நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 22, 2025

மகிழ்ச்சி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி முதல்நாள் 
வியாழக்கிழமை
 

உற்சாகமான நேரங்களில் நமது மனம் மகிழ்ச்சியாக 
இருக்கின்றதெனில் அதற்கு  நான்கு ஹார்மோன்கள் தான்
முக்கிய காரணம் என கண்டறிந்துள்ளனர்..

அவைகளாவன;
1. Endorphins
 எண்டோர்பின்
விளையாட்டுக்களில் ஈடுபட்ட பிறகு நமது  உடலில் சுரக்கின்றது..

2. Dopamine 
டோபமைன் 
 நமது செயல்களுக்காக பிறர் நம்மைப் பாராட்டுகின்ற போது சுரக்கின்றது..

3. Serotonin 
செரோடோனின்
 நாம் பிறரது 
மகிழ்ச்சியை
நாடும் போது 
சுரக்கின்றது..

4. Oxytocin
ஆக்ஸிடாஸின்
நாம் நமது அன்புக்குரிய நண்பர்களை சந்திக்கும் நிகழ்வுகளில் சுரக்கின்றது..
நன்றி விக்கி

எண்டோர்பின்
உடற்பயிற்சி அல்லது 
விளையாட்டுக்களில் ஈடுபட்ட பிறகு நமது  முயற்சிக்கு ஈடாக  உடலில்  சுரக்கின்றது. 

இதனால் தான் உடற்பயிற்சி செய்த பிறகு  ஒரு வகை மகிழ்ச்சியை உற்சாகத்தை உணர்கின்றோம்.. 

விளையாட்டுகளில் ஈடுபடுவதே  எண்டோர்பின் சுரப்பதற்கு  சிறந்த வழி..

முதியோர்களுக்கு ஆரோக்கியம் ஆயுள் என்பது பேரக்குழந்தைகளுடன்  விளையாடி
மகிழ்ச்சியாக இருப்பதே..

டோபமைன்
 நமது வாழ்க்கைப்  பயணத்தில், நம்மில் ஒவ்வொருவரும் 
பெரியதாகவோ , சிறியதாகவோ  ஏதாவது ஒன்றை இயன்றவரை
சாதிக்கின்றோம். 

இத்தகைய செயல்களை நாம் நினைவு கூர்ந்து மகிழும் போது நமது உடலில் டோபமைன் என்ற ஹார்மோன் சுரக்கின்றது. நாம் செய்த முயற்சிகளுக்கும்    
பணிகளுக்கும் பாராட்டுகள் கிடைக்கும் போது இந்த ஹார்மோன் சுரந்து நமக்குள் மகிழ்ச்சியை உண்டாக்குகின்றது. 

இதனால்தான்  மனைவியைப் பாராட்டுக என்பது..

பல குடும்பங்கள் கலவர பூமியாக இருப்பதற்குக் காரணம் நல்லதாக ஒரு வார்த்தையும் கிடைக்காததே..

நாள்தோறும் நாம் செய்யும் பணிகளுக்கான பாராட்டுகள் கிடைத்து விட்டால் இந்த ஹார்மோன் நமக்கு ஒரு வரப்பிரசாதம்..

செரோடோனின்
 நாம் பிறர் நலத்தை
நாடும் போதும், அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யும் போதும் இந்த ஹார்மோன் சுரக்கின்றது. இதனால்தான் நாம்  உலகிற்கும், சமூகத்திற்கும் பயனுள்ளவற்றை செய்து கொண்டிருக்க வேண்டும் என பெரியோர்கள் சொல்லி வைத்தனர்.. 

செரோடோனின்..
இதனால்தான் நாம் பிறருக்கு ஏதாவது ஒன்றைக் கொடுக்கும் போதும் உதவிக் கரம் நீட்டும் போதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்..


ஆக்ஸிடாஸின்
நாம் நமது அன்புக்குரிய நண்பர்களை சந்தித்து தோள் தொட்டு கை குலுக்கி,  அவர்களை ​​அரவணைத்துக் கொள்ளும்போதும் காதல் கலவி குழந்தை பிறப்பு இவைகளில் தனித்ததொரு உணர்வை அடைவதற்கு இதுவே காரணம்..

இந்த ஹார்மோன்
நமது உடலில் மிகு  மகிழ்ச்சியைத் தருகின்றது.. 

இதனால்தான்  வீட்டில் நம் மனைவியை, மற்றும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து அளவளாவுதல் அவசியம் என்றனர்.. 

இந்த சுரப்புகள் எல்லாம் உள்ளார்ந்த உணர்வுகளினால் மட்டுமே வசப்படுபவை.. 

ஒருவர் மற்றவரைப் பாராட்டி இன்சொல் சொல்லும் போது எதற்கும் நான் மசிய மாட்டேன் என்றிருந்தால் ஒன்றும் செய்வதற்கு இல்லை..


இவற்றிற்கெல்லாம் எடுத்துக் காட்டாக  பற்பல குறட்பாக்கள் உள்ளன..

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்..

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்..

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். 

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று..

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்..

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு..

மேற்கண்ட  குறட்பாக்களைச் சிந்தித்தால் நல்லதொரு குடும்பம் என்பது என்ன
பொது வாழ்க்கை
என்றால் என்ன என்பது விளங்கும்...

அத்துடன் மேலைநாட்டினரை விட நமது நாகரிகம் எத்தனை மேன்மையானது என்பதும் விளங்கும்...

நாமும் மகிழ்ந்து பிறரையும் 
மகிழ்வித்திருப்போம்..

இதன் பொருட்டுத்தான்
நான் எழுதிக்கொண்டு. இருப்பதும்..

நலங்கொண்டு வாழ்க
வளங்கொண்டு வாழ்க..

ஓம் சிவாய நம ஓம்
**

10 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான விவரங்கள். உங்களுக்கு டோபமைன் சுரக்கும் இப்போது. எனக்கு செரடோனின் சுரக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் நல்லதொரு வரங்கள்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. அழகான குறள்களை உதாரணம் காட்டி இருக்கிறீர்கள். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. மகிழ்ச்சியான தருணங்களில் நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்களை பற்றி விரிவாக சொன்னதை படித்து அறிந்து கொண்டேன். நல்லதொரு பயனுள்ள விஷயங்களை தொகுத்தும், அதற்கேற்ற குறட்பாக்களை உதாரணமாக தந்திருப்பதற்கும் மிக்க நன்றி. அனுபவசாலியான உங்கள் பதிவை படிக்கையில் உண்மையிலேயே மனதுக்குள் உற்சாகம் வருகிறது.

    இன்றைய படங்களில் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் ராதா கிருஷ்ணனையும், தோழமையில் இன்பம் காணும் கிருஷ்ணரையும், தன் அம்மாவை தன்னுடைய குறும்பால் சந்தோஷபடுத்தும் குட்டி கிருஷ்ணனையும் கண்டு என் மனமும் மகிழ்வுற்றது. நல்லதொரு பகிர்வுக்கு மகிழ்வுடனான நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. பயனுள்ள விஷயங்களை தொகுப்பதும், அதற்கேற்ற குறட்பாக்களை உதாரணமாகத் தருவதும் அறம்..

    அறம் செய்வோம்..

    தங்கள் அன்பின் வருகையும்
    கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றியம்மா

    பதிலளிநீக்கு
  5. நல்ல உதாரணங்கள்.....நல்ல தகவல்கள். ஆமாம், இந்த நான்கு ஹார்மோன் கள் மிக முக்கியம். அதுவும் நான்குமே சரியான அளவில் இருக்க வேண்டும்.

    இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒன்று மெலடோனின் இது நல்ல தூக்கத்திற்கு மிக முக்கியம். இது நாம் தானாகத் தூங்கவும் விழிக்கவும் நம்மை வழிநடத்தும் ஹார்மோன். இதுதான் சர்கேடியன் ரிதமை சரியாகக் கையாள்வது.

    நம் மன அழுத்தம், வளர்சிதை மாற்றத்துக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும், சர்க்கரை அளவு இரத்த அழுத்தம் இவை எல்லாம் சரியாக இருக்க கார்ட்டிஸால் சரியாக இருக்க வேண்டும்...

    இவை சரியாக இருந்தால் அந்த நான்கும் அந்த நான்கும் நன்றாக இருக்க இவை என்று எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மேலதிக விவரங்களும் மகிழ்ச்சி..

      நன்றி சகோ

      நீக்கு
  6. மகிழ்ச்சியான வாழ்க்கை பற்றி நல்ல பகிர்வு.

    "நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்போம்" நல்ல அறிவுரை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மேலதிக விவரங்களும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..