நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 13
செவ்வாய்க்கிழமை
முத்தழகு
***********
விழித்துக் கொண்ட
சுகந்தி கைக் கடிகாரத்தை நோக்கினாள்..
11:30 என ஒளிர்ந்தது. அருகில் படுத்திருந்த சித்தியைக் காணவில்லை..
' வெளியே சென்றிருக்கிறார்கள் போலிருக்கிறது.. ' - என்று நினைத்துக் கொண்டாள் சுகந்தி..
தலைக்கு மேல் - ' கரக்.. கரக்.. ' - என்ற சத்தத்துடன் மின் விசிறி சுழன்று கொண்டிருந்தது..
இதே மாதிரியான சத்தம் மேலும் சில மின் விசிறிகளில்..
அனைத்தும் ஓடிக் கொண்டிருக்க கோயில் பிரகார மண்டபம் முழுவதும் காற்றோட்டம்..
புகழ் பெற்ற மாரியம்மன் கோயில் .. அதன் பிரகாரம் நெடுகிலும் வேண்டுதலின் பேரில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக - தூங்கிக் கொண்டிருக்கின்றனர்..
அன்று ஞாயிற்றுக் கிழமை..
தீராத பிரச்னை உடையவர்கள் ஞாயிறு இரவு கோயில் வளாகத்தில் உறங்கினால் நல்லது என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை..
கோயில் வளாகத்தில் இரவு தங்குவதால் குறைகள் தீர்கின்றன என்பது பலருக்கும் கண்கூடாகத் தெரிந்தது..
இது கால வட்டத்தில் சுழன்று சுற்றுப் பகுதிகளிலும் பரவியது...
இப்போதெல்லாம் வெளி மாவட்டங்களில் இருந்தும் குடும்பத்தோடு வருகின்றனர்.. கோயில் வளாகத்தில் தங்கி - உடன் கொண்டு வந்திருக்கும் கட்டுச் சோறு வகையறாக்களை சாப்பிடுகின்றார்கள்.. ஆங்காங்கே கூடி அம்பாளின் பெயரைப் பாடி பாராயணம் செய்கின்றனர்.. தூக்கம் வந்ததும் நிம்மதியாக உறங்குகின்றனர்.. விடிந்ததும் எழுந்து அம்பாளைத் தரிசனம் செய்து விட்டு ஊருக்குத் திரும்புகின்றனர்..
இப்படியான சூழலில் நம்பிக்கை வெள்ளத்தில் நீந்திக் களிப்பதற்கு வந்தவர்களுள் ஒருத்தி தான் சுகந்தி.. துணைக்கு சித்தி ..
நிகழ்வின் நினைவுகளில் இருந்து மீண்ட சுகந்தி ஏறிட்டு நோக்கினாள்..
நேர் எதிராக மேலைப் பிரகாரம்..
குழந்தைகள் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்க வயதான சிலர் தூக்கம் வராமல் கடந்த காலத்தை அசை போட்டுக் கொண்டிருந்தனர்..
சுவர் ஓரமாக அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் மீது சுகந்தியின் விழிகள் நிலைத்தன..
பாவாடை தாவணி.. தலை நிறைய மல்லிகை.. காதில் ஜிமிக்கி.. குனிந்த தலை நிமிர வில்லை.. ஏதோ புத்தகத்தை வாசிப்பது போல் இருக்கின்றது..
" பாவம்.. அவளுக்கு என்ன பிரச்னையோ!.. " - சுகந்தி நினைத்துக் கொண்டாள்..
இரவு எட்டரை மணியளவில் பெரிய மணியுடன் மேள தாளங்கள் சேர்ந்து ஒலிக்க - கொடிமரத்தின் அருகில் நின்று மூலஸ்தானத்தில் அர்த்த ஜாம தரிசனம் செய்தது நினைவில் வந்தது சுகந்திக்கு..
தங்க நிறப் பட்டுச் சேலையில் கோலாகலமாக விளங்கிய அம்பிகையிடம் -
தனது குறையைச் சொல்லி கையேந்தி நின்றாள்..
" மாசத்துல நாலு நாள் வயித்து வலி வந்தா நான் என்ன செய்வேன்?.. சரியாக்கி வைக்க வேணாமா.. அம்மா!.. "
கண்களில் நீர் வந்தது..
சில விநாடிகளில் மகா தீப ஆராதனை..
அருமையான தரிசனம்..
தரிசனம் முடிந்ததும் பிரசாத விநியோகம்.. நெய் வடிய வடிய வெண்பொங்கல்.. ஒன்றுக்கு இரண்டாக தொன்னைகளில் வாங்கிக் கொண்டாள்..
" எதுக்கும் கவலைப்படாதே.. எல்லாம் சரியாகிடும்... " - என்றபடி முன் நடந்த சித்தியைப் பின் தொடர்ந்தாள் சுகந்தி..
பேச்சியம்மன் சந்நதி அடைக்கப்பட்டிருந்தாலும் சாம்பிராணி வாசம் கமழ்ந்து கொண்டிருந்தது..
நிலைப்படியைத் தொட்டு வணங்கிய சித்தி அங்கு கிண்ணத்தில் இருந்த திருநீற்றைக் கையில் எடுத்துக் கொண்டாள்..
தெற்குப் பிரகார மண்டபத்தில் நடந்து முன்னதாக விரித்து வைத்திருந்த போர்வைவை நெருங்கியதும் சுற்றிலும் விழித்து நோக்கிய சித்தி சொன்னாள்..
" சுகந்தி.. இந்த சீலைய மேலப் போர்த்திக்கிட்டு படும்மா!.. "
" சரிங்க சித்தி!.. "
மீண்டும் ஒருமுறை சுற்று முற்றும் பார்த்துக் கொண்ட சித்தி - சுகந்தியின் ஆடையைத் தளர்த்தி கையில் இருந்த திருநீற்றை அவளது வயிறு முழுதும் தடவி விட்டாள்..
" அம்பாள நெனச்சுக்கிட்டு அப்படியே கண்ண மூடித் தூங்கு!.. "
அருகிலேயே சித்தியும் தலை சாய்த்தாள்..
அப்போது உறங்கிய சுகந்தி இப்போது தான் கண் விழித்திருக்கின்றாள்..
ஆங்காங்கே குறட்டைச் சத்தங்கள்.. கூடவே சில் வண்டுகளின் ரீங்காரம்... கோயிலுக்கு வெளியே நாய்களின் சத்தம்.. அவ்வப்போது நெடுஞ் சாலையில் விரையும் வாகனங்களின் இரைச்சல்..
" சித்தி வர்ற வரைக்கும் தனியா இருந்து என்ன செய்றது!.. அந்தப் பொண்ணு கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருப்போம்!..."
சுகந்தி மெல்ல எழுந்தாள்.. ஆடையை சரி செய்து கொண்டாள்.. நடந்தாள்..
கால் கொலுசுகள் சிலுங்.. சிலுங்.. என்றன..
அந்தப் பெண்ணின் அருகில் சென்றதும் தான் சுகந்திக்குத் தெரிந்தது - அவளது கையில் எந்தப் புத்தகமும் இல்லை என்பது..
" என்னக்கா!.. நல்லா இருக்கீங்களா?.. " - என்று இயல்பாக விசாரித்தபடி அந்தப் பெண்ணின் அருகில் அமர்ந்தாள் சுகந்தி..
" நல்லா இருந்தா இங்கே எதுக்கு வர்றோம்?.. " - புன்னகையுடன் நிமிர்ந்தாள் அந்தப் பெண்..
" அதுவும் சரிதான்!.. "
- புன்னகைத்த சுகந்தி பேச்சைத் தொடர்ந்தாள்....
" நானும் சித்தியும் வந்தோம்.. மாசம் ஒழுங்கா ஆகறதில்லை.. வயத்து வலி வேற.. ஏழை பாழைங்களால ஓயாம டவுனுக்குப் போக முடியுமா?.. அம்மா நீதான் கதி... ன்னு அவ வாசல்..ல வந்து கிடக்குறோம்... "
நெடுமூச்செறிந்தாள் சுகந்தி..
இதைக் கேட்டதும் ஏறிட்டு நோக்கிய அந்தப் பெண் -
" அதுக்குத்தான் வயத்துல விபூதியப் பூசி விட்டாங்களா!... " - என்றாள்..
திடுக்கென்று இருந்தது சுகந்திக்கு...
' அப்போ தான் யாரும் பக்கத்துல இல்லையே!.. ' - என்று நினைத்துக் கொண்டபோது,
" நாந்தான் பார்த்துக்கிட்டு இருந்தேனே!.. "
- என்ற அந்தப் பெண்ணின் பதில் அவளை வியப்புக்கு உள்ளாக்கியது..
தன்னைப் பற்றி ஏதும் சொல்வாள் என்று எதிர்பார்த்த சுகந்தி பளிச்சென்று கேட்டு விட்டாள்..
" உங்களுக்கு என்னா பிரச்சன?.. கூட யாரும் வரலையா?.. "
கலகல என்று சிரித்த அவள் -
" பிரச்னை இவங்களுக்குத் தான்.. எனக்கு ஒன்னும் இல்லை.. துணைக்கு வா..
முத்தழகு!.. ன்னு கூப்பிட்டாங்க.. வந்திருக்கேன்.. " - என்றபடி அருகில் படுத்திருந்தவர்களைக் காட்டினாள்..
அவளது பெயர் முத்தழகு என்று தெரிந்ததும் - 'அப்பாடா.. ' என்றிருந்தது சுகந்திக்கு..
" இன்னும் எத்தனை வாரம் வந்து நேர்ச்சை பண்ணனுமோ!.. "
" ஏன்... அம்மா மடியில படுத்து உறங்கறது சந்தோஷம் இல்லையா?.. "
" நான் அந்த அர்த்தத்துல சொல்லலை.. இந்த வயித்து வலி வராம இருக்க அம்மா கண்ணத் தொறந்து பார்க்கணும்!.. "
" அதெல்லாம் பார்ப்பாள்... அவ பார்க்கம வேற யாரு பார்க்குறது.. அதுக்குத் தானே அவளுக்கு ஆயிரம் கண்ணு.. வலி எல்லாம் தீர்ந்துடும்.. பேச்சியம்மா திருநீறு தான் தீராத பிணி எல்லாம் தீர்க்குமே!.. நம்ம மாதிரி பெண் பிள்ளைகளுக்கு அவ தானே காவல்.. இருந்தாலும் நான் ஒன்னு சொல்லவா!.. "
" சொல்லுங்களேன்!.. "
" முல்லையோ மல்லிகையோ... அரும்புகளா ஒரு கையெடுத்து ஈரத் துணியில முடிஞ்சு பேச்சியம்மா மடியில வச்சு வேண்டிக்கிட்டா அரும்பு மலர்ற மாதிரி வயிறு மலர்ந்திடும்.. மாசாந்திரம் ஒழுங்காயிடும்... மண் பானத் தண்ணியில வேப்பிலைய போட்டு வச்சிருந்து அந்தத் தண்ணியக் குடிச்சா.. எந்த பிணியுமே வராது!.. "
- என்று சொல்லி விட்டு தீர்க்கமாகப் பார்த்தாள்...
" மகமாயி!.. " - என்றபடி கன்னத்தில் போட்டுக் கொண்ட சுகந்திக்கு வியப்பு..
" உங்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்!.. "
" அப்பன் ஆத்தாள் மகன்..ன்னு எங்க குடும்பத்துக்கே வைத்தியம் தெரியும்!.. " - மீண்டும் புன்னகைத்தாள் முத்து..
" என்னமோ எல்லாரையும் நோய் நொடியில்லாம காப்பாத்துனா.. சரி.. "
" அதோ உங்க சித்தி வந்துட்டாங்க.. போய்ப் படுங்க... நடு ராத்திரி..ல அம்பாள் அரூபமா சுத்தி வருவாள்.. ன்னு ஐதீகம்!.. " - என்றாள் முத்து...
" சரிங்க முத்து!.. " - என்றபடி அவளது கன்னத்தை வருடி முத்தமிட்ட சுகந்தி எழுந்து நடந்தாள்..
*****
கோயில் பறவைகளின் இன்னிசையோடு பொழுது விடிந்து கொண்டிருந்தது..
முன்னதாக விழித்துக் கொண்டவர்கள் பிரகாரத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்..
மேலைப் பிரகாரத்தை நோக்கினாள் சுகந்தி... அங்கே யாரும் இல்லை...
" போய்ட்டு வர்றேன்... ன்னு முத்துக்கிட்ட சொல்லிக்கலையே!.. "
சுகந்திக்கு உள்ளூர வருத்தம்...
ஆனாலும் முன் நடந்த சித்தியைத் தொடர்ந்தாள்..
கொடி மரத்தருகில் நின்று கை கூப்பினாள்..
மூலஸ்தானத்தில் -
ஆரஞ்சு வண்ண பட்டுச் சேலையில் ஜொலித்துக் கொண்டிருந்தாள் அம்பாள்..
கோயிலுக்கு வெளியே வந்தாயிற்று.. அப்போது தான் சுகந்திக்குத் தெரிந்தது - எப்போதும் ' சுருக் சுருக் .. ' என்றிருக்கும் வயிறு இப்போது மல்லிகைப் பூக்களால் வருடப்பட்டதைப் போல் இருப்பதை..
சித்தியிடம் இதைச் சொல்ல நினைத்தபோது நேற்று ராத்திரி தன்னுடன் பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண் முத்தழகு வேறு சில பெண்களுடன் கோயிலில் இருந்து வருவதைக் கண்டாள்..
சாலையின் இந்தப் பக்கம் பேருந்துக்காக நின்றிருந்த சுகந்தி சட்டென குறுக்காக ஓடி - அருகில் சென்று,
" முத்தழகு!.. " - என்றாள்..
அருகில் இருந்தவர்கள் -
" யாரம்மா நீ?.. " - என்றார்கள்..
" நேத்து ராத்திரி முத்தழகும் நானும் கோயில் மண்டபத்துல பேசிக்கிட்டு இருந்தோம்!.. "
" என்னாது!.. பேசிக்கிட்டு இருந்தீங்களா?.. "
" ஆமாம்!.. "
" இவ!.. உங்கூட வாய் தெறந்து பேசிக்கிட்டு இருந்தாளா?.. "
" ஆமாங்க... ஆமாம்!... "
" நல்ல பொண்ணும்மா நீ!.. "
" ஏங்க?.. "
" கண்ணாலயும் கையாலயும் ஜாடை தான் காட்டுவா.. இவ பேசா மடந்தையம்மா..
பேசா மடந்தை!.. "
" என்னது பேசா மடந்தையா!.. அப்போ ராத்திரி எங்கூட பேசிக்கிட்டு இருந்தது யாரு!?.. "
திடுக்கிட்ட சுகந்தி அப்போது தான் கவனித்தாள்..
முத்தழகு ஆரஞ்சு வண்ண தாவணி உடுத்தியிருப்பதை!..
ஃ
ஓம் சக்தி ஓம்
**
நெகிழ வைத்த கதை. சில தெய்வீக சம்பவங்கள் அபூர்வமாகத்தான் நடைபெறும். எங்கள் தளத்துக்கு நீங்கள் அனுப்பி நாங்கள் வெளியிட்ட கதை.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
அகில் ஆளும் நாயகியின் லீலைகளை யார் அறிவார் ? அவளருளே.
பதிலளிநீக்குநல்ல எழுத்து ஓட்டமான மனதை நேகிழவைக்கும் கதை.பாராட்டுகள்.
தங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி