நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 01, 2015

நீள்புகழ் நெடும்பனை

இன்னும் சில தினங்களில் புதுக்கோட்டை மாநகரில் சீரும் சிறப்புடனும் நிகழ இருக்கும் வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவின் போது -

தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின் இலக்கியப் போட்டிகளால் ஐந்தாம் தமிழ் என்று புகழப்படும் கணினித் தமிழ் -  சிறப்பிக்கப்பட இருக்கின்றது..

இருந்தமிழே உன்னால் இருந்தேன் - வானோர் 
விருந்தமிழ்தம் எனினும் வேண்டேன்!..

- என்றெல்லாம் புலவர் பெருமக்களால் சிறப்பிக்கப்பட்ட மூவாப்பெருந்தமிழ் எனும் முத்தமிழ் -

இன்றைக்கு ஐந்தாம் தமிழ் என - பீடும் பெருக்கும் கொண்டு விளங்குகின்றது..

பிரபஞ்சம் பிறந்த போதே தமிழும் பிறந்தது என்பார் - பாவேந்தர்..

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் 
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த 
தமிழொடும் பிறந்தோம் - நாங்கள்!..

வானத்தில் திங்களும் ஞாயிறும் விண்மீன்களும் மேகங்களும் பூமியில் கடலும் பிறந்த வேளையில் பிறந்த தமிழ்!.. - என்று சங்கநாதம் செய்கின்றார்..

ஓசையாய் ஒலியாய்ப் பொலிந்த தமிழை வடிவம் எனும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றபோது - அங்கே மாபெரும் துணையாய் நின்றவை - 

ஓலைகள்!..

பனை ஓலைகள்!..


அணிசெய் அரங்கினில் ஐந்தாம் தமிழென 
அழகுடன் அலர்ந்திருக்கும் அருந்தமிழ் 
அன்றைக்கு அவனியெலாம் ஆட்சிகொண்டு
அமர்ந்திருந்த அழகுஎன்ன ஓலைகளில்!..

அரசன் முதற்கொண்டு ஆண்டி வரை - அடி தொழுது
முரசு முழக்கி கவரிவீசிட  அன்னைத்தமிழ் பயணித்தாள் -
அவனி முழுதும் பனையோலை எனும் பல்லக்கில்!..
  
பனையும் அதன் ஓலையும் - இல்லையெனில்!..

நினைத்துப் பாருங்கள்!..

பல்வேறு பலன்களைத் தருவது - பனை!..

அடிவேரிலிருந்து நுனி மட்டை வரை - மக்கள் பணிக்கெனவே!..

ஆயிரமாயிரம் மக்களை நல்லபடியாக வாழ வைத்ததில் - வைப்பதில் - 
முன் நிற்பது பனை மரம்!..

அப்படிப்பட்ட பனைக்கு, ஒரே ஒரு எதிரி - மனிதன்!..

அவனே வெஞ்சினங்கொண்டு - வெட்டி வீழ்த்தி அழிக்கின்றான் - பனையை!..

தூர் எனும் அடிமரத்தில் பெரும்பாலும் சிறு சிறு புற்றுகள் அமைந்திருக்க - 

நெடுமரம் முழுவதும் சின்னஞ்சிறு பூச்சிகளின் குடியிருப்பு..

உயர உயரப் பறக்கும் பருந்துகளும் கழுகுகளும் -
பனை மட்டையில் உட்கார்ந்து கொண்டுதான் ஊரை வேடிக்கை பார்க்கின்றன.. 


தூக்கணாங்குருவிக் கூடுகள்
பனை மட்டைகளைப் பின்னிப் பிணைத்தவாறு கூடுகளைக் கட்டி - 
அவற்றுள் களிமண் உருண்டையில் மின்மினிப் பூச்சிகளைப் பதிந்து வைத்துக் குதுகலிப்பவை - தூக்கணாங்குருவிகள்!..

ஆண் என்றும் பெண் என்றும் விளங்குகின்ற பனை -
மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்கின்றது..

ஓலைகள், மட்டைகள் - அளிக்கும் பயன்பாடுகள் ஏராளம்..

விசிறிகள், பாய்கள், கொட்டான் எனப்படும் சிறு கூடைகள் முதலானவை..

பனை ஓலை மற்றும் நார் கொண்டு செய்யப்பட்ட கூடைகள் கடக பெட்டிகள் என்று சொல்லப்படும். நெல் அளந்து சேமித்து வைப்பதற்கு ஏற்றவை.

சுளகு எனப்படும் முறங்களும் சிறப்பு பெற்றவை..

முதிர்ந்து விழுகின்ற பனை மரங்களை சப்பைகளாக அறுத்து வீடுகளுக்கு உத்தரமாக பயன்படுத்துவர்.. உறுதி வாய்ந்த பனஞ்சப்பைகள் பல்லாண்டு காலத்திற்கு சேதமின்றி இருக்கக்கூடியவை..




மட்டையிலிருந்து நார் எடுக்கப்படும் நார் மெத்தைகளுக்கும் கால்மிதிக்கும் ஆகின்றன..

பனை ஓலை வேயப்பட்ட குடிசைகளும் கொட்டகைகளும் கோடையில் குளுகுளு என்றிருக்கும்.. வெயிலின் தாக்கமே தெரியாது..

மட்டையிலிருந்து நார்,  வலுவான கூடைகள் என - 
பனை வழங்கிய அத்தனையுமே - சுற்றுச் சூழலை மாசு படுத்தாதவை..

மக்களின் வெப்பம் தவிர்த்து நலம் அளித்தவை - பனைமட்டை விசிறிகள்..

ஆனால் - இன்றைக்கு எண்ணற்ற பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பவை மின் விசிறிகள்..

கோடைகாலத்தில் உடலுக்குக் குளிர்ச்சி தருவன - பதநீரும் நுங்கும்!..

கோடைகாலத்தில் விடியற்காலையில் அருந்தும் பதநீருக்கு ஈடு இனை இல்லை..

பெண் பனை பூத்து - பூங்கதிர் காய் பிடிக்கும் வேளையில் பூங்கதிரின் பக்கவாட்டுகளில் கீறி விட்டு நார் கொண்டு இறுகக் கட்டி பூங்கதிரை நெரித்து விடுவர்..

இந்நிலையில் பூங்கதிரிலிருந்து நீர் வழிய ஆரம்பிக்கும். பூங்கதிரின் நுனியில் கலயத்தைக் கட்டி விட்டால் - பூங்கதிரில் இருந்து வழியும் பாலானது அதில் சேகரிக்கப்படும்..

காலையும் மாலையும் கதிர்களை நெரித்துத் தட்டி விட்டு கலயத்தில் சேர்ந்திருக்கும் பனம்பாலில் கைப்பக்குவமாக சுண்ணாம்பு சேர்த்தால் அதுவே பதநீர்!..



கீறப்படாத பூங்கதிரின் பிஞ்சுகள் காயாகி முற்றினால் பனம்பழம். இதுதான் நுங்கு!..

பனம்பழத்தை மண்ணில் மேலோட்டமாக விதைத்து வைக்க ஓரிரு வாரத்தில் பனங்கிழங்கு முளை விட்டு வரும்!..

பதநீரும் நுங்கும் மகத்தான மருத்துவ சக்தியுடையவை..

இவற்றில் சுண்ணாம்புச் சத்து இரும்புச் சத்து மக்னீசியம் என மேலும் பல சத்துகள் மிகுந்திருக்கின்றன..

பதநீர் குடிப்பதால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் விருத்தியாகி நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பதநீரை பாகு காய்ச்சி அச்சுகளில் வார்த்து எடுக்கப்படுவது - கருப்பட்டி..

ஆரோக்கியமான பனை ஆண்டொன்றிற்கு 150 லிட்டர் பதநீரும்
25 கிலோ கருப்பட்டியும் தருவதாக கணக்கிடப்பட்டுள்ளது..

சித்த வைத்திய  மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் சிறப்பிடம் பெற்றிருப்பது கருப்பட்டி..

ஜீனி என்று சொல்லப்படும் White Sugar - உயிர் குடிப்பது.. ஆனால்,
பனஞ்சர்க்கரையாகிய கருப்பட்டி - உயிர் கொடுப்பது..

நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்..

கருப்பட்டியின் அடுத்த நிலை தான் பனங்கற்கண்டு!..


அந்தக் காலத்தில் -  கருப்பட்டி சேர்த்து உளுந்தங்களி செய்து பூப்பெய்திய இளங்கன்னியர்க்கு கொடுப்பார்கள்..

எதற்கு!..

உளுந்தங்களியினால் - கருப்பை பலப்படும்.. ரத்த சோகை ஏற்படாது.. ஆரோக்கியம் திகழும்.. பாலூட்டும் காலத்தில் பால் சுரக்கும்...

கருப்பட்டியின் பயன்பாட்டிலிருந்து நீங்கியதும் - ஏற்படுகின்ற விளைவுகள் யாருக்கும் புரியவில்லை..

இவ்வளவு தான் என்றில்லாமல் - எவ்வளவோ நன்மைகளை அளிப்பவை - நுங்கும் பதநீரும்!..

கோடை காலத்தில் அம்மை நோய் வராமல் தடுப்பதுடன் - நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றன..

மேலும் மேலும் பெருமைகளை உடைய பனை - கற்பக விருட்சம் எனப்படும்..

ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வும் வளமும் அளித்தவை பனை மரங்கள்!..

இத்தகைய பனை மரங்களுக்கு எதிரிகள் மனிதன் மட்டுமே!..

சில கிராமங்களில் - காவல் தெய்வங்கள் பனை மரத்தில் இருப்பதாக மரபு..

வருடாந்திர விழாக்கள் அனைத்தும் பனை மரத்திற்கோ அல்லது அருகிலுள்ள விக்ரகத்திற்கோ நிகழ்வுறும்..

புதுக்கோட்டை அருகிலுள்ள - திருவரங்குளம் பொற்பனைக்கோட்டை ஸ்ரீமுனீஸ்வர ஸ்வாமி வழிபாடு குறிப்பிடத்தக்கது..

இதனால் பனை மரங்கள் பாதுகாக்கப்படுவதுடன் சிறப்பிக்கப்படுவதாகவும் ஆகின்றது..

ஆனால் - நவநாகரிகம் மலிந்து விட்ட இந்த காலத்தில் மக்களின் மனங்கள் மாறிப் போய்விட்டன..

சில திரைப்படங்கள் -  பனை மரங்களில் முட்டி மோதி வேரோடு பெயர்த்து எறிவதை இயல்பாகக் காட்டுகின்றன..

நல்லனவற்றை ஆதரிக்காவிட்டாலும் - அவற்றை அழிப்பதில் முனைப்புடன் விளங்குகின்றனர்..

பனையின் அழிவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் மக்கட்பணி செய்யும் பனை காக்கப்பட வேண்டியவை என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை..

இருபது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் ஐந்து கோடி பனை மரங்கள் இருந்ததாகவும் அதில் பாதிக்கு மேல் தென்மாவட்டங்களில் இருந்ததாகவும் சொல்கின்றனர்.

ஆனால் - இன்றைக்கு பனை மரங்கள் அருகி வருகின்ற ஒன்றாகி விட்டன..

நாகரிக மாயையில் மூழ்கிக் கிடப்பவர்கள் -
பனை தரும் நன்மைகளை அறியமாட்டாதவர்களாக -

பதநீர், நுங்கு, கருப்பட்டி என்றாலே ஏளனமாகப் பார்க்கின்றனர்..

பனை மரத்தைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் காணக் கிடைக்கின்றது..

இறையியலில் - சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தி வடிவாக - திருக்கரத்தில் ஓலைச்சுவடியுடன் விளங்குகின்றார்..

அவ்வண்ணமே - கலைவாணியும் திருக்கரம் தன்னில் ஓலைச்சுவடியுடன் விளங்குகின்றாள்..

மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணனின் சகோதரனாகிய பலராமன் பனைக் கொடி உடையவனாக குறிக்கப்படுகின்றான்..

எதற்கும் கலங்காத மனத்தினரைக் குறிக்கும் போது -
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது!.. - என்று குறிப்பது வழக்கம்..

அடுத்தடுத்து கஷ்டங்களுக்கு ஆளாகும் போது -
பனை ஏறி விழுந்தவனை கிடா வந்து மிதித்தாற்போல!.. - என்றுரைப்பர்


வாழைக்கு நித்தமும் பராமரிப்பு அவசியம்..

தென்னைக்கு மாதம் இருமுறை கவனிப்பு அவசியம்..

பனைக்கு அவ்வாறெல்லாம் தனி கவனிப்பு ஏதும் அவசியம் இல்லை..

காலத்தினால் பெய்யும் மழை நீரை எடுத்துக் கொண்டு பலன் தருகின்றது..

எனவே தான் -

தன்னலங்கருதாது உழைப்பவரை - பனைக்கு நிகராகப் புகழ்வர்..

மூவேந்தர்களுள்
பாண்டியரின் மாலை - வேம்பு
சோழர்களின் மாலை - ஆத்தி
சேரர்களுக்கு உரியது - பனம்பூ மாலை..

தமிழகத்தின் சிறப்பு அடையாளமாகத் திகழ்வது  பனை ..

பனங்குலை மங்கலத்தின் அடையாளம்..

கல்யாண வீடுகளிலும் திருவிழாப் பந்தல்களிலும் பனங்குலைகளைக் காணலாம்.

ஆயினும் - பனையைக் காப்பதற்கு நாம் தவறி விட்டோம்..

பனையின் பெயருடன் இன்றும் ஊர்கள் விளங்குகின்றன..

நமது உள்ளங்கை பனை மட்டையின் அடையாளம்..

பனை போல - நாமும் இந்த கையால் ஊருக்கு நல்லன செய்தல் வேண்டும் என்பது தெளிவு!..


ஆங்கிலத்தில் - Palm என்றே, உள்ளங்கை குறிக்கப்படுகின்றது..

மக்கட்குலம் அதையெல்லாம் உணர்ந்து கொண்டாற்போலில்லை..

தென்மாவட்டங்களில் -
ஒரு பெருங்குலத்தார்க்கு வாழ்வும் வளமும் என்று ஆனது பனை!..

வறண்ட நிலங்களில் வளர்வது போலவே - வளமான பூமியிலும் நின்று வளரும் தன்மையுடையது பனை..

சில பனை மரங்கள் அருகில் இருந்தால் குளத்திற்குத் தனி அழகு..

குன்றிமணிக் கொடி - வெகு இயல்பாக பனைமரத்தைச் சுற்றிப் படர்ந்து வளரும்.. ஆனாலும் -


மக்களே மண்ணுக்கு எதிரியாகி நிற்கின்றனர்.. என்ன செய்வது!?..

தமிழகத்தில் பனைக்கு என தனி வாரியம் இருந்தும் -
பனை அழிக்கப்படுவதைத் தடுக்க இயலவில்லை..

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.. (0104)

- என்று பனையின் பெருமையை வள்ளுவப்பெருமான் குறிப்பிடுகின்றார்..

பனையைக் காப்போம்..
பயன் யாவும் பெறுவோம்!..

வாழ்க நலம்..  
* * *

நீள்புகழ் நெடும்பனை 
- எனும் இப்பதிவு, வலைப்பதிவர் சந்திப்பு 2015 
நடத்தும் மின்னிலக்கியப் போட்டிக்காக எழுதப்பட்டது..

வகை - 2
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு
(பயன் தரும் மரங்களைக் காத்தல்)

இக்கட்டுரை எனது சொந்தக் கற்பனையே..
இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல..
போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் வெளிவராது..
- என்று, இதன் மூலம் உறுதியளிக்கின்றேன்..

அன்புடன்,
துரை செல்வராஜூ..  
* * *