நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 12, 2017

திருவெண்காடு 5

திருவெண்காடு திருத்தலத்தைப் பற்றிய செய்திகளை
நான்கு பகுதிகளுடன் நிறைவு செய்யலாம் - என்றிருந்தேன்..

ஆனால் -

அங்கே அமைதியையும் ஆனந்தத்தையும் அள்ளி அள்ளி அனைவருக்கும் வழங்கிக் கொண்டிருக்கும் எம்பெருமானின் நாட்டம் அதுவாக இல்லை...

தவிரவும் -

ஸ்ரீபுதன் - திருவெண்காட்டில் சிவ தரிசனம் செய்து
வித்யாகாரகன் எனும் நவக்ரக நிலையினைப் பெற்றான்..

இங்கே -

மோனத் தவத்தில் ஆழ்ந்திருக்கும்
ஸ்ரீபுதன் - பச்சை நிறத்திற்கு அதிபதி..
எண் ஐந்தினை ஆட்சி செய்பவன்.. 


ஸ்ரீபுதன்
நன்றி - சிவனடியார் திருக்கூட்டம்
இப்படி ஐந்தின் நாயகனாக ஸ்ரீபுதன் இருப்பதனால் -
பொதுவான குணாதிசயம் எப்படி!?..

ஐந்தினுக்கு உட்பட்டவர் ஜனவசியம் உடையவராகவும்

கலை மற்றும் ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் உள்ளவராகவும்
பழைமையைப் பேணுவதில் விருப்பம் உள்ளவராகவும் இருப்பர்..

குழந்தையைப் போல எவரிடமும் பழகும் தன்மை உடையவர்..

அதே சமயம் புத்தியும் யோசனையும் மின்னல் வேகத்தில் செயல்படும்..
மனதில் தோன்றியவற்றை தயக்கமின்றி அப்படியே சொல்லுபவர்..
இருந்தாலும் ரகசியங்களை எதற்காகவும் வெளியிடாதவர்...

தனிமை விரும்பி.. எனினும் உற்சாகம் கரை புரண்டோடும்...

மனோதிடம் உடையவர்.. என்றாலும்,
சமயத்தில் சிறு விஷயங்களுக்கும் கலங்கித் தவிப்பவர்..

பயணங்களில் மிக்க நாட்டமுடையவர்...

நண்பர்களுக்கு இனியவர்..பகைவரையும் நேசிப்பவர்..
பொருளாதாரத்தில் இளகிய மனம்... சிக்கனம் தெரியாது...
அதற்காக ஆடம்பரத்தில் பிரியமும் கிடையாது...

பெண்களின் மீது பெருமதிப்பு உடையவர்..

பொதுவாக இவர்களது மனசு தங்கம்..
வாங்கி வந்த வரத்தின்படி கோள் சாரம் சரியில்லை எனில்
தகரத்துக்கும் கீழே!..

பெயர் எண் விதி எண் - இவைகள் நன்றாகக் கூடியிருந்தால்

ஐந்தாம் எண்ணுக்குடையவர்களிடம் -

தொட்டது துலங்கும்படியான கைராசி..

தியானம் மந்திர சக்தி கூடியிருக்கும்..
அருளும் பொருளும் உடனிருக்கும்...
லக்ஷ்மி கடாட்சத்திற்குக் குறைவிருக்காது..
ஆலயத் திருப்பணி மற்றும் புண்ணிய காரியங்களில் ஈடுபாடு..
முதுமையிலும் சந்தோஷம்.. இனிமையான வாழ்க்கை..
- என்றெல்லாம் சொல்லப்படுகின்றது..

இவை எல்லாம் பொதுவானவையே!..


நாளும் கோளும் மாற்றங்களுக்குள்ளாகும் போது

குணங்களும் சற்றே மாறுதலுக்குரியவை..

இருந்தாலும்,

கன்னி ராசி ஐந்தாம் எண் - என்றெல்லாம்
அமையப் பெற்றவர்கள் 95% நம்பிக்கைக்குரியவர்கள்...
சுட்டாலும் வெண்மையுடைய சங்கினைப் போன்றவர்கள்...
***

அப்படி..ன்னா - நானும் இப்படித்தானா!..

டேய் தம்பீ!.. டமாரச் சத்தம் அதிகமா இருக்கே!?..

இதோ.. பதிவுக்குப் போகலாங்...கணா!..
***

இந்த அளவில், ஐந்தாவது பதிவு மலர்கின்றது..
வாருங்கள் நாம் பதிவினுக்குச் செல்வோம்..

இதுவரை அளித்துள்ள நான்கு பதிவுகளையும்
கீழுள்ள இணைப்புகளின் வழியாகக் காணலாம்..

திருவெண்காடு 1 
திருவெண்காடு 2 
திருவெண்காடு 3 
திருவெண்காடு 4 


திருவெண்காட்டிற்குச் சென்றவுடனேயே -
மதிப்புக்குரிய கோமதி அரசு அவர்களுடைய நினைவு தான் வந்தது..

ஏனெனில், அவர்கள் - தமது வலைத் தளத்தில்
திருவெண்காட்டைப் பற்றி சிறப்பாக சொல்லியிருந்தார்கள்...

இப்போது கூட, சென்ற பதிவின் கருத்துரையில் -
திருவெண்காட்டின் சிறப்புகளைக் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்...

ஏழாண்டு காலம் இங்கே வசித்திருக்கின்றார்கள்.. கொடுத்து வைத்தவர்கள்..

பதிவுக்காக நான் தொகுத்து வைத்திருந்த சில செய்திகளை
கோமதி அரசு அவர்களது கருத்துரையில் கண்டதும் மகிழ்ச்சி..

அக்னி தீர்த்தம்.. பின்னால் தெரிவது கிழக்கு ராஜகோபுரம்
அக்னி தீர்த்தத்தில் ஒட்டி உறவாடும் தாமரை..
சூரிய தீர்த்தம்
சந்திர தீர்த்தம். குளக்கரையில் அம்பிகையின் திருக்கோயில்..
சந்திர தீர்த்தக் கரையிலிருந்து கிழக்கு ராஜகோபுரம்
தல விருட்சம் - வட ஆல்..
ஆலின் கீழ் சிவலிங்கம்
ஆலினைச் சுற்றிலும் நாக பிரதிஷ்டை
பட்டினத்தடிகளாரின் இயற்பெயர் திருவெண்காடர்...

அவரது தாயார் - ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரரை நோக்கித் தவமிருந்து

அவரைப் பெற்றெடுத்ததாகச் சொல்வர்...

சங்குமுகம் ஆடி

சாயாவனம் பார்த்து
முக்குளத் தீர்த்தமாடி
முத்தி பெற வந்தவனோ!..

- என்றொரு தாலாட்டுப் பாடல் இதனைக் குறிப்பதாகச் சொல்வழக்கு.. 



கொடி மரமும் நந்தி மண்டபமும்
ஸ்ரீ அதிகார நந்தி.
மேல் தளத்துடன் கூடி திருமாளிகைப் பத்தி..
கடல் போன்ற செல்வத்தைத் துறந்து - திருவெண்காடர் 
துறவியான பின் - திருவெண்காடு கோயிலுக்கு வந்தபோது
ஸ்ரீ ஸ்வேதாரண்ய மூர்த்தியே குருவாக இருந்து
தீட்சை வழங்கியதாக ஐதீகம்...

திருச்செங்காட்டங்குடியில்
இறைவனுக்கு அமுது படைத்த சிறுத்தொண்ட நாயனாரை  அறிவோம்...

இவரே நரசிம்ம பல்லவனின் படைத் தளபதி..

வாதாபியை வென்று அங்கிருந்த கணபதி விக்ரகத்தைத்
தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தவர்..

சிறுத்தொண்ட நாயனாரின் மனைவியார் திருவெண்காட்டினைச் சேர்ந்தவர்...

அவரது திருப்பெயர் - திருவெண்காட்டு நங்கை..


ஆதி சிதம்பரம்.. ஸ்ரீநடராஜ சபை

தில்லைச் சிதம்பரத்தினைப் போலவே இங்கும் நடராஜ சபை புகழுடையது..
தினமும் நான்கு கால பூஜை இங்குள்ள ஸ்படிக லிங்கத்திற்கு நிகழ்கின்றது..

அருள் தரும் ஸ்ரீஅகோரமூர்த்தி
கார்த்திகை மாதத்தின் மூன்றாவது ஞாயிறன்று
ஸ்ரீ அகோரமூர்த்திக்கு மஹா ருத்ராபிஷேகம் நிகழ்வுறும்..

தவிரவும் ஒவ்வொரு ஞாயிறன்றும் நள்ளிரவுக்கு முன்பாக

ஸ்ரீ அகோரமூர்த்திக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறும்..

பூர நட்சத்திரமும் ஞாயிற்றுக்கிழமையும் கூடி வரும் நாள்

மிகச் சிறப்பாக குறிப்பிடப்படுகின்றது...

இப்பதிவினை வெளியிட்ட பிறகு 
மீண்டும் தகவல் ஒன்றினைப் பதிவு செய்கின்றேன்..

இதனை வெளியிட்ட நேரம் காலை 9.10..
இப்போது நேரம் முற்பகல் 11.10

சற்று நேரத்திற்கு முன் தற்செயலாக நாட்காட்டியை நோக்கினால்
இன்று ஐப்பசி மாதத்தின் பூர நட்சத்திரம்...

இன்று ஞாயிற்றுக் கிழமை..
இன்று மாலை 4.08 முதல் நாளை பிற்பகல் 3.40 வரைக்கும் பூரம்..

ஒருகணம் என்னையே நான் மறந்தேன்...

நல்ல விஷயங்களைச் சிந்திக்கும்போது
அந்த நல்ல விஷயங்களே நம்மைத் தேடி வருகின்றன..



ஸ்ரீ புதன் சந்நிதி விமானம்
ஸ்ரீ புதன் சிவ தரிசனம் செய்த திருத்தலம் என்பதால்
இங்கே நவக்ரக தோஷங்கள் அனைத்தும் விலகுகின்றன..

பரிகாரம் என்பதாக இல்லாமல் -
பச்சை நிறமுடைய வஸ்திரத்தையும் முல்லை மலர்ச் சரங்களையும்
சமர்ப்பித்து ஸ்ரீபுதனை வணங்குவது நல்லது...

இயன்றவரை ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவுவதும்
புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாங்கித் தருவதும் நல்லது..

எளியோருக்கு பச்சைப் பயறு சுண்டல் வழங்குவதும் பச்சை நிற உடைகள் பச்சைப் பயிறு - இவற்றினைத் தானம் செய்வதும் சிறப்புடையது..

வக்ரம் இல்லாமல் நவ கிரகங்கள்

இத்தலத்தில் மேற்கு நோக்கியபடி ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி திகழ்கின்றனள்..
நவக்கிரகங்கள் வக்ரமின்றி நேர் வரிசையில் அருள்பாலிக்கின்றனர்...


திருவெண்காட்டு தலத்திற்கு வந்து இங்கு அமைந்துள்ள 
மூன்று திருக்குளங்களிலும் நீராடி இறைவனை வணங்குவோர் நல்ல மகப்பேற்றினையும் அத்துடன் மனதில் எண்ணிய வரங்களையும் பெறுவர்.. 
நினைத்த காரியங்கள் எல்லா நலன்களுடன் கைகூடி வரும்.. 
இதிலே யாதொரு சந்தேகமும் வேண்டாம்!..

- என்பது ஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்கு..  


மேற்கு ராஜகோபுரம்..
என்னுடைய மனதில் இப்படித் தோன்றுகின்றது..

நம் வீட்டில் மகனுக்கோ மகளுக்கோ திருமணம் நிகழ்ந்ததும்
அடுத்து வரும் சில நாட்களில் திருவெண்காட்டிற்கு அழைத்து வந்து
அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம் மற்றும் சந்திர தீர்த்தங்களில் நீராடி
ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வர ஸ்வாமியையும் ஸ்ரீ பிரம்மவித்யா அம்பிகையையும் வழிபாடு செய்தல் வேண்டும்..

நம்பிக்கையுடன் இவ்வாறு 
வழிபடுவோர் தம் இல்லங்களில்
நன்மக்கட்பேறு நிகழும்..

நல்ல பிள்ளைகளுடன் 
தொட்டில்கள் நற்றமிழ் பேசும்...

நல்ல பிள்ளைகளின் வருகை 
இனிவரும் நாட்களுக்கு இன்றியமையாதது...

யார் கண்டது!..
நல்லனவற்றை விரும்பும் நாமே கூட
நம் சந்ததியினர்க்குப் பிள்ளைகளாகலாம்!... 
***

இந்தப் பதிவில்
திருமிகு நெல்லைத் தமிழன் அவர்கள்
கேட்டுக் கொண்டபடிக்கு - 
பேயடையா பிரிவெய்தும்..
எனும் திருப்பாடலுக்கான விளக்கம்..

தருமபுர ஆதீனப் பதிப்பில்
சான்றோர்கள் அளித்துள்ள விரிவுரையை
என்னளவில் தந்திருக்கின்றேன்..
- - -

எல்லாம் வல்ல இறைவன் திருவெண்காடு எனும் திருத்தலத்தில்
வேய் எனும் மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய உமையுடன் ஒருபாகமாகத் திகழ்கின்றான்..

இத்திருத்தலத்திற்கு வந்து இங்குள்ள முக்குளங்களிலும் மூழ்கிக் குளித்து வணங்குபவர் தம்மைத் தீவினைகள் அணுகுவதில்லை..

(தோய்வினையார் அவர் - எனும் திருவாக்கினுக்கு விளக்கம்:
 தோய்தல் - மூழ்கிக் குளித்தல்.. தோய்வினையார் அவர் - என்பதற்கு மூழ்கிக் குளிப்பவர் தமக்கு - என்பதாகும்..

தோயாவாம் தீவினையே - எனும் திருவாக்கினுக்கு விளக்கம்:
தோய்தல் எனில் பீடித்தல் என்பதாகும்.. தோயாவாம் தீவினையே - எனில்,
முக்குளங்களிலும் மூழ்கிக் குளிக்கும் அடியவரை தீவினைகள் பற்றுவதில்லை - என்பதாகும்..)

மேலும், நல்ல பிள்ளைகளைப் பேறாகப் பெறவேண்டியும்
மற்றும் அதனோடுடையதாக மனதில் நினைப்பவற்றையும்
நினைத்தவாறே வரங்களாகப் பெறுவர்..

நம்மைப் பிடித்திருக்கும் பேய்கள் (கெட்ட குணங்கள் ) கூட
விலகி ஓடிப் போய்விடும்... 

இதிலே யாதொரு ஐயமும் வேண்டாம்!..


பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளநினை
வாயினவே வரம் பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே!..(2/48/2)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
*** 

25 கருத்துகள்:

  1. படங்களுடன் பதிவு அருமை தொடர்கிறேன் வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. புகைப்படங்களின் தெளிவு அருமையாக உள்ளது ஜி
    வாழ்க நலம் தொடர்கிறேன் திருவெண்காட்டை......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அழகான படங்கள் மற்றும் விளக்கங்கள்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அருமையான பதிவு.
    என் பெயரையும் இந்த பதிவில் குறிப்பிட்டதற்கு மிகவும் மகிழ்ச்சி.

    ஸ்ரீராம் அவர்கள் திருவெண்காடு என்றதும் திருவெண்காடு ஜெயராமன் அவர்களை குறிப்பிடுவார். இசை பிரியர் அவர்.

    நாதஸ்வர கலைஞர் சுப்பிரமணிய பிள்ளை அவர்கள்
    ஞாயிறு மாலை 7.30க்கு நடைபெறும் அகோரமூர்த்தி உற்சவர் பூஜைக்கு வாசிக்கும் மல்லாரி மிகவும் அருமையாக இருக்கும். அவர் இப்போது இல்லை என்றாலும் திருவிழாவில் வாசித்த மல்லாரியும், மகுடியும் இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.

    இப்போதும் நாதஸ்வர கலைஞர்கள் ஞாயிறு வாசிக்கிறார்கள்.

    எப்படியும் ஒரு கால ஸ்படிக லிங்கம் பூஜை பார்த்து விடலாம்.
    அவருக்கு சாத்தப்படும் சந்தனம், பூ பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு கொடுப்பார். தினம் நடக்கும் அன்னாபிஷேகம் ஸ்படிக லிங்கத்திற்கு அதுவும் பிரசாதமாய் கிடைக்கும்.

    நிறைய பேரை குழந்தை பேற்றுக்கு அங்கு அழைத்து சென்று இருக்கிறேன், அவர்களும் நம்பிக்கையுடன் வந்து முக்குளத்திலும் நீராடி இறைவனை வணங்கி
    பலன் அடைந்து இருக்கிறார்கள்.

    படங்கள் அழகு.
    வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      புதிய தகவல்களைக் கருத்துரையில் பகிர்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..

      மன அமைதிக்காக எங்கெங்கோ செல்பவர்கள் திருவெண்காட்டிற்கு வரலாம்.. அமைதியும் ஆனந்தமும் தவழ்கின்றன..

      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான கோயில் திருவெண்காடு...படம் பார்த்ததும், இவற்றை எங்கோ பார்த்திருக்கிறேனே என நினைச்சேன்ன்... கோமதி அக்கா போட்டிருக்கிறா...

    துரை அண்ணன் 5ம் நம்பராக இருப்பாரோ? ஓவரா பில்டப் கொடுத்திருக்கிறார்.

    5ம் நம்பரில் நான் கேள்விப்பட்டது கொஞ்சம் ஜாலி ரைப்பானவர்கள் என..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      >> துரை அண்ணன் ஐந்தாம் நம்பராக இருப்பாரோ?.. ஓவர் பில்டப் கொடுத்திருக்கிறார்..<<<

      ஓவர் பில்டப் எல்லாம் இல்லை..

      நான் ஐந்தாம் எண் தான்.. சொன்னதெல்லாம் உண்மை தான்..

      ஆனால், உண்மையைத் தான் உலகம் நம்பாதே..

      உலகம் நம்பினாலும் தேம்ஸ் கரைவாசிகள் நம்பமாட்டார்களே..

      வருகையும் கருத்துரையும் கலகலக்கின்றது.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. திருவெண்காட்டிற்கு நேரில் சென்றதைவிட உங்கள் பதிவு மூலமாக அதிகமான தகவல்களையும், புகைப்படங்களையும் பெறும் வாய்ப்பு கிட்டியது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. கொடிமர இடையில் தெரியும் மாடி வீட்டில் தான் இருந்தோம். அகோரமூர்த்தி இல்லம் என்று பெயர். பூம்புகார் கல்லூரி முதலவர் வீடு.
    எனக்கு அப்பா, அம்மாவாக இருந்தவர்கள். மூன்று தலைமுறை நட்புகள் கொண்டவர்கள். அருமையான காலங்களை நினைவுகூற வைத்த பதிவு.
    அகினி தீர்த்தமும், சூரிய தீர்த்தமும் எங்கள் வீட்டில் இருந்துப் பார்த்தால் தெரியும். மழை என்ற பதிவில் இந்த ஊர்ப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன்.

    http://mathysblog.blogspot.com/2009/
    படித்து பார்க்கலாம். அப்போது புதிதாக எழுத ஆரம்பித்த சமயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும்போது ஏற்படும் மகிழ்ச்சிதான் என்னே!..

      தாங்கள் ஒருவேளை திருவெண்காட்டில் இருந்திருந்தால் -
      எங்களது மகிழ்ச்சி இரட்டிப்பாகக் கூட அல்ல -
      பன்மடங்காக இருந்திருக்கும்...

      கொடி மரத்திற்கு இடையில் தெரியும் அந்த வீட்டினைக் கூர்ந்து கவனித்தபோது தங்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும்!..

      திருவெண்காடு தரிசனம் ஆனந்தத்தை அள்ளித் தரும் என்றீர்கள்..
      மகத்தான உண்மை.. பதிவின் மூலமாக மற்றவர்க்கு மகிழ்ச்சி விளைகின்றது எனில் எல்லாம் இறையருள்..

      தங்களது மீள்வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. இப்போது அந்த வீட்டில் தாய் தந்தையாக நினைத்தவர்கள் இல்லை, இறைவனடி சேர்ந்து விட்டார்கள், குழந்தைகள் வேவ்வேறு ஊரில் வீடு இப்போது முதல்வரின் பெயரில் அறகட்டளை ஆகி விட்டது. யாத்திரை வருவோர் தங்கி கொள்ளலாம், பிரதோசசமயம் அன்ன தானம் உண்டு. முதலவரின் மகன் இந்த ஏற்பாட்டை செய்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அன்பான இல்லம் அறச்சாலையாகி விட்டது..
      மனம் நெகிழ்கின்றதம்மா. ஈசன் அருளால் என்றும் வளம் சேரட்டும்..

      மிகச் சிறப்பான சிவநேயச் செல்வர்களைப் பற்றிய விவரத்தைத் தந்திருக்கின்றீர்கள்..

      மறுமுறை திருவெண்காட்டிற்கு செல்லும் போது
      அந்த அன்பு இல்லத்தையும் கண்டு வர எண்ணம் மேலிடுகின்றது..

      தங்கள் மீள்வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. படங்களும் பகிர்வும் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  10. மிக அழகிய படங்களுடன் ...மிக சிறப்பான இத்தலம் பற்றியும் அறிந்துக்கொண்டேன்...அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. http://mathysblog.blogspot.com/2009/09/blog-post.html பழைய இந்த பதிவில் திருவெண்காடு பற்றி எழுதி இருப்பேன்.
    வல்லி அக்கா அழைப்புக்கு எழுதிய பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் குறிப்பிட்டுள்ள பதிவினைப் படித்தேன்..
      சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள்..

      தங்களது வருகையும் மேலதிக செய்திகளும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. உங்கள் பதிவுகள் மிகவும் அருமை, நிறைய தகவல்களுடன் கூடிய ஒன்று. வாழ்த்துக்கள். 'தோயாவாம் தீவினையே'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      தோயாவாம் தீவினையே!..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. வழக்கம் போல் பதிவு படங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை. கூடுதலாகப் புதன் மற்றும் 5 ஆம் எண்ணிற்கான பலன் கள்...திருவெண்காடு பற்றி அறிந்து குறித்தும் கொண்டோம்.

    நல்லவை நடக்கட்டும்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன் - கீதா..

      நல்லவை நடக்கட்டும்.. நல்லவையே நடக்கட்டும்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..