நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 28, 2013

நலந்தரும் வைத்யநாதன்

வளந்தரும் வைத்யநாதனின் சந்நிதியினை அடுத்து
பிரகாரத் திருச்சுற்றில் முதன்மையாக விளங்குவது
ஸ்ரீ செல்வ முத்துக்குமர ஸ்வாமியின் சந்நிதி.


அருணகிரிநாதர் வந்து வணங்கி  - திருப்புகழ் பாடிய அழகனின் சந்நிதி.

குமரகுருபரர் நின்று வணங்கி - பிள்ளைத்தமிழ் பாடிய பெருமானின் சந்நிதி.


வள்ளி தேவசேனாபதியாக காட்சி தரும் கந்தவேளை நாளெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

அம்மையப்பனின் செல்லப் பிள்ளை செல்வமுத்துக்குமரன். ஆனதால் -

எல்லா கட்டளை வழிபாடுகளிலும் முருகனுக்கே முதலிடம்.

செல்வ முத்துக்குமரனுக்கு - கிருத்திகை நாட்களில் சிறப்பான அபிஷேக அலங்காரத்துடன் வழிபாடு நிகழும்.

முத்துக்குமரனின் திருமேனியில் சாத்தப்படும் சந்தனத்தை அருந்தினால் குழந்தையில்லா குறை தீரும். வடிவேல் குமரன் திருவடி வாழ்க!..


அம்பலத்தாடும் ஐயனின் அருட்கோலம். ஆடும் அழகனின் திருவடி வாழ்க!..

வடக்கு நோக்கியவளாக அன்னை ஸ்ரீ துர்கையின் சந்நிதி.  மகிஷம் எனும் மூர்க்கம் இங்கே அவள் திருவடிகளின் கீழ்!...  

நம் சந்ததி வாழ அருள் புரியும் துர்கை -
சாந்த ஸ்வரூபிணியாக விளங்குகின்றாள்.

சண்டேசர் சந்நிதி!.. இவருக்கு எந்நேரமும் சிவசிந்தனை.

எனவே சொடக்குப் போடாமல் கைகளைத் தட்டாமல் - சிவ அபராதமாக எதையும் செய்யவில்லை - என்ற பாவனையில் அவருக்கும் வணக்கம்.. 

திருச்சுற்றில்  மூலஸ்தானத்தை நோக்கியபடி -  சுவாமிக்கு பின்புறம் -

ஒரு சேர நின்று வைத்யநாதரை வணங்கும் பாவனையில் நவக்கிரகங்கள்!.. ஆளுக்கொரு திசையாக இவர்கள் இங்கே ஆர்ப்பரிக்க முடியாது!.. 

திருக்கோயிலின் கீழ்க்கோட்டம். கம்பீரமாக விளங்கும் லிங்கோத்பவர்.

தெற்கு திருச்சுற்று. ஞானப் பெருங்கடலாக தக்ஷிணாமூர்த்தி.

இங்கும் ஓசை எழுப்புதல் கூடாது. கண்டிப்பாக - கொண்டைக் கடலை மாலை போடக்கூடாது!..

நமக்கும் ஞானத்தினை வழங்க வேண்டி தலைதாழ்ந்து வணங்குவோம்!.

இதோ எதிரில் ஜடாயு குண்டம். இத்தலத்தில் சம்பாதி ஜடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்ற விவரத்தினை எல்லாம் வரும் வழியில் அறிந்திருப்பீர்கள். 

ஸ்ரீராமபிரான் இவ்விடத்தில் ஜடாயுவின் உடலை  தகனம் செய்ததாகவும் வைத்யநாதப் பெருமானை வழிபட்டதாகவும்  தலபுராணம் விவரிக்கின்றது.

தற்போது ஜடாயு குண்டத்தில் நிறைய திருநீறு வைக்கப்படுகின்றது. பக்தர்கள் ஜடாயு குண்டத்தினை வணங்கி - அதிலிருக்கும் திருநீற்றினை பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர்.


அடுத்து  - செவ்வாய் எனப்படும் அங்காரகன் அருள்பாலிக்கும் சந்நிதி.

அங்காரகனுக்கு ஏற்பட்ட தோல்நோய் - சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி ஸ்வாமியை வணங்கியதால் குணமாகியது. இதனால் செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகன்  ஆட்டுக் கிடா வாகனத்தில்  எழுந்தருளி  - இறைவனை வலஞ்செய்து வணங்குகின்றான்.

அன்பர்களும் பெருமளவில் வந்திருந்து இந்த வைபவத்தினைக் கண்டு மகிழ்கின்றனர்.

திருச்சுற்றில் வலமாக வந்து, மீண்டும் நந்தி மண்டபத்தினை அடையும் போது அம்பிகையின் சந்நிதி!..

கருணையே வடிவாக அன்னை தையல்நாயகி - அஞ்சேல் - என்று சொல்வது நம் காதுகளில் கேட்கின்றது!..

வைத்யநாத ஸ்வாமியின் - அபிஷேக விபூதி, அபிஷேக சந்தனம், அபிஷேக தீர்த்தம், புற்று மண், வேப்பிலை - இவைகளைக் கொண்டு  தயாரிக்கப்படும்  "திருச்சாந்து' எனப்படும் மிளகு அளவிலான  மருந்து உருண்டை சர்வரோக நிவாரணியாக பக்தர்களால் போற்றப்படுகின்றது.

உடலில் தோன்றும் கட்டிகள், பரு , வடு போன்ற பிணிகள் நீங்க வேண்டி  - இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்கின்றனர்.


திருக்குளத்து மீனுக்குப் பொரி
நோய் தீர்ந்து நலம் பெற்ற பக்தர்கள் - அவள் சந்நிதியில் உப்பு, மிளகு,  வெள்ளி கண் மலர்கள் என காணிக்கை செலுத்துகின்றார்கள்.

அன்பர்கள் தம் பிள்ளைகளுக்கு முடிஇறக்கி காதுகுத்தும் மங்கலச் சடங்கினை இத்தலத்தில் நிறைவேற்றுகின்றார்கள். 

கீழைக் கோபுர வாயிலில் உள்ள வேப்ப மரம்
திருக்கோயிலின் கீழ்க் கோபுர வாயிலில் - ஸ்தல விருட்சமாகிய வேப்ப மரத்தின் நிழலில் ஆதி வைத்யநாதர் சந்நிதி. அருகே வீரபத்ரஸ்வாமி.

கிருத யுகத்தில்  இத்தலத்தின் தல விருட்சம் - கடம்ப மரம்.
திரேதா யுகத்தில் வில்வ மரம். துவாபர யுகத்தில் மகிழ மரம்.

கலி யுகத்தில் வேப்ப மரம்.  கடம்ப மரம் தான் வேம்பாக - உருமாறி தற்போது ஸ்தல விருட்சமாக விளங்குகின்றது என்பது ஐதீகம்.

ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமி
திருக்கோயிலின் கீழ்த் திசையில் வீரபத்ரரும் தெற்கே விநாயகரும் மேற்கே பைரவரும், வடக்கே  ஸ்ரீபத்ரகாளியும் அமர்ந்து கண்காணிக்கின்றனர்.


திருக்கோயிலில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி பைரவர் சந்நிதிகள் விளங்குகின்றன.

வெளித் திருச்சுற்றில் ஸ்ரீபத்ரகாளியம்மன் தனிக்கோயிலில் அருள்கின்றாள்.

திருக்கோயிலில் பங்குனியில் கோலாகலமாக பிரம்மோற்ஸவம்.

திருக்கயிலாய பரம்பரைதருமபுர ஆதீனத்தின்ஆட்சிக்குட்பட்ட திருக்கோயில்.  

மயிலாடுதுறைக்கும்,  சீர்காழிக்கும் இடையில் உள்ள தலம்.
சாலை வழி, ரயில் வழி  - என திருக்கோயிலுக்கு வந்து தரிசிக்க வசதி.

மூலஸ்தானம் - கீழைக்கோபுரம் - வேம்பு - நீராழி மண்டபம்
தமிழர் தம் வாழ்வுடன்  கலந்ததும் - மகத்துவம் நிறைந்ததுமான வேப்பமரம்

அபிஷேக அமிர்தம் வழிந்து   -நிறைந்த சித்தாமிர்த திருக்குளம்.


பயன் கருதாது அறச்செயல் புரிந்த ஜடாயு வழிபட்ட திருத்தலம்.


வணங்குவோரின் உடற்பிணிகளை மட்டுமின்றி, பிறவிப் பிணியையும்  தீர்த்து அருளும் ஸ்ரீவைத்யநாத ஸ்வாமி.

வேறென்ன வேண்டும் நமக்கு!...

மூர்த்தி, தலம், தீர்த்தம்!. கண் பெற்ற பயனாக - காண்கின்றோம்!... வேறு சாட்சிகள் தேவையே இல்லை!...

கொடிமரத்தின் அருகில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகின்றோம்.

நீயின்றி யாருமில்லை வழி காட்டு! - இறைவா
நெஞ்சுருக வேண்டுகின்றோம் ஒளி காட்டு!..

நெஞ்சு நெகிழ்கின்றது!... கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிகின்றது!..


உள்ளம் உள்கி உகந்து சிவனென்று
மெள்ள உள்க வினைகெடும் மெய்ம்மையே
புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே. 5/79/8

- திருநாவுக்கரசர் - 
சிவன் என சிந்திப்போம்!.. 
வைத்யநாதன் பதங்களை வந்திப்போம்!.. 

''சிவாய திருச்சிற்றம்பலம்!.''

4 கருத்துகள்:

  1. ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவான, பயன் தரும் விளக்கங்களோடு பகிர்வு மிகவும் அருமை... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. திரு.தனபாலன் அவர்களே!..தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி!...

    பதிலளிநீக்கு
  3. விரிவான விளக்கங்கள், நிறைவான தரிசனம். நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  4. அன்புடையீர்!... தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி!...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..