நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 12
செவ்வாய்க்கிழமை
இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி..
சம்பந்தம் இல்லாமல்
எல்லா தரப்பினருக்கும் கொண்டாட்டம்
மகிழ்ச்சி.. ..
தஞ்சை - நகர பேருந்து நிலையத்திற்கும் புது ஆற்றுப் பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்று அந்தப் பகுதியில் தீபாவளிக்கு என
அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகள் அதற்றப்பட்டுள்ளன.
இதனால் பேருந்து நிலைய சாலையில் கீழராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, தெற்கு அலங்கம் இங்கெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளை நாடிச் செல்கின்றனர்..
பாவம் எளிய வியாபாரிகள்..
இவர்களுள் தமிழ் மக்களுடன் வட புலத்து மக்களும் கடை விரித்து இருப்பர்..
முதல் போட்டு பொருட்களை வாங்கியிருப்பார்கள்.. நஷ்டப்படாமல் இருக்க வேண்டும்..
அடித்தட்டு மக்களின் சந்தோஷம் இந்த மாதிரியான கடைகளில் தான்..
சாதாரண மக்களால்
கைக்கு எட்டிய விலையில்
பெரிய கடைகளில் வாங்கவே முடியாது.என்பது எல்லாருக்கும் தெரியும்..
பல ஆண்டுகளாகவே தஞ்சை காந்திஜி சாலையில
தீபாவளிக்காக தற்காலிக கடைகள் அமைத்திருப்பார்கள். தீபாவளி வரையில் தான்..
இந்த வருடம் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி தரைக் கடைகள் அகற்றப்பட்டிருக்கின்றன.
இத்தனை வருடங்களாக தீபாவளி நேரத்தில் இப்படித் தான் நெரிசல்..
மாநகரின் ஏனைய சாலைகள் மாற்றுச் சாலகளாகி விடுவது இயல்பு.
பேருந்து கார்கள் சுற்றிக் கொண்டு செல்கின்ற மக்கள எவ்வித சிரமத்தையும் உணர்ந்ததில்லை.
தீபாவளி சமயத்தில் நகரில் உள்ள பெரிய துணிக் கடைகளை விட இந்தத் தரைக் கடைகளில் தான் மக்கள் கூட்டம் அலை மோதும்...
50,100 என்றெல்லாம் வசதிக்கேற்றபடி கிடைக்கின்ற புதுத் துணிகள் முதற்கொண்டு வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்திலும்
மனம் மகிழ்ச்சி கொள்ளும் அடித் தட்டு மக்களும் இருக்கிறார்கள்..
தீபாவளி முதல் நாள் இரவு வரை இந்தத் தரைக் கடைகளில் தான் அதிக பொருட்களை வாங்கி மகிழ்வர்..
தீபாவளி நேரத்தில் வாரம் முழுதும் பகல் இரவு - என, காவல் துறையினரின் எச்சரிக்கை அறிவிப்புகள் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருக்கின்ற நிலையில் - பெருத்த அசம்பாவிதங்கள் ஏதும் நடந்ததில்லை..
காந்திஜி சாலையின் நெரிசலில் மகிழ்ச்சியுடன்
நடந்து சென்ற நாட்கள் நெஞ்சில் அலை மோதுகின்றன..
படங்களுக்கு நன்றி
நம்ம தஞ்சாவூர
ஃஃ
வாழ்க தஞ்சை
வளர்க தஞ்சை
முருகா முருகா
முருகா முருகா
***