நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 17, 2021

சரணம் ஐயப்பா..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை முதல் நாள்


கலியுக வரதனாகிய
ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியை
தரிசிப்பதற்காக
விரதம் மேற்கொள்வோர்
மாலையணியும்
நன்னாள்..

இவ்வேளையில்
தமிழ் மாலை ஒன்றினை
எம்பெருமானின்
திருவடித் தாமரைகளில்
சமர்ப்பிக்கின்றேன்..

ஸ்ரீ ஐயப்பனின்
அடியார் குழாத்தினுள்
எளியனும் ஒருவன்..

இப்பாடல் 1980 ல்
திரு K. வீரமணி
அவர்கள் பாடியளித்த
" மார்கழி மாதம் ஊர்வலம்
போகும் மக்கள்
கோடி ஐயப்பா!.. "
எனும் பாடலின்
இசை வடிவினை
அடிப்படையாகக் கொண்டது..


தென்கடல் நாடி தீர்த்தங்கள் ஆடி
திருநடை வந்தோம் ஐயப்பா..
திருமுகம் காட்டு தீவினை ஓட்டு..
திருவடி தொழுதோம் ஐயப்பா!..

சரணம் ஐயப்ப சரணம்..
சரணம் ஸ்வாமி சரணம்...

உன் பெயர் பாடி உனதருள் நாடி
நடைவழி வந்தோம் ஐயப்பா!...
வன்புலி ஆனை உலவிடும் வனத்தில்
வழித்துணை நீயே ஐயப்பா..
வழித்துணை நீயே ஐயப்பா!..

சரணம் ஐயப்ப சரணம்..
சரணம் ஸ்வாமி சரணம்..

அழுதை எனும்நதி ஆடிடும் முன்னே
பேட்டைகள் துள்ளிய எரிமேலி
ஆனந்தம் பாடி அகமகிழ்ந் தாடி
அருள் நிலை கண்டோம் ஐயப்பா..
அருள் நிலை கண்டோம் ஐயப்பா!..

சரணம் ஐயப்ப சரணம்..
சரணம் ஸ்வாமி சரணம்...


கரிவலந் தோட்டில் கால் நனைத்து
அந்தக் கரிமலை ஏற்றம் கண்டோமே..
கைகொடு சாமி என்றுனை வேண்டி
நின்னருள் கொண்டு நடந்தோமே..
நின்னருள் கொண்டு நடந்தோமே!..

சரணம் ஐயப்ப சரணம்..
சரணம் ஸ்வாமி சரணம்..

கரிமலை ஏற்றம் இறக்கம் கண்டு
பம்பா தீர்த்தம் வந்தோமே..
நெடுமலை என்னும் நீலிதனை கடந்து
சபரி பீடத்தில் நின்றோமே..
சபரி பீடத்தில் நின்றோமே!..

சரணம் ஐயப்ப சரணம்
சரணம் ஸ்வாமி சரணம்..

பதினெட்டுப் படியும் பனிமலர் முகமும்
காணக் காணக் கண் வழிந்தோட
காலங்கள் தோறும் காத்திடும் ஸ்வாமி
கருணையில் நனைந்து நின்றோமே..
கருணையில் மகிழ்ந்து நின்றோமே!..

சரணம் ஐயப்ப சரணம்
சரணம் ஸ்வாமி சரணம்..
***

தர்மங்கள் வாழ்ந்திடவும்
அதர்மங்கள் அழிந்திடவும்
ஐயன் ஐயப்பனை வேண்டி நிற்போம்!..

ஓம் ஸ்வாமியே
சரணம் ஐயப்பா!..
***

7 கருத்துகள்:

  1. எம்பெருமான் ஐயப்ப ஸ்வாமி உங்கள் தமிழ்மாலையை அணிந்து மகிழ்ந்திருப்பார்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    ஜுரம் குறைந்து நலமாக உள்ளீர்களா?

    தாங்கள் ஸ்வாமி ஐயப்பனுக்கு இயற்றிய பாமாலை அருமையாய் உள்ளது. வரிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று பொருத்தமாய் கதம்ப மலர் மாலையென நீங்கள் தொடுத்ததை அகமகிழ்ந்து அவரும் ஏற்று சூடியிருப்பார். நானும் பாமாலையை பாடி மகிழ்ந்தேன். ஹரிஹரசுதன் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. அதே ராகத்தில் முணுமுணுத்துப் பார்த்துக் கொண்டேன். பாடினால் பயப்படுவாங்க இல்லையோ! அருமையான பாமாலை. உடல் நலம் தேவலையா? ஐயப்பன் அருளால் தங்கள் கஷ்டங்கள் அனைத்தும் விலகி நிம்மதியாக வாழ்க்கை நடந்திடப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. துரை அண்ணா உங்கள் உடல் நலம் தேவலாமா? வீரமணி அவர்களின் பாடல் அப்போதெல்லாம் கோயிலில் இந்த மாதத்தில் ஒலிக்கும். இப்போதும் உங்கள் தமிழ்மாலையைப் பாடிப் பார்த்தேன். அருமை. தமிழ்மாலையும் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஐயப்பன் உங்கள் பாமாலையை அணிந்து மகிழ்ந்து இருப்பார். அருமையான பாமாலை.
    உங்கள் உடல் பூரண நலம் பெற்று இருக்கும் என்று நம்புகிறேன்.
    சாமியே சரணம் ஐயப்பா.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..