நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 3
சனிக்கிழமை
இன்று
தேவாரத்தில் காணப்படும் இராமாயணக் காட்சிகள்..
ஞானசம்பந்தப் பெருமான் அருளியவை..
இரண்டாம் திருமுறை
திருப்பதிக எண் 43
ஆகாயத் தேர் இராவணனிடம் இருந்தது..
அந்தத் தேர் - குபேரன் வடக்குத் திசைக்கு அதிபதியாகிய போது ஈசன் எம்பெருமானால் வழங்கப்பட்டதாகும்..
அதை குபேரனிடம் இருந்து கைப்பற்றிக் கொண்ட இராவணன் அங்குமிங்குமாகப் பறந்து திரிந்த வேளையில் ஓரிடத்தில் ஆட்டம் தடைப்பட்டது..
" என்ன? .."
பாகன் பணிவுடன் சொன்னான்...
" திருக்கயிலாய மாமலை.. "
" அதனால்?.. "
" இறங்கி வலம் செய்து தான் சென்றாக வேண்டும்.. "
" ம்... "
தேர் கீழிறங்கியது..
இராவணன் நினைத்துக் கொண்டான்...
இதை இன்றே பெயர்த்து வேறிடத்தில் வைத்து விட வேண்டும்...
மாமலையைப் பெயர்க்க முயன்றான் இராவணன்...
நந்தீசன் தடுத்தார்.. அவரைக் குரங்கு முகன் என்று நிந்தித்தான் இராவணன்..
குரங்கினால் உனது நாடு நகரம் அழியட்டும்..
நந்தீசன் சாபம் இட்டார்...
தொடர்ந்து - மாமலையைப் பெயர்க்க முயன்ற இராவணன் அடைந்த கதி அனைவருக்கும் தெரியும்..
மாமலைக்குக் கீழ் சிக்கிக் கொண்டபோது இராவணன் பாடிய சாம கானத்தினால மகிழ்ந்த இறைவன் இராவணனைப் பிழைப்பித்து
முக்கோடி வாழ்நாளையும் சந்திரஹாசம் எனும் வாளையும் வழங்கி -
இந்த வாள் உன்னிடம் இருக்கின்ற வரை உன்னை எவராலும் வெல்ல முடியாது.. ஆனால் சந்திரஹாச வாள் ஒரு முறை மட்டுமே உனக்குப் பயன்படும்..
- என்று அருளினார்..
முக்கோடி வாழ்நாளை வரமாகப் பெற்றவனுக்கு வாள் எதற்கு என்ற இறுமாப்புடன் -
தப்பிப் பிழைத்த இராவணன் சூர்ப்பனகையால் தூண்டப் பெற்றான்..
தங்கையின் பேச்சைக் கேட்டு தண்டக வனத்தில் இருந்து சீதா தேவியை சிறை எடுத்தான்..
வான வழியில் சீதையின் அபயக் குரலைக் கேட்டு வானில் இடை மறித்து இராவணனைத் தாக்கினான் புள்ளரையன் ஆகிய
ஜடாயு..
ஜடாயு வெண் மணலால்
வைத்திய லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதனை
நாளும் வழிபட்டுக் கொண்டு இருக்கின்றவன். அருணனின் மகன்.. சம்பாதியின் தம்பி..
இராவணனால் ஜடாயுவின் தாக்குதலை எதிர் கொள்ள முடியவில்லை..
வேறு வழியின்றி
சந்திரஹாச வாளால் ஜடாயுவைத் தாக்கினான்... ஜடாயுவின் சிறகு வீழ்ந்தது.. ஜடாயுவும் மண்ணில் வீழ்ந்தான்...
அத்துடன்
சந்திரஹாச வாளும் இராவண வதத்திற்கு வழி வகுத்து விட்டு திருக்கயிலை சென்றடைந்தது..
சீதையைத் தேடி வந்த ராம லக்ஷ்மணர்
குற்றுயிராகக் கிடந்த ஜடாயுவிடம் இருந்து - நடந்தவற்றை
அறிந்து கொண்டனர்..
பின் நடந்தவை அனைத்தும் அனைவருக்கும் தெரியும்..
..
அப்படிப்பட்ட
ஜடாயுவின் வீரத்தைத் தான் திருஞானசம்பந்தர் பாடியருள்கின்றார்...
திருத்தலம்
புள்ளிருக்கு வேளூர்
ஸ்ரீ வைத்தியநாதர்
ஸ்ரீ தையல்நாயகி
வேப்ப மரம்
சித்தாமிர்த தீர்த்தம்
வாசநலஞ் செய்திமையோர்
நாடோறும் மலர்தூவ
ஈசனெம் பெருமானார்
இனிதாக உறையுமிடம்
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங்
கொருநாளும் ஒழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான்
புள்ளிருக்கு வேளூரே.. 3
மாகாயம் பெரியதொரு
மானுரிதோ லுடையாடை
ஏகாய மிட்டுகந்த
எரியாடி உறையுமிடம்
ஆகாயந் தேரோடும்
இராவணனை அமரின்கண்
போகாமே பொருதழித்தான்
புள்ளிருக்கு வேளூரே.. 4
திறங்கொண்ட அடியார்மேல்
தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம்
உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன் தன்
வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான்
புள்ளிருக்கு வேளூரே.. 6
பண்ணொன்ற இசைபாடும்
அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும்
மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி
வாணாள துடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான்
புள்ளிருக்கு வேளூரே.. 8
கடுத்துவருங் கங்கைதனைக்
கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவரெம் பெருமானார்
தாமினிதாய் உறையுமிடம்
விடைத்துவரும் இலங்கைக்கோன்
மலங்கச்சென்று இராமர்காய்ப்
புடைத்தவனைப் பொருதழித்தான்
புள்ளிருக்கு வேளூரே.. 10
**
ஸ்ரீராம ராம
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
சீதையைத் தேடிச் சென்றனை போற்றி
பதிலளிநீக்குசடாயுதேற்றச்சினம் தணிந்தனை போற்றி
அவற்கு நீர்க்கடன் அளித்தனை போற்றி
ஸ்ரீராம ராம
நீக்குதங்கள் அன்பின் வருகையும்
கருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
ஜடாயுவின் வீரம் இராமாயணத்தில் படித்திருக்கிறோம்.
பதிலளிநீக்குஇன்று திருஞான சம்பந்தர் பாடலில் கண்டோம். நன்றி.
தங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
திருஞான சம்பந்தர் பாடலை பாடி இறைவனை வேண்டி கொண்டேன். வைத்திய நாதரும், தையல் நாயகியும் அனைவருக்கும் உடல் நலம் தரட்டும்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றியம்மா