும் சிறு குட்டையைப் போல சுருக்கி விட்டனர்...

தஞ்சாவூரில் இருந்து கோயில்வெண்ணி (25 கி.மீ.,) வரைக்கும்
சாலையின் இருபுறமும் நூற்றுக் கணக்கான நிழல் மரங்கள்...

நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற பேரில்
அத்தனை மரங்களையும் வெட்டித் தள்ளி விட்டார்கள்...

காலக் கொடுமையடி தாயே... காலக் கொடுமையடி!..
என்றபடிக்கு - ஆலய தரிசனம் செய்ய வாருங்கள்... 


தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் வெங்கோஜி மகாராஜா (1680) மாதந் தோறும் சமயபுரத்திற்குச்  சென்று அம்மனைத் தரிசித்து வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். 

அப்படி ஒரு முறை அவர் அங்கு சென்றபோது இரவு பூஜை முடிந்து விட்டது. 

ஆலய நடையையும் அடைத்து விட்டனர். 

திருக்கோயிலில் அர்த்தஜாம பூஜைகள் முடிந்து நடை சாத்திவிட்டால் அடுத்த நாள் உதயத்தில்தான் திறக்க வேண்டும் என்பது விதி. 

அதன்படி, மறுநாள் காலை தரிசிக்கலாம் என்று முடிவு செய்த மன்னர் -  அங்கேயே பரிவாரங்களுடன் தங்கிவிட்டார்.

தூக்கத்தில் விளைந்த கனவில் - அம்மன் தோன்றினாள்..

தலைநகர் தஞ்சைக்கு அருகில் கிழக்குத் திசையில் தழைத்திருக்கும் புன்னை வனத்தினுள் - புற்றுக்குள் மறைந்திருக்கின்றேன். என்னை அங்கேயே கண்டு கொள்!.. 

- என்று கூறி அருளினாள் .  

தூக்கம் கலைந்து எழுந்த மன்னருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.  

அன்னை கூறிய இடத்தினை மனதில் இருத்திக் கொண்டார்.. அதிகாலையில் சமயபுரத்தாளைத் தரிசித்து வணங்கிய பின் தலைநகர் திரும்பினார்.

வந்ததும் முதல் வேலையாக - திறமையான ஆட்களுடன்
தஞ்சைக்குக் கிழக்கே இருந்த வனாந்தரத்திற்குச் சென்றார் மன்னர்.. 

அன்னை கூறிய இடத்தைத் தேடிக் கொண்டிருந்த போது, 

அழகே வடிவான சின்னஞ்சிறு பெண் ஒருத்தி
தலைவாரி பூச்சூடியவளாக, சர்வ அலங்கார பூஷிதையாக  -
குதிரையில் அமர்ந்திருந்த மன்னனின் முன் வந்து நின்றாள்.

..யாரம்மா.. நீ!. இந்தக் காட்டில் தன்னந்தனியளாக என்ன செய்கின்றாய்?..'' 
- என்று மன்னன் கேட்க - அதற்கு அந்தப்பெண் , 

என்னைத் தேடி நீ வந்தாய்!.. உன்னைத் தேடி நான் வந்தேன்!..

- என்று புன்னகைத்தாள்..

திகைப்படைந்த மன்னனைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தவளாக  
வேம்பின் கீழிருந்த புற்றுக்குள் ஒளி வடிவமாக கலந்து விட்டாள். 

மன்னனுக்கு புல்லரித்தது.  

''அன்னையே வந்து முகங்காட்டினாள்..'' 
- என, பூமியில் விழுந்து வணங்கி ஆனந்தக் கூத்தாடினர் மக்கள்.. 

புற்றின் மீது குடில் அமைக்கப்பட்டது...
மஞ்சளும் மலர்களும் தூவப்பட்டன... 

அணையா தீபங்கள் ஏற்றப்பட்டன.. 

அன்னையின் தவநிலைக்கு இடையூறு ஏற்படாதபடி,
மக்கள் வந்து வணங்கும் வண்ணம் அந்த புன்னை வனத்தினுள்
பாதையும் அமைக்கப்பட்டது. 

புற்றுருவாய் எழுந்த அன்னையைக் கண்டு கைதொழுத மக்கள்
''..கமாயீ..'' - என்று பெருங்குரலெடுத்து அழைத்து மகிழ்ந்தனர். 

அவளை அண்டினோர் தம் அல்லல் எல்லாம் அழிந்ததனால் புன்னைவனம் - புன்னை நல்லூர் என்றானது. 

அச்சமயத்தில்  மகாஞானியும் சித்த புருஷரும்  அவதூதருமான 
மகான் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் காசியம்பதியில் இருந்து
தஞ்சை மாநகருக்கு எழுந்தருளியிருந்தார்.  

அவரைப் பணிந்து வணங்கிய மன்னன் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்க,   மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் புன்னை வனத்துக்கு விஜயம் செய்தார்.  

புவனம் காக்க என்று வந்தவள் புன்னை வனத்துப் புற்றினுள்
பூர்ண கலைகளுடன் பொலிந்திருப்பதை உணர்ந்த ஸ்ரீ ப்ரம்மேந்திரர்
ஸ்ரீசக்ர பிரதிஷ்டையுடன் அம்மனை ஆவாகணம்  செய்து முடித்தார். 

அந்தத் திருமேனி தான்
இப்போது புன்னைநல்லூர் ஆலயத்தில் திகழ்வது.. 


அதன் பின் வேறொரு சம்பவம்..

தஞ்சையை ஆண்ட துளஜா மகாராஜாவின் (1728-1735) புதல்வி
பெரியம்மையால் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தாள்.  

துயரம் மிகுந்த மன்னன் அன்னையின் சந்நிதியில் நின்று அழுது தொழுதபடி 

''..என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே!.. என் அன்னையே!'' 
-என்று தன் அன்பு மகளுடன் அங்கேயே தங்கிவிட்டான்..  

நாட்கள் பலவாகின.

பார்வையிழந்த மகளுக்கு மீண்டும் வாழ்வளிக்க வேண்டுமென -
அல்லும் பகலும் அன்னையைத் தொழுது நின்றான்..

அன்னையைச் சரணடைந்த மன்னன் மகிழும்படியான நேரமும் வந்தது.

வழக்கம் போலவே - 

சின்னஞ்சிறு பெண் போல, சிற்றாடை இடையுடுத்தவளாய்
சிவகங்கைக் குளக் கரையிலிருந்து - ஸ்ரீதுர்கையை துணைக்கு அழைத்துக்கொண்டு வந்தாள்.  

இளவரசியின் உடல் முழுதும் வேப்பிலையால் வருடி,
திருநீறு பூசி விட்டாள். 

''..கண்களைத் திற!..''  - என்றாள்... 

''..என்னம்மா.. கண்ணிழந்த என்னைக்
கண்களைத் திறக்கச் சொல்கின்றாயே!.'' 

என இளவரசி கதறி அழுதாள்... வந்திருப்பது யாரென்று அறியாததால்!..

''..உன் அம்மா தான் வந்திருக்கின்றேன்!..
கண்களைத் திறந்து என்னைப் பார்!..'' 

- என்றாள் உலகநாயகி!.. 

திடுக்கிட்டு அரசகுமாரி கண் விழிக்க -
மின்னலைப் போல் மூலத்தானத்தினுள் கலந்தாள் அன்னை. 

பாதாதி கேசமும் புல்லரிக்க
அன்னையின் மலரடிகளில் விழுந்து வணங்கினர் அனைவரும்.

அம்பிகையின் அருளைக் கண்டு வியந்த மன்னன் -
தன் மகளுக்குப் பார்வை கிடைத்த நன்றியறிதலுடன் -
அம்பிகையின் குடிலை சிறிய கோயிலாக எழுப்பிக் கட்டினார். 

அந்தக் கோயில் தான் காலப்போக்கில் விஸ்தாரமான கட்டுமானங்களுடன் பெரிய கோயிலாக மாறியது. 

சரபோஜி மன்னர்  தன் ஆட்சிக் காலத்தில் - மகா  மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் மற்றும் இரண்டாவது பெரிய திருமதில் - இவற்றை எழுப்பி   பெரும் திருப்பணி செய்தார்.

பின்னர் மூன்றாவது திருச்சுற்றும்,  உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் ராணி காமாட்சியம்பா எழுப்பி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கவை.  


என்னிடம் வந்த பிறகு உனக்கு என்ன குறை என்பதைப் போல -
ஆறடி உயரத்தில் பிரம்மாண்டமாகக் காட்சி தருகின்றாள் அம்பாள்.

மூலஸ்தான அம்பாளின் திருமேனி புற்றுமண் ஆனதால் -
அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. 

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

மூலஸ்தானத்தில் அம்பாளுக்கு 48 நாட்கள் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் திருக்காப்பு நடைபெறும். 

அச்சமயம் மூலஸ்தானத்தைத் திரையிட்டு மறைத்து விடுவார்கள்.  

அம்பாளை வெண் திரையில் சித்திரமாக வரைந்திருப்பர்..

அந்த சித்ர ரூபிணிக்கே 48 நாட்களுக்கு அர்ச்சனைகள் நிகழும். 

தைலக்காப்பின் போது அம்பாளுக்கு  உக்ரம் அதிகமாகும்.அதைத் தவிர்க்க தயிர் பள்ளயம், இளநீர், நீர்மோர், பானகம் வைத்து நிவேத்தியம் நடைபெறும். 


இன்றும் காணக்கூடிய அதிசயமாக - ஒவ்வொரு வருடமும் கோடை நாட்களில் அம்பாளுக்கு முகத்தில்,  முத்து முத்தாக  வியர்த்து தானாக உலர்கின்றது. 

இதனாலேயே  அன்னை முத்துமாரி எனப்பட்டாள்.

மூலத்தானத்தின் தென்புறம் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள விஷ்ணு துர்க்கைக்கும்  உற்சவ மூர்த்திக்கும் தான்  நித்ய அபிஷேகம் நடைபெறுகிறது. 

கோபுரத்தடியில் விநாயகர், முருகன், நாகர் சந்நிதிகள். 

தென்புறத்தில் ஸ்ரீகாளியம்மன் மற்றும்  பூர்ண புஷ்கலை தேவியருடன் 
ஸ்ரீ ஐயனார் வீற்றிருக்கின்றார்.
பேச்சியம்மன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி ஆகியோர் ஒருங்கே உறையும்  சந்நிதி   கொடிமரத்திற்கு தென்புறம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. 

இங்கே உள்ள தொட்டிலில் பிறந்த குழந்தைகளை இட்டு பேச்சியம்மனிடம் திருநீறு வாங்கிக் கொள்வது பெரும் பேறாகும்.

மூன்றாம் திருச்சுற்றில் கோசாலையும் மாவிளக்கு ஏற்றும் தீபநாச்சியார் மேடையும் வேப்பமரத்தடியில் பெரிய புற்றும் சில பரிவார மூர்த்திகளும் புன்னை மரமும் விளங்குகின்றன.

பூச்சொரிதல்
பைரவ உபாசகராகிய -
பாடகச்சேரி மகான் தவத்திரு இராமலிங்க சுவாமிகள்  இத்திருத்தலத்தில் பலகாலம் இருந்திருக்கின்றார்கள். 


தனது சித்தியினால் அனைவருக்கும் திருநீறு அளித்து தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைத்திருக்கிறார்.  இங்கே  குறைவிலாத அன்னதானம் செய்ததுடன் திருப்பணிகளையும் செய்துள்ளார். 

சுவாமிகளுடைய திருமேனி வெளித் திருச்சுற்றில் மூலஸ்தானத்திற்கு நேர் பின்புறம் சுதை வடிவமாகத் திகழ்கின்றது.

திருக்கோயிலுக்குத் தென்புறமாக ஸ்ரீகல்யாணசுந்தரி சமேத
ஸ்ரீ கயிலாயநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.


மாரியம்மன் கோயிலின் பின்புறம் சற்று அருகிலேயே -
சாளக்ராம ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயிலும் அமைந்துள்ளது..

ஏழைக் குழந்தையம்மா எடுப்போர்க்குப் பாலனம்மா
பச்சைக் குழந்தையம்மா பரிதவிக்கும் பிள்ளையம்மா!..
உற்றவளாய் நீயிருக்க உன்மடியில் நானிருக்க
பெற்றவளாய் நீயிருக்க என்மனதில் ஏது குறை!..

ஓம் சக்தி ஓம்..
* * * 

38 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    இங்கு இதை எதிர்பார்த்தல் பொருத்தம்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      நீக்கு
    2. ஸ்ரீராம் - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  2. சிறுவயதில் தஞ்சையிலிருந்து ஒரு முறை சைக்கிளிலேயே சென்று வந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சையிலிருந்து வாரந்தோறும் நடந்தே செல்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்...

      விடியற்காலை மூன்றரை மணிக்கு கரந்தையில் இருந்து கிளம்புவேன்... சரியாக ஆறு மணிக்கு கோயிலில்...

      அது ஒரு ஆனந்தம்....

      நீக்கு
  3. பாருங்க... அப்பல்லாம் கடவுள் மனிதனுக்கு எதிரே தோன்றியிருக்கிறார்கள்... இப்ப? இப்பவும் வருகிறார்கள்... நாம்தான் புலப்படாமலிருக்கிறோம் என்று சொல்லக் கூடாது!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      வீணர்களை வீழ்த்துதற்கு
      வேப்பிலையில் வருவாள்...
      மக்கள் மனை காப்பதற்கு
      மாவிளக்கில் தெரிவாள்...

      நீக்கு
  4. பிரம்மேந்திரர் வந்திருந்திருக்கிறாரா? ஆனாலும் அவர் அம்மன் மேல் பாடல் எதுவும் பாடவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரம்மேந்திர ஸ்வாமிகள்
      சக்ர பிரதிஷ்டை செய்தார் என்று தான் அறிய முடிகின்றது...

      கொடிமரத்துக்கு அருகில்
      ஸ்வாமிகளுக்கும் துளஜா மகராஜாவுக்கும் சுதை சிற்பங்கள் உள்ளன....

      நீக்கு
  5. இந்தஆலயம் கண்டு பல வருடங்களாகிவிட்டன. ஆடி வெள்ளியின் முதல் வாரமே ஜோராக ஆரம்பித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. எல்லாம் அறியாத தகவல்கள் ஜி
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தஞ்சாவூர் மகமாயி, நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள், காரைக்குடி கொப்புடையாள் என்ற சக்தி தலங்கள் எல்லாமே கண்ணொளி வழங்கும் வல்லமை கொண்டவை...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பல வருடங்கள் முன்னர் பார்த்தது. அரைகுறையாக நினைவுகள். ஆனாலும் வரலாறு அறிந்ததே. மற்ற சந்நிதிகள் எல்லாம் நினைவில் இல்லை. முடிந்தால் மறுபடி போகணும். பார்ப்போம். இங்கே இருக்கும் நம்பெருமாளையே போய்ப் பார்க்க முடியலை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா..

      உங்கள் அருகிலேயே அவள் குடிகொண்டிருப்பதாக மனதில் படுகின்றது....

      கொடுத்து வைத்தவர் தாங்கள்..

      தாயே சரணம் தயாபரி!...

      நீக்கு
  8. சதாசிவ பிரம்மேந்திரர் இங்கே வந்தது சரியாக நினைவில் இல்லை. புதுக்கோட்டைக்கு வந்தது தான் நினைவில் இருக்கிறது. அம்பிகையின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திரர் தான் அம்பாளைப் பிரதிஷ்டை செய்ததாக தலவரலாறு...

      நல்லோர் அனைவருக்கும்
      நற்றுணை ஆவாளாக...

      நீக்கு
  9. ஆடி வெள்ளி புன்னைநல்லூர் மாரியம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.

    அருமையான தரிசனம் செய்து வைத்த உங்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தெப்பக்குளம் மாரியம்மன், மடப்புரம் பத்ர காளியம்மன் சந்நிதிகளில் தரிசனம் செய்து பல வருடங்களாயிற்று...

      கவலைகளைத் தீர்ப்பாள்..
      கண் திறந்து பார்ப்பாள்...

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  10. அம்மன் அலங்கார படங்கள் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. காலக் கொடுமையடி மாரியம்மா... காலக் கொடுமையடி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி நன்றி...

      நீக்கு
  12. அருள்மிகு புன்னை மாரியம்மன் வரலாறும், படங்கள் இந்த வெள்ளிக்கிழமையைப்
    புனித மாக்கின. பேரனுக்கும் மகளுக்கும் உடல் தொந்தரவு இருந்து வருகிறதே
    சமயபுரம் அம்மாவை நினைத்து காசு முடித்து வைத்தேன்.
    இன்று மாரியம்மனே வந்துவிட்டாள் நான் இருக்கிறேன் என்று.

    கண்டவுடன் கலி தீர்க்கும் தாயைக் கண்டபினால் நம் வினைகள் தீரும்,
    நல்வழி பிறக்கும்.
    அன்பின் துரை செல்வராஜு,
    எத்தனை செய்திகள் கொடுத்திருக்கிறீர்கள்.
    பிரும்மேந்திரரின் அருள் வழி தாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு தானே மக்கள் நலனுக்குக் காவல் என்று பிரகடனப் படுத்திவிட்டாள்.
    அவளையும் ,ஸ்ரீ கோதண்டராமரையும் மனமாரத் துதித்து உய்யும் வழி தேடுவோம். மிக மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா..

      தங்கள் அன்பு மகளும் பேரனும் நலம் பெறுவார்கள்..கவலை வேண்டாம்.

      அண்டினவரைக் காப்பவளே அம்பாள்...
      அவள் உற்ற துணையாக இருப்பாள்..

      நானும் தங்கள் குடும்பத்தினருக்காக வேண்டிக் கொள்கிறேன்...

      அம்பாள் துணையிருப்பாள்.. ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  13. வழக்கம்போல அதிகமான செய்திகளைக்கொண்ட அருமையான பதிவு. அம்மன் தரிசனம் மனதிற்கு நிறைவாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி நன்றி...

      நீக்கு
  14. இடுகை அற்புதம்.

    ஆனால் புன்னை நல்லூர் என்று படித்த உடனேயே எனக்கு 'புன்னை நகர்?'ல், சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால் அவர்கள் கட்டியிருக்கும் வனதிருப்பதி கோவிலும், அதை தரிசித்த நினைவும் வந்துவிட்டது.

    ஒரு பெரிய தவறு மட்டும் அவர் செய்திருக்காவிட்டால், மிகப் பெரிய சாதனை நிகழ்த்திய எளிய மனிதர் அவர். மற்ற ஹோட்டல்ல 10 மணி நேரம் வேலை, இங்க 14 மணி நேரம் வேலை, ஆனா எங்க நலன் மீது அவருக்கு ரொம்ப அக்கறை என்று 88களில் தி நகர் சரவண பவன் ஹோட்டலில் ஊழியர்கள் சொல்லுவார்கள். பெரிய சாதனைக்குச் சொந்தக்காரர்.

    இடுகையை விட்டு விலகிய கருத்துக்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      தங்கள் கருத்துக்கள் இடுகையை விட்டு விலகி இருந்தாலும் சில விஷயங்களைப் பேசித் தான் ஆக வேண்டும்...

      ராஜகோபால் அவர்கள் செய்த பெரும் பிழை வெளியாகி தவறுக்குத் தண்டனை கிடைத்தடும் அப்போதிருந்தே ஊடகங்கள் எல்லாம் மற்றவர்கள் பெரிய யோக்கியர்கள் மாதிரி தொடர் பகுதிகள் எல்லாம் போட்டு மானபங்கப்படுத்தி மகிழ்ந்தன..

      தங்களைத் தாங்களே சொறிந்து விட்டுக் கொண்டார்கள்...

      இதெல்லாம் அவரவர் கர்ம வினை.. நல்லறிவு நல்லொழுக்கம் எல்லாம் இருந்தாலும் இப்படித்தான் முடிய வேண்டும் என்றிருக்கும் போது அப்படித்தான் முடிந்து தீரும்...

      அப்பேர்ப்பட்ட ராவணன்.. திருக்கயிலாயத்தை அசைத்தவன்..

      அவனுடைய முடிவு எப்படி இருந்தது?..

      அந்த ராவணனையே தனது வாலால் கட்டித் தூக்கி வந்து தன் மகன் அங்கதனுக்கு - பத்துத் தலைப் பூச்சி என்று விளையாட்டுக் காட்டியவன் வானர வேந்தன் வாலி..

      தினமும் எட்டுத் திக்கும் தாவிச் சென்று சிவபூஜை செய்தவன்..

      அவன் செய்த பெருந்தவறு தனது தம்பி சுக்ரீவனை அடித்து விரட்டி விட்டு அவனது மனைவி ருமையைக் கைப்பற்றியது தான்...

      அந்தத் தவறுக்காகவே ராம பாணம் அவனைத் துளைத்தது...

      வாலி விழவில்லை எனில் இராவண வதத்துக்கு இடையூறாக மாறியிருக்கக் கூடும்...

      ஏனெனில் அவன் சொல்கிறான் - நான் ராவணனை இழுத்து வந்து உன் முன் விட்டிருப்பேனே!.. இந்த சுக்ரீவனையா நம்பினாய்!.. என்று..

      இதிலிருந்தெல்லாம் உணர்ந்து கொள்ளக் கூடியது என்ன?..

      இவர் குற்றவாளி என்றறிந்ததும் அன்றைக்கு வடபழனி முருகன் கோயிலின் கோசாலைக்கு இவர் வாங்கிக் கொடுத்திருந்த பசுக்களை எல்லாம் அவிழ்த்து விரட்டி விட்டார்களாம்...

      ராஜகோபால் அவர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலவரலாற்றை பெரிய அளவு ஓவியங்களாக வரையச் செய்து அவரது பெயருடன் கொடுக்க அன்றைய நிர்வாகம் அப்படியே ஏற்றுக் கொண்டது...

      அந்தப் படங்கள் கோயிலின் பிரகாரத்தில் மாற்றப்பட்டிருந்தன...

      இவர் குற்றவாளி என்றறிந்ததும் அந்தப் படங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டன... ஆறேழு ஆண்டுகளுக்கு முன் திருச்செந்தூர் சென்ற போது அந்தப் படங்கள் அங்கில்லை.. அங்கே கேட்டபோது சரியாக பதில் இல்லை...

      சென்ற ஆண்டு திருச்செந்தூர் சென்றிருந்தபோது யார் முயற்சியினாலோ அந்தப் படங்கள் மீண்டும் அங்கிருந்தன..

      ஆனால் உபயதாரர் என்றிருந்த சரவணபவன் முகவரி மறைக்கப்பட்டு தாள் ஒட்டப்பட்டிருந்தது..

      இதனால் எல்லாம் உணரப்படுவது என்ன?..

      கவியரசர் இப்படிச் சொல்கின்றார்...

      உயர்ந்த இடத்தில் இருக்கும்போது
      உலகம் உன்னை மதிக்கும்..
      உன் நிலைமை கொஞ்சம் இறங்கி
      வந்தால் நிழலும் கூட மிதிக்கும்..

      இப்படி நிலைமை இறங்குவது யாரால்?.. எதனால்?...

      நீக்கு
    2. என் மனதில் தோன்றியதை நீங்கள் சொல்லியிருக்கீங்க. முதலில் இந்த டாபிக் எழுதலாமோ என்று யோசித்தேன்.

      சிலர் செய்யும் தெய்வ காரியங்கள், நல்ல செயல்கள், அவர்கள் கர்மவினையினால் பழுதுபட்டிருந்தாலும் ஓரளவு காக்கக்கூடியது.

      சமூகத்தில் உள்ள எளிய மனிதர்கள் பெரிய நிலைக்கு வந்தவர்களைப் பற்றி விஷயம் எல்லோருக்கும் சென்றடையவேண்டும். அவர் செய்த தவறை பூதாகாரப்படுத்தி அதையே பேசிக்கொண்டிருத்தல் சரியல்ல என்பது என் எண்ணம்.

      உங்கள் மறுமொழிக்கு நன்றி

      நீக்கு
    3. வாலியின் மனைவி தாரை தான். சுக்ரீவன் மனைவி தான் ருமை! துரை சரியாகவே சொல்லி இருக்கார்.

      நீக்கு
    4. அன்பின் நெல்லை அவர்களின் மறுமொழியும் அக்கா அவர்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. ஆடி முதல் வெள்ளியில் புன்னைநல்லூர் மாரியம்மன் தரிசனம். மிக்க நன்றி ஐயா.

    ஒரே ஒரு முறை இங்கே சென்றதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. அன்பின் கீதா தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  17. மிக சிறப்பான தரிசனம் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..