நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 20, 2025

கண்ணாத்தா

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 6
செவ்வாய்க்கிழமை

 கை வண்ணம்..  


ஒளிமயமான சர விளக்குகள்.. அவற்றில் இருந்து எங்கும் பிரகாசம்..  புற்று முகத்தில் பூ முகம் காட்டி மஞ்சள் குங்குமத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அம்பாள்..

இப்போது சின்னதாக முன் மண்டபமும் நீளமான ஆள் நடையும்.. அதற்கு முன்பு கீற்றுக் கொட்டகை தான்.. அதற்கும் முன் அதுவும் இல்லை.. புன்னை மரம்..
அதன் கீழாக புற்று.. அவ்வளவு தான் கோயில்..

மாடு மேய்ச்ச பையன் தான் முதல்.. ல பார்த்தது.. சின்னப் பொண்ணு ஒன்னு பூ மாலை எல்லாம் போட்டுக்கிட்டு இந்தப் புற்றுக்குள்ள எறங்கிப் போனதை..

ராசாவுக்கு சேதி சொல்லி விட்டாங்க.. அவுரு யானை மேல வந்து பார்த்துட்டு சீர் வைச்சு கொடுத்ததும்  நாடு முழுக்க பரவிடுச்சு..

அதற்கு அப்புறம் ஜனங்கள் வர போக..ன்னு ஆகி மூட்டை மூட்டையா நெல்லும் அரிசியும் அம்பாரம் அம்பாரமா இளநியும் தேங்காயும் ..  காணிக்கை..ன்னு கொண்டாந்து ஜனங்க சேர்த்துட்டாங்க.. பெரிய சாமியார் ஒருத்தர் வந்து புற்று மண்ணக் குழைச்சு அம்பாள் ரூபமா செஞ்சு வெச்சார்.. இத்தோட தங்கக் கிரீடம் , நெத்திப் பட்டம், திரு நேத்திரம், செவிப்பூ, முத்து புல்லாக்கு.. ன்னு செஞ்சு வைச்சு அம்பாளோட முகத்தை எடுத்துக் காட்டுனதும் ஜனங்க மத்தியில அம்மா.. அம்மா.. ன்னு  ஆனந்த கோஷம்... அந்த அம்பாளும் குழந்தை மாதிரி ஓடி வந்து இந்த ஜனங்களோட ஒட்டிக்கிட்டா..

அதுக்கு அப்புறம் ஊர்ப் பெரியவங்க ஒன்னா கூடி அம்பாள் பேர்ல கோயில் கட்றதுக்கு உத்தரவு கேட்டாங்க..
ராசாவும் ரெண்டு கிராமத்தை மானியமாக் கொடுத்தாரு .. எல்லாருமா சேர்ந்து கோயிலைக் கட்டுனாங்க..  

அதெல்லாம் ரொம்ப  வருசத்துக்கு முன்னே.. இப்போ நாடு வெள்ளக்காரன் கையில இருக்கு.. கோயிலுக்கு உள்ளே நுழைற வாசல்.. ல கோட்டும் சூட்டுமா கால் மேல கால் போட்டுக் கிட்டு உக்கார்ந்திருக்கான் துரை.. நாலடி தள்ளி ஜமக்காளம் விரிச்சு மணியக்காரரும் கோயில் கணக்கரும்.. பக்கத்துல வெள்ளிச் செம்புல தண்ணீர்..
கூடவே நாலு தடியனுங்க.. அம்பாள்கிட்ட இருக்கிற காணிக்கை குடம் நெறைஞ்சதும் தூக்கிக்கிட்டு வந்து வெள்ளைக்காரன் கிட்ட ஒப்படைக்கிறதுக்குன்னு..  அதனால இவனுங்களோட பேரு குடந்தூக்கி .. ஆனா ஜனங்க சொல்றதோ சொம்பு தூக்கி - அப்படி.. ன்னு..

அன்னைக்கு வெள்ளிக் கிழமை.. ஏராளமான ஜனங்க..  பால்குடம், கரகம், மாவிளக்கு.. ன்னு ஒரே ஆரவாரம்..

கோயிலுக்கு உள்ளே போன சனங்க திரும்பி வந்தபாடு இல்லை.. அம்பாளப் பார்த்த மனசுக்கு வேற என்ன வேணும்?.. பசி மயக்கம் இல்லாம - கிறங்கிக் கெடக்குது சனம்..
இருந்தாலும் கோயிலுக்கு வர்ற சனங்க.. அவங்களும் உள்ளே போய்த் தரிசனம் செய்யத் தானே வேணும்..  முடியலை.. நெரிசல்.. ஆ.. ஊ.. ன்னு சத்தம்.. தொரை கடுப்பாகிட்டான்..

" Nonsense... Why they are shouting?.. "

 அவம் பாஷையில கத்தி விட்டு - " Go Man..  போய்ப் பார்!.. " - என்று குடந்தூக்கி ஒருவனைப் பார்த்து சத்தம் போட்டான்..

அவனுக்கு அப்போது பிடித்தது ஏழரை..

கைப்பிரம்பால் தட்டிக் கொண்டே வந்தவன் காரை மண்டபத்தின் வாசலில் புற்று முகத்தின் முன் நின்று கொண்டு பெரிதாக சத்தம் போட்டான்.. 

" ஐயரே... எதுக்கு இவுங்கள இங்கே நிறுத்தி வெச்சிருக்கீங்க.. விறுவிறு.. ன்னு வெளியே அனுப்புங்க.. அங்கே தொரை கத்துறார் கேக்கலையா?.. "

" இதோ.. ஆச்சு.. இவாள்.. எல்லாம் வெகு தூரத்துல இருந்து வண்டி கட்டிண்டு வந்திருக்கா... கண் குளிர நின்னு பார்த்துட்டுப் போகட்டுமே... அவாள போ.. போ.. ன்னு விரட்டியடிக்கிறது பாவம் இல்லையா?.. "

" ஐயரே.. இங்கே பாவ புண்ணியம் எல்லாம் பார்க்காம காணிக்கை.. ய மட்டும் பாருங்க..
உமக்கு நேரம் சரி இல்லே.. ன்னு... நெனைக்கிறேன்.. இல்லேன்னா தொர வார்த்தைக்கு மறு வார்த்தைப் பேசுவீரா?... " 
- என்றபடி காணிக்கைக் குடத்தைக் கையால் அசைத்துப் பார்த்தான்.. அது இன்னும் நெறையலை..

" சிவ சிவா!.. நா ஒன்னும் தப்பா பேசலையே!.. "

" தெரியும் ஐய்ரே... நீர் பொம்பளைப் புள்ளைகள ஈரத் துணியோட வரச் சொல்றதும்.. கையத் தொட்டு எலுமிச்சம்பழம் தர்ற தும்.. நெத்தியில குங்குமம் வச்சி விடறதும்!.. " 

" அபச்சாரம்... அபச்சாரம்... இதுவரைக்கும் அம்பாள் சந்நிதியில் எந்தக் குத்தமும் செஞ்சதில்லயே.. சந்நதியில ஆவேசம் வந்து குழந்தைகள்  ஆடறச்சே விபூதி போடாம வேற என்ன தான் செய்றது?.."

இதற்குள் கூட்டத்திலிருந்து ஒரு குரல்.. 

" யோவ்.. சொம்பு தூக்கி.. இதனால ஒனக்கு என்னா பிரச்னை?.. போ யா அந்தப் பக்கம்!.. "

ஜனங்களிடையே பரபரப்பு..

" யார் என்னா சொல்றது?.. நீங்க அம்பாள வேண்டிக்கிட்டு எம் மகளுக்கு திந்நீறு போட்டு விடுங்க சாமீ!.. "

நடுத்தர வயதுடைய பெண் தன் மகளுடன்  முன்னே வந்தாள்..

" ஆட்டு மந்தை சனங்களுக்கு இவ்வளவு ஆங்காரமாப் போச்சா!.. " - என்று கொக்கரித்த குடந்தூக்கி,

" இந்த மாதிரி குளிச்ச ஈரத்தோட நனைஞ்ச சேலயோட பொண்ணுங்க வந்தா ஐய்ரு ஏன் நிறுத்தி வைக்க மாட்டார்!?.. "
- வக்கரித்தான்...

" டேய்.. என்னடா சொன்னே!.. "
முன்னால் நின்றிருந்த இளம் பெண் ஆவேசமானாள்.. விழிகளில் தீப்பொறி பறந்தது... 

நீதி கேட்க அம்பாள் வந்து விட்டாள் என்று எல்லாரும் பரவசமான நேரத்தில் - தாம்பாளத்தில் இருந்த தேங்காயை எடுத்தாள்.. அதை அந்த முரடனின் மண்டையில் அடித்தாள்.. உடைத்தாள்.. மலையேறி விட்டாள்...

முன் மண்டபம் எங்கும்  சிவப்பாகி விட்டது..
நடந்ததைப் பார்த்த  துரைக்கு கடுங்கோபம்.. பெரிய கோர்ட் வரைக்கும் போனான்... ஆனால் உள்ளூர் பஞ்சாயத்தார்களும் கண்ணால் கண்ட சாட்சிகளும் பலமாக இருந்ததால் பிராது
தள்ளுபடியாகி விட்டது ..

அது நடந்த வருசம் 1800..

இன்றைக்கு 1950..
 தாத்தாவின் தாத்தாவுடைய வாழ்க்கையில் அன்றைக்கு
நடந்த சம்பவம் இன்றைக்கு  மீண்டும் நடந்திருப்பதை நினைத்துக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்தார் சுப்பு குருக்கள்..

அதே மாதிரி அச்சு அசலா இன்று காலையில் நடந்தது தான் அவருக்கு ஆச்சர்யம்..

சந்நிதி மத்தியில கம்பித் தடுப்பு.. அந்தப் பக்கம் ஆண்களும் இந்தப் பக்கம்  பெண்களும்.. நடுவால பத்தடி தூரத்துக்கு நடந்து நடந்து கற்பூரம் கொடுப்பார்.. எலுமிச்ச மாலை, ரோஜா மாலை, கதம்ப சரம், புது சேலை.. ன்னு யார் கொடுத்தாலும் அவங்க கண்ணு முன்னாலயே அம்பாளுக்கு சாத்தி கற்பூர தரிசனம் காட்டி கையில எலுமிச்சம்பழம் கொடுப்பார்..
கற்பூரத் தட்டுல நாலணா போட்டாலும் சரி.. ஒரு ரூபா துட்டு வைச்சாலும் சரி.. எல்லாருக்கும் அன்புதான்..  
எல்லாருக்கும் மரியாதை தான் .. அந்த குணம் வாழையடி வாழையா  வர்றது..

இதுக்கு சோதனையா வந்து சேர்ந்தான் கங்காணி.. எல்லாம் சரியா நடக்குதா..
ன்னு கண்காணிக்கிறது தான் அவன் வேலை..
பெரிய எடத்து சிபாரிசு.. அதனால சத்தமும் ஜாஸ்தி..

" குருக்களே.. ஒவ்வொரு மாலைக்கும் நடையா நடந்து நேரத்தை வீணாக்காதீங்க... ஒரு எடத்துல நின்னு மாலை எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டு விபூதி கொடுத்து ஜனங்கள வெளியே அனுப்புங்க.. கூட்டம் கூட்டாதீங்க.. மாலை எல்லாம் அப்புறமா போட்டுக்கலாம்.."

" ஐயா.. கொண்டு வர்ற மாலைய அம்பாளுக்கு சாத்துறத கண்ணால பார்த்தா தானுங்களே எங்க மனசுக்கு நிம்மதி!.. " - கூட்டத்தினுள் இருந்து ஒரு குரல்..

" உங்க மாலையத் தூக்கிக் கிட்டு ஓடிட மாட்டோம்... அவ்வளவு வக்கணை.. ன்னா கூட்டம் இல்லாத கோய்லுக்குப் போகணும்!.. " 

கங்காணியிடம் எகத்தாளம்..

" குருக்களே.. கறாரா சொல்லிட்டேன்.. இன்னும் ஒரு நாழி.. ல கூட்டம் கலையணும்.. இல்லேன்னா தர்மகர்த்தா ஐயாக்கிட்ட சொல்லி உங்க சீட்டைக் கிழிச்சிடுவேன்.."

கடூரமாக இருந்தது அவன் குரல்..

' அம்பாளைத் தேடி வர்றவங்களை என்ன சொல்லி நிறுத்துறது?.. ' 

உச்சிக் காலம் முடிந்து நடை அடைப்பதற்கு நேரமாகி விட்டது.. சொன்னபடிக்கு எதுவும் நடக்காததால் அங்கே உறுமிக் கொண்டிருந்தான் கங்காணி ..
சாயங்காலப் பொழுது எப்படி போகப் போகின்றதோ என்ற நினைவுடன் வீட்டுக்கு வந்து பேருக்கு ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டு  திண்ணையில் உட்கார்ந்தவர் தான்..

மனசு இன்னும் ஆறாத நிலையில் பசுபதியைக் கண்டதும் சுதாரித்துக் கொண்டார்.. சந்நிதியில் சுப்பு குருக்களுக்கு ஒத்தாசையாக இருப்பவன் பசுபதி..

" அண்ணா..  சேதி தெரியுமோ!.. "

" என்னடா அது?.."

" காலைல உங்ககிட்டே வந்து கரைச்சல் பண்ணினானே கங்காணி..  அவன போலீஸ் காரங்க வந்து பிடிச்சுக்கிட்டுப் போய்ட்டாங்க!... "

" ஏண்டா?.. " - சுப்பு குருக்களுக்கு ஆச்சர்யம்..

" அவன் ரொம்பவும் மோசமான பேர்வழியாம்.. ஏகப்பட்ட சனங்கள ஏமாத்தி இருக்கானாம்.. நாலு ஊர் பஞ்சாயத்தார் போலீஸுக்குப் போனதில எல்லாம் ருசு ஆகிட்டதாம்.. ஜீப்புல வந்து அள்ளிக்கிட்டுப் போய்ட்டாங்க.. இன்னும் பத்து வருசத்துக்கு ஜெயில் சாப்பாடுதானாம்!.. "

" மகமாயி!.. "

" பிறத்தியார் பேச்சைக் கேட்டு அவனுக்கு வேலை போட்டுக் கொடுத்ததுல என் பேர் கெட்டுப் போய்ட்டதே.. ன்னு தர்மகர்த்தா தலையில அடிச்சுக்கறார்.. "

"  கௌரீ.. அந்தத் திறவு கோலை எடுத்துண்டு வா!.. "

" ஏன்னா.. சாயரட்சைக்குத் தான் இன்னும் நாழி இருக்கறதே!.. "

" தெப்பக்குளத்துல மூழ்கிட்டு அப்படியே ஈரத்தோட அம்பாள தரிசனம் செய்யணும்..டி!.. "

" அண்ணா பார்த்தேளா.. உங்க சீட்டைக் கிழிச்சிடுவேன்.. னான்!.. அவன் சீட்டே கிழிஞ்சு போய்டுத்து!.. "

சிரித்துக் கொண்டான்  பசுபதி..

"  அம்பா கண்ணத் தொறந்துட்டாள் அண்ணா!.."

" அம்பாள் என்னைக்கு.. டா கண்ணை மூடிண்டு இருந்தாள்?.. "
***
ஓம்  சக்தி ஓம் 
**

12 கருத்துகள்:

  1. நல்ல கதை.இப்போது நிலைமை இதைவிட எல்லாம் மோசம்.  காசு ஒன்றே குறி.  கடவுளைப் பார்க்கும் ஆசையில் ஜனங்களும் காசு கொடுத்தே அலைமோதுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் காசு ஒன்றே குறி

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. மதுரை மீனாட்சியை எவ்வளவு எளிதாக ஆசுவாசமாக தரிசித்திருக்கிறோம்?  அந்த அன்னையை மட்டுமா?  எல்லா கோவில்களிலும்தான்.  ஆனால் இப்போது கம்பி கட்டி, தடுப்பு கட்டி, ஆயிரம் இரண்டாயிரம் என்று டிக்கெட் போட்டு... 

    ஒருநாள் மக்கள் வெகுண்டெழுந்து இழுத்துப் போட்டு உதைத்தால்தான் சரியாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீனாக்ஷியை ஆஸ்தானமாகப் பார்த்து பல வருடங்கள் ஆகின்றன...

      மானச பூஜை சிறந்தது

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. இன்றைய பல பிரச்னைகளுக்கும் அம்பாள் சிவந்த தன் கண்களை எப்போது திறப்பாள் என்று காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. கதை நல்லாருக்கு துரை அண்ணா. இதே பிரச்சனைதானே இப்பவும் கோவில்களில். அப்போது துரை இப்ப?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி சகோ

      நீக்கு
  5. நல்ல கதை.
    அன்னை எல்லோரையும் நல்லவர்களாக மாற்றினால் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு
  6. பெரிய கோவில்களில் கடவுளை தரிசிக்க பணம் வேண்டும். மரத்தடி கடவுள்களே. வணங்க அமைதியும், நிறைந்தவை.

    நல்லதோர்கதை அம்பாள் நல்லோரைக் காப்பாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..