நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 25, 2013

சித்ரா பெளர்ணமி

சித்ரா பௌர்ணமியன்று தான் இந்திரன் மதுரையம்பதியில் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாகக் கூறுவர். கள்ளழகர் திருவிழாவும் சித்ரா பௌர்ணமியன்று தான்.  விழுப்புரம் அருகில்  கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் கூடிக் கொண்டாடி மகிழ்வதும் சித்ரா பௌர்ணமியன்று தான். 

எட்டுக்குடியிலும் பட்டுக்கோட்டையை அடுத்த மஞ்சள்வயலிலும் முருகப் பெருமானுக்கு மிகச்சிறப்பாக  சித்திரை நிறைநிலா அன்று தான் - காவடித் திருவிழா  நிகழ்வதும்...

சித்ரா பௌர்ணமியன்று தஞ்சை பெரியகோயிலில்  - சித்தர் பெருவிழாவாக, நந்தியம்பெருமானுக்கும் கருவூராருக்கும் அபிஷேக ஆராதனையும் ஜோதி வழிபாடும் அன்னதானமும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. 

தஞ்சை கீழவாசல் உஜ்ஜைனி மாகாளியம்மன் திருக்கோயிலில் திருவிளக்கு பூஜையும், மாவிளக்கு வழிபாடும், பால்குடங்களுடன் ஸ்ரீகாளி புறப்பாடும், அம்பாள் வீதியுலாவும் பாரம்பர்ய சிறப்புடன் நடைபெறுகின்றன.

தஞ்சை உஜ்ஜைனி மாகாளியம்மன்
தஞ்சை உஜ்ஜைனி மாகாளியம்மன்
மாதந்தோறும் பெளர்ணமி வந்தாலும், சித்திரையில் வரும் பெளர்ணமிக்கு என்று ஒரு தனி சிறப்பு உள்ளது. 

சித்ரா பௌர்ணமி அன்று திருஅண்ணாமலையை வலஞ்செய்து வணங்குவது விசேஷம். காரணம்,  ஈசனை வணங்கி வழிபடுவதற்கு வரும் தேவர்களின் அருளும் சித்தர்களின் ஆசியும் அன்றைய தினத்தில் அபரிமிதமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

சித்ரா பெளர்ணமியை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

‌சி‌த்ரா பெளர்ண‌மி அ‌ன்று காலை‌யி‌ல் கு‌ளி‌‌த்து முடி‌த்து - ‌குலதெய்வத்தை, இஷ்ட தெய்வத்தை, வீட்டு தெய்வத்தை எ‌ண்‌ணி வணங்க வே‌ண்டு‌ம். ச‌ர்‌க்கரை‌ப் பொ‌ங்க‌ல் நிவேதனம் செய்வது சிறப்பு.

மாலையில் சந்திர தரினம் கண்டு, அருகில் உள்ள திருக்கோயிலில் தெய்வ தரிசனம் செய்யவேண்டும்.
 
சி‌த்ரா பெளர்ண‌மி இரவில் அ‌ன்று ஆ‌ற்ற‌ங்கரை‌யி‌ல் இறைவனை எழுந்தருளச் செய்து வல‌ம் வந்து வணங்கி - குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுடன் நிலாச்சோறு உண்பதும் தொன்றுதொட்டு நிகழும் மரபு. 

‌சி‌த்‌திரை மாத‌த்‌தி‌ல் தாராளமாக‌க் ‌கிடை‌க்கு‌ம் மா, பலா, வாழை ஆகிய கனி வகைகளை இறைவனு‌க்கு படை‌த்து வணங்கி மகிழ்வார்க‌ள்.

அதிலும் - உற்றார், உறவினர், நண்பர்களுடன் உண்டு
மகிழ்வது என்பது அனைவருக்கும் பிடித்தமான விஷயம்தானே!...


திருக்கயிலை மாமலையில் பார்வதி ஒருசமயம் தோழியருடன் இருந்த போது - பொற்பலகையில் சித்திரம் ஒன்றை வரைந்தாள். மிகவும் அழகாக இருந்த சித்திரம் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற ஆவல் ஏற்பட்டது எல்லோருக்கும். 

அதன்படி - உமையாள்,  தான் வரைந்த சித்திரத்திற்கு உயிர் ஊட்டினாள்.

அந்த சித்திரத்தில் இருந்து வெளிப்பட்டவனுக்கு அகமகிழ்வுடன், சித்ரகுப்தன் எனத் திருப்பெயர் சூட்டினாள். அதன்பின் உலகைக் காக்கும் பரம்பொருளான சிவபெருமானிடம் சித்ரகுப்தனை அழைத்துச் சென்ற அன்னை - நடந்தவற்றை விளக்கினாள். சித்ரகுப்தனுக்கு ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுத்து வாழ்த்தியருள வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாள். 

இப்படி - சித்ரகுப்தன் தோன்றிய நாள் - சித்ரா பெளர்ணமி.

அதேசமயம் - தனியொரு நபராக கோடானுகோடி  மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை பராமரித்து மேற்கொள்ளும் பணி கடினமாக இருக்கின்றது  தனக்கு உதவியாக ஒருவர் வேண்டும் என்று இந்திரனிடம் யமதர்மராஜன் முறையிட்டான்.  இருவரும் இறைவனை நாடி வந்தனர்.

ஈசனும் அவர்களின் கோரிக்கையை ஏற்று - சித்ரகுப்தனை - காமதேனுவின் வயிற்றில் பிறக்கச் செய்தருளினார். காமதேனுவின் வயிற்றில் பிறந்த சித்ர குப்தனை இந்திராணி வளர்த்து ஆளாக்கினாள். 

இளமையில் சித்ரகுப்தர் காஞ்சியில்  - சிவபெருமானைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். இறைவனும் - ஏடும் எழுத்தாணியும் வழங்கி, சித்ரகுப்தனை யமனின் உதவியாளனாக நியமித்து உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதிப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

தக்க பருவம் அடைந்த சித்ரகுப்தனுக்கு மயனின் மகள்களான - நீலாவதி, கர்ணவதி ஆகிய இருவரையும் மணமுடித்து வைத்து -  சித்ரகுப்தனின் பொறுப்புகளை விளக்கி எமதர்மனுக்கு உதவி புரிய அனுப்பி வைத்தார்.

தன் மனைவியருடன் யமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து நம்முடைய பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இன்றும் இப்பொழுதும் கணக்கெடுத்து எழுதிக் கொண்டிருக்கிறார்.

இதன் அடிப்படையிலேயே -  சொர்க்கமா நரகமா என்பது தீர்மானிக்கப்படும்.

சித்ரா பௌர்ணமி அன்று சில ஊர்களில் ஆங்காங்கே பந்தல் அமைத்து இரவு நேரத்தில் பெரியோர்கள் சித்ரகுப்த நாயனார் கதையினைப் படிப்பார்கள். மக்கள்  கூட்டமாக அமர்ந்து விடிய விடிய சித்ரகுப்தர் கதையைக் கேட்பார்கள்.  கதை சொல்லும் நிகழ்வினை ஏற்பாடு செய்தவர்கள், வந்தவர்களுக்கு - சர்க்கரைப் பொங்கல், கொழுக்கட்டை, பணியாரம் - என வழங்குவர்.

இவ்வாறு கதை சொல்வதும் கேட்பதும் - மக்கள் கீழான எண்ணங்களில் இருந்து நீங்கி பாவம் செய்யும் எண்ணத்தை விட்டு, புண்ணியச் செயல்களில்  ஈடுபட்டு மேல்நிலையினை அடையவேண்டும் என்பதற்காகவே!... 

சித்ரா பெளர்ணமியன்று சித்ரகுப்தனை நினைத்து - பசும்பால், தயிர், நெய் இவற்றை விலக்கி - விரதம் இருந்து வழிபட்டால் நல்லது. 

காலையில் விரதத்தை ஆரம்பித்து சித்ரகுப்தன் நினைவிலேயே இருக்க வேண்டும். மாலையில்  நிலவு உதயமானதும் சித்ர குப்தனுக்குப் பூஜை செய்ய வேண்டும்.  மாக்கோலம் இட்டு ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து சர்க்கரைப் பொங்கலிட்டு பயற்றம்பருப்பும், எருமைப் பாலும் கலந்த பாயசத்தை நிவேத்தியம் செய்ய வேண்டும்.   

ஏழைகளுக்கு முடிந்த அளவிற்கு தானம் செய்ய வேண்டும். அதுவும்  படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அவர்களின் படிப்புக்கு உதவியாக - குறைந்த பட்சம் எழுது பொருட்களையாவது வழங்கலாம்.

சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பு. 

உப்பு சேர்க்காமல் உணவு உண்டு விரதமிருந்தால் சித்ரகுப்தன் மகிழ்ந்து நம் பாவ புண்ணிய கணக்கை எழுதும்போது புண்ணியத்தை அதிகப்படுத்தியும் பாவத்தைக் குறைத்தும் எழுதுவார். இதனால் மரணத்திற்குப் பின் நாம் நரக வேதனையிலிருந்து விலகி  சொர்க்கத்தில் வாழலாம் - என்று சிலர் சொல்வதுண்டு. சில ஆன்மீக இதழ்கள் கூட இவ்வாறு குறிப்பிடுகின்றன.

நாம் தானமும் தவமும் செய்வது, நம் பாவவினைகள் குறைத்து எழுதப் படவேண்டும் என்பதற்காகவா!... அவ்வாறு சித்ரகுப்தன் எழுதினால்,  

நம்பிக்கையுடன் பொறுப்பை ஒப்படைத்த ஈசனுக்குத் துரோகம் செய்தது போல் ஆகாதா?... அம்பிகையால் உருவாக்கப்பட்ட பெருமையை உடைய சித்ரகுப்தன் நம்பிக்கைத் துரோகம் செய்வாரா?...

உண்மையான இறையன்பர்கள் ஒரு கணம் - சிந்திக்க வேண்டும்!...

நாம் செய்யும்  தானமும் தவமும்,  நம்முடைய சிந்தையும் செயலும் மேன்மை அடைவதற்குத் தானே அல்லாமல் -  பாவப்பதிவுகளை மாற்றி எழுதுவதற்காக அல்ல - என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்!..

சிந்தையும் செயலும் சீராகவே - சித்ரகுப்த வழிபாடு!...


திருஅண்ணாமலையில் காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தனுக்கு தனியாக சந்நிதிகள் உள்ளன. அங்கு சித்ரா பெளர்ணமியில் வழிபாடுகள் சிறப்பாக நிகழ்கின்றன.

பெளர்ணமியை அனுசரித்து தமிழகத்தில் பல்வேறு திருக்கோயில்களிலும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. 

எ‌ங்கெங்கு‌ம் திரளான பக்தர் கூட்டத்தைக் காண்பதே ஆனந்தம்.

நம் எண்ணங்கள் நலமாகட்டும்!... 
நல்ல எண்ணங்களுடன் 
ஊருக்கும் மற்ற உயிர்களுக்கும் உபகாரமாக வாழ்ந்து 
நற்பலன்களை பெறுவோமாக!...

2 கருத்துகள்:

  1. /// தானமும் தவமும் - சிந்தையும் செயலும் மேன்மை அடைவதற்குத் தான்... பாவப்பதிவுகளை மாற்றி எழுதுவதற்காக அல்ல... ///

    உணர வேண்டிய வரிகள்...

    அறியாத சில தகவல்கள்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. நன்றி திரு. தனபாலன் அவர்களே!.. நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றதெல்லாம் மாசிலாமணியாக மனம் திகழ்வதற்காகவே!...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..