நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 08, 2017

ஸ்ரீநாராயண தீர்த்தர்..

இனிய இல்லறம்..

இருந்தாலும் -
வேத புராணங்களைக் கற்றறிந்த நெஞ்சில் சிறு வயது முதலே தணியாத ஆன்மீக தாகம்..

வாழ்க்கையின் சீரான  பாதையில் குறுக்கிட்டது கோதாவரி..

கோதாவரி நதியின் அக்கரையில் இருக்கிறாள் அன்பு மனைவி..
அவளைக் காணவேண்டும்.. ஆவல் பொங்கியது..

ஆசையுடன் புறப்பட்டார் - அகமுடையாளைக் காண்பதற்கு!..

கோதாவரி நதியைக் கடக்கும் போது எதிர்பாராதபடிக்கு பெருவெள்ளம்..

வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டார்.. ஆற்று நீர் இழுக்கின்றது..

உள்மனம் சொல்லிற்று - இன்னும் கொஞ்ச காலம் வாழவேண்டும்!..

உயிர் பிழைக்க வேண்டும்.. என்ன செய்யலாம்!..

ஆபத்சந்நியாசம் ஏற்றுக்கொள்க!..

அதுவே சரி!.. ஆற்று நீரில் ஆபத்சந்நியாசம் ஆகியது..

அந்த அளவில் வெள்ளம் வடிய உயிர் பிழைத்தது - அந்த ஜீவன்..


புது வாழ்வு பெற்ற ஜீவனுக்கு இடப்பட்ட கட்டளை  -

காவிரியின் கரைக்குச் செல்!..

அதற்கு முன்பாகவே அந்த மனத்தினுள் ஆசை ஒன்று குடிகொண்டிருந்தது..

காவேரிக் கரையின் கோவிந்த புரத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகளைத் தரிசனம் செய்ய வேண்டும்!..

அதற்குத் தான் இந்த அருளாணையோ!..

காவிரியின் கரைக்குச் செல்!.. -

என்ற கட்டளையைச் சிரமேற்கொண்டு ஆந்திரத்தின் கோதாவரிக் கரையில் இருந்து செந்தமிழ் நாட்டின் காவிரிக் கரைக்கு விரைந்தது - அந்த ஆத்மா!..

ஆனாலும் சோகம் தான் மிஞ்சியது..

அந்த ஆத்மா கோவிந்தபுரத்தை அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே -

ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள் ஜீவ சமாதி எய்தியிருந்தார்..

ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகளைத் தரிசிக்கும் பேறு கிட்டவில்லை..

மனம் பொறுக்காது அங்கேயே சுற்றித் திரிந்திருந்தத அந்த ஜீவன் -

ஸ்ரீ நாராயண தீர்த்தர்.

காவிரியின் கரையிலேயே மனம் போன போக்கில் சென்று கொண்டிருந்தார்..

நடுக்காவேரி என்னும் கிராமத்தில் இருந்தபோது தாங்கொணாத வயிற்று வலி ஏற்பட்டது..

செய்வதறியாது திகைத்த தீர்த்தர் அவ்வூரில் இருந்த பிள்ளையார் கோயிலில் படுத்துக் கொண்டார்..

ஊர் உறங்கிற்று.. தீர்த்தரும் உறங்க முற்பட்டார்.. ஆனால் வயிற்று வலி விடவில்லை..

வேதனையான உறக்கத்தினூடாக கனவு ஒன்று..

விடியற்காலையில் எந்த விலங்கைக் காண்கின்றனையோ -
அந்த விலங்கினைப் பின் தொடர்ந்து செல்!..

திடுக்கிட்டு விழித்த தீர்த்தர் விடியும் வரை காத்திருந்தார்..

பொழுது புலரும் முன் அவருக்கு முன்பாக ஓடிய விலங்கு - பன்றி!..

இதனைத் தொடர்ந்து செல்வதா?.. என்ன சோதனை!..

இருந்தாலும் , விரைந்து ஓடிய பன்றியினைத் தொடர்ந்தார்..

வயிற்று வலியும் அவரைத் தொடர்ந்தது..

வரப்புகள் வாய்க்கால்கள் வயல்வெளிகள் - இவற்றின் நடுவே சென்ற மண்சாலையில் பயணம் தொடர -

பூபதிராஜபுரம் என்னும் சிற்றூரின்  வெங்கடேசப் பெருமாள்  திருக் கோயிலுக்குள் சென்று மறைந்தது - அந்தப் பன்றி..

அந்த நொடியில் மறைந்தது தீர்த்த ஸ்வாமிகளின் வயிற்றுவலி...

அவ்வூரிலேயே ஸ்வாமிகள் தங்கினார்..

ஸ்ரீ பாலகிருஷ்ணனின் லீலைகளை நினைந்து -
நாளும் நாளும் அமுதம் என - கான மழை பொழிந்தார்..

ஸ்வாமிகள் இளமையிலேயே இசையறிவினைப் பெற்றிருந்ததால்
நாட்டிய பதங்களுடன் கானங்கள் வெளிப்பட்டன..

திருக்கோயிலின் மண்டபத்தில் அமர்ந்து ஸ்வாமிகள் கானம் இசைக்கும் போது கருவறையில் பெருமாள் ஆனந்தக் களிப்புடன் நடமிடுவார்..

கூடவே இருக்கும் ஆஞ்சநேயர் தாளம் இசைப்பார்...

இதையறிந்த மக்கள் - இந்தக் காட்சியினைத் தாங்களும் கண்ணாரக் காண வேண்டும் என விழைந்தனர்..

தீர்த்தர் ஸ்வாமிகளின் வேண்டுகோளுக்கு என -
ஊர் மக்கள் காண பெருமாள் தனது திருப்பாதங்களில் சலங்கை கட்டி  ஆடும் திருக்கோலத்தைக் காட்டியருளினார்..

ஸ்வாமிகள் வேங்கடவனின் தரிசனம் பெற்ற  பூபதிராஜபுரம் இன்றைக்கு வரகூர் என்று வழங்கப்படுகின்றது..

ஸ்ரீ நாராயண தீர்த்தர் அருளிய கீர்த்தனைகள் -
ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி - என்று போற்றப்படுகின்றன..

ஆந்திர மாநிலத்தில் குண்டூருக்கு அருகிலுள்ள காஜா எனும் கிராமத்தில் 1650ல் தோன்றியவர் - ஸ்ரீ நாராயண தீர்த்தர்..

கோதாவரி சம்பவத்திற்குப் பிறகு ஸ்ரீசிவராம ஆனந்த தீர்த்தர் என்பவரிடம் தீட்சை பெற்றார்..

திருப்பதியில் இருந்தபோது கடுமையான பசி வேளையில் தான் பெற்ற உணவை - அருகிருந்த குழந்தைக்கு பகிர்ந்தளிக்காமல் உண்டதால் வயிற்று வலி ஏற்படும்படியான வினை உண்டாயிற்று..

பின்னாளில் அது காவிரிக் கரையில் நடந்த லீலையால் தீர்ந்தது..

ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி இயற்றி ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்திருந்த ஸ்வாமிகள் தனது இறுதி நாளினை உணர்ந்தார்,,

அப்போது அவருக்கு இறைவன் ஆணையிட்டான் -

திருப்பூந்துருத்திக்குச் செல்க!..

அதன்படி அருகிருக்கும் திருப்பூந்துருத்திக்கு வந்தார்..

அங்கே குடமுருட்டியின் கரையின் விரிந்து பரந்திருந்த மா மரத்தின் அருகில்
ரிஷபாரூடராக சிவ தரிசனம் கண்டு மகிழ்ந்தார்.. உள்ளம் நெகிழ்ந்தார்..

சிவபெருமானின் மீது கீர்த்தனம் பாடினார்..

இறையருள் கூடி நின்றது..

மாசி மாதம்.. கார்த்திகை நட்சத்திரம்.. சுக்ல பட்சத்தின் அஷ்டமி நாள் (1745)..

விரிந்து பரந்திருந்த மாமரத்தின் குளிர் நிழலில் ஜீவ சமாதி எய்தினார்..

கோதாவரிக் கரையில் தோன்றிய ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகளின் பெருவாழ்வு - காவிரிக் கரையில் பூரணத்துவம் எய்தியது..

ஸ்வாமிகளின் வரலாற்றுச் சான்றுகள்  ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணியின் பிரதிகள்  - தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருப்பதாகச் சொல்கின்றார்கள்..

காவிரியின் கிளை நதியாகிய குடமுருட்டியின் தென்கரையில்
திருப்பூந்துருத்தியில் பசுமையான சூழல்..

மரங்கள் சல சலக்கும் ஒலி.. பறவைகளின் நாதம்..

ஸ்வாமிகளின் அதிஷ்டானத்திற்கு நேற்று என் மகனுடன் சென்றிருந்தேன்..

அங்கே எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்..


வடக்கு நோக்கிய திருக்கோயிலாக உள்ளது அதிஷ்டானம்..

முன்மண்டபத்தில் ஸ்ரீ விநாயகர்..



ஸ்வாமிகளின் அதிஷ்டானம் கருவறையாக நாலடி பள்ளத்தினுள் உள்ளது..

ஸ்வாமிகள் ஸ்ரீ கிருஷ்ண கானம் பாடித் திளைத்தாலும்
முக்தி எய்தும்போது சிவதரிசனம் பெற்றவரல்லவா!..

அதனால் -
அதிஷ்டானத்தின் முன்பாக நந்தி வாகனம்..

அதிஷ்டானத்தின் மேல்புறமாக பழைமையான மாளிகை..
முற்றாக சிதைந்திருக்கின்றது..

அருகில் தொன்மையான நாகலிங்க மரமும் மாமரமும் இருக்கின்றன..


நாகலிங்க மரம் பூத்து உலர்ந்து கனிகளுடன் இருக்கின்றது..
கிளைகளில் புதிதாக தளிர்கள் தோன்றியிருக்கின்றன..


அதிஷ்டானத்தின் கிழக்காக உள்ள திருக்குளம் காலக்கொடுமையால் நீரின்றி கிடக்கின்றது..

அதிஷ்டானத்தின் மண்டபச் சுவரில் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி
கீர்த்தனைகள் சலவைக் கற்களில் பதிக்கப்பட்டுள்ளது..


அதிஷ்டானம் தற்போது குன்றக்குடி ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ளது..


பகல் பொழுதுகளில் சந்நிதி பணியாளர் ஒருவர் இருக்கின்றார்..

சந்நிதியைத் திறந்து தரிசனம் செய்விக்கின்றார்..

ஸ்வாமிகளின் குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகின்றது..
அத்துடன் பௌர்ணமி தினத்திலும் வழிபாடுகள் தொடர்கின்றன..



திருப்பூந்துருத்தி தொன்மையான திருத்தலம்..

இங்கு தான் அப்பர் ஸ்வாமிகள் திருமடம் அமைத்து ஆண்டுகள் பலவாக மக்கட் தொண்டு செய்தார்..

அப்பர் ஸ்வாமிகளின் திருமடமும் சிவாலயத்தை அடுத்து அமைந்துள்ளது..

தஞ்சை - கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி வழித்தடத்தில்
12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருப்பூந்துருத்தி..

திருப்பூந்துருத்தியில் இருந்து திருக்காட்டுப் பள்ளி செல்லும் வழியில்
5 கி. மீ., தொலைவில் தான்  ஸ்வாமிகள் இருந்து இன்புற்ற வரகூர் உள்ளது..

ஸ்வாமிகளுக்கு அருளாணை கிட்டிய நடுக்காவேரி கிராமமும் இதே வழியில் தான் உள்ளது..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து  திருப்பூந்துருத்திக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன..

திருப்பூந்துருத்தி வழியாக திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் நகரப் பேருந்துகள் மற்றும் கல்லணைக்குச் செல்லும் புற நகர் பேருந்துகள் -- என பேருந்து வசதிகள் தாராளம்...

திருஐயாறு கண்டியூர் வழியாகவும் திருப்பூந்துருத்திக்கு வரலாம்..

கீழ திருப்பூந்துருத்தி, மேல திருப்பூந்துருத்தி - என இரு பகுதிகளாக உள்ளது..

பிரதான சாலையில் -  மேல திருப்பூந்துருத்தியில் இறங்கி விசாரித்தால்
அதிஷ்டானத்திற்குச் செல்லும் வழியை அறியலாம்..

அதிஷ்டானத்திற்கு அருகில் கடைகள் ஏதும் கிடையாது..
எனவே மலர்கள் மாலைகள் போன்றவற்றை தஞ்சையிலிருந்து வாங்கிச் செல்வது நல்லது..


மன அமைதியை நாடுகின்றவர்கள் ஸ்வாமிகளின் தரிசனம் காணுங்கள்...

நான் பெற்ற தரிசனம் விவரிக்க இயலாதது..

ஓம் 
குருவே சரணம்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்...
*** 

20 கருத்துகள்:

  1. ஸ்ரீ நாராயண தீர்த்தர் பற்றிய விளக்கம், திருப்பூந்துருத்தி பற்றிய சிறப்புகள் என அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. இந்திய திருநாட்டில் பல்வேறு மகான்கள் அவ்வப்பொழுது அவதரித்து கொண்டே உள்ளார்கள். அவ்வகையில் சைவ-வைணவ ஒற்றுமையின் உருவாக அவதரித்த மிகப்பெரிய மகான் திரு நாராயண தீர்த்தர் சுவாமிகள் தரிசனம் மிக மிக அற்புதமான நிகழ்வு! மகானின் அருட்கடாக்ஷம் அனைத்து உயிர்களும் பெற வேண்டும்!

      நீக்கு
  2. ஸ்ரீ நாராயண தீர்த்தர் பற்றிய விடயம் அறிந்தேன் ஜி
    நன்று நலம் வாழ்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஸ்ரீ நாராயணதீர்த்தர் வரலாறு அறிந்தேன். படங்களும் அழகு. ஆதிசங்கரரும் சன்யாசம் வாங்கக்கூடாது என்று சொன்ன தாயை நீரில் நின்றுதான் ஆபத்சந்நியாசம் வாங்கினார் என்று நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      ஸ்ரீசங்கரரை ஆற்று நீரில் முதலை பிடித்துக் கொண்டவேளையில் அவர் சந்நியாசம் பெற்றார் - கூடுதல் தகவல் சிறப்பு..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தஞ்சைக்கு மேலத் திருப்பூந்துருத்தி வழியே பஸ் பிரயாணம் அடிக்கடி சென்று இருக்கிறேன். அந்த ஊர் சிவத்தலம் பற்றி அறிந்ததுண்டு. ஊருக்குள் இறங்கியதில்லை. ஸ்ரீ நாராயண தீர்த்தர் (பிறப்பில் வைணவர் என்று நினைக்கிறேன் ) பற்றி உங்கள் பதிவின் வழியே அறிந்தேன். விரிவான தகவல்களோடு, புகைப் படங்களும் சிறப்பாக உள்ளன.வாய்ப்பு கிடைக்கும்போது அவ்வூர் செல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      வாய்ப்பு கிடைக்கும் போது திருப்பூந்துருத்திக்கு சென்று வாருங்கள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஸ்ரீ நாராயணதீர்த்தர் வரலாறு மற்றும் செய்திகள் அருமை.
    படங்கள் அழகு.மனஅமைதி கிடைக்கும் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
    ஜீவ சமாதிகளில் அமைதியும் ஆனந்தமும் கிடைப்பது உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இன்றைய காலகட்டத்தில் மன அமைதியே வரப்பிரசாதம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. விரிவான தகவல்கள். திருக்காட்டுப்பள்ளி சென்றிருந்தாலும் திருப்பூந்திருத்தி சென்றதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      வாய்ப்பு கிடைக்கும்போது திருப்பூந்துருத்திக்குச் சென்று வாருங்கள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. திருப்பூந்துருத்தி மடாலயம் சென்றதில்லை. அடுத்த முறை செல்வேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அவசியம் திருப்பூந்துருத்திக்கு சென்று வாருங்கள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. தகவல்களும் செய்திகளும் தெரியாதது நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகையும் கருத்துரையும் நன்றி..

      நீக்கு
  9. என் ஊர் திருக்காட்டுப் பள்ளி அருகே என்பதால் இந்தப் பதிவு எண்ணெய் மிகவும் ஈர்த்தது .

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா22 ஜூலை, 2022 21:36

    நான் பூபதிராஜபுரம் என்கிற வரகூர் என்ற கிராமத்தை சேர்ந்தவன். தஞ்சையம்பதி கூறிய அதிஷ்டானம் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள் அவருடையது கிடையாது. திருப்பூந்துருத்தியில் இருப்பது ஶ்ரீ தீர்த்த நாராயண ஸ்வாமிகளுடையது. ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள் தனது கடைசி தரங்கம் பாடும்போது வரகூர் திருக்கோவில் வளாகத்தில் ஜீவன் முக்தி எய்தார். ஆகவே இவருக்கென்று அதிஷ்டானம் எதுவும் கிடையாது என்பதே உண்மை. வரகூர் கிராமம் திருப்பூந்துருத்தியிலிருந்து 10 க.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இருவரும் வெவ்வேறு ராஜா காலங்களில் வாழ்ந்தவர்களாவார்கள். இதற்கான சான்று தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ளது. வரகூர் வாழ் மக்களிடமும் இதற்கான சாற்று உள்ளது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..